சாதிதான் சமூகமென்றால்
வீசும் காற்றில் விசம்
பரவட்டும் - தோழர் பழனி பாரதி
கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.
இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் அரிவாளால் கனகராஜையும் அவர் காதலித்த பெண்ணையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறான்.
இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாதி வெறிகள் தமிழக மண்ணில் மிகவும் வேகமாக வளர்வதை இந்த ஆணவப் படுகொலை காட்டுகிறது , சுயசாதி வெறியில் கொலைகளை நிகழ்த்தும் மிருகங்கள் உண்மையில் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்களே ... சாதியம் இருக்க வேண்டும் ஆனால் சாதிவெறி இருக்க கூடாது என்கிற போலியான பிம்பங்களை முதலில் அழித்தொழித்தல் வேண்டும் "சாதியே வெறி தான் " என்பதை தயவுசெய்து அடித்தள மக்களிடம் உணர்த்தப்பட வேண்டும் , சாதி ஒழிப்பு என்பது மிகத்தீவிரமாக எடுத்துச்செல்ல சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் ...