Thursday, November 19, 2015

பாரிஸ் தாக்குதல் "அந்த சில நிமிடங்கள்"

கடந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு
நாளாக பதியப்பட்டு விட்டது
.132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர். 90 பேர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர். தாக்குதல்
நடந்த ஆறிடங்களில் ப்ளேஸ் த ரிபப்ளிக் எனுமிடத்தில் மட்டும் இரண்டு
இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது. லெ காரில்லோன் மற்றும் லெ பெத்தி
கம்போஜ் ஆகிய இரண்டு உணவகங்களில் தீவிரவாதியொருவன் நடத்திய கடும்
துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதில் லெ பெத்தி கம்போஜ் எனும் கம்போடிய உணவகத்தை தீவிரவாதிகள்
தாக்கியபோது உள்ளே 6 தமிழர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே பாரிஸில் பயங்கரவாதத்
தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச்
உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் தெரிவித்திருக்கிறார். உலகை உலுக்கிய
இப்பேரழிவு தீவிரவாத தாக்குதலை நேரில் கண்டவர்களும் , அனுபவித்தவர்களும்
தங்களின் அந்த சில நிமிடங்களின் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
பயங்கரவாத தாக்குதலில்
உயிர் தப்பியவர்களில் ஒருவரான கலைசெல்வன் மற்றும் பெயர் வெளியிட
விரும்பாத தமிழர் ஒருவரும் கூறியதாவது. (தங்களை வெளிப்படையாக
அடையாளப்டுத்திக்கொள்ள பல்வேறு சிக்கல்கள் அவர்களிடத்தில் உண்டு.)

' நாங்கள் வழக்கம் போல உணவகத்தின் குசினியில் சமையலறையில் பணி
செய்துக்கொண்டிருந்தோம். சரியாக இரவு நேரம் 9:30 மணியளவில் திடீரென்று
படபடவென வெடிப்பது போன்று கடும் சத்தம் கேட்டது. முதலில் அருகில் யாரோ
பட்டாசு வெடிக்கின்றனர் என்று நினைத்துக்கொண்டு கவனிக்காதிருந்த நாங்கள்,
கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டதும் சந்தேகப்பட்டு, நான் மட்டும் எங்கள்
அறையிலிருந்து வெளியே சென்ற பிறகுதான் அங்கு துப்பாக்கி சூடு
நடந்துக்கொண்டிருப்பதே எனக்கு தெரியவந்தது. சில குண்டுகள்
நாங்களிருக்கும் திசை நோக்கி வந்ததும் சுதாரித்துக்கொண்டு எங்கள் ஊரில்
(ஈழத்தமிழர்) போரில் பெற்ற அனுபவத்தில் அனைவரும் தரையில் படுத்து
மயிரிழையில் தப்பித்தோம். போலீஸ் வந்த பிறகு வெளியே வந்து பார்த்தபோது
ஏராளமானோர் சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். '
என்றார்.

தாக்குதல் நடந்த கம்போஜ் உணவகத்தின் கிளை அருகிலியே அமைந்திருக்கிறது.
அதில் பணிபுரியும் தமிழரொருவர் தாக்குதல் குறித்து தனது அனுபவத்தை
தெரிவிக்கையில்

' தாக்குதல் நடந்தபோது சத்தம் கேட்டு வெளியே வர முற்பட்ட எங்களை நிர்வாக
ஊழியரொருவர் தடுத்து அந்த உணவகத்தில் ஏதோ தகராறு நடப்பதாக கூறி
முன்னேற்பாடாக வாசல் கதவை பூட்டி எங்களை வெளியே அனுப்ப மறுத்தார்.
நாங்கள் ஏதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தோம். பிறகு
போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். முதலில் புரளி பரப்ப செய்யப்பட்ட
அழைப்பென்று நினைத்த அவர்கள், பிறகு நிறைய அழைப்புகள் வந்ததும் விரைந்து
வந்தனர். ஏனெனில், இந்த இடத்தில் இப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும்
எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நாங்களும் முதலில் ஏதோ கோஷ்டி மோதலில்
துப்பாக்கி சண்டை நடக்கிறதென்றுதான் நினைத்தோம். வெளியே வந்த பிறகே பலர்
கொல்லப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாதப் படுகொலை என்பது தெரிய வந்தது.
உணவகம் தாக்குதலில் சேதமடைந்துவிட்ட்து ' என்றார்.

இது போன்று பட்டகலான் தாக்குதலில் பலியான ஒருவரின் தாய்

' லெ படகலானில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு செல்ல என் மகனுக்கு ஆசையாக
வாங்கி பரிசாக கொடுத்த டிக்கெட்டே அவன் உயிருக்கு எமனாக போய்விட்டது '
என்று ஊடகத்தில் தெரிவித்திருந்தது மனதை பிழிவதாக இருந்தது.

பாரிஸில் இருந்து
ஜே ரீ பார்ன் பகிர்ந்து கொண்ட பாரிஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவ குறிப்புகள்.

தீவிரவாதங்களை ஆதரிப்பது என்பது மரணத்தின் சவக்குழிகளை தாங்களே
வெட்டிக்கொள்வதற்கு சமம் . முதலாளித்துவம் வளர்த்துவிட்ட தீவிரவாத
கத்திகள் மீண்டும் அவர்கள் மீதே பாயும்போது அப்பாவியாய் பலியாவதும்
பொதுமக்களாகவே இருக்கிறார்கள். வேண்டாம் தீவிரவாதம்!

6 comments:

  1. தீவிரவாதங்களை ஆதரிப்பது என்பது மரணத்தின் சவக்குழிகளை தாங்களே வெட்டிக்கொள்வதற்கு சமம். மனதைத்தொடும் வாக்கியம் ஐயா.

    ReplyDelete
  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி Sampath Kalyan தோழர்!

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி Jeevalingam Yarlpavanan Kasirajalingam தோழர்!

    ReplyDelete
  5. முதலாளித்துவம் வளர்த்துவிட்ட தீவிரவாத
    சத்திகள் மீண்டும் அவர்கள் மீதே பாயும்போது- என்றும் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாப் பாவிகள்! - இதுவே வருத்தம்!

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...