எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
நானில்லை
இருப்பது இலையுதிர்
காலமாதலால்
இலைகளை புறக்கணித்த
மரக்கிளைகளின் ஒத்த
அசைவுகளை
பெற்றிருக்கிறேன்
நான்
ஒவ்வொரு
விடியற் காலையிலும்
என் வாசலை
மறித்துக்கொண்டு
மடிந்து கிடக்கும்
சருகுகளின் மடியில்
தூங்கி எழுந்திருக்கிறேன்
எனக்கான பூக்கள்
எங்கே?
யாரை?
எப்போது?
சந்தித்தனவோ
தெரியவில்லை
ஆனாலும் மணம்
விசுகிறது
என் மனமுழுக்க
இருக்கும் ஏதோ ஒரு
தயக்கத்தை
வெளியேற்றியபடியே
எனக்குள்
சில மாற்றங்களை அவ்வப்போது
கிளப்பிவிடும் பூக்களே
கொஞ்சம்
சருகிலைகளின்
திசையில் மணத்தை
பரப்புங்கள்
இலையுதிரும்
பொழுதுதான் உங்களின்
மொட்டுகள்
அவிழ்க்கப்பட்டு
இதழ்கள்
விரிக்கப்படுகின்றது
பார்த்து பார்த்து
செதுக்கிய கல்சிற்பக்
கலை வடிவில் உளியும்
சுத்தியும் ஓரத்தில்
ஓரிடம் கேட்கிறது
பூக்களே தந்துவிடுங்கள்
தனக்கான இடத்தை
சருகுகளுக்கு
இப்பொழுது
எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
இருக்கிறேன்
அடுத்ததாக
பூக்களுக்கும்
சருகுகளுக்கும்
எப்படியும் ஓரிடத்தை
ஒதுக்கியாக வேண்டும்
தாய்மரம்
கொளுத்தும்
கோடையானது
துகிலுரித்து
வெட்ட வெளியில்
வெளிச்சமாக காட்டும்
தன் நிர்வாணத்தை
தாய்மரம் எப்படியும்
மறைக்க வேண்டுமே!
அருமையான பா/கவிதை வரிகள்
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete