Monday, March 16, 2015

காலி வயிறு

வயிற்றுக்கும்
வாழ்வுக்கும்
இணைப்புப்
பாலமான
இயற்கையே

இருப்பதை உண்டு
இல்லறம் பேண
எங்களுக்கும்
ஆசைதான்

என்ன செய்ய
உழைத்து
வியர்த்த உடம்பில்
உயிரை
வஞ்சிக்கிறது
உருண்டை
உலகத்தில் ஓரினம்

முதலாளி
என்றொரு பெயர்
இனத்திற்கு
பொருத்தம்தான்

துயரம் துடைக்கப்
புறப்படும் எம்மின
பெண்களின்
கற்பினை கேட்கிறது
முதலாளியினம்

அடங்காத பசிவேறு
அலைய வைக்கிறது
எம்மின குழந்தைகளை

அலைகடலில்
நுரை
ததும்புதல் போல
அரளி விதையால்
உயிர் துறக்கிறார்கள்
அவர்களும்

தற்கொலை என்கிறார்கள் பலர்
பட்டினிக் கொலையிதுவென்று
பார்வையை
திருப்புவார்களா
எனவும்
தெரியவில்லை

விவசாயம்
விட்டொழித்து
விழுமங்களை
சேகரித்து
நகர்புறம் தொலைய
எத்தனிக்க
எண்ணிடும்
போதெல்லாம்
எட்டி உதைக்கிறது
எங்களின்
வி(லை)ளைநிலம்

அனாதைக்கு
ஆதரவு தாராயோ
நகர் புறம் நோக்கி
நீங்களும்
போகலாமோ
எனை உழுவதை
தவிர வேறொன்றும்
தெரியாதே
உங்களுக்கென
புலம்பித் தள்ளுகிறது
பூர்வீக விளைநிலம்

பட்டம் பெற்ற
பலகோடி இளைஞர்களும்
அயல்நாடைத்
தேடி
அழிந்துபோனார்கள்
அணையா
விளக்காக எங்கும்
விரித்தோங்குகிறது
முட்புதற் காடுகள்

தவறில்லை
தாவிபறக்கத்
துடிக்கிறார்கள்
இளைஞர்கள்
பட்டம் பறந்தாலும்
பற்றியிழுப்பது
முதலாளியினம்
தடவிய
மாஞ்சா கயிறன்றோ

காசு பணமில்லா
காரணத்தால்
கோவனத் துணியும்
உடம்பில்
இல்லாம்
அம்மணமாக
அவமானப்படுகிறோம்
அண்ணாடங்காட்சியென
அதற்கும் பெயர்
வைத்து விட்டார்கள்
பாவி முதலாளியினங்கள்

அறியாமை பிணிபிடித்தமையால்
அதிகார
முதலைகளுக்கு
அன்றாடம்
உணவாகிறோம்


இறப்பென்பதே
இல்லையென்று
நீரில் இருக்கும்
மீன்களுக்கு
நிலத்தில்
துடிக்கும்போது
தெளிந்துவிடும்
அறியாமைதான்
கண்களை
கட்டிப்போட்டதென்று

எங்களுக்கும்
உருவம் உண்டு
அவசியம்
அறிந்தபின்னர்
மாண்ட பின்னரும்
மணப்பந்தலில்
வாழ்ந்து விடும்
வாழையை போலவே
எங்களின் ஏழையினம்
உழைப்பால் உயிர்பெற்று
உயரத்தில் ஒருநாள்
வாழ்ந்து காட்டிடுவொம்

அது வரையில்
காத்திடுங்கள்
காலி வயிற்றோடு
அலையும்
எம்மின ஏழை
வர்க்கங்களே!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...