Friday, June 17, 2016

பாபா சாகேப் திரைப்படம் தயாகிறது தமிழில்,,,

காமராசர், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புரட்சியாளர்,
இந்திய அரசியலமைப்புத் தந்தை பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு
'பாபா சாகேப்' என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார்
என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.இப்படம் குறித்து அவர் கூறும்போது,
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையை மையக் கருவாக வைத்து
உருவாகவிருக்கும் திரைப்படம் தான் "பாபா" சாகேப். தமிழ் சினிமாவில்
இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட
திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்க்கையை
அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கக் கூடாது என்ற
எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன். ஹாலிவுட்டில்
அட்டன்பரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக
எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை
வரலாற்றை திரைப்படமாக எடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
இந்த பாபா சாகேப்.அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000
பேருக்கு மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை. இறுதியாக எங்கள்
திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் 'ஆய்வுக்கூடம்' திரைப்படத்தின்
நாயகன் ராஜகணபதியை அறிமுகம் செய்தார், அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல
உள்ளதால் அவரை தேர்வு செய்தோம், மேலும் இத்திரைப்படத்திற்காக
அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார்,
பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான
தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு தேனிசைத் தென்றல்
தேவா இசையமைக்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார்
தயாரிக்கிறார்.
- தீக்கதிர்.

ஜிஷாவின் தாயருக்கு கன்னய்யா குமார் ஆறுதல்

இந்துத்துவ பார்ப்பானியத்தின் மனுதர்ம ஆட்சியில் சாதியாதிக்கர்களின் பாசிச போக்கினை, இந்தியம் அனுபவித்துக்கொண்டிரு­க்கிறது. மதவெறி,சாதிவெறி, பெண்ணடிமைத் தனம், தலித் விரோதம், பாலியல் வண்புணர்வு, பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்தலென தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம் நீதி இருந்ததில்லை என்பது தெளிவுபடுத்தும் விதமாக நடந்ததுதான் கேரளத்தில் சட்டக் கல்லூரி மாணவி தலித் ஜிஷா வண்புணர்வுக்காளாகி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கேரளத்தில் புதிய அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ள கம்யூனிஸ்ட் பினராய் விஜயன் அவர்கள் தனது முதல் கையெழுத்தாக தலித் மாணவி ஜிஷாவின் கொலைக்கான துரித விசாரணைக் கமிஷனை அமைத்திட்டார் எனும் ஆறுதலோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கண்ணீரை துடைக்க இன்னொரு ஆறுதல் நிகழ்வும் நமக்கானதாக இருந்திருக்கிறது , டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிகளான கன்னய்யா குமார், மற்றும் ஷெஹ்லா ரஷீத் தோழர்கள் கேரளா சென்று . அங்கு படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிஷாவின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.­ கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஷிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிஷாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்­கள் எனும் நல்ல செய்தி உண்மையில் நமக்கானதாய் இருக்கிறது.

Thursday, June 16, 2016

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து
வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக
உத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு
நிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்
போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லது
இவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளை
பொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்
திட்டமெதேனும் சிந்தித்திருக்கிறார்­களா? இதை கவனிக்காதவர்களுக்கு
அரசியலில் பொறுப்பு கொடுத்தாலென்ன? கொடுக்காட்டியென்ன? அவர்கள் கதைகளான
பாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்
"தேசியம்" இருந்து பயனென்ன? தேசியம் என்றால் என்ன? தேசத்தாரை நேசித்தில்
என்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்
உணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்
சௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு
மற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்கும் வேளையில்
இருக்கவிட்டு விடுவதற்கா தேசியம் வேண்டும்? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
வந்தால் தேசியம் பாழாய்ப்போகுமென்று கூச்சலிடும் காங்கிரஸ்காரர்கள்,
இந்து சேனாக்கள், இவர்களை போல பாமர மக்களை போல உண்டு,உடுத்தி , இனிது வாழ
என்ன செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்? "அரசியல்" தங்களிடம் வந்தால்
போர்ச் செலவை குறைப்பார்களாம்,,நூல­் நூற்று கதராடைச் செய்யச்
சொல்வார்களாம் ,, வெளிநாடுகளுக்குப் போகும் செல்வத்தை தடுத்து
நிறுத்துவார்களாம்,, உத்யோக செலவை குறைப்பார்களாம்,, வரி
குறைப்பார்களாம்,, உப்பு இலவசமாக்குவார்களாம்,­, தேசியத்தை அபிவிருத்திச்
செய்வார்களாம்,, இதையெல்லாம் செய்து தேசியத்தை வளர்ப்பதாகவே
வைத்துக்கொள்வோம், இவைகளை எந்த பிரதேசங்கள் செய்யாதிருக்கிறது?
சுயராஜ்யம் எனும் வல்லாதிக்க அரசுகள் இவைகளை செய்யாதிருக்கின்றனவா­?
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், அமெரிக்கா, முதலிய சுயாட்சி வல்லாதிக்க
தேசங்களில் எவை மேற்குறிய "தேசியத்தை" வளர்க்காதிருக்கின்றன­? எல்லாத்
தேசங்களும் தேசியத்தை தெய்வத்திற்கு மேல் வளர்த்து வருகிறார்கள்.
தேசியத்தை தாண்டி அவர்கள் ஊரில் வாழும் கோடான கோடி உழைக்கும்
தொழிலாளர்களின் நிலமையென்ன? அவர்கள் நித்ய வாழ்வு எவ்விதம் நடந்தேறி
வருகிறது? அவர்கள் உண்ணும் உணவு போதுமா? அவர்களுக்கு உடுத்த ஆடு
இருக்கிறதா? அவர்கள் வசிக்கும் வீடுகள் எந்த மாதிரி? அவர்கள் சந்ததியினர்
நிலை என்ன? பெண்கள்,குழந்தைகள், எந்த அந்தஸ்தில் இருந்து வருகின்றனர்?
அவர்களின் சுகாதாரம் எந்நிலையில் உள்ளது? இவைகளனைத்திற்கும் தீர்வாகாத
செயலற்ற "தேசியம்" எதற்கு? சில வருஷத்திற்கு முந்தி "சால்வேயன் ஆர்மி"
க்கு அதிபதியாகிய பூத் லண்டனில் வாழும் ஏழைகளைப் பற்றி எழுதியுள்ளதையும்
, பீலாட்ச்போர்ட் என்பவர் இங்கிலாந்து தேசத்திலுள்ள தொழிலாளர்கள் நிலமையை
பற்றி எழுதியுள்ள விஷயங்களையும் கவனித்தவர்கள் " இந்த நிலமையிலேயேனும்
தேசியமாவென" ஆச்சர்ப்படத்தக்கதாக இருக்கும். இந்த வகுப்பாரைச் சேர்த்து
நமது காங்கிரஸ் வகுப்பாரும் அதிகாரம் வந்தபோது பாமர ஜனங்களை எப்படி மேலாக
நடத்துவார்கள்? பூரண சுயாட்சி பெற்றுள்ள உலக முழுமையும் முதலாளி
செல்வாக்கில் பாமர ஜனங்களின் கதி அதோகதியாக இருக்க,,, இந்தியாவில்
மாத்திரம் காங்கிரஸ் மற்றும் இந்து சேனாக்கள் நமது பாமர மக்களை
விடுதலைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு என்ன சாட்சி? கராச்சியில்
சென்ற வருஷம் காங்கிரசில் செய்துள்ள அரசியல் திட்டத்தை காட்டுவார்கள்.
ஆனால் அந்த திட்டத்தின் ஆபாசத்தை முன்பே விளக்கியுள்ளோம். இது உண்மையான
திட்டமென்று நம்புவதற்கு இடமில்லையென நிர்ச்சனமாக கூறுவோம். இந்த
ஆதாரமொன்றுமில்ல திட்டத்தைக் கொண்டு உலகை ஏமாற்ற முடியாதென அறிக.
ஜாதிப்பற்றையும்,மதப்­பற்றையும் , தேசியத்தையும் நீக்கி நடப்பது
சமுதாயத்தில் கடினமாகத்தானிருக்கும­் ஆனால் அப்பற்றுகளை முழுதாக நீக்கும்
தருவாயில் மட்டுமே சமுதாயம் செழித்தோங்கும். அப்பற்றுகளோடு வாழவே
காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலாளர் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இவ்வித பற்று கொண்டு ஒரே
விதமாகவே நடக்கிறார்கள். இவர்கள் கூற்று ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம்.
நேற்று நடந்த வட்டமேசை மாநாட்டில் தொழிலாளர் தலைவர்கள் தொழில் வகுப்பு
பிரநிதித்துவம் வேண்டியதில்லையென்றும­்,பொருளாளிகளுக்கு உள்ளதே
தங்களுக்கும் போதுமெனத் தலைவர் சிவராவ் கூறியதாக தெரிகிறது. இதுயென்ன
விபரீத புத்தி? தொழிலாளுக்குத் தங்கள் புராதன நேரெதிர் விரோதிகளாகிய
முதலாளிகளை ராஜ சபைகளில் பாதுகாப்புக்கு வைக்கப்பட வேண்டுமாம், இது
எதற்காக? தேசியத்தை பெருக்க வைக்கவாம், தொழிலாளிகளுக்குத் தனி
பிரதிநிதித்துவம் கொடுத்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள சக்தி
அற்றவர்களாம், இந்த காரணங்களை கொண்டு தொழிலாளிகளை முதலாளிகளிடத்தில்
அடமானம் வைத்து அவர்கள் காப்பில் இருந்துவர வேண்டுமாம், உலக முழுமையும்
எங்கே முதலாளி ஆட்சி பெருகியுள்ளதோ அங்கே தலைவர் சிவராவின் நியாந்தான்
தலைவிரித்தாடுகிறது. உலக வாழ்வுக்கு வேண்டிய சகல பொருட்களைத் தங்கள்
கைகளால் உண்டாக்கும் தொழிலாளிகள், சட்ட சபைகளில் தங்கள் உரிமைகளை ஏன்
காப்பதற்கு கொள்ள மாட்டார்கள்? அது விந்தையில் விந்தையே,,, "நீந்தக்
கற்றுக் கொள்ள வேண்டுமானால் தண்ணீரில் இறங்க வேண்டுமென்பது" தலைவர்
சிவராவுக்கும் அவர் சகாக்களுக்கும் தெரியாது போலும்,,, சட்டசபை
தொழிலாளர்களை பற்றிய ஆணவ மனப்பான்மையைத்தான் "தேசியம்" பிடித்துத்
தொங்குகிறது என்பதை இப்போதாவது உணர்வீர்களா? தேசியமென்பதெல்லாம் பொய்.
உலகில் தோன்றிய கொடுமைகளில் அதுவுமொன்று. தேசியத்தால் விளைந்த கெடுதிகளை
கூற நாவெழா! ஜெர்மன் தேசியம், பிரென்ச் தேசியத்தோடு போர் முடிந்த விஷயம்
சரித்திர விஷயம். தேசியம் எதார்த்தப் பொருளல்ல அதுவோர் கற்பனை உணர்ச்சி.
இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல் அது,, என் தேசம் , உன்
தேசம், அவன் தேசம், தமிழ்த்தேசம், என்பனவெல்லாம் கற்பித வார்த்தைகள்.
தேசம் ஒருவனுடையதல்ல, ஒரு இனத்தாருடையதுமல்ல, உலகில்
வாழ்கிறவர்க்கெல்லாம்­ தேசம் பொது. சந்திரன், சூரியன், காற்று , மழை,
யாருக்குச் சொந்தம்? அதுபோலவே நாடும்,நகரமும், எனது நாடு, எனது இனம்,
எனதீ ஜாதி, எனது அடையாளம் என்பெதெல்லாம் முதலாளிகள் செய்த பலே சூழ்ச்சி .
தொழிலாளுக்கு எந்த நாடும் தங்களுக்குச் சொந்தமில்லை, அவர்கள் உழைத்து
வாழ்பவர்கள் தேசமுழுமைக்கும் உரிமையானவர்கள்.உலகம்­ வாழ்பவர்களுக்கு வாழ
இடமேயொழிய சொந்தமாக பாவிக்க முடியாது. கோடான கோடி வருஷங்களாக உலகில்
உயிர் தோன்றியது. முதல் உலகம் வாழ இடமாயிருந்ததேயொழிய சொந்தமாக்கிக்
கொண்டு தேசியம் என்று வம்பாடுவதற்காக இல்லை. மனிதன் தோன்றிய பிறகு, முதல்
குகைகளை சொந்தமாக்கிக் கொண்டு பிறகு கிராம, நகரங்கள், நாடென சொந்தமாக்கி
அவைகளுக்கு சண்டையும் போட்டுக் கொண்டிருந்து வருகிறான். பாண்டவர்களுக்கு
5 கிராமமாகினும் கொடேன் என்ற துரியோதன மனப்பான்மையே தற்போது
தேசியத்திற்கும்,,, உன் தேசம் என்ற கற்பனை மனித எண்ணத்திலிருந்து நீங்க
வேண்டும். மனிதர் இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் தேசியத்தை துரத்தி
அடித்து பொதுவுடைமை கூட்டத்தில் இந்த பாடத்தை படித்தும்,கற்றும் பயனுற
வேண்டும். தற்காலம் செய்து வரும் ஆயுதக் குறைவு,சமாதான முயற்சியாவும்
முதலாளி திட்டத்தில் பயன்படாது. பொதுவுடைமை மட்டுமே நமக்கு ஒரே வழி.
"தேசியத்தை கைவிட முடியாதென்பார்கள்" இதுவும் பொய். தற்போது உலகில் 16
கோடி ஜனங்கள் இந்த தேசியத்தை ஒழித்து அகிலதேச கூட்டுறவையும், அகிலதேச
தேசத்தையும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த பாழும் தேசியத்தாலே
சென்ற உலக சண்டையில் கோடான கோடி மனிதர்கள் உயிர் துறந்தனர்,பல கோடி
மக்கள் காயம்பட்டார்கள். தேசிய கற்பிதத்தால் உண்டான கேடுகளை கண்ணாரப்
பார்த்து வந்தும் இன்னும் அதனை மக்கள் நாடுவதா? கூடிவாழும் ஜந்துக்களில்
உனது,எனது என்ற பாவணை அதிகமில்லை. யானை , மான்,காக்கை, எறும்பு முதலிய
பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டை கொள்வது அரிது. தனித்து (தேசியத்தில்)
வாழும் பிராணிகளிடையே ஒன்றுக்கொன்று சண்டை இருக்கும். புலி,கரடி,
சிங்கம், முதலிய கொடூர ஜந்துக்களிடம் போர் அதிகம். ஆனால் மனிதர்கள்
கூடிவாழுங்கலையில் சகலமும் பொதுவெனப் பாவிக்கும் பண்புடையவர்கள். எந்த
காலத்தில் நிலத்தையும்,நீரையும்­ தனதென்றும் உனதென்றும் எண்ண ஆரம்பித்து
தேசியம் பயின்றானோ அப்போதிலிருந்து முதல் சண்டை தொடங்கியிருக்கிறது. இந்த
தேசியமெனும் காட்டுமிராண்டித் தன்மையைத்தான் நமது இந்திய காங்கிரஸ்,இந்து
சேனாக்கள் போற்றி வருகின்றன. இந்த தேசியத்து மனப்பான்மையை சரித்திர
மூலமாக ஆராய்ச்சி செய்தால் இதுவும் புராதன காட்டுமிராண்டி
மனப்பான்மையென்றே காட்டும். ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மையை
விட்டுவிட்டு எல்லாத் தேசத்தவர்களும் ஓன்றே! அவர்களும் வாழ வேண்டும்,
நாமும் வாழ வேண்டுமென சமதர்ம பொதுவுடைமை வாழ்வை வளர்க்கக் கூடாது?
- குடியரசு 07.02.1932

Wednesday, June 15, 2016

ஏகாதிபத்தியர்களும்,பிற்போக்காளர்களும் - மாவோ (மா சே துங்)



ஏகாதிபத்தியம் எப்போதும் தீயச்செயல்கள் செய்கிறதாகையால் அது
நெடுங்காலமாய் நிலைக்காது . அது எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும்
மக்களுக்கு எதிராகவே நிற்கும் பிற்போக்காளர்களை வளர்ப்பதிலும்,
ஆதரிப்பதிலும் விடாப்பிடியாகவே நிற்கும். அந்த ஏகாதிபத்தியமானது பல
காலனிகளையும், அரைக் காலனிகளையும் , பல ராணுவ தளங்களையும் கெட்டியாகவும்
பலவந்தமாகவும் பிடித்துள்ளது. அது சமாதானத்தை , சமத்துவத்தை விரும்பும்
சோஷியலிஸத்தை கம்யூனிஸத்தை அணு யுத்தத்தால் அச்சுறுத்துகிறது. இவ்வாறாக
ஏகாதிபத்தியத்தினால் நிர்பந்திக்கப்பட்ட உலக மக்கள் அனைவரும் நமது
சோஷியலிஸ சீனாவும், ஏகாதிபத்தியத்திற்கெத­ிராக போராட்டத்தில் எழுச்சி
பெறுகின்றனர் (அ) பெற்றுக்கொண்டிருக்கி­ன்றனர் . ஆயினும்
ஏகாதிபத்தியமானது இன்னும் ஆசிய நாடுகளிலும், மற்ற உலக நாடுகளிலும்
தறிகெட்டு அட்டகாசம் செய்வதை பல நிகழ்வுகள் மூலம் நாமும்
சந்தித்துக்கொண்டுதான­் இருக்கின்றோம். அதன் தலைமை பீட அமெரிக்காவையும்
அது விட்டுவைக்கவில்லை . இந்த நிலைமை மாற வேண்டும். மாற்றத்தை நோக்கி
கம்யூனிஸ பாதையில் நம் நகர்வு இருக்க வேண்டும். ஏகாதிபத்திய முதலாளித்துவ
ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவது அனைத்து மனித
சமுதாய மக்களின் ஆகச் சிறந்த பணியாகும். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
அடிமைபடுத்தும் புத்திக்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை ஏகாதிபத்தியம் பல
வகையான சதித் திட்டங்கள் கொண்டு அணு குண்டுகளையும்,ஜலவாயு­க்
குண்டுகளையும் , போர்முனை துப்பாக்கிகள் கொண்டும் பிரயோகப்படுத்தினாலும­்
சோஷியலிஸ கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் துவண்டு விழக்கூடாது. துவண்டு
போகும் அளவிற்கும் சோஷியலிஸ கம்யூனிஸம் பலகீனமாதுமில்லை. உலகத் தொழிலாளர்
வர்க்கச் சுரண்டலை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து பொங்கிப்
பாயும் சீற்றத்தை ஒரு மலை முகட்டிலிருந்து மறைந்து பார்த்துக்
கொண்டிருக்கும் "பிற்போக்காளர்கள்" எனும் காகிதப் புலிகளின் பார்வையால்
புரட்சியின் உண்மைகள் மக்களிடையே தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏகபோக
முதலாளித்துவ கோஷ்டிகள் தங்கள் ஆக்கிரமிப்பு , யுத்தக் கொள்கைகளை
திணிப்பதில் பிடிவாதமாக இருந்ததால் அவர்கள் உலகின் அனைத்து மக்களால்
தூக்கிலப்படும் நாள் வந்தே தீரும். நாமதை நெருங்கியும் விட்டோம் .
அதற்கிடையில் இந்த பிற்போக்காளர்களும் சிக்கிக்கொண்டு சீரழிந்து செத்துப்
போவார்கள். ஏகாதிபத்திய முதலாளித்துவ குணங்களை நல்லதாகவும், அது
பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததெனவும் உலக மக்களை நம்ப வைக்கும் தகவல்
பரப்புரை புரியும் எல்ல பிற்போக்காளர்களும் வெறும் காகிதப் புலிகளாகவே
அடையாளப்படுத்தப்படுவ­ர். அவைகள் சீறிப்பாய்வதில்லை, சினங்கொண்ட சோஷியலிஸ
கம்யூனிஸ புரட்சியை விரும்பியதுமில்லை. அவைகள் (பிற்போக்காளர்கள்)
உண்மையில் சக்தி மிக்கவர்கள் அல்ல, அவைகளுக்கு அவ்வப்போது வீசப்படும் மத
, இன , கறித்துண்டுகளே போதுமானதாய் இருக்கிறது . நீண்டகால வரலாற்றுக்
கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆகப் பெரும் சக்தி மிக்கவர்களாகவும்
முதலாளித்துவர்களாகவு­ம் செயல்பட்டுக் கொண்டிருந்த பிற்போக்காளர்கள்
மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டு­ள்ளார்கள். இங்கே மக்கள் மட்டும் பெரும்
சக்திகொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த மக்களிடத்தில் சகோதரத்துவம்,
சமத்துவம், சோஷியலிஸ கம்யூனிஸம் மட்டுமே பெரும் விருப்பமாக இருக்கிறது.
தங்கள் விருப்பக் கனவுகளை அவர்கள் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.­
அக்கனவின் ஏக்கங்களை அவர்கள் (மக்கள்) பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்.­ ஒரு விஷப் பாம்பின் இரட்டை நாக்குகளை போன்று பிற்போக்காளர்கள் செயல்படுவதை மக்களும்
கவனித்துக்கொண்டுதான்­ இருக்கிறார்கள். இந்த இரட்டை இயல்புகளை
பிற்போக்காளர்கள் தங்கள் தொழிலாகவே செய்துக்கொண்டிருக்கி­றார்கள்
முக்கியமாக தொழிற்நுட்ப முறையால் தங்களை செம்மைபடுத்திக் கொண்டு அதன்
மூலமே அவைகள் மக்களிடத்தில் பொய்களை பரப்புகின்றன. ஏகாதிபத்திய
முதலாளித்துவம் அரசு அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு முன்னும் அதன் பின்னும்
, நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், முதலாளிய வர்க்கம் ஆகியவை
தீவிரமிக்கவையாகவும்,­ புரட்சிகரமானவையாகவும­் முற்போக்கானவையாகவும்­
தங்களை காட்டிக்கொண்டு உண்மைப் புலிகளை போல இருந்தன. ஆனால் கால கதியால்
இவற்றின் எதிரிடைகளான அடிமைத் தொழிலாளர் வர்க்கம் , விவசாய வர்க்கம் ,
தொழிலாளர் வர்க்கம் ஆகியன படிப்படியாக பலம் பெற்று வளர்ந்து அவ்வுண்மை
புலிகளின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் காட்டியதன் விளைவாக காகிதப்
புலிகளாக அவைகள் இருக்க எதற்கு உண்மைப் புலி முகங்களென தெளிவுபடுத்தியது.
இதனால் ஆளும் வர்க்கம் படிப்படியாக நேரெதிர் தன்மையான "பிற்போக்கு" எனும்
அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ளும் தேவைக்கு தள்ளப்பட்டது.
அவைகள் மக்களால் வீழ்த்தப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டு­ம் நடந்து
கொண்டிருக்கிறது, இனிமேலும் நடக்கும். அதிதீவிர பிற்போக்காளர்கள்
பெரும்பாலும் சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு எதிராக ஆசை வார்த்தைகளையும்,
வெற்று கோட்பாடுகளையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் ஜீவ மரணம் நிகழ்கின்ற
வரையில் சதிவேலைகளையே முகங் கொண்டிருக்கும் . இவ்வாறான பிற்போக்கு
காகிதப் புலிகளின் முற்போக்கு வேஷத்தையும் இரட்டை இயல்பு போக்கையும்
தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் புரட்சி போராட்டங்களை பொசுக்கும் பணியில்
முதலாளித்துவ கைக்கூலியாகவே அடையாளப்படுத்தப்படுக­ிறார்கள். சீனாவில்
ஏகாதியத்தியத்தினதும்­, நிலப்பிரபுத்துவத்தின­தும், அதிகாரத்துவ
முதலாளித்துவத்தினதும­் நின்ற பெரும் கொடுங்கொல் ஆட்சியை அழிப்பதற்கு சீன
மக்களுக்கு 1949 ம் ஆண்டின் வெற்றிக்கு முன் நூற்றாண்டு அடிமை வரலாறு
இருந்ததையும், பல உயிர்களை பறிகொடுத்தோம் என்பதையும் மறுக்க முடியாது.
அதன் காலதாமத , உயிரிழப்புகளுக்கு சதித்திட்டங்களை வகுத்ததில்
பெரும்பங்கு இந்த இரட்டை நாக்கு , காகிதப் புலிகளான
பிற்போக்காளர்களுக்கு­ உண்டென்பது வரலாற்று உண்மை. "கல்லைத் தூக்கி
கடைசியில் தன் கால்களிலேயே போட்டுக் கொள்வது" என்பது பிற்போக்கு
மூடர்களின் செய்கைகளை வர்ணிக்கும் ஒரு சீன முதுமொழி. எல்லா நாடுகளினதும்
பிற்போக்காளர்கள் இந்த வகைகளினான மூடர்களே! என்றுமே இறுதி ஆராய்வில்
அவர்கள் புரட்சிகர மக்களை கொடுமைபடுத்துவது,மக்­களின் புரட்சிகளை
துரிதப்படுத்தவிடாமல்­ தடுப்பது, போன கொடுஞ்செயல்களே மிஞ்சியிருக்கும்.
புரட்சிகர மக்களை ருஷ்ய ஜாரும்,சியாங் கே ஷெக்கும் இந்த வகையிலாற்றிய
பிற்போக்கு முதலாளித்துவ பணி முறைதானே! சர்வதேச நிலைமை இப்போது ஒரு புதிய
திருப்புமுனையை அடைந்துள்ளது என்பது எனது அபிப்ராயம். இன்று உலகில்
கீழைக் காற்றும், மேலைக் காற்றும் உள்ளன. ஒன்றில் கீழைக் காற்று மேலைக்
காற்றை மிஞ்சி வீசும், அல்லது மேலைக் காற்று கீழைக் காற்றை மிஞ்சி
வீசும், என்றொரு சீன பழமொழிக்கேற்ப கீழைக் காற்று மிஞ்சி வீசத்
தொடங்கியிருப்பதை நான் காண்கிறேன். வேறு விதமாக கூறினால் சோஷியலிஸ
சக்திகள் ஏகாதிபத்திய சக்திகளை விடப் பெருமளவு பலத்தால் உயர்ந்து
நிற்கிறது. இனி உயரும்,,, கம்யூனிஸம் தன் தன்பயணத்தை இடைவிடாமல்
தொடர்ந்து மேற்கொள்ளும். என்பதை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
- மாவோ (மா சே துங்)

Monday, June 13, 2016

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்




1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது
செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு
ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு
அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா
என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.
எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள்
குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான
உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற
முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது.
அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை
வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும்
உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி
இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே
தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா
என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.



லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை
நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக
வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி
தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி
காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.
கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்
தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது
என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை
நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க
பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர்.
ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல
உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன.
பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள்
துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின்
புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும்
முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர
வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து
பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்
படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை
விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான
வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக
பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர்
காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது.
கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின்
துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக
இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால்
மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக்
கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்
கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம்
கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த
பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை
உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய
உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை
பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து
தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.
வரலாற்று நாயகன் லெனின்.

Sunday, June 12, 2016

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர்
பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா
சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில்
இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு
சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்"
என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில்
பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும் மூடிக்கொண்டு,,, இங்கே
மதுவை ஆதரித்துக் கொண்டே மனித உயிர் மதிக்கத்தக்கது என இரட்டை
நாக்குகளோடும் அதையே நாகரீகமென்றும் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிற­து.
அதனாலோ என்னவோ!
குடிபோதை சாலை விபத்துகளை கண்காணாது விட்டுவிடுகிறோம். அதன் விளைவு சாலை
விபத்துகளில் தமிழகத்தை முதலிடத்தில் பிடிக்க வைத்திருக்கிறோம். இனி
பெருமை பட்டுக் கொள்ளுங்கள் மிகவும் இலகுவாக மனித உயிரை பறித்தெடுக்கும்
முதன்மை மாநிலம் எங்கள் தமிழகமென்று,,,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில்
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து குறித்தான அறிக்கை இவ்வாறு
கூறுகிறது : கடந்த ஆண்டில் (2015) தமிழகத்தில் மட்டும் 69059 சாலை
விபத்துகள் நடத்துள்ளது அதில் 400 பேர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில்
பலியாகின்றனர். தமிழகத்தில் 69059 விபத்துகள் கடந்த ஆண்டில் நாட்டிலேயே
அதிகபட்சமாக தமிழகத்தில் 69059 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. இதன் மூலம்
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் தமிழகத்தை
பொருத்தமட்டில் பெரும்பாலான சாலை விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டுவதில் நிகழ்ந்திருக்கிறது. இதில் அதாவது 50% த்திற்கு மேல்
பாதிக்குப் பாதியான விபத்துகள் மதுபோதையால் நிகழ்ந்திருக்கிறது.
"உயிரிழப்பு" என்கிற எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம்
முதலிடத்தில் உள்ளது. 201‌5-ம் ஆண்டில், உத்‌தரபிரதேசத்தில் சாலை
விபத்துகளில் 17,666 பேர் உயிரிழந்துள்ளனர். பெருநகரங்களைப் பொறுத்தவரை
மும்பையில் அதிகபட்சமாக 23,46‌8 விபத்துகள் நேரிட்டுள்ளன. டெல்லியில்
அதிகபட்சமாக 1,622 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். என
அறிக்கை தெரிவித்திருக்கிறது.­ மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதில் எந்த மாற்றமும் இல்லை , ஒவ்வொரு ''ஒரு மணி நேரத்திற்கும் 57
விபத்துக்கள் நடைபெறுகிறது. இதில் 17 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக
54 சதவிதம் பேர் 15 வயது முதல் 34 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு போரினாலோ, தொற்று நோயாலோ, தீவிரவாதிகள் தாக்குதலாலோ மக்கள்
சாகடிக்கப்படுவதில்லை­ என தெரிவித்திருக்கிறார்­ . பிறகென்ன மதுவால்
தமிழ்ச் சமூகம் சாலை விபத்துகளில் சிக்கி முதலிடம் பெற்றிருப்பதற்காக
அந்த மதுவையே டாஸ்மாக் என்கிற பெயரில் அரசே விற்பதற்காக இனி தமிழக மக்கள்
தாராளமாய் விழா எடுக்கலாம். பொதுவாக மிதமான குடியில் வாகனத்தை
செலுத்துவது தவறில்லை எனவும் இதுவே சகஜமான வாழ்க்கை எனவும், கவுரவத்தை
காக்கிறது எனவும் மக்களின் பொதுபுத்தியாகிப் போயிருக்கிறது. குடியிலென்ன
மிதமான குடி? மொடாக்குடி? என தெரியவில்லை, குடிப்பதே உடலுக்கு தீங்கென
இருக்கின்றபோது அதில் நியாயப்படுத்துதல் ஏனோ மனதை உறுத்தவில்லையா? இதில்
நிதானக் குடிகாரர்களை இச்சமூகம் அங்கீகரிக்கிறது என்பது மிகவும் வேதனையான
விஷயமாக இருக்கிறது. 50% த்திற்கு மேலான இந்த குடிகாரர்களை தவிர்த்து
மற்றவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பெரும்பாலும், ஏதோ மன உளைச்சலில்
வாகனம் செலுத்துபவர்களாகவும்­, சாலை விதிகளை மதிக்காதவர்களாகவும்,­வாகனம்
ஓட்டும் போது வெட்டி பந்தா காட்டுபவர்களாகவும், அதிவேகப் பயணப்
பிரியர்களாகவும், வாகனம் ஓட்ட முறையற்ற பயிற்சியற்றோர்களாகவு­ம்,
தூக்கத்தில் வாகனம் செலுத்துபவர்களாகவும்­ இருக்கிறார்கள் .
(இவைகளனைத்தையும் மதுப் பிரியர்கள் ஒரே மூச்சாய் செயல்படுத்துவார்கள்
என்பது வேறு விஷயம்) ஒரு தாய் தனது வயிற்றில் 10 மாதம் சுமந்து பாலூட்டி,
அக்குழந்தையின் நலனுக்காக தன்னுயிரை துட்சமென தூக்கிப்
போட்டுவிட்டுத்தான் ஒரு மனிதனாக்குகிறாள். அந்த பிள்ளை சாலையில் அடிபட்டு
ரத்த வெள்ளத்தோடு உயிருக்குப் போராடுவதை எந்த தாயாலும் தாங்கிக் கொள்ளவே
முடியாது. உண்மையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாலும், மேற்கண்ட
மற்ற இதர நிலை கொண்டவர்களாலும் ஒருபாவமும் அறியாத அப்பாவி பொது மக்கள்
பெரிதும் பாதிப்படைகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். "கவனக்
குறைவு" என்பதிலேயே மேற்கண்ட செயல்பாடுகள் பொருந்திப் போகிறது. இக் கவனக்
குறைவில் போக்குவரத்து துறை அதிகாரிகள் லஞ்சம் , ஊழல் போலி வாகன
உத்திரவாதங்கள் இடம் பெறாது, ஏனெனில் அது கவனக் குறைவு இல்லை திட்டமிட்ட
படுகொலையாக கருதப்படுகிறது. தமிழ்ச் சமுகம் தன் வாழ்கையின் வாழ்வுத்
தன்மையின் உன்னதமறிந்து சாலை விபத்துகளை தவிர்க்கத் தேவையான அத்தனை
முயற்சிகளையும் மேற்கொண்டு சமூக வாழ்வியலில் மனித உயிருக்கான மதிப்பை
பேணிக் காக்க வேண்டும்.

Friday, June 10, 2016

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25
ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர்
பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன்
11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி"
நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை
கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து
தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று
முதல்வரிடம் மனு அளிக்கப்பட இருப்பதாக தோழர் பேரறிவாளனின் தாய்
அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்­. பேரணியானது பகல் 1 மணிக்கு
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து துவங்குகிறது. சமூக விடுதலையை நோக்கி
சென்னையை முற்றுகையிடும் நம் தோழர்கள் 12 மணிக்குள் களத்தில் இருப்பது
நல்லது. இப்பேரணியின் மூலம் நீதியை கொன்று அழித்துக் கொண்டிருக்கும்
ஆதிக்க அதிகார வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை நாம் தந்துவிட
வேண்டும். முன்னதாகவே இடதுசாரிய இயக்கங்களிடமும், திராவிட
இயக்கங்களிடமும் எழுவர் விடுதலைக்கான பேரணிக்கு ஆதரவு வந்தவண்ணம்
இருக்கிறது. இது நமக்கு ஆறுதலை அளித்திருக்கிறது. நாளையோடு (ஜூன் 11)
தோழர் பேரறிவாளனின் சிறைவாசமானது 25 ஆண்டுகளை நிறைவடைகிறது. அரசியல்
அதிகாரத்தை கைப்பற்றி பதவி ருசி பார்த்தோர்களின் திட்டமிட்ட ராஜீவ்
காந்தி கொலை சதிக்கு காரணமானோர்கள் சுதந்திரமாக பதிவி சுகத்தோடும், பண
பலத்தோடும், அதிகார பலத்தோடும் நீதியை விலைக்கு வாங்கி சுகபோகமாய்
வாழ்கிறார்கள். ஆனால் எந்த குற்றமும் செய்யாமல் போலியாக சித்தரிக்கப்பட்ட
வழக்கில் நம் ஏழு தமிழர்கள் ஆயுள் தண்டனையை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பது நீதியின் மீதான அவநம்பிக்கையை தெளிவாக
உணர்த்துகிறது. இந்த விசித்திர நீதித்துறையுலகில் வருமாணத்திற்கு அதிகாக
சொத்து சேர்ப்பது குற்றமில்லை என்பதும் , குமாரசாமிகளின் கணக்குப்
பாடங்களும், இத்தியாதி,,, இத்தியாதி,,, என நீளும் பாசித நீதிகளின்
மத்தியில்தான் நாமும், நம் ஏழு தமிழர்களும் தினந்தினம் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்.­ அதிகார வர்க்கத்தின் பிடியில் இருக்கும்
பார்ப்பானிய நீதித்துறையை முடிந்தளவிற்கு மீட்டெடுத்தலை இந்த எழுவர்
விடுதலைக்கான பேரணியில் அணிதிரள் மூலம் முட்டி மோதிட வேண்டியது மிக
அவசியமாக இருக்கிறது. ஆகவே தோழமைகள் பெருந்திரளாய் பேரணியில் கலந்து
கொண்டு சென்னையை திணரடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கே பேரணிக்கு அழைப்பு விடுப்போர் ஏன் அதற்கு,,, இதற்கு,,, போராட்டமோ ,
பேரணியோ நடத்தவில்லையென சிலர் விவாதங்களை கிளப்பலாம் , அதனை
பொருட்படுத்தாது நாம் பேரணியை வெற்றியடைய செய்திடல் வேண்டும்.

பேசும் இதயம் 7

நாளையும் அதே
மரத்தடியில்
நம் சந்திப்பு
உதிர்ந்த மலர்கள்
மீண்டும்
கிளைக்கு திரும்பலாம்,,,

__________

பசியில்
கிளி
ஜோசியக்காரனின்
ஒரு நெல்லும்
விலை போனது,,,

__________

என்னில்
செங்கதிராய்
பாய்கிறாய்
சுடர்விட்டு
எரிகிறதென்
காதல்
அணைத்து விடாதே!
அவ்வளவு
சீக்கிரத்தில்
என் மரணம் நிகழ்ந்துவிடாது
என்னவளே!

__________

உன்
பார்வையில்தான்
எத்தனை
விளக்கங்கள்,,,
அகராதியை
மூடிவிட்டு
உன் முகத்தையே
பார்க்கிறேன்
அன்பிற்காக
ஏங்கி ஏங்கி,,,

__________

தூவானம்
தொலைவில்
அவள் முகம்
தேடுகிறேன்
என்னை,,,

__________

விழுந்தும்
வலி பொறுத்து
அடுத்த அடி
எடுத்து வைக்கிறாள்
தலையில்
அவ்வப்போது
செங்கல், சிமெண்ட்,
மணல், ஜல்லி,
என மாறி மாறி
அவள் பெயர்
சிற்றாள் ஆகிறது
அக்கணத்தில்,,,

__________

எல்லாம்
விதியென்றார்கள்
வாழத் தெரியாதவர்கள்
அவரவர் தகுதிக்கு
அர்ச்சனை தட்டு
மட்டும் நிரம்பி
வழிகிறது
வேடிக்கை
கடவுளுக்கென்று,,,

__________

மௌனங்களை
காற்றில்
கரைய விடுகிறது
காதல்
அவ்வப்போது
காகிதங்களில்
சொற்தூறல்,,,

__________***__________

Thursday, June 09, 2016

அற்புத கனவொன்றில்

அற்புத கனவொன்றில்
ஆடித் திரிகின்றேன்
நான் மட்டும்
தனியே

அக்கனாவில்
என்னை
இழுத்துச் செல்லும்
நித்திரைக்கு
பூக்கள் தூவி
தினம் பூஜிக்கும்
வழக்கம் என்னில்
உண்டு

இரவை
வலிய இழுத்து
இமைகளுக்கு
ஓய்வு கொடுத்து
உள்நுழைகிறேன்

அதுவொரு ஏகாந்தவெளி
இடையூறுகள்
ஏதுமின்றி
வானத்துச்சியில்
வா!வா! என
அழைக்கிறாள்
இயற்கையன்னை

சென்றேன்
அங்கே நானும்
அந்த பசுமையின்
வனப்பில்
விளையாடி
மகிழ்கின்றேன்

அந்த நதியின்
முகடுகளில் என்
முகம் பதித்து
முத்தமிடுகின்றேன்

அந்த மலைச்சரிவில்
மரக்கன்றுக்கு
பாலூட்டும்
தாய்மரத்திடம்
நானுமொரு
குழந்தையாய்
பால் குடித்து
பசியாறுகின்றேன்

அனைத்திற்கும் மேலாய்
நிலவுக்கு சோறூட்டி
என்னில் பாதியை
அதனிடத்தில்
கொடுக்கின்றேன்

என் மடியில்
முடித்து வைத்திருந்த
மின்மினிப் பூச்சிகள்
விடுதலை அடைய

என்னையே
சுற்றி சுற்றி
வருகின்றன
நட்சத்திரங்கள்

ஏணிப் படிகளிட்டு
என் தேகமெங்கும்
சுகமாய்
வருடுகின்றன
இலையில் தங்கிய
பனித்துளிகள்

இவைகளனைத்தும்
அந்த அற்புத
கனவொன்றில்
நான் மட்டுமே
தினந்தினம்
அனுபவிப்பவை

ஆகவே விடுக்கிறேன்
வேண்டுகளோ
கட்டளையோ
நீங்களே
நிரப்பிக் கொள்ளுங்கள்

ஆனால்
என் கனாவில்
செயற்கைக்கோளை
மட்டும் அனுப்பி
ஆராயாதீர்கள்

அதன்
விசப்புகையில்
என்
அற்புத கனவோடு
நானும்
இறந்துவிடுவேன்

மரண வலி
தாங்கும் சக்தி
வளிமண்டலம்
கொண்டிருக்கவில்லை
என் அற்புத
கனவும் கூட

என்னை
தூங்க விடுங்கள்
என் கனவை
வாழ விடுங்கள்
என் தனிமையை
திருடாதீர்கள்,,,

Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு" நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை பெற்றிருந்தாலும் அந்த ஒரு நபரை வைத்து பத்து பேரை அரசியல்படுத்த முடியாமல் போனதால்தான் இன்று சாதிய தீவிரவாதத்தாலும் மத தீவிரவாதத்தாலும் பெருங்குடி மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் . "ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளைக்கு எதை தர வேண்டும்" என வசனங்களை பேசி பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டிய பாலின் விலையை உயர்த்தி டாஸ்மாக் எனும் சாராயக் கடைகள் மூலம் சமூகத்தை சீரழித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் அதிமுக அரசிற்கு 25 ஆண்டு காலம் தன் மகனை பிரிந்து வாழும் உண்மையான ஒரு தாயின் வலியென்ன தெரிந்துவிடவாப் போகிறது. ஆனாலும் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே உங்களின் புத்திக்கு நம்மை ஆளுவது பார்ப்பானியம் என்பது உறைக்கவில்லையா? நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருக்கிறார் : " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இதிலென்ன தவறு இருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்டு கொலைக்கு உடைந்தையாக பேட்டரிகள் விநியோகம் செய்தாரென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் தன் வாழ்நாளை தொலைத்து நிற்கிறார் தோழர் பேரறிவாளன். அவரோடு சேர்த்து குற்றவாளிகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு குரலெழுப்புவது என்பது மனிதாபிமானம் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றபோது அதிலொருவனாய் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, விடுதலை கோரிக்கைப் பேரணியில் தானும் கலந்துகொள்வதாய் கூறியிருக்கிறார். திரைத் துறையில் இதற்குமுன் இயக்குநர் பா. இரஞ்சித் தனது ஆதரவை பதிவு செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டுதலுக்கும் உரியது. இவர்களின் ஆதரவினை வைத்தே அரசியலாக்கி எழுவரின் விடுதலைக்கு ஆதரவான அதிர்வலைகளை உறுவாக்கலாம். ஆனால் இந்த போலித் தமிழ்தேசியர்களோ மீண்டும் மீண்டும் நடிகர்களை கூத்தாடிகளாக வசைபாடி ஏதேதோ டி.என்.ஏ சோதனைகளாம் செய்து விஜய் சேதுபதியை வந்தேறி என்றும், நாயக்கச் சாதியனே! என்றும் தமிழ்த்தேச துரோகி என்றும் வசைபாடுகிறார்கள். அதேவேளையில் தனது சுயசாதி ஓட்டில் ஜெ புகழோடு வென்ற கருணாசுக்கு எதிராக எவ்வித விமர்சனமும் அவர்களிடத்தில் எழுந்ததாக தெரியவில்லை, இதனையே நாம் இந்துத்துவ பார்ப்பானிய தமிழ்த்தேசியம் என்கிறோம். எங்கே? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சு சாமியையும் ,ஜெயாவையும் எதிர்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அது முடியாது காரணம் தமிழ்த்தேசியத்தை இயக்குவதே பார்ப்பானியமாகத்தான்­ இருக்கிறது. உண்மையில் பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலையாகி எழுவரும் ஒரே பொது மேடையில் பேசினால் அழியப்போவது போலித் தமிழ்த்தேசியமாகத்தான­் இருக்கும். அதனாலோ என்னவோ அந்த எழுவரின் விடுதலைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் உடனே பதற்றமாகி பொங்கி எழுந்து டி என் ஏ சோதனை மூலம் பொங்கல் வைக்கிறது போலித் தமிழ்த்தேசியம். இந்த பொங்கலெல்லாம் பார்ப்பானியத்திற்கான­ படையலாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் "விஜய் சேதுபதி" என்று கூகுள் தேடுபொறியில் சுட்டினால் அந்நடிகரின் படம்,படம் சார்ந்த கதாபாத்திரம்,பாடல்கள­் என தேடிக் கொடுக்கும் கூகுள், ஆனால் இப்போது தேடினால் "விஜய் சேதுபதி சாதி,ஜாதி" என்று தொடர்புடையதில் இடம் பெறுகிறது "இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களே" என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது உங்களின் பித்தாலட்ட தமிழ்த்தேசியம்.

Tuesday, June 07, 2016

மலடி அல்ல அவள்

மனதில் உட்புகுந்து
உயிரை
வதைக்குமந்த
"மலடி" எனும்
கொடுஞ்சொல்லை
மறக்கவே

மரணத்தின் வாசலில்
இருந்து அவள்
எழுதும் கடிதத்தின்
கடைசி வாக்கியத்தில்
ஓர் மழலையின்
கைநாட்டு

எப்படி?

பெற்றால்தான்
பிள்ளையா?
எதிர் கேள்வி
தொடுத்தது எதிர்வீட்டு
மழலை

ஆனாலும்
உள்ளம் உருகாமல்
மனதிறங்கியும் வராமல்
சொட்டுக் கண்ணீரின்றி
கல்நெஞ்சத்தோடு

அடுத்ததொரு
மரணத்திற்கு
அடித்தளமிடுகிறது
நாவில்
குடிகொண்டிருக்குமந்த
மலடி எனும் வார்த்தை

இறந்துபோன தாயின்
கல்லறையில்
இப்பொழுதும்
குழந்தையொன்று
தவழ்கிறது
நாளைக்கு அதற்கு
மரமென்று
பெயர் சூட்டி
அழைப்பார்கள்

மலடி அல்ல
அவளென்று
மண்ணிற்குள்
புதையுண்டிருக்கும்
விதைக்கு மட்டும்
தெரிந்திருக்கிறது,,,

Monday, June 06, 2016

"அந்த" கவிதை

என் பேனாவின்
கூர்முனை
தேய்கின்றவரையில்
அனுபவித்து அனுபவித்து
கிறுக்கினேன்
கவிதை எனும்
பேரில்

நீயதை
வாசித்து
அலட்சியமாய்
விட்டெறிந்தாய்

அதிலொன்று
காமம் பேசியது
அனுபவமின்றி

உடனே விமர்சனம்
வருகிறது உன்னிடம்
அதற்கு மட்டும்

புரிந்தது எனக்கு
உனது பெருங்கோபமும்
ஆழ்மனதில் தோன்றிய
பெயரில்லா
உருவத்துனது
கற்பனையும்
புரிந்தது எனக்கு

பதற்றம் வேண்டாம்
பரிதவிப்பும் வேண்டாம்
பெருங் கோபமும்
வேண்டாம்
பொறுமையாய் கேள்

நீ
அலட்சியமாய்
தூக்கியெறிந்த
மற்ற கவிதைகளிடம்
காமம் கொண்டேன்

உனது கண்ணுக்குத்
தெரியும்
"அந்த"
கவிதையில் மட்டும்
காதல் கொண்டேன்

இருட்டு கனலகத்தில்
உனது எண்ணங்கள்
காற்றில் கரைந்து
எங்கோ சிதறி
ஓடுவதையும்
தற்போது நான்
காண்கிறேன்,,,

பார்ப்பானிய இந்து தீவிரவாதிகளின் மாட்டரசியலும் , மனிதத் தன்மையற்ற செயல்களும்,

மாட்டின் கோமியத்தை குடித்து குடித்து மதியிழந்தவர்களிடம்
மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பார்ப்பானிய
இந்துக்களால் முன்னெடுக்கப்படும் மாட்டிறைச்சி தடை அரசியலில் முக்கியமாக
அவர்கள் முன்னிலைபடுத்தும் உள்நோக்க அரசியல் என்பது ஒன்று "தலித்துகளை
அடக்கியாளுதல்" இன்னொன்று "இசுலாமியர்களுக்கு எதிராக கவனம் திருப்புதல்"
இந்த இரண்டு உள்நோக்கக் காரணங்கள் இன்றி மற்ற நன்மதிப்பிலான காரணங்களை
பார்ப்பானிய இந்துக்களிடம் இல்லை, உண்மையில் பசுவை புனிதமாக கருதி
மாட்டிறைச்சியை தடை கோருவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும்
அவ்வாறு தடையை ஏற்படுத்தினால் பெரும்பாலான இந்துக்கள் அதை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் என்றும் நிச்சயமாய் பிராமணியத்திற்கு தெரியும், அவ்வாறு
தெரிந்திருந்தும் குறிப்பிட்டு தலித்துகளையும், இசுலாமிய சிறுபான்மை
சொந்தங்களையும் குறிவைத்து இந்த மாட்டிறைச்சி தடை அரசியல்
நகர்கிறதென்றால் மனுதர்மத்தை? முன்னிலைபடுத்தவும், இசுலாமியர்களை
இந்துக்களுக்கு எதிராக கட்டமைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவுமே இந்த
மாட்டிறைச்சி தடை அரசியலை நிகழ்த்துகிறார்கள் என்பது தெளிவு. உண்மையில்
தலித் மற்றும் இசுலாமியர்கள் மட்டுந்தான் மாட்டிறைச்சி உண்ணுகிறார்களா?
கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை
யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு
கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன. ரிக் வேதத்தில் தொடங்கி
இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது
பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது.­­ இதனை அம்பேத்கர்,
டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன்
விளக்கியிருக்கிறார்க­ள். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பிறகான சமணம், பௌத்தம் இந்தியாவில் காலூண்றும் நேரத்தில் மாட்டிறைச்சி
தின்பதிலிருந்து தங்களை விடுத்துக் கொண்டார்கள் பார்ப்பானர்கள். அதன்
பிறகே சைவ நிலைப்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆரம்பம் முதலே
தாங்கள் (பார்ப்பனர்கள்) சைவத்தை கடைபிடிப்பவர்களென்று­ பல்வேறு
கட்டுக்கதைகளை புனைய ஆரம்பித்தார்கள் அது இன்றுவரையில் தொடர்ந்து
புனையப்பட்டும் வருகிறது. இந்தியாவின் புலால் உற்பத்தி ஆண்டுக்கு 63
லட்சம் டன்னாக இருக்கிறது. இதில் 40 இலட்சம் டன் மாட்டுக்கறிதான். 22
லட்சம் டன் இந்தியாவில் உண்ணப்படுகிறது. 18 லட்சம் டன் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பரவலாக மாட்டிறைச்சி
உண்ணப்படுகிறது என்பது தெளிவு .அதில் தலித், இசுலாமியர் அல்லாத
பெரும்பான்மை இந்துக்கள் உள்ளடக்கம். உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில்
பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி
மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆறில் நான்கின் முதலாளிகள் பார்ப்பன
இந்துக்கள். அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள்,
அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக்
கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் இணையதளம் வெளிக்கொணர்ந்தது.
பத்திரிகையாளர் வீர் சங்வி இதனை நிரூபித்திருந்தார். அவ்வாறு இருக்கையில்
பார்ப்பன இந்துத்துவ சக்திகள் பசுவின் பாதுகாவலர்கள் எனச் சொல்லி
ராஜஸ்தான் மாநிலத்தில் சோட்டி சத்ரி பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள
சிட்ரோகர் வழியாக வியாபாரத்திற்காக 50 மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தை
மறித்து அதிலிருந்த இசுலாய ஓட்டுனர் மற்றும் மூவரை காவல்துறையினரின்
கண்முன்னே நிர்வாணப்படுத்தி கொடூரமாகத் தாக்கி தன் இந்துத்துவ
தீவிரவாதத்தை காட்டியிருக்கிறது பசு பாதுகாப்பு இந்துத்துவ அமைப்புகள்.
இரக்கமற்ற முறையில் அரக்கத்தனமாக சித்திரவதைகள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள்
கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது கடும் தாக்குதலுக்கு உட்பட்ட லாரி
ஓட்டுனர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்து தீவிரவாதம்.
வரலாற்று நிபுணர் மற்றும் எழுத்தாளர் டி.என்.ஜா தனது 'புனிதப்பசு எனும்
கட்டுக்கதை' (The myth of the holy cow) புத்தகத்தில் மாடு புனிதம்
என்பதை விரிவான வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். அவர் பிரண்ட்லைன்
இதழில் தனது பேட்டியிலும் இதனை ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார் . அப்படி
இருந்தும் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கின்ற வகையில்
இந்து பாசிசங்கள் மோடி கும்பலின் பேராதரவோடு தங்களின் தீவிரவாதத்தை பசு
பாதுகாப்பு என்கிற பெயரில் முன்னெடுத்துச் செல்வதும் , உண்ணும் உணவில்
வண்மத்தை தெளிப்பதும் மிகவும் மோசமான நிலைக்கு இந்தியாவை இட்டுச்
செல்லும். பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை
நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள்
ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாட்டை வெட்டினால் மகாராட்டிரத்தில் 5
ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை
கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், வாகன
ஓட்டிகள், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும்
இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி
வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு காவல்துறை அதிகாரி
வீடு புகுந்து சோதனை செய்யலாம். எனும் சட்டமும் இங்கே நடைமுறைக்கு
வந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆக இந்திய தேசம் இந்துதேசமாக
சர்வாதிகார மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கவே இவர்கள் முற்படுகிறார்கள்
என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

Sunday, June 05, 2016

சொத்து பத்திரங்களில் காணும் சில வழக்கச் சொற்களின் விளக்கம்

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில்
வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய
கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை
ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது
எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு
பயன்பாட்டுக்காகஒதுக்­கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காகநிலத்­தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காககுறிப­்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க
பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர்,
அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி.
இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர்
யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்குஉறுதி­ அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில
நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

வாட்டை : கழனி நிலத்தில் விவசாய உற்பத்தி பொருட்களை வந்து ஏற்றிச் செல்ல
வாகனத்திற்கென்று தனியாக ஒதுக்கப்படும் வழி.

Saturday, June 04, 2016

மோடியும் , குல்பர்க் சொசைட்டி படுகொலையும்

குல்பர்க் சொசைட்டியில், 2002-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும்
சங்பரிவாரக் கும்பலால் 69 இஸ்லாமியர்கள் ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து,
உயிரோடு தீ வைத்து எரிக் கப்பட்டனர். இந்த கொடூரமான இனப்படுகொலை தொடர்பாக
14 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கின் முடிவில், 24 பேர் குற்றவாளிகள் என்று
நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குல்பர்க் சொசைட்டி சுமார் 5
மணி நேரம் வரை வன்முறை யாளர்களின் பிடியில் இருந்த நிலையில், போலீசார்
அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதது; வன்முறையைத் தடுப்பதற்கு நடவடிக்கை
எடுக்காதது போன்ற வற்றை எல்லாம் வைத்து இந்த முடிவுக்கு நீதிமன்றம்
வந்துள்ளது.இந்நிலையில், அன்று குஜராத்தில் முதல்வராக (இன்று பிரதமர்?)
இருந்த நரேந்திரமோடியின் உத்தரவின் பேரிலேயே போலீஸ் அதிகாரிகள்,
குல்பர்க் சொசைட்டி வன்முறைக்கு உடந்தையாக இருந் தார்கள் என்ற
அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதற்கு அகமதாபாத்தின்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை யின் ஆவணங்களே சாட்சியாக மாறியிருக்கின்றன.
குல்பர்க் சொசைட்டி அமைந்துள்ள இடம் மேகனி நகராகும். கலவரம் நடந்தபோதும்
அங் குள்ள குடியிருப்பு வீடுகள் முழுமையாக தீ வைத்து கொளுத்தப்
பட்டபோதும் அதற்கு அருகி லுள்ள போலீஸ் சாவடி தீக்கிரையாக்கப்பட்ட போதும்
அதனால்எண்ணற்றவர்கள் உயிரிழந்த போதும் எந்த போலீசாரும் அங் கில்லை. இதில்
போலீஸ் ஆய்வாளர் கேஜி எர்டா என்பவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி
யாக தொடர்பு கொண்டு நிலைமையின் தீவிரம் குறித்து தகவல் அளித்துள்ளார்.
'நிலைமை தனது கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டதால் உயர் அதிகாரிகள்
குல்பர்க் சொசைட்டிக்கு உடனடியாக வரும்படி அவர் தொலைபேசியில் வேண்டுகோள்
விடுத்துள்ளார். ஆனால், அந்த மிக முக்கிய தருணத்தில், அதாவது காலை 11.30
மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணி வரை எந்த போலீஸ் அதிகாரியும் அங்கு
வரவில்லை என்பதோடு எர்டாவே நிலைமையை தனியாக சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளார். இவர் தற்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் விடுதலை
செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேகனி நகரில் சம்பவத்தன்று
பிற்பகல் 12.38 மணிக்கு 5 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் பயங் கரமான
ஆயுதங்களுடன் குல்பர்க்சொசைட்டியை சுற்றி வளைக்கத் தொடங்கியது. அதைத்
தொடர்ந்து 12.54 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக
கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தின்படி ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய பொறுப்பு போலீஸ்
கமிஷனர் பி.சி.பாண்டே வுக்குத்தான் உள்ளது. அதன் பின்னர் சரியாக பிற்பகல்
2.09 மணிக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போவதால் மத்திய படைகளை
அனுப்புங்கள் என்று எர்டா, பாண்டேவிடம் கேட்டுள்ளார். அந்த முடிவை எடுக்க
வேண்டியதும் பாண்டே தான். ஆனால் பாண்டே அந்த முடிவை எடுக்கவில்லை. அன்று
மாலை வரை மத்திய பாதுகாப்புப் படைகள் வரவில்லை.கட்டுப்பாட்டு அறையின்
ஆவணங்களின் படி போலீஸ் இணை ஆணையர் எம்.கே.டாண்டன் குல்பர்க் சொசைட்டியி
லிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரேவ்தி பஜாரில் இருந்துள்ளார்.
அப்போது கட்டுப் பாட்டு அறை அவருக்கு, காங்கிரஸ் எம்.பி.யான இஷசான்
ஜாப்ரியும் குல்பர்க் சொசைட்டியில் குடியிருப்பவர்களும் பெரும் ஆபத்தில்
தாங்கள் சிக்கியிருப்பதாக செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் டாண்டன்
அங்கு செல்லவில்லை. அவர் எந்த வன்முறையும் நடக்காத ரேவ்தி பகுதியில்
இருந்துள்ளார். இறுதியில் பிற்பகல் 3 மணியளவில் பாண்டே உத்தரவிட்டே
பின்னர் டாண்டன் குல்பர்க் சொசைட்டிக்கு சென்றுள்ளார். இத்தனைக்கும்
ரேவ்தி பகுதி என்பது டாண்டனின் போலீஸ் கட்டுப்பாட்டு அதாவது
சரகத்திற்குள் வராததது என்பது குறிப்பிடத் தக்கது. இதே போன்று போலீஸ்
துணை கமிஷனர் கோண்டியா வும் குல்பர்க் சொசைட்டிற்கு செல்வதை
தவிர்த்திருக்கிறார். கோண்டியா பிற்பகல் 2 மணியளவில் குல்பர்க்
சொசைட்டிற்கு சென்றுவிட்டு உடனடியாக திரும்பியுள் ளார். இது அந்த
பயங்கரவாத கும்பலுக்கு வசதியாக வழி விட்டது போல் ஆகியுள்ளது என்று போலீஸ்
கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.அதாவது போலீஸ் கமிஷனர் பாண்டே
மத்திய படைகளை அனுப்பாமல் தாமதப்படுத்தியுள்ளார். இணை ஆணையர் டாண்டன்
அங்கு செல்வதையே தவிர்த்திருக்கிறார். இதே போல கோண்டியாவும் அங்கு சென்று
உடனடியாக திரும்பியிருக்கிறார் என்று கட்டுப்பாட்டு அறை ஆவணங்கள்
கூறுகின்றன. இவையெல்லாம் அன்றைய முதல்வர் மோடியின் உத்தரவின் பேரில்
நடத்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக காட்டிக் கொடுத்திருக்கிறது.
- தீக்கதிர்

Friday, June 03, 2016

வழக்கறிஞர்களை முடக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக குரலெழுப்புதல்

எங்கெல்லாம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கரங்கள் உயர்ந்து
நிற்கின்றனவோ, அங்கெல்லாம் சமூக நீதிக்கான தமது போராட்ட
முன்னெடுப்புகளுக்கு களம் அமைப்பவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பார்கள் .
சமூகத்தில் நிலவும் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து தமது வழக்காடுதல் ,
நீதிமன்ற செயல்பாடுகள் என தாண்டி மக்களோடு மக்களாக நின்று பல்வேறு
போராட்டங்களை சேவையாக அல்லாமல் கடமையாக ஆற்றுபவர்கள் வழக்கறிஞர்கள். ஈழ
போராட்டமாகட்டும், விலைவாசி உயர்வு, அரசப் பயங்கரவாதத்திற்கெதிர­ான
கலகம், மக்களை அச்சுறுத்தும் அதே அரசப் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்படும்
சட்டங்கள், போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு தங்கள் பங்களிப்பை
எவ்வித பிரதிபலனுமின்றி செய்யக்கூடியவர்களாக வழக்கறிஞர்கள்
இருக்கிறார்கள். டாஸ்மாக் எனும் மதுக்கடைகளுக்கு எதிராக காந்திய வழியில்
தமது போராட்டங்களை முன்னெடுக்கும் தோழர் நந்தினி அவர்கள் சட்டக் கல்லூரி
மாணவியாகதான் அறியப்படுகிறார். இவ்வாறாக பரவலாக எங்கெல்லாம் சமூகம்
அடக்கி ஆளப்படுகிறதோ அங்கெல்லாம் வழக்கறிஞர்களின் குரல் தளர்வு அடையாமல்
என்றுமே ஓங்கியே இருக்கும். இதன் காரணமோ என்னவோ சமூகதள அரசியலில் பரவலாக
வழக்கறிஞர்களே தங்கள் ஆளுமையை மெய்பித்திருக்கிறார்­கள். ஆனால்
சமீபத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்டத் திருத்தத்தினை
உயர்நீதிமன்றம் கொண்டு வந்திருக்கிறது. அச்சட்ட திருத்தம் அரசிதழிலும்
வெளியிடப்பட்டுள்ளது.
இது Advocates Act, 1961-ன், பிரிவு 34-ன் படி உயர்நீதிமன்றங்களுக்க­ு
வழங்கப்பட்டிருக்கும்­ சிறப்பு அதிகாரத்தின் படி
ஏற்படுத்தப்பட்டிருக்­கிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க
சம்பந்தப்பட்ட நீதிபதியே தடைவிதிக்கலாம்.
*நீதிபதிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை
விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
*நீதிமன்ற வளாகத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினால் வழக்கறிஞர் தொழில்
செய்ய தடை விதிக்கப்படும். நீதிமன்ற ஆவணங்களை திருத்தினாலோ, நீதிபதி
பெயருக்கு அவதூறு பரப்பினாலோ வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும்.
*நீதிபதியின் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் செயலில் ஈடுபட்டால்,
நீதிமன்றத்தில் மதுபானம் அருந்தி சென்றால் தடை விதிக்கப்படும்.
*உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்,
மாவட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, முதன்மை நீதிபதிக்கு அறிக்கையளித்து
நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்குமுன், தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள்மீது பார்
கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், இந்த சட்டத்
திருத்தத்தின்படி வழக்கறிஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அந்தந்த
"நீதிபதியே" வழக்கறிஞர்களின் தொழிலை தடைவிதிக்கும் அதிகாரம்
வழங்கப்பட்டிருக்கிறத­ு.
பொதுவாக வழக்கறிஞர்கள் அரசுக்கெதிராக மற்றும் அதிகார பலத்திற்கு எதிராக
நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், வளாகத்து
உள்ளிருப்பு போராட்டம் என தங்களின் போராட்ட களத்தை அமைப்பது வழக்கமாக
கொண்டிருப்பர், அதன் உரிமை மீறுகின்றபோது துரதிஷ்ட வசமாக கலவரமாக வெடித்த
நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. பிப்ரவரி 19 கருப்புநாள் அனுசரிப்பும்
அவ்வாறே நிகழ்ந்த ஒன்றுதான் , கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை
உயர்நீதிமன்ற வளாகத் தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால்
அதேவேளையில் சிற்சில நிகழ்வுகளைத் தாண்டி வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்
சங்கங்களும் மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தலைமை
தாங்கியிருக்கிறார்கள­் என்பதையும் மறுக்க முடியாது. ஈழப்
போராட்டத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த தோழர் முத்துக்குமாரின் இறுதி
வாக்குமூலத்தில் இதன் உண்மையான தன்மையை காணலாம். போலவே எல்லா துறைகளிலும்
சமூக விரோதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள், அது போல சட்டத்துறையை
கலங்கம் விளைவிக்கும் சில வழக்கறிஞர்களை கண்டிக்கத்தான் இச்சட்டமெனில்
அதற்காக கருத்துரிமை,பேச்சுரி­மை, எழுத்துரிமையென அடிப்படை உரிமைகள் மீது
நீதிமன்றங்களே கை வைப்பது முறையானதல்ல, இதன்மூலம் தகுதியற்ற நீதிபதிகள்
தங்களை மிகச் சுலபமாக தற்காத்துக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
ஆகவே இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சங்கம் அவசர கூட்டத்தில் வழக்கறிஞர் சட்ட விதிமுறையில் திருத்தம் கொண்டு
வந்ததற்கு எதிர்ப்பும், புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்ததத்தை
திரும்பப் பெற தலைமை நீதிபதிக்கு வலியுறித்தியும். வரும் ஜுன் 6ம் தேதி
வழக்கறிஞர்கள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால்,­ வழக்கறிஞர்கள்
மட்டுமல்லாது முற்போக்காளர்கள் , அரசியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு
தந்து போராட்டத்தை முன்னெடுப்பது அவசியாக இருக்கிறது. இது அடிப்படை
உரிமைகளுக்கு சவால் விடும் சட்டமென்பதால் அனைத்து தரப்பினர்களும்
இச்சட்டத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டியது மிக அவசியம் என்பதை சமூகம்
உணர்ந்து செயல்பட வேண்டும்.

Thursday, June 02, 2016

தொடரும் சாதி ஆணவக்கொலைகள் - கொலையாகின்றன காதல் திருமணங்கள்

தமிழ்ச் சமூகத்தில் ஆகப்பெரிய நவ நாகரீக தன்மையில் புத்துயிர் பெற்றுக்
கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள் என்றால் அது மிகையாகாது, இளவரசன் கொலை
இல்லாநிலையானதும் கோகுல் ராஜை கொன்ற யுவராஜ்களுக்கு ஜாமீன் கிடைப்பதும்,
விஷ்ணுபிரியாக்களின் மரணங்களில் இந்துத்துவ சாதிவெறி வாழ்வதும், உடுமலை
சங்கரை கொலை செய்தோர்கள் பேரும் புகழோடும் ஆண்டை பெருமை பேசுவதும், காதல்
திருமணம் நடத்தி வைத்தமைக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட
போது கருவில் இருந்த சிசுவிடமே தன்சாதிப் பெருமையை திணித்தும் தங்கள்
இந்துத்துவ சாதிவெறியாட்டத்தை சுதந்திரமாக அதுவும் அரசின் பேராதரவோடு
இங்கே நிகழ்த்தப்படுகின்றபோ­­து உண்மையில் வாழ்வதற்கு தகுந்த இடமா இந்த
தமிழ்மண் என எண்ணத் தோன்றுகிறது. இந்துத்துவ பார்ப்பானியத்தின் அதிதீவிர
வளர்ச்சியின் சிறுதுளிகள்தான் ஆவணக்கொலைகள் என்பதை பெரியார் மண்ணென்று
மூடி மறைக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை, எந்த பெரியாரிமும் அதி
நுணுக்கமாக தமிழ்ச் சமூகத்தை அணுகவில்லை என்பதையே மேலுமொரு சாதி
ஆணவக்கொலை உணர்த்துகிறது. அண்ணல் அம்பேத்கரை பின்பற்றுவதாகச் சொல்லும்
தலித் இயக்கங்களும்,திராவிட­­ இயக்கங்களும், முரண்பட்டு நின்றாலும்
முழுவதாய் ஏற்காமல் பாதிகிணற்றில் தொங்கும் மார்க்ஸிய இயக்கங்களும்
"தமிழ்மண் பகுத்தறிவு புகுத்தப்பட்ட மண்" என்பதிலிருந்து வெற்றிடமாக
இருக்கும் அந்த "பகுத்தறிவு" என்பது மேலும் மேலும் "புகுத்தப்பட வேண்டிய"
மண் என்பதற்கு தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையினை
உணர வேண்டிய தருணம். நீதித்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தலித்
நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவேயில்லை­­" என்கிறபோது
தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் சாதியாதிக்க ஆணவக் கொலைகளில் எப்படி
நீதியை நிலைநாட்ட முடியும்,ஆணவக் கொலைகளை செய்வது ஒரு நாகரீக
நடவடிக்கையாகவும் அது சமுதாயத்தில் ஒரு அந்தஸ்த்தை,மரியாதையை­­,கவுரவத்தை
கொடுக்கும் எனும் ஆதிக்கச் சாதி வெறியர்களின் புரிதலை, பொதுபுத்தியை
நீதிபதிகள் நியமனத்திலிருந்தே அறிந்துகொள்வீர்களானா­­ல் இங்கே எப்போதோ
புரட்சிக்கான விதைகள் போடப்பட்டிருக்கும். தாலி காத்த சிறுதெய்வ குலதெய்வ
குத்துவிளக்கு அம்மன்களும், காளிகளும், இன்னும் என்னென்னவோ குத்துக்
கல்களும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் சாதி மறுத்து காதல் திருமணம் புரிந்த
பெண்களின் தாலிக்கு பாதுகாப்பை கொடுக்க முடியவில்லை, எனும்போது இன்னமும்
குலதெய்வமென குத்திக்கொண்டு கும்மிடுவது அம்மணமாக அலைவதற்கு சமமானதென
தலித்துகள் உணர்வார்களா? கண்ணுக்குத் தெரிந்து தினந்தினம்
செத்துக்கொண்டிருக்கு­­ம் சாதிமறுத்த காதலர்களுக்குத் தேவையான
பாதுகாப்பையும் சாதியாதிக்கத்திற்கு எதிராகவும் இந்துத்துவ
பார்ப்பானியத்திற்கு எதிராகவும் கலகக்குரல்கள் எழாதவரையில்
இளையராஜாக்களும் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாதியம்
வளர்ந்துக்கொண்டேதான்­­ இருக்கும், நீதிதேவதையின் கழுத்தும்
துண்டிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும். மேலும் ஒரு ஆணவக் கொலை
தமிழச்சமூக மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
காதல் திருமணம் செய்த வாலிபர் துடிக்கத் துடிக்க அடித்துக்கொலை
செய்யப்பட்டிருக்கிறார் . அவரது உடலை வாங்க மறுத்திருக்கிறார்கள்
உறவினர்கள், வேறென்ன ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நீதியின்
கடைசி சண்மானம் அதுதானே,,,திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம்
புரூன்ஸ்நகர் கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இளையராஜா. இவர்
சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றினார். இளையராஜாவும்
அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தியும் (17) காதலித்து வந்தனர். கடந்த வாரம்
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த ஆனந்தியின் அண்ணன் அருண், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு
திரும்பி வந்தார். இளையராஜாவை சந்தித்த அவர், '' நான் முறைப்படி திருமணம்
செய்து வைக்கிறேன்' என்று கூறினார். இதையடுத்து ஆனந்தியை அவருடன்
வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர்
கல்லகத்திலிருந்து புறப்பட்டு கல்லக்குடிக்கு சென்று மது அருந்தினர்.
அப்போது, அருணுடன் சிலர் சேர்ந்து, இளையராஜாவையும், பாலாஜியையும்
சரமாரியாக தாக்கினர். தப்பியோடிய பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல்
தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது
தலை நசுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இளையராஜா கொலை
செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் 22 மாநிலங்களில் சாதி ஆணவக் கொலைகள்
நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் அவ்வப்போது ஏதோ நீதியை தக்க
வைப்பதாக தலித்துகளை ஏமாற்றும் வகையில் உச்சநீதிமன்றமும் ஆணவக் கொலைகள்
குறித்து தனது வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது.
2013-லிருந்து இதுவரை தமிழகத்தில் தோராயமாக 83 ஆணவக் கொலைகள்
நடந்துள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்ற
சூழலில் சாதியாதிக்க பார்ப்பானிய இந்துத்துவத்திற்கு எதிராக குறிப்பாக
இடைநிலை சாதி வெறியர்களுக்கு எதிராக போராட்டங்கள், கூர்வாளினைபோல
முன்னெடுக்க தமிழ்ச்சமூக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
முக்கியமாக சாதியத்திற்கு எதிராக எல்லாவிதமான ஆயுதங்களையும் இதன்மூலம்
பிரயோகப்படுத்துதல் அவசியமாக இருக்கிறது. இங்கே மாவோயிஸம்
மாற்றியெழுதப்பட்டால் மட்டுமே சாதிவெறிகள் ஒழியும். எதிரிகள் ஆயுதங்களை
தீர்மானித்தெடுக்கும் முன்னரே நமது கைகளில் ஆயூதங்களை ஏந்தி வர்ணாசிரம
மனு தர்மத்தை? அழித்தொழித்தலே முதல்வேளையாக நமக்கிருக்கும் கடமையாக
இருக்கிறது.

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...