Sunday, June 28, 2015

அடிப்பதை நிறுத்தாதே அப்பா!

விடியற் காலையில்
பால் வாங்க
நான் போகிறேன்
கடைக்கு,,,

மின்கட்டணம்
நாளை கட்டவேண்டும்
இன்றே கொடுத்துவிடு அட்டையை
என்னிடத்தில்,,,

நுகர்வோர்
அங்காடியின்
கூட்ட நெரிசலை
நான் தாங்குவேன்
கொடு இப்படி
என்னிடத்தில்
ரேஷன் அட்டையை,,,

இன்று முழுவதும் முகூர்த்த தினமாம் அனைத்து நிகழ்சிகளிலும்
நீயிருக்க வேண்டும் குழந்தைகளை
என்னிடம் விடு
காலை பள்ளியில்
விட்டு மாலையில் வீட்டுப்பாடங்களை
நானே கவனித்துக் கொள்கிறேன்,,,

ஞாயிறு விடுமுறை
வீட்டை நான்
நாய் போல காவல்
காக்கிறேன்
நீ கவலைமறந்து
செல் கடற்கரைக்கு,,,

இப்படி அனைத்துச் சுமைகளையும்
அணைத்துக் கொண்டு அடிமையாய்
வாழ்வதுனக்கு பிடித்திருந்தும்

வாழ வந்தவளின்
பேச்சைக் கேட்டு
சனி ஒழியட்டும்
என

அப்பா!!!
உன்னை எங்கு
நான் விற்று விட்டு
வந்தேனோ
அதே
முதியோரில்லச் சந்தையில்
என்னை விலைபேசுகிறான்
உன் பேரன்,,,

பேரம் படியவில்லை
இன்னும்
இழுத்தடிக்கிறான்
அவனோடு
என்னையும்,,,

தொடர் சங்கிலி
அறுபட அறிவை
அன்றே பெற்றிருக்க வேண்டும் நான்,,,

கோபம் வருகிறதப்பா உன்மேல்
தோளுக்கு மேல்
வளர்ந்த பிள்ளையை
அடித்து திருத்துதலை என்மீது முதலறிமுகப் படுத்தியிருக்க வேண்டும் நீ!!!

இப்போது பார்!
செய்த பாவம்
அப்படியே இன்னமும் நிலுவையில்
என் நினைவுகளில்,,,

விரைவில் உன்
கல்லறையில் நான்

அப்பா அப்போதும்
என்னை அடித்து
திருத்தத் தயங்காதே
அங்கே அம்மாவும்
அதே சிந்தனையில் தானிருப்பாள்,,,

அவளிடம் பொய்க் கோபத்தோடு அதட்டிவிட்டு என்னை அடிப்பதை
மட்டும் நிறுத்தாதே
அப்பா,,,

1 comment:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...