Sunday, March 06, 2016

தாயின் தவிப்புகள்

அதோ பார்!
பூக்கள் மலர்ந்திருக்கு!
பூச்சாண்டிக்காரனவன்
வருகிறான் பார்!
அங்கே பார்!
சுவற்றில் பல்லி
உன்னையே
சுற்றிவருகிறது!
சமாளிப்புகள்
ஓய்ந்துபோய்
ஓ!!! வென தொடரும்
அழுகைக்கு
முற்றுப்புள்ளி,,,

இறுதியில்
மருத்துவமனைக்கு
போவதாய்
பொய்யொன்று
அவிழ்த்துவிட்டு
ஒருவழியாய் ஏமாற்றி
விட்டுச்சென்ற
குழந்தையின்
அழுகையை உள்ளத்தில்
ஏந்திக்கொண்டு
அலுவலகம் நோக்கி
பயணிக்கும் தாயின்
வழித்தடத்தில் எங்கும்
முற்களாய்

ஏக்கங்கள் தீக்குச்சிகளாக
மாறிமாறி ஆழ்மனதை
எரிக்கிறது
தீக்காயத் தழும்புகள்
தாயுடலில்

வாழ்வை எங்கோ
தொலைத்துவிட்ட
தவிப்புகளும்
கூடவே ஒன்றிணைய
போய் சேர்ந்தாகிவிட்டது
பல மைல்களுக்கு
அப்பால்
அலுவலகத்திற்கு
என்றாலும்
அமைதியற்ற மனமோ
அழுதுக்கொண்டே
இருக்கிறது
விட்டுப்பிரிந்த
குழந்தையின்
அழுகையில்
ஒட்டிக்கொள்ளும்
கரிச்சான் குருவியாய்
கூடு வந்தடைய
வேண்டும்
விடுமுறை
நாளெப்போது வரும்?
தாயின் கனவுகளிலும்
தவிப்புகளே
மிச்சமிருப்பதால்
கேட்கப்படுகிறது,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...