கடுகின் நுனியில்
வேர் திறக்கும்
ஒற்றைத் தண்டுகளை
ஒவ்வொன்றாக
உடைத்து விடுவேனோ
வேர்த்திருக்கும்
முகத்தில்
விளங்காத ஆத்திரங்கள்
சுதாரித்துக் கொண்டு
சுவற்றோடு
ஒட்டிநிற்கையில்
பல்லிகளும்
அலறுகின்றன
நமக்கான நரக
பாதகன் இவனென்று
பட்டப்பெயரும்
பக்கத்தில் என் பெயரும்
பைத்தியத் தன்மையா?
பிணம் தின்னும்
வெறியா?
பற்றி எரியும் கோபமா?
எனக்கு நானே
அலசிவிடுகிறேன் அவசியமற்றதாகிறது வாழ்க்கை
மிருகமாகிப்போனதில்
மனித பிறவியை
தொலைத்தேன்
வாழ்ந்தும் பயனில்லை
வாழ்க்கையும்
அர்த்தமின்றி
கொன்று விடுங்கள்
என்னை
கொஞ்சமிருக்கும்
மனிதமாவது
வாழட்டும்
இந்த மானுட
மிருக உடலை
கொடுங்கோலன்
என சுட்டிக்காட்ட
ஒரு
கல்லறையை நானே
செதுக்கி விடுகிறேன்
இருந்தேன் நான்
அப்படியே
ஒரு மத வெறியனாக
ஒரு சாதி வெறியனாக
ஒரு சமூக விரோதியாக!
மிருகமாகிய நான்!
0 comments:
Post a Comment