Wednesday, August 19, 2015

சோசலிஸம் எதற்காக?

சோசலிஸம் எதற்காக?
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.

இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.

மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”

ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?

இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.

மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.

மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.

மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.

[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.

எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.

[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]


நன்றி :தோழர் சிவலிங்கம் 

Friday, August 14, 2015

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்




கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]

(1) கம்யூனிசம் என்றால் என்ன?

கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.

(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.[1]

(3) பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா?

இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால் இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திர, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர் எப்போதும் இருந்திருக்கவில்லை.

(4) பாட்டாளி வர்க்கம் எப்படி உதித்தது?

கடந்த (18-வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது.

நீராவி எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழில் புரட்சி வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றி விட்டன. மேலும் இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம், தொழிலாளர்கள் தமது திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களைவிட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள் தொழில்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின் அற்ப சொத்துகளை (கருவிகள், கைத்தறிகள் போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன. இதன் விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.

எந்திரங்கள் மற்றும் ஆலை உற்பத்தி முறையைப் புகுத்திட ஒரு தூண்டுதல் அளிக்கப்பட்டவுடனே ஆலை முறை தொழில்துறையின் இதர பிரிவுகள் அனைத்திலும் குறிப்பாக, நெசவு, புத்தக அச்சடிப்பு, மண்பாண்டம் மற்றும் உலோகத் தொழிலகங்களில் மிக விரைவில் பரவியது.

உழைப்பு, தனித்தனித் தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம் ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒருபகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான எந்திர இயக்கமாகக் குறைத்தது. தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர் எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய முடியும். இவ்வாறாக, நூற்பு மற்றும் நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே, அனைத்துத் தொழில்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி, எந்திரங்கள் மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

ஆனால், அதேவேளையில் அத்தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளவும் செய்தன. மேலும் அவற்றின் தொழிலாளர்கள் தங்களிடம் மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சுதந்திரத்தையும் பறிகொடுத்தனர். பெரும் முதலாளிகள் மிகப்பெரிய தொழிற்கூடங்களை அமைப்பதன்மூலம் சிறிய கைவினைத் தொழில் விற்பன்னர்களை மிகப் பெருமளவில் வேலையிழக்கச் செய்தனர். இத்தொழிற்கூடங்கள் பல செலவுகளைச் சிக்கனப்படுத்தின; மிக விரிவான உழைப்புப் பிரிவினைக்கும் வழிவகுத்தன. இதன் காரணமாய்ச் சீரான பட்டறைத் தொழில் மட்டுமல்ல, கைவினைத் தொழில்களும்கூடப் படிப்படியாக ஆலை முறையின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன.

இவ்வாறாகவே, நாகரிகமடைந்த நாடுகளில், தற்போதைய காலகட்டத்தில், ஏறத்தாழ உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழிற்கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்துப் பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும், பட்டறைத் தொழிலும் விழுங்கப்பட்டுவிட்டன. இந்த நிகழ்ச்சிப்போக்கு, முன்னெப்போதையும்விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தைக் குறிப்பாக சிறிய கைவினைத் தொழில்முனைவோரைச் சிதைத்து அழித்துவிட்டது; தொழிலாளர்களின் வாழ்நிலையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது; இரண்டு புதிய வர்க்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை பிற வர்க்கங்கள் அனைத்தையும் படிப்படியாக விழுங்கி வருகின்றன. அந்த இரு வர்க்கங்களாவன:

(1) பெரும் முதலாளிகளின் வர்க்கம். இந்த வர்க்கத்தினர், ஏற்கெனவே எல்லா நாகரிக நாடுகளிலும், பிழைப்புப் சாதனங்கள் அனைத்தையும், உற்பத்திக் கருவிகளையும் (எந்திரங்கள், தொழிற்கூடங்கள்), பிழைப்புச் சாதனங்களின் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களையும், ஏறத்தாழ தங்களின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களே முதலாளித்துவ வர்க்கம் [பூர்ஷ்வா வர்க்கம்] அல்லது முதலாளிகள் [பூர்ஷ்வாக்கள்].

(2) அறவே உடைமையற்ற வர்க்கம். தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம். இவர்களே பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகள் எனப்படுகின்றனர்.

(5) பாட்டாளிகளின் உழைப்பு முதலாளிகளுக்கு விற்கப்படுவது எந்த நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது?

உழைப்பு என்பது ஏனைய பண்டங்களைப் போலவே ஒரு பண்டமாகும். எனவே, அதன் விலையும் பிற பண்டங்களின் விலையைத் தீர்மானிக்கும் அதே விதிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெருவீதத் தொழில்துறை அல்லது கட்டற்ற போட்டியின் – இந்த இரண்டும் ஒன்றிலேயே முடியும் என்பதை நாம் காண இருக்கிறோம் – ஆதிக்கத்தில் சராசரியாக ஒரு பண்டத்தின் விலை எப்போதும் அந்தப் பண்டத்தின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது. எனவே உழைப்பின் விலையும் அந்த உழைப்பின் உற்பத்திச் செலவுக்குச் சமமானதாக இருக்கிறது.

உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது, தொடர்ந்து வேலை செய்துவருவதற்கான சக்தியைத் தொழிலாளிக்கு வழங்கவும், தொழிலாளி வர்க்கத்தை அழிந்துபோய் விடாமல் தடுக்கவும் தேவைப்படுகின்ற பிழைப்புச் சாதனங்களின் அளவையே துல்லியமாய்க் குறிக்கிறது. எனவே, இந்த நோக்கத்துக்குத் தேவைப்படுவதைக் காட்டிலும் அதிகமாகத் தொழிலாளி தனது உழைப்புக்காகப் பெறப்போவதில்லை. வேறு வகையாகக் கூறுவதெனில், உழைப்புக்கான விலை அல்லது கூலியானது, ஆகக் குறைந்ததாக, வாழ்க்கைப் பராமரிப்புக்குத் தேவைப்படுகின்ற குறைந்தபட்ச அளவாக இருக்கும்.

என்றபோதிலும், வணிக நிலைமை சிலவேளை நன்றாகவும், சிலவேளை மோசமாகவும் இருப்பதால், தொழிலதிபர் தமது பண்டத்துக்குச் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுவதைப் போன்றே தொழிலாளியும் சிலவேளை அதிகமாகவும், சிலவேளை குறைவாகவும் பெறுகிறார். ஆனால் தொழிலதிபர் சராசரியாக, நல்ல நிலைமையிலும் சரி, மோசமான நிலைமையிலும் சரி தமது பண்டத்துக்கு அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் கூடுதலாகவோ குறைவாகவோ பெறுவதில்லை. அதுபோலவே தொழிலாளி சராசரியாக, அவனது குறைந்தபட்சத் தேவைக்கு அதிகமாகவோ குறைவாகவோ பெறுவதில்லை.

உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் பெரும் தொழில்துறை எந்த அளவுக்கு அதிகமாகத் தன் வசப்படுத்திக் கொள்கிறதோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக, கூலி தொடர்பான இந்தப் பொருளாதார விதி செயல்படுகிறது.

(6) தொழில் புரட்சிக்கு முன்னால் நிலவிய தொழிலாளி வர்க்கங்கள் எவை?

தொழிலாளி வர்க்கங்கள் எப்போதுமே, சமுதாய வளர்ச்சியின் வெவ்வேறு கால கட்டங்களுக்கு ஏற்ப, வெவ்வேறு சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வந்துள்ளன; அவை உடைமை மற்றும் ஆளும் வர்க்கங்களுடன் வெவ்வேறு வகையான உறவுநிலைகளைக் கொண்டிருந்தன.

பல பின்தங்கிய நாடுகளிலும், அமெரிக்க நாட்டின் தென்பகுதியிலேகூட இப்போதும் இருந்து வருவதைப்போலப் பண்டைக் காலத்தில் தொழிலாளர்கள் உடைமையாளர்களிடம் அடிமைகளாக இருந்தனர்.

ஹங்கேரி, போலந்து, ருஷ்யா ஆகிய நாடுகளில் இப்போதும் இருந்து வருவதைப்போல, மத்திய காலங்களில் இவர்கள் நிலவுடைமைப் பிரபுக்களின் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இவர்கள் தவிர, மத்திய காலங்களில், சொல்லப்போனால் தொழில் புரட்சி காலம் வரையிலும்கூட, நகரங்களில் குட்டி முதலாளித்துவ எஜமானர்களின் சேவையில் வேலை செய்துவந்த கைவினைத் தொழிலாளர்கள் இருந்தனர். பட்டறைத் தொழில் வளர்ச்சி அடைந்தபோது, படிப்படியாக, இந்த கைவினைத் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிலாளர்களாக மாறினர். பின்னாளில் அவர்கள் பெரும் முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

(7) பாட்டாளிகள் அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு தனிப்பட்ட அடிமையானவன், ஓர் எஜமானனின் சொத்து ஆவான். அந்த எஜமானனின் நலன்கருதியே. எவ்வளவு கேவலமானதாக இருந்தபோதிலும், அடிமைக்கென ஒரு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு தனிப்பட்ட பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான். பாட்டாளியின் உழைப்பை, அது யாரேனும் ஒரு முதலாளிக்குத் தேவைப்படும்போது மட்டுமே, முதலாளித்துவ வர்க்கம் விலைக்கு வாங்குகிறது. எனவே, ஒரு தனிப்பட்ட பாட்டாளியின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏதுமில்லை. [பாட்டாளி] வர்க்கம் முழுமைக்குமாகத்தான் அத்தகைய வாழ்க்கை உத்திரவாதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடிமை போட்டிக்கு வெளியே நிற்கிறான். பாட்டாளியோ, அதனுள்ளேயே நிற்கிறான்; போட்டியின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.

அடிமை ஒரு பண்டமாகவே கருதப்படுகிறான், சமுதாயத்தின் ஓர் உறுப்பினனாகக் கருதப்படுவதில்லை. அதேவேளை, பாட்டாளியானவன் சமூக வளர்ச்சியின் ஓர் உயர்ந்த கட்டத்துக்கு உரியவனாகவும், அடிமையைக் காட்டிலும் ஒர் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருக்கின்ற போதிலும், அடிமையானவன் பாட்டாளியைக் காட்டிலும் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.

அடிமையானவன், தனியார் சொத்துடைமையின் உறவுகள் அனைத்திற்குள்ளும் அடிமை உறவை மட்டுமே முறித்துக் கொள்வதன்மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான்; அதன்மூலம் ஒரு பாட்டாளியாகப் பரிணமிக்கிறான். ஆனால், பாட்டாளியோ, பொதுவாகத் தனியார் சொத்துடைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

(8) பாட்டாளிகள் பண்ணை அடிமைகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

பண்ணையடிமை உற்பத்திக் கருவியான ஒரு துண்டு நிலத்தை உடைமையாய்க் கொண்டு, அதைப் பயன்படுத்துகிறான். அதற்கு ஈடாக அவன் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறான். அல்லது தனது உழைப்பின் சேவைகளில் ஒரு பகுதியை வழங்குகிறான்.

பாட்டாளியானவன் இன்னொருவருக்குச் சொந்தமான உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி வேலை செய்கிறான். அதற்கு ஈடாகத் தனது உற்பத்தியில் ஒரு பகுதியை பெறுகிறான்.

பண்ணையடிமை கொடுக்கிறான், பாட்டாளி பெறுகிறான். பண்ணையடிமைக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்க்கை உள்ளது, பாட்டாளிக்கு அத்தகைய வாழ்க்கை இல்லை. பண்ணையடிமை போட்டிக்கு வெளியே இருக்கிறான், பாட்டாளியோ போட்டியின் உள்ளேயே இருக்கிறான்.

பண்ணையடிமை மூன்று வழிகளில் தன்னை விடுவித்துக் கொள்கிறான்: நகரத்துக்குத் தப்பி ஓடி அங்கே ஒரு கைவினைப் பணியாளன் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவுக்கு உற்பத்திப் பொருட்களையும் உழைப்பையும் கொடுப்பதற்குப் பதில் பணத்தைக் கொடுத்து, அதன்மூலம் சுதந்திரமான குத்தகைதாரர் ஆகிறான்; அல்லது தனது நிலப்பிரபுவை விரட்டிவிட்டுத் தானே நிலத்துக்கு உடைமையாளன் ஆகிவிடுகிறான். சுருங்கக்கூறின், ஏதேனும் ஒரு வழியில் உடைமை வர்க்கத்தின் அங்கமாகிப் போட்டியில் நுழைந்துவிடுவதன் மூலம் தன்னை விடுவித்துக் கொள்கிறான். பாட்டாளியோ தொழில்போட்டி, தனியார் சொத்துடைமை மற்றும் அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் ஒழிப்பதன் மூலமே தன்னை விடுவித்துக் கொள்வான்.

(9) பாட்டாளிகள் கைவினைப் பணியாளரிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

பாட்டாளிக்கு வேறுபட்டவனான கைவினைப் பணியாளன் என்று சொல்லப்படுபவன், கடந்த நூற்றாண்டு [18-ஆம் நூற்றாண்டு] வரையில் ஏறத்தாழ எங்கெங்கும் நிலவி வந்தவன். இப்போதுங்கூட அங்கும் இங்கும் நிலவுகின்றவன். அவன், அதிகப்பட்சம் தற்காலிகமாக, ஒரு பாட்டாளியாக இருக்கிறான். பிற தொழிலாளர்களைச் சுரண்டித் தனக்கென மூலதனத்தைச் சேர்த்துக் கொள்வதே அவனது குறிக்கோளாகும். கைவினைக் குழுமங்கள் (guilds) இன்னும் நிலவிவரும் சூழலிலும், கைவினைக் குழுமக் கட்டுப்பாடுகளிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், கைவினைத் தொழிலில் பட்டறைத் தொழில் பாணியிலான வழிமுறைகளைப் புகுத்தும் அளவுக்கோ அல்லது கடுமையான தொழில்போட்டிக்கோ இன்னும் இட்டுச் செல்லாத நிலையிலும், அவன் பெரும்பாலும் இந்தக் குறிக்கோளை எட்டவே செய்கிறான். ஆனால், கைவினைத் தொழிலில் பட்டறை அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, தொழில்போட்டி முழுமையாய்ச் செழுதோங்கியவுடனே இந்தக் கண்ணோட்டம் மங்கத் தொடங்கியது; கைவினைப் பணியாளன் மேலும் மேலும் பாட்டாளியாகப் பரிணமித்தான். எனவே, கைவினைப் பணியாளன் முதலாளியாக மாறுவதன் மூலமோ, அல்லது நடுத்தர வர்க்கத்தில் பொதுவாக நுழைவதன் மூலமோ, போட்டியின் காரணமாய் ஒரு பாட்டாளியாகப் பரிணமிப்பதன் மூலமோ (இதுவே தற்போது பெருமளவு நடைமுறையாய் உள்ளது) தன்னை விடுவித்துக் கொள்கிறான். மூன்றாவது வகைப்பட்டவன், ஏறத்தாழ கம்யூனிச இயக்கமாகவே நடந்துவரும் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்வதன்மூலம் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலும்.[2]

(10) பாட்டாளிகள் பட்டறைத் தொழிலாளர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

16-வது நூற்றாண்டு முதல் 18-வது நூற்றாண்டு வரையிலான காலகட்டம் முழுவதும் பட்டறைத் தொழிலாளி, சில விதிவிலக்குகள் தவிர, அவனது தறி, குடும்ப நூற்பு ராட்டினம், தனது ஓய்வு நேரத்தில் பயிர்செய்யும் சிறிய துண்டு நிலம் போன்ற ஏதேனும் ஓர் உற்பத்திக் கருவியைத் தன் சொந்த உடைமையாக வைத்திருந்தான். பாட்டாளியோ இவற்றில் எதையுமே வைத்திருக்கவில்லை.

பட்டறைத் தொழிலாளி கிட்டத்தட்ட எப்போதுமே நாட்டுப்புறத்தில், தனது நிலப்பிரபு அல்லது முதலாளியுடன் ஏறத்தாழ தந்தைமுறை உறவுநிலையில் வாழ்ந்து வருகிறான். பாட்டாளியோ பெரும்பாலும் பெருநகரங்களில் வாழ்கிறான். தன்னுடைய முதலாளியுடனான அவனது உறவு முற்றிலும் பண உறவே.

பட்டறைத் தொழிலாளி, பெருவீதத் தொழில்துறையால் அவனது தந்தைமுறை உறவுநிலையிலிருந்து பிரித்தெறியப்பட்டு, மிச்சம் மீதியிருந்த தன் சொத்துடைமைகளை இழக்கிறான். இவ்வாறாக அவன் ஒரு பாட்டாளியாக மாறுகிறான்.

(11) தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன?

முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிக மிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் மற்றும் பிற தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாக அழித்தொழித்துவிட்டது.

இவ்வாறாக, அரை-அநாகரிக (semi-barbarian) நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன். பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான பண்டங்களை விலைக்கு வாங்கித் தமது சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவுங்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.

இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்ககளையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும்.

இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாக ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் மற்றும் இவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது.

நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கம் உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழிற்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது.

இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அவர்களது மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள் அதாவது முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாக ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும்.

பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில் பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலம் மற்றும் கைவினைக் குழும எஜமானர்களின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களது அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்பு முறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார்கள். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும், உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.

இந்த நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.

இதற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சிப் போக்கு மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது.

(12) தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை?

தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.

இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.

சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது.

ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது.

இந்த [19-ஆம்] நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன.

(13) குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?

முதலாவது:

பெருவீதத் தொழில்துறை தனது வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது;

இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.

பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.

எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும், இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.

இரண்டாவது:

பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.

இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.

தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:

(1) இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு சாற்றிக் கூற முடியும்; மேலும்,

(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.

(14) இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும் உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.

வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.

மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.

உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.

(15) தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாக இருக்கவில்லையா?

இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்தி சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா.

தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை.

மத்திய காலப்பகுதியின் இறுதியில் ஒரு புதிய உற்பத்தி முறை அதாவது பட்டறை உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் மிஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும் தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாக இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே சாத்தியமான சமூக அமைப்புமுறையாக இருந்தது.

எல்லோருக்கும் போதுமான அளவுக்கு கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்தி சக்திகளைப் பெருக்கவும் பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்தி சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும்.

விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது.

இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.

ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.

(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?

தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.

ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.

(17) தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக் கட்டுவது சாத்தியமா?

இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்தி சக்திகளை ஒரேயடியாகப் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை.

பாட்டாளி வர்க்கப் புரட்சி, இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும்.

(18) இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாக ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகள் மற்றும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாக இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களது அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாக பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாக இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.

ஜனநாயகம் என்பது, தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, உடனடியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு:

(1) படிப்படியாக அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல்.

(2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாக சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில்வே மற்றும் கப்பல் கம்பெனி அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல்.

(3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்.

(4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்.

(5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டும் என்னும் சமப்பொறுப்புக்கு உள்ளாக்குதல். தொழில்துறைப் பாதுகாப்புப் படைகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல்.

(6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணம் மற்றும் கடன் அமைப்புகளை அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகள், வங்கி அதிபர்களைக் கட்டுப்படுத்தல்.

(7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு வரும் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் செய்தல்.

(8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்குதல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல்.

(9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாகப் மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற நகரப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மை மற்றும் பாதகமான கூறுகளைத் தவிர்த்தல்.

(10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல்.

(11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல்.

(12) அனைத்துப் போக்குவரத்து சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால் ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன் பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். சகல மூலதனத்தையும், விவசாயத் தொழில் முழுவதையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், வணிகப் பரிவர்த்தனை முழுவதையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தமது உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்தி சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும்.

இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகி விடும். சமுதாயம் தனது மிச்சம் மீதியிருக்கும் பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளும் திறன் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள்.

(19) இந்தப் புரட்சி ஒருநாட்டில் மட்டும் நடைபெறுவது சாத்தியமா?

இல்லை. உலகச் சந்தையை உருவாக்கியதன் மூலம், பெருவீதத் தொழில்துறை ஏற்கெனவே புவியின் மக்களினம் அனைத்தையும், குறிப்பாக நாகரிகமடைந்த மக்களினம் அனைத்தையும் ஒன்றோடொன்றை, மற்றவர்க்கு என்ன நேர்ந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து எவரும் ஒதுங்கியிருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது.

மேலும், பெருவீதத் தொழில்துறை நாகரிகமடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டை பெருமளவுக்கு ஒருங்கிணைத்துள்ளது. எந்த அளவுக்கு எனில், இந்த நாடுகள் அனைத்திலும், முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் தீர்மானகரமான வர்க்கங்களாகி விட்டன, அவற்றுக்கு இடையிலான போராட்டமே இன்றைய காலகட்டத்தின் மாபெரும் போராட்டமாகி விட்டது. எனவே, கம்யூனிசப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வாக மட்டும் இருக்காது, அது நாகரிகமடைந்த நாடுகள் அனைத்திலும் ஏக காலத்தில் நிகழும். அதாவது குறைந்த பட்சம் இங்கிலாந்து அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏக காலத்தில் நிகழும்.

இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்துறை, மிகப்பெரும் செல்வவளம், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உற்பத்தி சக்திகள் ஆகியவை இருப்பதைப் பொறுத்து, அதற்கேற்ப அந்தந்த நாடுகளில் மிகுந்த அல்லது குறைந்த வேகத்தில் இப்புரட்சி வளர்ச்சி பெறும். எனவே, ஜெர்மனியில் இது மிக மெதுவாக நடக்கும்; அதிகப்படியான தடைகளைச் சந்திக்கும். இங்கிலாந்தில் இது மிக வேகமாக, மிகக் குறைந்த இடர்ப்பாடுகளுடன் நிறைவேறும். அது உலகின் பிற நாடுகள்மீது சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றின் வளர்ச்சி வேகத்தை மிகுதியாய் முடுக்கிவிடுவதுடன், இதுகாறும் அந்நாடுகள் பின்பற்றிவந்த வளர்ச்சிப் போக்கின் திசையை முற்றிலுமாய் மாற்றியமைக்கும்.

இது ஓர் உலகளாவிய புரட்சியாகும். அதன்படியே, அது உலகளாவிய வரம்பெல்லையையே கொண்டிருக்கும்.

(20) தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?

அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.

இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்கெளுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும். முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதயும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில் பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.

விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.

இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.

பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.

கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.

மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும், மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.

ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.

இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும் ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.

உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக்கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.

(21) கம்யூனிச சமுதாயம் குடும்பத்தின் மீது எத்தகைய செல்வாக்குச் செலுத்தும்?

பாலின உறவு என்பது அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாகும்; சமுதாயம் அதில் தலையிட எவ்வித அவசியமும் இல்லை. எனவே [கம்யூனிச சமுதாயம்] பாலினங்களுக்கு இடையிலான உறவுகளை முற்றிலும் தனிப்பட்ட விவகாரமாக மாற்றியமைக்கும். இதனைச் செய்ய முடிவதற்குக் காரணம் அது தனியார் சொத்துடைமையை ஒழித்துக் கட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்குச் சமுதாய அடிப்படையில் கல்வி கற்பிக்கிறது. இவ்வாறாக, பாரம்பரிய திருமண முறையின் இரண்டு அடித்தளங்களை – தனியார் சொத்துடைமையில் வேர்கொண்டுள்ள சார்புத் தன்மையை – மனைவி கணவனைச் சார்ந்திருப்பதையும், குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்திருப்பதையும் தகர்த்தெறிகிறது.

”பெண்கள் பொதுவாக்கப்படுவதற்கு” எதிராக, உயர்ந்த ஒழுக்கநெறி பசப்பும் அற்பவாதிகள் எழுப்புகின்ற கூக்குரலுக்கு பதில் இதோ. பெண்களைப் பொதுவாக்கும் நிலைமை முற்றிலும் முதலாளித்துவ சமுதாயத்துக்கு உரியதாகும். இன்றைக்கு அது விபச்சாரம் என்னும் வடிவில் முழுமையாக வெளிப்படுகிறது. ஆனால், விபச்சாரம் தனியார் சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. எனவே, தனியார் சொத்துடைமையோடு சேர்ந்து விபச்சாரமும் உதிர்ந்து போகும். ஆக, கம்யூனிச சமுதாயம் பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு மாறாக, உண்மையில் அம்முறைக்கு முடிவு கட்டுகிறது.

(22) தற்போது நிலவும் தேசிய இனங்களைப் பொறுத்தவரைக் கம்யூனிசத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

பல்வேறு நில மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் அவற்றின் ஆணி வேரான தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும்போது மறைந்தே தீர வேண்டும். அதுபோலவே, கூட்டுச் சமுதாயக் கோட்பாட்டின்படி தங்களை இணைத்துக் கொண்ட மக்களின் தேசிய இனங்கள், இந்தக் கூட்டிணைப்பின் விளைவாகத் தமக்குள் ஒன்றோடொன்று கலந்து வாழவும், அதன் மூலமாகத் தம்மைத் தாமே கரைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படும்.[3]

(23) தற்போது நிலவும் மதங்களைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

இதுவரை நிலவி வந்துள்ள மதங்கள் அனைத்தும், தனிப்பட்ட ஒரு மனித இனத்தின் அல்லது மனித இனக் குழுக்களின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டங்களின் வெளிப்பாடாகவே இருந்துள்ளன. ஆனால் கம்யூனிசம் என்பது தற்போது நிலவுகின்ற மதங்கள் அனைத்தையும் தேவையற்றவை ஆக்கி அவற்றின் மறைவுக்கு வழிவகுக்கின்ற, வரலாற்று ரீதியான வளர்ச்சிக் கட்டம் ஆகும்.[4]

(24) கம்யூனிஸ்டுகள் சோஷலிஸ்டுகளிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர்?

சோஷலிஸ்டுகள் எனச் சொல்லப்படுவோரை மூன்று வகையினமாகப் பிரிக்கலாம்.

[பிற்போக்குச் சோஷலிஸ்டுகள்:]

முதல் வகையினம் நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழி சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டது. இந்தவகைச் சமுதாயமோ, பெருவீதத் தொழில்துறை, உலக வாணிகம் ஆகியவற்றாலும் மற்றும் இவற்றால் தோற்றுவிக்கப்பட்ட முதலாளித்துவ சமுதாயத்தாலும் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமுதாயத்தின் தீமைகளைக் கண்ணுறும் இந்த முதல் வகையினம், நிலப்பிரபுத்துவ மற்றும் தந்தைவழிச் சமுதாயம் இந்தத் தீமைகளின்றி இருந்தபடியால், அத்தகைய சமுதாயத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்னும் முடிவுக்கு வருகிறது. அவர்களது பரிந்துரைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் இந்த முடிவை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன.

பிற்போக்கு சோஷலிஸ்டுகளான இந்த வகையினர், என்னதான் பாட்டாளி வர்க்கத்தின் துன்பங்களுக்காக ஆதரவு வேடம் போட்டாலும், நீலிக் கண்ணீர் வடித்தாலும், கீழ்க்காணும் காரணங்களுக்காக அவர்களைக் கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்க்கின்றனர்:

(1) இந்த வகையினம் முற்றிலும் சாத்தியமற்ற சிலவற்றுக்காக முயல்கின்றது.

(2) பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் எதேச்சாதிகார அல்லது நிலப்பிரபுத்துவ முடியசர்களின் அடிவருடிகள், அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோரின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றது. அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தின் தீமைகள் இருக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் இதே அளவுக்கான வேறுபல தீமைகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒரு கம்யூனிசப் புரட்சியின் மூலம் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும்கூட அச்சமுதாயம் வழங்கப் போவதில்லை.

(3) பாட்டாளி வர்க்கத்தினர் புரட்சிகரமாகவும் அல்லது கம்யூனிஸ்டாகவும் மாறியதுமே, உடனடியாக இந்தப் பிற்போக்கு சோஷலிஸ்டுகள் பாட்டாளிகளுக்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்துடன் கைகோத்துக் கொண்டு, தங்களின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறார்கள்.

[முதலாளித்துவ சோஷலிஸ்டுகள்:]

இரண்டாவது வகையினம், இன்றைய [முதலாளித்துவ] சமுதாயத்தின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். இவர்கள், தவிர்க்க முடியாமல் அதிகரித்துவரும் இந்தச் சமுதாயத்தின் தீமைகளைக் கண்டு அதன் எதிர்காலம் குறித்த அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சமுதாயத்தின் உட்பொதிந்த ஒரு பகுதியாக விளங்கும் தீமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில் இந்தச் சமுதாய அமைப்பை அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த நோக்கத்துடன் அவர்களில் சிலர் வெறும் நலவாழ்வு நடவடிக்கைகளை முன் வைக்கின்றனர். வேறு சிலர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் என்கிற சாக்கில் ஆரவாரமான சீர்திருத்த அமைப்புகளுடன் களத்தில் நிற்கின்றனர். உண்மையில் இச்சீர்திருத்த அமைப்புகள், இப்போது நிலவுகின்ற [முதலாளித்துவ] சமுதாய அமைப்பின் அடித்தளங்களை, அதன்வழியே இன்றைய வாழ்க்கைமுறையை அப்படியே பாதுகாத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ சோஷலிஸ்டுகளை எதிர்த்து இடைவிடாது தொடர்ந்து போராட வேண்டும். காரணம் அவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிரிகளுக்காக வேலை செய்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் தூக்கியெறிய முனையும் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

[ஜனநாயக சோஷலிஸ்டுகள்:]

இறுதியாக, மூன்றாவது வகையினம், ஜனநாயக சோஷலிஸ்டுகளைக் கொண்டதாகும். இவர்கள் கேள்வி 18-இல் விவரித்தபடி, கம்யூனிஸ்டுகள் எடுத்துரைக்கின்ற அதே நடவடிக்கைகளில் சிலவற்றை ஆதரிக்கின்றனர். கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லுவதன் பகுதியாக அல்ல. எனினும், அத்தகைய நடவடிக்கைகள் இன்றைய சமுதாயத்தின் துன்பங்களையும் தீமைகளையும் ஒழிக்கப் போதுமானவை என்று அவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஒன்று, தமது வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் குறித்து இன்னும் போதுமான தெளிவு பெறாத பாட்டாளிகளாக இருக்கின்றனர். அல்லது, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் உள்ளனர். இந்த வர்க்கத்துக்கு, ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கும், அதன்மூலம் சோஷலிஸ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்னதாகப் பாட்டாளி வர்க்கத்தோடு பல்வேறு நலன்கள் பொதுவாக இருக்கக் காணலாம்.

ஜனநாயக சோஷலிஸ்டுகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சேவையில் இறங்கிக் கம்யூனிஸ்டுகளைத் தாக்காத வரையில், போராட்டத் தருணங்களில், இந்த சோஷலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகள் ஓர் உடன்பாடு காண வேண்டியிருக்கும் என்பதும், பொதுவாக, முடிந்த அளவுக்கு அவர்களுடன் ஒரு பொதுக் கொள்கையை எட்ட வேண்டியிருக்கும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது.

போராட்ட நடவடிக்கையில் இந்த வடிவிலான ஒத்துழைப்பு, அவர்களுடனான கருத்துவேறுபாடுகளை விவாதிப்பதை விலக்கிவிடவில்லை என்பது தெளிவு.

(25) நம் காலத்திய இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை என்ன?

இந்த அணுகுமுறை நாட்டுக்கு நாடு வேறுபடும்.

முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிபுரியும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஜனநாயகக் கட்சிகளுடன் இன்னும்கூடப் பொதுவான நலனைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்தம் கொண்டாடும் சோசலிஷ நடவடிக்கைகள் எந்த அளவுக்கு அதிக நெருக்கமாக கம்யூனிஸ்டுகளின் நோக்கங்களை எட்டுவதாக இருக்கின்றனவோ – அதாவது, எந்த அளவுக்கு அதிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரித்து நிற்கின்றனரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கச் சாசனவாதிகள்[5] ஜனநாயகக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்லது தீவிரக் கொள்கையினர் (Radicals) என்று சொல்லப்படுவோரைக் காட்டிலும் வரம்பிலா அளவுக்கு கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள அமெரிக்காவில், இந்த அரசமைப்புச் சட்டத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பி, அதனைப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் கட்சியுடன், அதாவது தேசிய விவசாயச் சீர்திருத்தவாதிகளுடன்[6], கம்யூனிஸ்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சுவிட்சர்லாந்தில், மிகுந்த கலப்படக் கட்சியாக இருந்த போதிலும், தீவிரக் கொள்கையினர் (The Radicals) மட்டுமே கம்யூனிஸ்டுகள் ஒத்துழைக்கக் கூடிய ஒரே குழுவாகும். இந்தத் தீவிரக் கொள்கையினருள் வாட் (Vaudois) மற்றும் ஜெனீவா (Genevese) நகரைச் சார்ந்தவர்களே மிகவும் முற்போக்கானவர்கள் ஆகும்.

இறுதியாக, ஜெர்மனியில் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் எதேச்சாதிகார முடியாட்சிக்கும் இடையிலான போராட்டமே இன்றைக்கு தீர்மானகரமான போராட்டம் ஆகும். முதலாளித்துவ வர்க்கம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத வரையில், கம்யூனிஸ்டுகள் தங்களுக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்க முடியாது. எனவே, முதவாளித்துவ வர்க்கத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும். ஆகவே, அரசாங்கங்களுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் தீவிர மிதவாதக் கட்சியைத் (radical liberal party) தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். அதேவேளை, முதலாளித்துவ வர்க்கத்தின் சுய ஏமாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றி பாட்டாளி வர்க்கத்துக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்னும் கவர்ச்சியூட்டும் உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இருக்கவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றியிலிருந்து கம்யூனிஸ்டுகள் தருவித்துக் கொள்ளக்கூடிய சாதகமான கூறுகள் கீழே காண்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருக்கும்:

(1) [கம்யூனிஸ்டுகளுக்குக் கிடைக்கும்] பல்வேறு சலுகைகள், பாட்டாளி வர்க்கத்தை ஒரு கச்சிதமான, போர்க்குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட வர்க்கமாக ஒன்றிணைக்கக் கூடிய வாய்ப்பினை நல்கும்.

(2) எதேச்சாதிகார முடியரசுகள் வீழுகின்ற அதே நாளிலேயே முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டம் தொடங்கிவிடும் என்பது நிச்சயம். அந்த நாள் முதற்கொண்டு, கம்யூனிஸ்டுகளின் கொள்கையானது, முதலாளித்துவ வர்க்கம் ஏற்கெனவே ஆட்சியிலிருக்கும் நாடுகளில் தற்போது பின்பற்றிவரும் அதே கொள்கையாகவே இருக்கும்.

* * *

அடிக்குறிப்புகள்:

[1] மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

[2] ஏங்கெல்ஸ் தன் கையெழுத்துப் பிரதியில் இங்கே அரைப் பக்கத்தை வெற்றிடமாய் விட்டிருந்தார். இதற்கு முந்தைய ஜூன் வரைவுரை (Draft of a Communist Confession of Faith) இதே கேள்விக்கான பதிலைக் கொண்டுள்ளது. அதில் கேள்வி எண்-12.

[3] இக்கேள்விக்கான பதிலாக “மாற்றமில்லை” என்று மட்டுமே ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் இக்கேள்விக்குத் (கேள்வி எண்-21) தரப்பட்டுள்ள பதிலில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையே ஏங்கெல்ஸ் உணர்த்தியுள்ளார்.

[4] இங்கேயும் ஏங்கெல்ஸ் “மாற்றமில்லை” என்றே குறிப்பிட்டுள்ளார். ஜூன் வரைவுரையில் கேள்வி எண்-23-க்குத் தரப்பட்டுள்ள பதிலை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஏங்கெல்ஸ் கருத்து.

[5] இங்கிலாந்தில் 1830களில் தொடங்கி 1850களின் மத்தியில் வரை நடைபெற்ற தொழிலாளர்களின் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. “மக்களின் சாசனம்” (People’s Charter) நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முழக்கமாகும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓட்டுரிமை என்பது அதன் முக்கியமான கோரிக்கை. ”அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட உலகின் முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கம்” என சாசனவாதிகளின் இயக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார்.

[6] இது அனேகமாக, நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 1840களில் ஜார்ஜ் ஹெச்.ஈவன்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ”தேசிய சீர்திருத்தச் சங்கம்” (National Reform Association) என்னும் அமைப்பைக் குறிக்கிறது.

(நூல் முற்றும்)


நன்றி : தோழர் மு.சிவலிங்கம்

Sunday, August 02, 2015

"தாய்ப்பால்" - சிறுகதை



கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக்கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.

யாரிடத்திலும் ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ,மகிழ்சியோ அனைத்திலும் கலந்து கொண்டு ஆகப்பணியாற்றுதல் அதற்கு சிரமமாகப்படவில்லை,,,

அப்படியான விடியற்காலையில் எழுந்திருக்கலாமா? வேண்டாமா? எனும் அரைதூக்கத்திலும் தனக்கே உரித்தான அதிகார மொழியை அவிழ்த்து விடுகிறாள் கங்கா,,,

ஏய்!!! கலா,,, எங்கடி போய் தொலஞ்ச இங்க வாடி,,,
தோ!!! வந்துட்டன்மா,,, காபி பக்கத்துல வச்சிருக்கேன்,குளிக்­க வெந்நீரும் தயாரா கீதும்மா,டிபன் ரெடியா கீது,ஆபீசுக்கு போட்டுகினு போர துணிய கொடுத்தீங்கன்னா இஸ்திரி போட்டு வச்சிட்டுவேன்,,,கலாவின் பேச்சில் அப்படியொரு பணிவு,, பத்து வருடங்களாய் கங்காவின் வீட்டு வேலைக்காரி அவள்தான்,

ம்ம்ம்,,,எதுவுமே உனக்கு லேட்டுதான்,,மணி ஏழு ஆவுது, ஆறுமணிக்கெல்லாம் முடிச்சிட்டு என்ன எழுப்ப கூடாது? நைட்டு லேட்டா படுத்தது ஒனக்கு தெரியும்தானே,,, கங்காவின் அதிகாரம் பட்டுத்தெறித்தது.

இல்லம்மா,,,அதுவந்து,,,அதுவந்து,,,

என்னடி? வந்து,,,போயின்னிட்டு­,,, சீக்கிரமா என்ன எழுப்பனுமா இல்லையா?

இல்லமா,,, கொழந்த அழுதுச்சின்னு பால் குடுத்துட்டு இருந்தேன், அதான் வந்து எழுப்ப முடில,,,

என்னவோ நீ மட்டுந்தான் ஒலகத்துல கொழந்த பெத்துகிட்ட மாதிரி இன்னமும் அதுக்கு தாய்ப்பால் கொடுத்துட்டிருக்க, புட்டிப்பால அது கைல குடுத்து பழக வைடி, அப்பதான் நீயும் மத்த வேலயெல்லாம் சரியா செய்வே,,, சரி!சரி! ராஜாவும்,கொழந்தையும்­ எழுந்துட்டாங்களா?

இன்னம் இல்லம்மா ஐயா இன்னும் எழுந்திருக்கல ஆனா கொழந்த எழுந்து பசிக்கி கத்துச்சி,,, புட்டிபால் போட்டு பக்கத்துலேயே இருந்து குடுத்தேன்,குடிச்சிட­்டு தூங்கறாம்மா,,,

ம்ம்ம்! இந்தா இது இன்னைக்கு போட்டும்போர ட்ரஸ்ஸூ போய் அயர்ன் பண்ணிவையி நா அவர எழுப்பிட்டு , குளிச்சிட்டு வரேன்,,,

சரிங்கம்மா,,, துணியை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் கலா.

சோம்பலை முறித்துக்கொண்டெழுந்­து ராஜாவின் பெட்ரூமுக்கு சென்றாள் கங்கா,,,

என்னங்க! என்னங்க! எழுந்திருங்க,,, மணி ஏழரையாவது இன்னுமா தூங்குவிங்க எழுந்திருங்க ஆபீஸூக்கு லேட்டாச்சி,,,

என்னடி,,, அதுக்குள்ளவா விடிஞ்சிடிச்சி,,, குழந்த என்ன செய்ரா பால் குடிச்சாளா,, நைட்டு ஃபுல்லா தூங்கவே விடலடி,,, எழுந்தமர்ந்து குழந்தை படுத்திருந்த பக்கத்தில் திரும்பி அதன் வயிற்றை தடவிக்கொண்டே கேட்டார் ராஜா தன் மனைவியினடத்தில்,,,

ம்க்கும்,,, எங்கூட படுத்து தூங்க மாட்டேன்னு அடம்புடிச்சி அப்பா கூட தான் படுப்பேன்னுட்டாளே அதுக்கு அனுபவிங்க,,, கால்லே எழுந்து கொழந்த அழுதாளாம் கலா புட்டிபாலு குடுத்து தூங்க வச்சிருக்கா,, நீங்க போய் ரெடியாவுங்க, நான் கொழந்தகூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெடியாவுரேன்,சீக்கிர­ம் போய் ரெடியாவுங்க இப்பவே லேட்டாகிடுச்சி,, குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்த ராஜாவை அவசரமாக கிளப்பினாள் கங்கா,,

அரைமணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அழைத்தாள் கலாவை,,

ஏய்!!! கலா,,, இன்னும் என்னடி செய்ர சீக்கிரம் வா! இங்க,,,

அடித்து பிடித்து ஓடிவந்த கலா கங்காவின் அருகில் வந்து என்னம்மா,,, என்றாள் முன்பிருந்த அதே பவ்யத்தோடு,,,

எல்லா வேலயும் முடிஞ்சிடுச்சா,,,சார­் ஆபிஸ் கெளம்ப எல்லாத்தையும் ரெடி செஞ்சிட்டியாடி,,, அப்புரம் அவரோட கோவத்துக்கு ஆளாய்டாதே மனுஷன் கோவப்பட்டா எப்படி நடந்துப்பாருனு தெரியும்ல,,,

எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா,,,

ம்ம்ம்!!! பக்கத்துலேர்ந்து கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ நான் ஆபீஸுக்கு கெளம்ப ரெடியாய்ட்டு வந்துட்ரேன் என்னா,,,

சரிம்மா நீங்க போய் கெளம்புங்க நான் கொழந்தைய பாத்துகரேன்,,,

கட்டில் மெத்தையிலிருந்து எழுந்து குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் கண்ணத்தை லேசாக கிள்ளிவிட்டு வெளியேறினாள் கங்கா ஆபீஸ் கிளம்புவதற்காக,,,
கட்டிலுக்கு பக்கத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டு தன் குழந்தை உறங்கிக்கொண்டிருந்த வரான்தாவுக்கு வந்தாள் கங்கா,,, உற்றுப்பார்த்தாள் தன் குழந்தையை எந்த உலகச் சிந்தனையில் மூழ்கி கிடக்கிறதோ குழந்தை,,, அதன் ஆனந்த தூக்கத்தை ரசித்தபடியே அருகில் அமர்ந்து எஜமானியின் குழந்தையை தன் மடியில் கிடத்தினாள்,,,

நதியின் அரவணைப்பு மழை நீருக்கு மட்டுமே தெரியும் அதுபோல் யாருமற்ற கலாவிற்கு அடைகலம் கொடுத்தது என்னவோ கங்காதான், முதல் முறையாக அவளை தன் வீட்டு வாசலில் பார்த்தாளவள், ஆங்காங்கே கிழந்த ஆடை கையில் பச்சிளம் குழந்தை பார்க்கவே பரிதாபமாய் இருந்தாள் கலா,,,

என்னம்மா வேணும்
ஏதாவது துணிமணி,காசு வேணுமா ? காசல்லாம் இல்ல பழஞ்சோறு கிடக்கு வீட்ல இரு எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போ! என்று கூறியவாறு சற்றே திரும்பினாள் கங்கா,,,

காசல்லாம் வேணாம்மா
எதாவது வூட்டுவேல கீட்டுவேலயிருந்தா குடுங்கம்மா செஞ்சிட்டு அப்புரமா பழஞ்சோறு வாங்கிக்கிறேன்,,, எம்புருஷன் குடிச்சி கொடலு வெந்து செத்து பூட்டாரும்மா,,, எனக்குன்னு ஆருமில்ல கைகொழந்தையோட நெக்கதியா நிக்கரேம்மா,,, வேல,,, என இழுத்தாள் கலா,,,

அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டு சரி உன் பேருன்னா? வூடு எங்க இருக்கு? கேட்டாள் கங்கா,,,

எம்பேரு கலா,
இங்கதாம்மா பக்கத்துல ஆறாவது முக்குட்டு குப்பத்தாண்ட வூடும்மா,,,

சரி ஒன்ன பார்த்தா பாவமா இருக்கு வேல குடுக்கறேன், ஆனா எங்கூட்டோட தங்கனும்,ஒன்ன எப்படி நான் நம்புரது,,

எல்லா வேலயும் நல்லா செய்வேன்மா,கையும் வாக்கும் சுத்தம்மா, நம்பிக்க இல்லனா குப்பத்தாண்ட வந்து கேட்டுபாருங்கம்மா,,,

சரி வா! போலாம் பக்கத்துலதானே இருக்கு அந்த இடம், பத்து நிமிஷத்துல போய்டலாம்லே,,,

பக்கத்துலதான்மா இருக்கு நடந்து போனாலே அஞ்சி நிமிஷம் கூட ஆகாதும்மா,,,

சரி அப்ப வா போலாம்! கங்காவும்,கலாவும் நடக்கத்தொடங்கினார்கள­். கலா சொன்னதுபோல் ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை இருவரும் குப்பத்தை தொட்டார்கள்.

கலா வீட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தாள் கங்கா,,, ஒருவர் கூட அவளைப்பற்றி தவறாகவோ,குறையாகவோ கூறவில்லை மாறாக அவள் மீது மிகுந்த பரிதாபப்பட்டார்கள்.

ஒருவழியாக விசாரித்துவிட்டு கலாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள் கங்கா,,,

என்னங்க,,,வீட்டு வேலைக்கு ஆள் கேட்டு நீங்களுந்தான் தேட்ரேன்னு சொல்லி பேப்பர்லல்லாம் ஆஃட் கொடுத்தீங்களே,, அதெல்லாம் தேவல,ஒங்களுக்கும் சிரமமில்லாம நானே விசாரிச்சி அழைச்சிட்டு வந்துட்டேன்,,, இவ பேரு கலா,பக்கத்துலதான் இருக்கா,பாவம் யாருமேயில்ல,கையில வேற கொழந்த வச்சிருந்தா,அக்கம்பக­்கத்துல கூட நல்லா விசாரிச்சிட்டேன்,,,ந­ல்லபடியாதான் சொல்ராங்க,அவளும் வீட்டோடயே இருக்கர்தாவும் சொல்லிட்டா,என்னங்க சொல்ரீங்க நீங்க,,, கங்கா தன் கனவனிடம் கூற அருகில் கலா குழந்தையோடு நின்றிருந்தாள் ராஜாவிற்கு வணக்கம் செலுத்திவிட்டு,,,

அதான் விசாரிச்சிட்டேன்னு சொல்ரியே உன் இஷ்டம் ,,இந்தாம்மா கலா வீட்லேயே இருந்து உன் கொழந்தையோட எங்க கொழந்தையையும் நல்லா பாத்துக்க,நாங்க ரெண்டு பேரும் வேலைக்கி போய் சாய்ங்காலம் அஞ்சி மணிக்கிதான் வருவோம், இவ வேல செய்ர இடம் பக்கத்துலேயே இருக்கர்தால மத்தியானத்துக்கு சாப்ட வந்து ரெண்டு மணிக்கு வேலைக்கு திரும்பிடுவா என்னா,,, இதுக்கு முன்னாடி எங்கம்மா கொழந்தைய பாத்துகிச்சி,ஊர்ல அவசரமா வேல இருக்கர்தால கெளம்பி போயிருக்காங்க,அவங்க வந்த ஒடனே கொழந்தைய அவங்க கிட்ட குடுத்துட்டு அதுக்கப்பரம் நீ சிரமமில்லாம மத்த வேலைகள பார்க்கலாம் ஓகேவா,,,சொல்லி முடித்தார் கங்காவின் கனவர் ராஜா.

சரிங்க எஜமான் அப்டியே செய்ரேன்,,,

மொதல்ல ஏதாவது சாப்டுட்டு அப்புரம் வூட்டு வேலய பாரு,,, கங்கா அவள உள்ள அழைச்சிட்டு போய் உன் பழைய துணிய போட்டுக்க குடு,,,பாவம் கைக்கொழந்தையோட இருக்கா,,,

இப்படியாகத்தான் கலா அந்த வீட்டிற்கு வேலைக்காரிமாக வந்தாள் , கோபம் இருக்கும் இடத்தில் குணமிருக்கும் என்பது போல,கோபத்தோடு கொஞ்சம் அதிகாரம் செய்தாலும் அவர்களிடத்தில் காலாவின் மீது அன்பு நிரம்பியிருந்தது. அதற்குக் காரணம் அவளின் நடத்தை,,, தான் சரியானதொரு ஆளை தேர்ந்தெடுத்துள்ளோம்­ என்கிற பெருமை எப்போதும் கங்காவிற்கு உண்டு.

கங்காவும்,ராஜாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள் . சிற்சில தடைகளுக்குப் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தது,இருவரும­ே வேலைக்குச் செல்பவர்கள்,ஆகவே பிறந்த குழந்தையை பார்த்துக்கொள்வதற்கா­க ஊரிலிருந்து தன் அம்மாவை அழைத்து வந்திருந்தான் ராஜா.கங்கா நவநாகரீக கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்தாள் தனது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்த காரணத்தால் தாய்ப்பால் கொடுத்தால் தன்னழகு கெட்டுவிடுமென்று நம்பியிருந்தாள் . ஆகவே தன்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியிருந்தாள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி அவள் மாமியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை,வேறு வழியின்றி குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினாள் கங்காவின் மாமியார்.

மணி சரியாய் ஒன்பதை தொட்டுக்கொண்டிருக்க ராஜாவும்,கங்காவும் அவரவர் வேலைக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த­ார்கள். அந்த சமயத்தில் கலாவின் குழந்தை வீல்ல்,,,என்று கத்த உடனே கங்காவின் குழந்தையை ஷோபாவில் பத்திரமாய் கிடத்திவிட்டு தன்குழந்தையை எடுத்து மடியில் கிடத்தி அதற்கு தாய்ப்பாலை ஊட்டிக்கொண்டே காங்காவின் குழந்தையையும் தட்டிக்கொண்டிருந்தாள்.

ஏற்கனவே தாமதமாகிவிட்டமையால் ராஜா அவசர அவசரமாக கிளம்பி கங்காவிடம் விடைபெற்றுக்கொண்டு, கலா!!! கொழந்தைய பத்திரமா பாத்துக்கோ,,, என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.வாசலில் அவர் தலை மறையும் வரை கங்கா வழியனுப்பி நின்றிருந்தாள். அவளுக்கு ஒன்பதரை மணிக்குத்தான் அலுவலகம் என்பதால் அரை மணிநேரம் குழைந்தையிடம் கொஞ்சுவதற்காக ஒன்பது மணிக்கே கிளம்பியிருந்தாள். ஷோபாவில் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த குழந்தையின் அருகில் அவளும் வந்தமர்ந்து குழந்தைக்கொரு முத்தம் கொடுத்துவிட்டு அதன் உடல் முழுவதையும் தடவி கொடுத்துக்கொண்டே கலாவிடம் பேச்சுகொடுத்தாள்.

ஏன்டிம்மா கலா நீ!
ரொம்ப அழகா , கலையா இருந்தாலும் உம் முகத்துல எல்லாம் கோடு விழுந்து பார்க்கவே சோகையா இருக்கே இதுல கொழந்தைக்கு வேற தாய்ப்பால் கொடுத்து ஏன்டிம்மா உன் அழக நீயே கெடுத்துக்கர, அதுக்கு இப்பவே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்தினேனா,,­, உன் அழகும் அப்படியே இருக்கும், அதுவுமில்லாம புட்டிப்பால் குடிக்கிற சமயத்துல வேற வேல ஏதாவது பார்க்கலாம்ல,,, பாலுக்கா பஞ்சம் நம்ம வூட்ல உன் குழந்தைக்கும் சேர்த்து பால் வாங்கிட்டா போச்சி,,,

அழகு என்னம்மா அழகு அது கெடுக்குது கழுத கொழந்தையோட அறிவு,வளர்ச்சி விடவா நமக்கு அழகு முக்கியம்,,,
பாலோட தன்ம ஒன்னா இருந்தாலும் நம்ம ரத்தத்துல சொரக்குர பால் கொடுத்தா தாம்மா குழந்தைக்கு தாய்பாசம்னா என்னான்னு தெரியும், அப்பதா அது நாளைக்கி வளந்து நமக்கு தாயா புள்ளையா இருக்கும், உசுர கொடுத்து ரெண்டாவது தடவைய பொழச்சி மறுசென்மம் எடுத்து பெத்த கொழைந்தைக்கு தாயோட அரும தெரியனும்னா தாய்ப்பாலத் தவிர வெற எதுலாலேலும் கொடுக்க முடியாதும்மா,,,

தாய்ப்பாலுன்ரது வெறும் பாலில்லம்மா,,அது கொந்தைக்கு நாம குடுக்குற ரத்தம், இப்பல்லாம் ரத்த தானம் செய்ராங்களே! அதெல்லாம் எதுக்கும்மா,,, ஒரு உசுர காப்பாத்ததானே,,, அதேமாதிரி நம்ம கொழந்தைக்கு நாம குடுக்குற தாய்ப்பாலும் ரத்த தானம்தான்மா,,, ஆனா அது தானமில்ல நம்மளோட கடமம்மா,,, எனக்கு பொறந்த இந்த கொழைந்தைக்கு எந்த நோயும் வந்துடாம, அப்டியே ஏதாவது அதுஇதுனு வந்துபுட்டாகூட தாய்ப்பால தவர வேற எதுவும் கொழந்தய காப்பாத்தாதும்மா,,, நான் என் அயகுக்காக பார்த்தா கொழந்தையோட எதிர்காலமே பாழாய்டும்,,, கலா சொல்லச்சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்த கங்கா அழுதே விட்டாள், தான் இவ்வளவுபெரிய தவறையா செய்துக்கொண்டிருக்கி­றோம் என நினைத்த தருணத்தில் அவள் நெஞ்சம் மிகப்பெருமதிர்வாய் வெடிக்கத் தொடங்கியது,,, இனியும் தாமதிக்கக்கூடாது நமக்கு அழகை விட குழந்தையின் அறிவும்,வளர்ச்சியுமே­ முக்கியமென அவள் முடிவுசெய்து விட்டபடையாலும், தன் குழந்தைக்கு உண்மையானத் தாயாக இருக்க வேண்டுமெனில் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டுமென ஒரு ஏழைத்தாய் உணர்த்திவிட்டாள் என்பது அவளின் மனதுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது.

அந்த கணத்திலேயே கொஞ்சமும் தாமதிக்காமல் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தயாரானாள்
கங்கா,,, அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்பதைக்கூட மறந்து போனாள் அவள்,,, 

தன் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டுகையில் ஓர் இனம்புரியாத உணர்வின்பத்தை பெற்றிருந்தாள் அவள். அவ்வுணர்வை அவளைத்தவிர வேறு யாராலும் வர்ணிக்க முடியாது என்பது அப்போது அவளுக்குத் தெரிந்தது . தானொரு உண்மையானத் தாயாக மாறியிருப்தை அவள் மனது அவளுக்கே சொல்ல,,தான் பூமித்தாயின் மடியில் தவழ்ந்து தாய்ப்பால் அருந்துவதாக யாரிடமாவது சொல்ல துடித்துக்கொண்டிருந்தாள்,,,

அன்று மதியம் அலுவலக கோப்புக்கட்டு ஒன்றை எடுக்க மதியமே வீட்டுக்கு வந்திருந்தார் ராஜா.

எசமான், என்ன மத்தியானத்துலேயே வந்துட்டீங்க,,, சாப்பாடு எடுத்து வைக்கவா? கேட்டாள் கங்கா,

ஏம்மா கலா,,, கொழந்த எங்க? ஒரு ஆபிஸ்பைல வச்சிட்டு போய்ட்டேன் அதான் எடுத்துட்டுபோக வந்தேன்,,, கங்கா! வீட்லயா இருக்கா?

கொழந்த அம்மாகிட்ட இருக்கு எசமான்,, அம்மா கொழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துட்டு இருக்காங்க,,,

கேட்டதும் ராஜா ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டு போனான்,என்னது தாய்ப்பால் கொடுக்கறாளா? கண்கலங்கி நின்ற ராஜா மீண்டும் பேசத் தொடங்கினார்,,,

ஏம்மா! கலா,,, ஒனக்கு நான் கடன்பட்டிருக்கேன் என் அம்மா எவ்வளவோ சொல்லியும் கங்கா தாய்ப்பால் கொடுக்க மறுத்துட்டா,,, ஆனா நீ வந்த ஒடனே அவள தாய்ப்பால கொடுக்க வச்சி கொழந்தைய காப்பாத்திட்டேம்மா,,­, ஒனக்கு எப்படி நன்றி சொல்லரதுனே தெரில,,,

என்னங்கய்யா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்ரீங்க ஒங்க உப்ப சாப்டு வளர்ரேன் இது கூட செய்லனா நான் மனுஷியில்லங்க,,, அப்போதும் அவளிடத்தில் பணிவு மலிவாய் எங்கும் நிரம்பி இருந்தது.

ராஜாவுக்கும், கங்காவுக்கும் கலா,,, இன்னொரு தாயாகத் தெரிந்தாள் .





முற்றும்.


(ஆகஸ்ட் 1 உலக தாய்ப்பால் தினம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் வளர்ச்சிக்கும்,அறிவுக்கும் காரணமாய் இருப்போம் என உறுதி எடுக்க தாய்மார்கள் முன்வர வேண்டும்).

Saturday, August 01, 2015

மானைக் கொன்றால் கைது,மனிதனைக் கொன்றால்????

"மான் வேட்டை" என்றதும் உடனே நமக்கு நடிகர் சல்மான்கான் தான் நினைவுக்கு
வருவார், சிறைவாசம்,பெயில், மீண்டும் சிறைவாசம் மீண்டும் பெயிலென்று,,,
இடைவிடாது திரையுலகிலும் தலைகாட்ட சட்டமும் அவருக்கு அனுமதி
வழங்கித்தானிருக்கிறது. ஆனால் சல்மான்கானை ஒதுக்கித் தள்ளிவிட்டு
தமிழகத்தை திரும்பிப் பார்த்தால் இன்றைய செய்தியொன்று நம்மைப் பார்த்து
ஏளனம் செய்ய ,, யாருக்கும் அச்செய்தி அவ்வளவு வேகமாக பரவியிருக்கவுமில்லை
என்பது நமக்கே கொஞ்சம் தாமதமாகத்தான் புத்திக்கு எட்டுகிறது.

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் வனவிலங்குகள்
வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்த நேரத்தில் அங்கே "மிளா" எனும் வகையிலான மானொன்றை
வேட்டையாடி அதன் மாமிசத்தை சேகரித்துக்கொண்டிருக்கும் நால்வர் அடங்கிய
கும்பலை வனத்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் . அவர்களின்
விவரம் வருமாறு,,,
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் , புதுக்கடையை சேர்ந்த
கோபாலகிருஷ்ணன் , அய்யப்பன் , விழுப்புரத்தைச் சேர்ந்த மார்டின்
பிரேம்ராஜ் . இதில் கிறிஸ்டோபர் என்பவரும், மார்டின் பிரேம்ராஜ்
என்பவரும் தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வருபவர்கள். இருவருமே
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
முக்கிய குற்றவாளியாக (A1) கைது செய்யப்பட்டிருக்கும்­ மார்டின்
பிரேம்ராஜ் என்பவர் ஆம்பூரில் இசுலாமியர் ஒருவரை விசாரணை என்கிற பெயரில்
இழுத்துச்சென்று காவல் நிலையத்திலேயே அந்நபரை அடித்துக் கொலை செய்து,
ஆம்பூர் கலவரத்திற்கு அடித்தளமிட்டவர், அச்சம்பவத்திற்காக அவரை அப்போது
இடைநீக்கம் மட்டுமே செய்திருந்தது தமிழக அரசு.
ஒரு மனிதனை அடித்துக் கொலை செய்தமைக்காக வெறும் "இடைநீக்கம்" மட்டுமே
செய்த அரசு ஒரு மானை கொன்றதற்காக கைது செய்திருக்கிறதென்றால் இங்கே
மானுக்கு காட்டப்படும் கருணைகூட மனிதர்களிடத்தில் காட்டப்படவில்லை ,
கொல்லப்பட்ட மானானது எந்தளவிற்கு துடிதுடித்திருக்குமோ­ அதே அளவிற்கு
கொல்லப்பட்ட அந்த மனிதனும் நிச்சயம் துடிதுடித்திருப்பான்­ . அந்தளவிற்கு
கொலை வெறியோடு இருக்கும்­ மார்டின் பிரேம்ராஜ் என்பவரை அன்றே கைதுசெய்து
சிறையில் அடைத்திருந்தால் பாவம் அந்த "மிளா" மானாவது பிழைத்திருக்கும்.

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...