Thursday, April 09, 2015

தோழமைகளே துக்கத்தில் நீங்களும் கலந்து விடுங்களேன் இழந்தோம் நாங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில்

தோழமைகளே என் துக்கத்தில் நீங்களும்
கலந்து விடுங்களேன்
இந்த ஏப்ரல் பிறந்தது
எங்களின் உயிரை பறிக்கவாவென
அச்சம் மனதை ஆட்கொண்டுவிட்டது
அவ்வளவு துயரங்களையும் தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டெனினும் இத்தனை
சோதனைகளா எங்களுக்கு வாய்த்திருக்க வேண்டும். மனிதனை மனிதனே வேட்டையாடும்
கொடூரம் ஒருபக்கம் , ஆதிவுலகை அசைத்துப் பார்த்துவிடும் ஆளுமைகளை பலி
வாங்கிய இயற்கையொரு பக்கம்.
இப்படி இரு பக்கங்களும் எங்களை பின்னுக்குத் தள்ளி பாதாளத்தில்
அடைக்கிறதே இந்த வாழ்க்கையெனும் போது . வாழ்வியல் மீதான அச்சம்
எங்களுக்கு எழத்தானே செய்யும்.

*செம்மரங்களை கடத்தினார்கள் எனச் சொல்லி போலி என்கவுண்டர் மூலம்
உழைக்கும் மக்களை உருவம் கூட சரியாகத் தெரியாமல் ஆளும் ஆதிக்க
முதலாளிகளுக்கு ஆதரவாய் நின்றுக்கொண்டு அடிமை சமூகத்தின் மீதான
கொடுந்தாக்குதலில் அப்பாவித் தமிழர்களை கொன்று வீழ்த்திய நிகழ்வு
நெஞ்சில் நீங்காத வடுக்களாகி துயரத்தில் மீளத் துடிக்கிறது மனம் .
இன்னும் முடிவெட்டாத மனிதம் இறந்தே கிடக்கிறது இங்கே மனிதனால்,

* சிறுபான்மை மக்களின் சிறகினை ஒடித்தால் தான் பெரும்பான்மை சமூகம்
முதலாளித்துவமாக வாழ முடியுமென ஆதிக்க வெறியுடன் அவிழ்த்து விடப்படுகிறது
அதிலும் பொய்யான புரட்டுகளை புனைந்து கொன்றழிப்பதில் மிருகங்களை
மிஞ்சிநிற்கிறது இந்த மனித இனம் . தமிழினச் சொந்தங்களை கொன்றழித்த அதே
நாளில் அதே ஆந்திரத்தில் (தெலுங்கானா) சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என
குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து முஸ்லிம்களை அடாவடிக் காவல்துறை சுட்டுக்கொலை
செய்துள்ளது.
வாரங்கல் சிறைச்சாலையில்,, இன்னும் முடிவெட்டாத மனிதமிங்கே இறந்தே
கிடக்கிறது மனிதனால்,,

*சிறுகதைகளின் மூலம் சீறும் சிறுத்தைகளாக மனிதனை எழச் செய்திடும்
எழுத்துக்களுக்கு சொந்தக்காரர், இலக்கியத்தை இப்படித்தான் படைக்க
வேண்டுமென ஒரு படைப்பாளியாய் அனைவருக்குள்ளும் இருக்கின்ற படைப்புத்
திறனையும்,வாசிக்க வாசிக்க மீட்டும் வீணையைபோல வாசகனை மீட்டெடுத்த
மிகப்பெரும் ஆளுமையான தோழர் ஜெயகாந்தன் அவர்களை இயற்கை தன்னோடு
அழைத்துக்கொண்டது இன்று, தாராளமாய் தந்துதவும் இயற்கையே எங்களின் இதயத்தை
கிழித்தெடுப்பதில் என்ன நியாயம்.

*இமயத்தை பாடலின் மூலமாகவும் கரைத்துவிடலாமென
இமைகளின் கூடவே செவியினையும் தன்பக்கமிழுத்து தத்தளித்துக் கொண்டிருந்த
தமிழ்ச் சொந்தங்களுக்கு இயற்கையே தவக்கொடையாய் கொடுத்த தன்மானச் சிங்கம்
நாகூர் ஹலிபாவை அதே இயற்கையே அழைத்துக் கொண்டதே ,, புரட்சி பாடல்கள்
மூலம் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதுபோல தமிழனுக்கு பிறந்தவன்
தன்மானத்தை இழக்க மாட்டானென வாழ்ந்து காட்டிய வித்தகரல்லவா நம்முடைய
நாகூர் ஹனிபா ,,,இன்றும் தாராளமாய் தந்துதவும் இயற்கையே எங்களின் இதயத்தை
கிழித்தெடுப்பதில் என்ன நியாயம்.ஒரே நாளில் இவ்வளவு துயரங்களையும் தாங்கி
தனிமரமாய் , தமிழனாய்,துயரம் துடைக்கும் தோள்களைத் தேடி தோழமைகளை
அழைக்கிறேன் .என் துக்கத்தில் நீங்களும் கலந்து விடுங்களேன்.

2 comments:

  1. ஒரே நேரத்து தாக்குதலை மனிதனாக முன்னின்று முறியடிப்போம் . இரு ஆளுமைகளுக்கும் நமது இதயத்தில் நீங்காதொரு இடத்தினை நாமும் அளித்திடுவோம் தோழமைகளே!

    ReplyDelete
  2. Anonymous9/4/15

    ஆன்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...