Monday, November 23, 2015

பேசும் இதயம் 2

காலத்து
இடைவெளியில்
கருவேலங்காடு
முளைத்திருந்தது
பயனற்ற என்
கடுங்கோபமும்
விறகாகும்
என் மனமும்,,,
__________

என் மனச் சிறையை
குடைந்து
கொண்டிருக்கிறேன்
எப்போது
வேண்டுமானாலும்
வெளியே வரலாம்
நானொரு
சுதந்திரப் பறவையாக,,,
__________

எதுவும்
எமக்கானதில்லை
என்றபின்
எழுந்தாடுகிறது
என் மௌனம்,,,
__________

இதழில்
முத்தம்
பதிக்கையில்
இதயம்
கவிதை
எழுதுகிறது
காதல் வயப்படும்
கண் சொக்கியே
நிரந்தரமாய்,,,
__________

பசிக்கிறது
தட்டில் ஈரம்
ஒட்டவேயில்லை
வயிற்றில்,,,
__________

சுழன்று
சுழன்று
வேர்களை
பறிக்கும் புயல்காற்றுக்கு
ஆத்மார்த்தமாய்
அரைநிர்வாண
பரிசு
-அகோரங்கள்
__________

என் தேனீர்
கோப்பைகளை வெறித்து
பார்க்கும் ஈக்களே
அதில்
பாலுமில்லை
சர்க்கரையுமில்லை
வெறும் ஏமாற்றமே விஞ்சியிருக்கும்
உங்களுக்கு,,,
__________

சுற்றமெல்லாம்
சீற்றத்தில்
தவறை நானே
புரிந்தேன்
சுயமாய் வாழவே
இயற்கை அன்னையின்
பிள்ளைகளை
கொன்றேன்,,,
__________

காசுகள்
குளிக்கும்
நதி
அளந்து
போடுகிறார்கள்
லாரிகளில்
ஆற்று மணலை,,,
__________

கிழக்கு வாசல்
அழகான கோலம்
வெள்ளைப்
பாதசாரிகள்,,,
__________

திகட்டவில்லையாம்
தேன்
அவள் குரல் போன்று
இருப்பதாலும்!
இனிப்பதாலும்!
__________

நிசப்த
அலைகளின்
நிர்வாணம்
தேடியும்
தேகச்சூடோடும்
அலைகிறதென்
ஆன்மா
இயற்கையின்
பின்னாலே,,,

__________***_______­___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...