யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...
அமைதி மதமென
அஹிம்சை கொண்டவனை
அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....
ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தை
நீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்...
முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்கு
மத்தியில்,
அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....
விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லை
மதவாதமோ, சாதியவாதமோ...
என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்
அதை தீயிலிட தயங்க மாட்டேன் என்றான்...
எரிந்து கொண்டிருக்கிறது திரும்ப திரும்ப
அழியாத சாதியால்
நுழையாத தேரினை
தலித் தொட்டால் தீட்டென்று கோவில் தேர்களை...
இன்னமும்... இன்னமும்...
பசி, தாகம், பட்டினி , வறுமையென அனைத்தும் ஒற்றை ராந்தல் விளக்கில் அமிழ்த்து இந்திய தேசத்தில் ஒளியாய்
நின்றவன்....
வருத்தங்கள் வந்து போகாதா மனமே...
சேரிக்கு மட்டுமா
சிலை அவனுக்கு?
ஊருக்கு எப்போது போகுமோ ஏக்கத்தில்
வெடிக்கிறது நெஞ்சம்...
ஒரு பேனாவின் கூர்முனை கிழித்து
தைக்கும் பல்லாயிரம்
பதிலடிகளுக்கு சொந்தக்காரனவன்...
கேட்டாயோ காவிகளின் அதிகார திமிரை...
அவனின் நினைவு தினத்தை அடியோடு ஒழித்திடவே...
அழித்து தரைமட்டமாக்கினார்கள் பாபர் மசூதியை...
அவன்... அதிகாரத்தை அனைவருக்குமாய் பகிர்ந்து கொடுத்தான்...
அவன்... உன்னையும் என்னையும் சமமாக்கினான்...
அவன்... பெண்ணடிமையை
தகர்த்திட துடித்தவன்...
அவன்.... கல்வியை பொதுவில் வைத்தான்...
அவன்... முழக்கமிடுகிறான்
கற்பி!!!!
ஒன்று சேர்!!!
புரட்சி செய்!!!
அவன்.... சத்தமின்றி
யுத்தமின்றி...
புரட்சி செய்கிறான்...
சமத்துவம், சகோதரத்துவம், வார்த்தைகளோடு....
ஆமாம் இன்னமும்...
அவன்... பட்டினியோடுதான் இருக்கிறான்...
எப்போது மடியும் இந்த அடிமைத்தனமென்று...
ஜெய்பீம்!!!!
நீலம் வெல்லும் !!!
புத்தம் சரணம் கச்சாமி!!!
பாபா சாகேப் அம்பேத்கர் என்பவன் அவனே!!!!
0 comments:
Post a Comment