Tuesday, November 03, 2015

அவளின் நேசமும் சீற்றமும் ,,,

செழித்த நிலத்தை
அழிக்கத் துணிந்து
ஆர்ப்பரித்து மோதும்
மழை வெள்ளப்
பயணத்தை விடாமல்
துரத்துகிறேன்
அதன் மீதான அதீத
பற்றினால்

இதயம் வெடித்து
இருண்டுலகம் பயந்து
நடுங்கும்
ஒரு பேரிடியின்
பெருமூச்சினை
சுவாசிக்கத்
தொடங்கியுள்ளேன்
அதன் மீதான தீராத
காதலால்

பேரிடியால்
மேகம் மூடிய
அகன்ற இருட்டில்
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கண்பிடுங்கும்
ஒளியை கக்கிவிட்டு
காட்சிக்கு விளக்காகும்
மின்னலை மதித்து
வாழக்
கற்றுக்கொள்கிறேன்

உலக
பலத்தையெல்லாம்
என்னிடம்
காட்டமுடியுமா!
சுருட்டி எடுத்து உன்
சுயநினைவுக்கு
அப்பால் விட்டெறிந்து
விடுவேன்
நன்றாகப்பார் என்னை
சுற்றி சுற்றி வட்டமிடுகிறேன் என்று
சூளுரைக்கும் புயலின்
மடியினில் நான்
உறங்கப் போகிறேன்

கொரூர குணங்கொண்டு
உலகை உலுக்கி
எடுக்கும் இயற்கை
சீற்றங்களை
இப்படியா நேசிப்பது!
இவள் பெண்ணா?
இல்லை பேயா?

எண்ணம் தோன்றியிருக்கலாம்
எதுவும் தவறில்லை
என்னை மாற்றியதும்
சிற்றங்களை நேசிக்க வைத்ததும்
நீங்களாகவே
இருக்கிறீர்கள்

நீங்களென்றால்
பெண்பாலுக்கு
எதிர்வினை
என்னவென்று
இப்போதும் ஆண்பால்
அகராதிகளை புரட்டிக்
கொண்டிருப்பீர்கள்
குற்றமற்ற
ஆண்களென்று அவரவர்
பாணியில்

நான் ஏன் இந்த
மாற்றத்தை
விரும்பினேன் ஆண்களின் அகராதிகள்
சொல்லாது என்
அவநிலையை

அவ்வகராதியும்
ஆணாதிக்கச்
சிந்தனைகளை சுமந்து
வருகிறது தடையில்லா
வழியொன்றில்

குத்துதல்,குடைத்தல்,
முட்டுதல்,முந்துதல்,
உரசுதல், உருட்டுதல்
அழுத்துதல், அடித்தல்
என அத்துணை

கொரூர தாக்குதல்களையும்
ஒரே நேரத்தில்
என்னுடலில் பிரயோகப்படுத்தும்
ஆண்களின் ஆதிக்கத்
திணிப்பு

வியர்வையில் நனைந்து
உடலொட்டிய
ஆடையின் இடுக்கில்
ஊடுருவும் பார்வைகள்
போதாதென்று

காதருகே
பலகுரல்கள் அழைக்கிறது என்னை
போலாமா!
படுக்கலாமா! என்று

தினந்தினம் தொடரும்
பேருந்து பயணத்தின்
தொடர்கதைகள் இவை,,,

பிரதிபலிப்பாய்
கண்ணாடிகளை
உடைக்கிறது
அதே ஆணினம்
அலுவலகத்திலும்

இப்படியாக என்னை
இழுத்து துன்புறுத்தியும் குறிகளை பிரயோகப்படுத்தியும்
உடைந்து போன
ஒரு பொம்மையின்
சிதறிய பாகங்களாய்
என் அங்கங்களை
அவதானிக்கும்
ஆணாதிக்கத்தை
விடவும்
அவ்வளவு
கொடுமையானதில்லை
என் இயற்கை சீற்றங்கள்

நேசிக்கிறேன்!
நேசித்துக் கொண்டிருக்கிறேன்! நேசித்தே தீருவேன்!
என் இனிய இயற்கை சீற்றங்களை,,,
விளக்கேற்றும் நேரத்தில் வீடுபுகுந்தால் ஒற்றை
விளக்கிற்றி உடல்வேட்கை தணிக்க
காத்திருக்கும் கணவன்
அறிவானோ என் உடல் அசதியையும் அச்சத்தையும்
அவனும் மீறுகிறான்
அதிகாரம் செலுத்துகிறான்
உறங்கியும் போகிறான்
என் வேட்கை தனிந்தபாடில்லை,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...