Monday, June 13, 2016

உயிராபத்துகளை கடந்து புரட்சியை வென்றெடுத்த லெனின்




1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது
செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு
ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு
அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா
என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.
எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.
ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள்
குளிரில் விறைத்து இறந்து போவார்கள்.

ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியான
உடற்கட்டையை உருக்குலைக்க சைபீரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.
அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்
திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீரியாவிற்கு
நாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.

சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்
எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்
புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது
கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற
முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது.
அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கையை
வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும்
உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி
இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.

1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே
தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா
என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.



லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை
நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக
வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி
தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி
காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.
கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக
கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்
தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது
என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை
நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க
பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர்.
ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல
உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன.
பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள்
துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின்
புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும்
முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர
வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து
பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்
படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை
விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான
வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக
பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர்
காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது.
கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின்
துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக
இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால்
மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக்
கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்
கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம்
கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த
பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை
உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய
உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை
பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து
தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.
வரலாற்று நாயகன் லெனின்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...