எனை தின்றது போதும்
எழுந்திரு என்றேன்
வறுமையை
எனதுடல் இலகுவானதை
உணர்கிறேன்
உழைப்பின் குறியீடு
வியர்வைத் துளிகளாய்
பட்டுத் தெறிக்க
பசியெங்கே பறந்ததென்று பார்க்கும்
விழிகளெல்லாம்
குருடாகித்தான் போனதிங்கே
சோம்பல் சோகத்திலிருக்க
சிரிப்பை என்னாலும்
அடக்க முடியவில்லை
உடல் நரம்புகள் ஒவ்வொன்றாய்
வீறுகொண்டெழ
விடுவேனா
எனதுழைப்பை
அச்சம் என்னிடமில்லை
ஊரார் வசைபாடலுக்கும்
இடம் தரவில்லை
வீழ்ந்தது போதுமென
வீரநடை போடுகிறேன்
நோய்களெல்லாம்
நோஞ்சானாகிப் போக
புதுவுடலில் புத்துணர்வு
பிறக்க
புதுவாழ்வு கைகளசைத்தெனை
அழைக்க
உழைப்பொன்றே
போதுமென
அழைக்கும் திசைநோக்கி நானும் போகிறேன்
மண்ணில் பிறந்த
மானிடனே கூர்தீட்டு
உன்மதியை
உழைப்பே உலகையாளும்
உண்மை நீ உணர வேண்டும்
என்னைப் போலவே
எழுந்து நட
உழைப்பை நம்பி
நீயும் உயர்வு பெற
இன்னுமா என்னைத்
தெரியவில்லை
என்னை "உழைப்பாளி"
என்றழைப்பார்கள்
மானிடனே,,,
0 comments:
Post a Comment