Tuesday, November 24, 2015

துப்புரவுத் தொழிலாளிகள் என்றால் கேவலமானவர்களா?

வீட்டின் அத்யாவசியத் தேவைகளை வாங்குவதற்காக அன்று கடைத்தெருவுக்கு
சென்றிருந்தேன், வழக்கம்போல மழைத் தூறல் விடாமல் போட்டுக்கொண்டே
இருந்தது. ஒருவழியாக அனைத்தையும் வாங்கியெடுத்துக் கொண்டு என் இருசக்கர
வாகனத்தை பறக்க விட்டேன் (மெதுவாகத்தான் 40 தாண்டாமல் பார்த்துக்கொள்வது
வழக்கம்,பழைய வாகனம் என்பதால் விரட்டினாலும் ஓரடி எடுத்து வைக்காது)
வழியில் எதையோ வாங்க மறந்துவிட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன், என்ன
அதுவென்று பாதிதூரம் கடந்த பின்னர் நினைவுக்கு வர,,, அருகிலேயே
கிடைகக்கூடுமென்று கடைகளை தேடினேன். மெழுவர்த்திதான் அது,,,
மழையால் தொடர் மின்சார துண்டிப்பினால் ஏற்படும் இருளை தவிர்க்க அதுவே
போதும். ஒரு மளிகைக் கடை கண்ணுக்குத் தென்பட அருகில் சென்றேன், ஏற்கனவே
பொருட்களை வாங்கும் இரண்டு வாடிக்கையாளர்கள் அங்கே கடை உரிமையாளரிடம்
சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். வாடிக்கையாளர்கள்,கடை­ உரிமையாளர் மூவருமே
ஒரே வயதுக்காரர்கள் போல தோற்றத்தில்,,, மூவரின் வயதும் கிட்டத்தட்ட
நாற்பதை தாண்டியிருக்குமென உள் அனுமானம் முடிவு செய்யது. மெழுகுவர்த்தி
வாங்கிக் கொண்டு நகர்ந்து போக முற்படுகையில் திடீரென பெருமழை வந்ததால்
அங்கேயே இருக்க வேண்டிய அவசியமாகிவிட, மழையை உற்றுப்பார்த்துக்கொண்டே
நின்றிருந்தேன். அச்சமயத்தில் அந்தப் பெருமழையிலும் ஆட்டோ ஒன்றில்
ஒலிப்பொருக்கி அலறிக்கொண்டு மெதுவாக ஊர்ந்துக்கொண்டிருக்க­ , கவனம் அதன்
மீது சென்றது " மரண அறிவிப்பு " தகவலை பரப்பிக்கொண்டிருந்தத­ு
ஆட்டோ,,, இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கிறார்,அவரின் தொழில், ரத்த
உறவுகள்,மற்ற உறவினர்களையும் கூறிவிட்டு பின்னர் அவர் இன்ன தேதிக்கு,
இன்ன மணிக்கு அகால மரணமடைந்துவிட்டார் எனவும் இறுதி அடக்கம் இன்ன
இடத்தில் நடைபெறும் எனவும் அவ்வறிவிப்பு செய்யப்பட்டது. இதன் நோக்கம்
விடுபட்ட உறவுகள் மற்றும் தெரிந்தவர்களுக்கு சரியான முறையில் மரணச்செய்தி
கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும். இறந்துபோன பெண் "துப்புரவு"
பணியாளரென்று ஒலிப்பெருக்கி கூறிவிட்டு ஆட்டோவும் நகர்ந்து போனது .
அதுவரையில் வேறு எதையோ பேசிக்கொண்டிருந்த மூவருக்கும் இம்மரணச்செய்தி
காதில் விழவே,,, அதுபற்றிய பேச்சுக்களை பேச ஆரம்பித்தார்கள். எடுத்த
எடுப்பிலேயே வீசிவிட்டார்கள் வார்த்தைகளை,,,
பாருய்ய இப்பல்லாம்
" கார்ப்பரேஷன்ல குப்ப அல்றது செத்தாக்கூட ஆட்டோல அனோன்ஸ்ட்மென்ட்
பண்ராங்க " ஆட்டோல அனோன்ஸ்மெண்ட் பணறதுக்கிருந்த மரியாதையே போச்சி!
என்றார் ஒருவர். அவரின் வார்த்தை கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து
போனேன். கொஞ்சமும் தாமதிக்காமல் "சார் ஒரு நிமிஷம் தப்பா நெனைக்காதீங்க
,ஸ்டேட்டஸோட வாழ்ரவங்க டெத்த மட்டுந்தான் ஆட்டோல அனோன்ஸ்மெண்ட்
செய்யுனும்னு ரூல்ஸ் ஏதும் இல்ல , அதுவுமில்லாம சாவு விஷயத்த ஆட்டோல
சொல்ரது அவங்கவங்க இஷ்டம் , இதுல மரியாத எங்க போய்டப்போவுது, ஒருநாள்
அந்த கார்ப்பரேஷன் காரங்க வரலனா ஒங்க வீடோட சேர்த்து இந்த டவுனும்
நாறிபோய்டும் மனசுல வச்சுக்கங்க,,, என்று கடிந்துக்கொண்டு அங்கே இருக்க
மனதில்லாமல் மழையிலும் வண்டியை எடுக்க ஆரம்பித்தேன். கிளம்பும் சமயத்தில்
திரும்பிப்பார்த்தேன்­ மளிகை உரிமையாளர் என்னை காட்டி அவர்கள்
இருவரிடமும் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் வழக்கமாக செல்லும்
பாதையென்பதால் என்னைப் பற்றி ஓரளவிற்கு அறிந்த விபரங்களை கடை உரிமையாளர்
பகிர்ந்து கொள்கிறார் , என நினைத்துக் கொண்டு வீடடைந்தேன்.
உண்மையில் இந்தச் சமூகம் துப்பரவுத் தொழிலாளர்கள் மீது மிகக் கேவலமான
பார்வையையே கொண்டிருக்கிறது என்பது தெளிவு. அதற்கு முதற்காரணம்
துப்புரவுப் பணியாளர்கள் தலித்துகளாக இருக்கிறார்கள். மலம்
அள்ளுதல்,குப்பை அள்ளுதல் , கழிவுகளை அப்புறப்படுத்துதல் என்பவனவற்றை
"இழிதொழிலாக" இச்சமூகம் கட்டமைத்திருக்கிறது.­ உடல் சிலிர்க்கும், உடல்
உபாதைகள் வரவழைக்கும் அல்லது திடீர் குமட்டல் வரவழைக்கும் இவ்வகையான
தொழில்களை துணிந்து செய்பவர்கள் மீது கொஞ்சமும் பரிதாபப்படாமல் ,
அவர்களையும் குமட்டல் வரவழைக்கும் கழிவுகளைப் போல பார்க்கும்
மனோபாவத்திலிருந்து மனிதர்கள் முதலில் விடுபட வேண்டும். துப்புரவுப்
பணியாளர்களும் நம்மைப் போலவே சக மனிதர்கள், அவர்களை தொடுவதும் தொட்டு
அணைப்பதும் தீட்டு ஆகாது என்கிற மனநிலைக்கு என்று வருகிறார்களோ அன்றே
அங்கேயொரு சமத்துவம் முளைவிடத் தொடங்கும் என்பதை அனைவரும் நன்குணர
வேண்டியதாய் இருக்கிறது. துப்புரவுத் தொழிலாளிகள் என்போர் சகல
வசதிகளையும் தான் பெறுவதற்காக ஒன்றும் உழைக்கவில்லை, தங்களின் வயிற்றுப்
பிழைப்புக்கா ஓர் அன்னாடங்காச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.­
மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்காக மிகப்பெருஞ் சவாலை அவர்கள்
சந்திக்கிறார்கள் இருந்தும் அவர்களால் தேவைகளை பூர்த்துசெய்துக் கொள்ள
முடியவில்லை, அதீத உழைப்பு, அடிமட்ட கூலி வருமானம், உடலில் தொற்றும்
நோய்கள், என பெரிதும் அவதியுறும் அடிமட்ட தொழிலாளர் வர்க்கங்களாக
இருக்கிறார்கள். இதுவரையில் சுயமாக அவர்களுக்கென்று ஒரு ஓட்டு வீடுகூட
இருந்ததில்லை அனைத்து துப்பரவு கூலித்தொழிலாளிகளும் குடிசைகளிலும்,
தெருவோரங்களிலும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவ்வாறு
இருக்கையில் சக மனிதர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் மீது
கரினங்காட்டக்கூடத் தேவையில்லை குறைந்தபட்சம் அவர்களையும்,அவர்கள்
செய்யும் தொழிலையும் இழிவுபடுத்தாமல் இருப்பதே போதுமானதாக இருக்கிறது.
இங்கே மனிதர்களை மதிக்கக்கூடிய மனித மனங்களே அவசியம் தேவை என்பதை
அனைவரும் உணர வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...