Friday, January 15, 2016

சல்லிக்கட்டு மூடி மறைக்கிறது சாதி ஆதிக்கத்தை




#சல்லிக்கட்டு

தமிழக அரசியல் பார்வைகள் கொஞ்சம் வித்தியாசமானது. 2016 தேர்தலை
சந்திக்கின்ற வேளையில் ஆளும் அதிமுக அதிகார வர்க்கத்தின் ஊழல், நீர்வாகச்
சீர்கேடுகளை பற்றியும் மதுவிலக்கு போராட்டங்களை பற்றியும் , வெள்ளத்தால்
பாதிப்படைந்த மக்களின் உரிமைக்காக இயற்கையை பேணிகாப்பது பற்றியும்
எழுகின்ற அல்லது எழுப்பப்படுகின்ற பல்வேறு போராட்டங்களை
திசைதிருப்புகின்றன மற்றவைகளான சம்பவங்களென்று புலம்புவதுண்டு. கடந்த
நவம்பர் மாத இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரைக்கும் மக்களின்
இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டி மழைவெள்ள பாதிப்புகளை அரசுக்கெதிராக
கையில் எடுத்த வேளையில் அப்போதப்போது முளைத்த நடிகர் சிம்புவின் "பீப்"
பாடல் சர்ச்சைகள் அதனை தொடர்ந்து இளையராஜா பேட்டி சர்ச்சைகள், தேமுதிக
தலைவர் விஜயகாந்தின் ஊடக அவமதிப்பு "த்தூ" சர்ச்சைகள் என அனைத்தும்
செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் அதற்கு
பொறுப்பான அதிமுக அரசையும் மூடிமறைக்க மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு
தரப்பினர்களும்,சமூக ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் வருத்தம்
தெரிவித்தார்கள். ஆனால் அதே வேளையில் மக்கள் அனைவராலும் பேசப்படாத எழுவர்
விடுதலை வழக்கு அதே மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
வெகுசனங்களுக்கு அவ்வழக்கு விசாரணை நடந்ததா? என்றே தெரியாது. சாந்தன்,
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்வது குறித்தான தமிழக அரசின்
முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றம் டிசம்பர் 2 ம் தேதி அதிர்ச்சி
தீர்ப்பு வழங்கியது, தமிழக அரசிற்கு எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம்
இல்லையென்று தனது தீர்ப்பில் எழுதிவைத்து விட்டு கடமை ஆற்றியதாக
சொல்லிவிட்ட நிலையில் , வெள்ளத்தோடு எழுவர் விடுதலையும் கரைந்து காணாமல்
போனது. மக்களுக்கும் அறியாமை என்னும் வளையத்திற்குள்
மாட்டிக்கொண்டார்கள்.­ எதனை முதன்மை படுத்த வேண்டுமென்பதை முதலாளித்துவமே
தீர்மானிக்கிறது. இதனைப்போன்றே தற்போது எழுந்துள்ள சல்லிக்கட்டு
பிரச்சனையும் நிகழ்த்தப்படுகிறது. தமிழ் பண்பாடு? என்று சொல்லப்படும்
சல்லிக்கட்டுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு நீடித்திருக்கும் நிலையில்
பாஜக இவ்வாண்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க மீண்டும் உச்சநீதிமன்றம்
தடை விதிக்க ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிக்கிறது. தமிழர் பண்பாடு
மீட்டெடுப்பு என்கிற முறையில் அதன் வீரியம் வெகு வேகமாக செல்கிற அதே
வேளையில் இன்னொரு தமிழர் பண்பாடு அதே தமிழகத்தில் கட்டி
காப்பாற்றப்பட்டுள்ளத­ு என்பது பெருமையல்லவா! அந்த பெருமையை விழா எடுத்து
கொண்டாட வெகுசன மக்கள் தவறிவிட்டார்கள். அந்த நிகழ்வையும் எழுவர் விடுதலை
தீர்ப்பு போன்றே மூடி மறைப்பது முறையல்ல என்றே பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட வர்ணாசிரம மனுதர்மத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியென்ற ஒருவேளை
எப்போதாவது மக்கள் அதற்கு விழா எடுக்கலாம். அன்று எழுப்பப்படும் "தமிழர்
பண்பாடு" எனும் வளையத்திற்கான கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய
கட்டாயமும் அன்றெழலாம். சல்லிக்கட்டு நடத்துவது குறித்தான தமிழக
எழுச்சிப் போராட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற அதே தருணத்தில் நாகையில்
ஒரு தலித்பிணம் பொதுபதையில் பயணிக்க தகுந்த அனுமதியை உயர்நீதி மன்றம்
வழங்கிய போதும் அதை நிறைவேற்ற வக்கில்லாமல் வர்ணாசிரம மனுதர்மத்தை
கட்டிகாத்த சாதியாதிக்க மனோத்துவ சூழல் உண்மையில் ஒரு தமிழர் பண்பாடு?
எனில் அப்படிப்பட்ட தமிழர் பண்பாடு தேவையா? என்கிற கேள்வி எழுகிறது.
அச்சம்பவம் குறித்து விளக்கமாக தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள்
அளிக்கிறார்.

நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை
அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் திருநாள்கொண்டசேரி.
இக்கிராமத்தில் வசித்து வரும் தலித் மக்களுக்கு சுடுகாடு என்று எதுவும்
இல்லை. குடியிருப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மதிமலை என்கிற ஆற்றங்கரை
வரப்பில் தான் சடலத்தை புதைக்க வேண்டும்.
ஆனால் இக்கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் தலித் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து
வருகின்றனர். ஆகவே வயல்வெளியில் ஒற்றையடி பாதையில் தான் சடலத்தை எடுத்துச்
செல்லக்கூடிய பரிதாப நிலையில் தலித்துகள் உள்ளனர். தங்களுக்கென்று தனி
சுடுகாடு வேண்டுமென்று 40 வருடங்களாக
அரசிடம் புகார் கொடுத்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு
முன்பு அரசு சுடுகாட்டு பாதையை
ஒதுக்கியிருந்தும் அந்த பாதையை கூட தலித்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்
உள்ளனர். வயல்வெளியில் பிணத்தை தூக்கிச்
செல்கிறபோதெல்லாம் எப்படி எங்கள் நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கிச் செல்லலாம்? என்று
கூறி அப்பகுதி சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கியிருக்கின்றனர்.
பெரியசாமி என்கிற முதியவரை செருப்பால்
அடித்துள்ளனர். அய்யாசாமி என்கிற 65 வயது முதியவரை ஆடைகளை கழட்டி கடுமையாக
தாக்கியிருக்கின்றனர். திருநாள்கொண்டசேரி கிராமத்தில்
வீரடேஸ்வரர் என்கிற பொதுக் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து தண்ணீர் எடுத்து
தலித்துகள் தங்கள் கோவில்களுக்கு
பயன்படுத்தி வந்தனர். தலித் தெருக்களில் மாரியம்மன், காளியம்மான், கருமாரியம்மன்
என்று மூன்று கோவில்கள் உள்ளன. கடந்த 20
ஆண்டு காலமாக கோவில்கள் சிதிலமடைந்ததனால் கடந்த 2012ம் ஆண்டு
தலித் இளைஞர்கள் வரி வசூல் செய்து
மாரியம்மன் கோவிலை கட்டியுள்ளனர். கடந்த 06.09.2012 அன்று இந்த கோவிலுக்கு
கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுக் கோவிலான வீரடேஸ்வரர்
கோவிலிருந்து தங்கள் கோவிலுக்கு தண்ணீர் எடுத்து வர தலித்துகள் முயற்சி செய்ததனால்
சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீர் எடுத்தால் நீங்கள் உயிரோடு இருக்க
முடியாது என்று தலித்துகள் மிரட்டப்பட்டுள்ளனர். வேறுவழியில்லாமல்
தங்களுடைய வழிபாட்டு உரிமைக்காக மயிலாடுதுறை தாசில்தார், கோட்டாட்சியர்,
நாகப்பட்டிணம் ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில்
29.10.2015 அன்று தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை
நடந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது இந்து அறநிலையத்துறையை சேர்ந்த
அதிகாரிகள், தலித் தரப்பினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கோவிலில்
தண்ணீர் எடுத்ததாக ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். தண்ணீர்
எடுத்ததற்கு எப்படி ஆதாரம் இருக்க முடியும். இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக
எப்படி இந்து அறநிலையத்துறை கேள்வி எழுப்புகிறது என்று தலித் தரப்பினர்
கேட்க, தாசில்தார் பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதனால் இரு தரப்பினரும்
சாமி கும்பிடலாம் ஆனால் சடங்குகள் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குஞ்சம்மாள் என்கிற 85 வயது தலித் மூதாட்டி கடந்த 26.11.2015 அன்று
இறந்து போகிறார். கடுமையான மழைக்காலம். வயல்வெளி முழுவதும் தண்ணீர்
நிரம்பியிருந்தது. இந்த நிலையில் வயல்வெளியில் பிணத்தை எடுத்து செல்ல
முடியாது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்
என்று மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், பெரம்பூர் காவல்நிலைய
ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.
ஆனால் சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று
மிரட்டல் விடுக்க அரசு தரப்பினர் குறிப்பாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட
சாதி இந்துக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து இருந்துள்ளனர்.
பிணத்தை புதைக்க வேண்டுமென்பதால் அரசு தரப்பினரிடம், அப்பகுதி தலித்துகள் இது
மழைக்காலம் இந்த நேரத்தில் மட்டுமாவது எங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுங்கள்
என்று கெஞ்சி கேட்டுள்ளனர். சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி
மறுப்பது என்பது வன்கொடுமை. அப்படி மறுப்பவர்களை கைது செய்து சிறையில்
அடைக்காமல் போலீசாரும் சாதி இந்துக்களிடம் குஞ்சம்மாள் சடலத்தை பொது பாதையில்
எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்று
கெஞ்சியிருக்கின்றனர்.
சாதி இந்துக்கள் உறுதியாக இருக்கவே, போலீசார் தலித்துகளை மிரட்டியுள்ளனர்.
மரியாதையாக பிணத்தை அடக்கம் செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு
செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். நாங்கள் பிணமாக போனாலும்
போவோமே தவிர வயல்வெளி வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல முடியாது என்று
தலித்துகள் கூறியிருக்கின்றனர். குஞ்சம்மாளின் சடலம் அழுகிக்
கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூற, போலீசார் நீங்கள் சடலத்தை எடுக்கவில்லை
என்றால் நாங்களே எடுப்போம் என்று தலித்துகளை மறுபடியும் அச்சுறுத்தியுள்
ளனர். பிணத்தை அரசு ஊழியரே அடக்கம் செய்வோம் என்கிற சம்மனை தலித்
குடியிருப்பில் போலீசார் ஒட்டியுள்ளனர். அதன்பிறகு வேறுவழியில்லாமல்
29.11.2015 அன்று நகராட்சி ஊழியர்கள்
சடலத்தை எடுத்துச் செல்ல போலீஸ் பாதுகாப்புடன் குஞ்சம்மாளின் சடலம் அடக்கம்
செய்யப்பட்டுள்ளது. அப்போது வட்டாட்சியரிடமும் கோட்டாட்சியரிடமும்
பெரம்பூர் காவல் ஆய்வாளரிடம் குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக், குஞ்சம்மாளின் கணவரும் என்
தாத்தாவுமான செல்லமுத்து 100 வயதினை கடந்துள்ளார். மிக விரைவில் அவர்
இறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று
கூறியிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் செல்லமுத்து இறந்தபிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் 03.01.2016 அன்று தலித்
முதியவர் செல்லமுத்து இறந்து போகிறார். உடனடியாக வட்டாட்சியர், கோட்டாட்சியர்,
மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு செல்லமுத்துவின் பேரன் கார்த்திக், எங்கள்
தாத்தாவின் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல புகார் கொடுத்துள்ளார்.
அதிகாரிகள் தரப்பில் முறையான பதில் இல்லை. ஆகவே உடனடியாக இரவோடு இரவாக
சென்னை சென்று உயர்நீதிமன்றத்தில், என் தாத்தா செல்லமுத்துவின் சடலத்தை
பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டுமென்று வழக்கு தாக்கல்
செய்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் 04.01.2016 அன்று செல்லமுத்துவின் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் அதுகுறித்த அறிக்கையை 05.01.2016
அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியருக்கும்,
காவல்துறை கண்காணிப்பாளருக்கும், ஆதிதிராவிட நல அலுவலருக்கும், காவல்
ஆய்வாளருக்கும், தாசில்தாருக்கும்
உத்தரவிட்டது.
இந்நிலையில் 06.01.2016 அன்று அரசு அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல்
இருந்ததனால் அப்பகுதியைச் சேர்ந்த 40 தலித்துகள் செல்லமுத்துவின் சடலத்தோடு
சிதிலமடைந்த ஒரு வீட்டிற்குள் ஒன்றுகூடி கதவை பூட்டிக் கொண்டனர். பொதுப்பாதையில்
அனுமதிக்கும் வரை நாங்கள் எவரும் இந்த வீட்டைவிட்டு வெளியே வரமாட்டோம் என்று
உறுதியுடன் இருந்துள்ளனர். அந்த பகுதியில்
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். செல்லமுத்துவின் சடலம்
குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்ததனால்
போலீசார் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். ஆயினும் தலித்துகள் உறுதியுடன் இருக்கவே
டிஎஸ்பி வெங்கடேசன் , தலித்துகளிடம்
பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறோம் வாருங்கள் என்று
கூறியுள்ளார்.
கடந்த 06.01.2016 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்து வருவதற்காக தலித் குடியிருப்பிலிருந்து வெளியே
வரும்போது, அங்கே 1000க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் ஆயுதங்களுடன்
கூடியிருக்கின்றனர். உடனடியாக திருவாரூர் எஸ்பி, தலித்துகளிடம்
பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூற, அதற்கு
தலித்துகள் நீங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பு
செய்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். போலீசாருக்கும் தலித்துகளுக்குமிடையே
வாக்குவாதம் ஏற்படுகிறபோது திருவாரூர் எஸ்பி தடியடி நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அங்கிருந்த மக்களை போலீசார் தடியால் அடித்து விரட்டியுள்ளனர். ஆபாசமாக
பேசியிருக்கின்றனர். பெண்களின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த
ியுள்ளனர். கால் காசு கூட கிடையாது, நீதிமன்றம் போவதற்கு மட்டும் எப்படி
துணிச்சல் வந்தது? என்று கூறி அடித்துள்ளனர். போலீசார் தடியடியால் மக்கள்
சிதறி ஓட ஒவ்வொரு ஆளாக பிடித்துக் கொண்டு மூன்று நான்கு போலீசார் சுற்றி
நின்று தடியால் முகம், கை, கால் என்று உடலின் பல்வேறு பகுதிகளில்
தாக்கியுள்ளனர். செல்லமுத்துவின் மருமகள் மல்லிகா என்கிற பெண்ணை போலீசார் கீழே தள்ளி
அவரது நெஞ்சில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 37
ஆண்களுக்கும், 5 குழந்தைகளுக்கும், 11 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த தலித்துகளை கைது செய்து அதன்பிறகு செல்லமுத்துவின் சடலத்தை
எடுத்துச் சென்று போலீசாரே அடக்கம்
செய்துள்ளனர்.
வெறும் 40 குடும்பங்கள் உள்ள தலித்துகளை தாக்குவதற்கு 300 போலீசார் 5 அடி கொண்ட
கம்புகளுடன் துப்பாக்கியுடனும் குடியிருப்பிற்குள் புகுந்து கொடூரமாக
தாக்கிய செயலை எமது எவிடன்ஸ் அமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. அறவழியில்
போராடிய மக்களை குறிப்பாக நீதிமன்றம் உத்தரவை கடைபிடிக்காமல் அப்பகுதி சாதி
இந்துக்களுக்கு பயந்து கொண்டு தலித்துகள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தியிருப்பது
அரசு எந்திரத்தின் கோழைத்தனமான செயல் என்பதை சிவில் சமூகத்திற்கு கூற
விரும்புகிறோம்.
தலித் பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசியது மட்டுமல்லாமல் இளவயது
பெண்களிடம் போலீசார் தகாத முறையில் நடந்துள்ளனர். உங்களுக்கு குடிக்கக்கூட
கஞ்சி கிடையாது. ஆனால் போராட மட்டும் தெம்பு இருக்கிறதா? என்று போலீசார்
இழிவுபடுத்தியுள்ளனர். போலீஸ் தடியடி நடத்தியவுடன் சாதி இந்துக்கள்
குடியிருப்பில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளன. வானவேடிக்கைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஒரு அருவருப்பான செயலை நாகரிகமடைந்த மனிதர்கள் செய்வார்களா
என்று தெரியவில்லை.
தற்போது கூட அப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட போலீசார் வெவ்வேறு இடங்களில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்புகிற
தலித் குழந்தைகளை வழிமறித்து அவர்களது புத்தக பையில் ஆயுதம் இருக்கிறதா என்று
உதறி பரிசோதனை செய்கின்றனர். இதைவிட ஒரு கேவலமான செயல் ஏதேனும் இருக்குமா
என்று தெரியவில்லை.
அப்பகுதி சேர்ந்த 40 தலித் குடும்பங்களும் சாதி இந்துக்களின் நிலங்களில் விவசாயக்
கூலியாக உள்ளனர். சிறிய அளவு மழை பெய்தாலே குடியிருப்பிற்குள் தண்ணீர்
புகுந்து விடும். திருநாள்கொண்டசேரி கிராமத்தின் கடைசி பகுதியான வயல்வெளி
ஓடை பகுதியில் தான் ஆண்டாண்டு காலமாக தலித்துகள் குடியிருந்து வருகின்றனர்.
வரைபடத்தில் கூட அந்த மக்களின் இடத்தை
கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள்
ஆகப்போகிற நிலையில் பிணத்தை புதைப்பதற்கு வயல்வெளியில் 6 கி.மீ.
எடுத்துச் சென்று வருகிற நிலையில் நமது நாடு இருக்கிறது என்று சொன்னால் இதைவிட
பெரிய அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. எவ்வித உரிமைகளும் இல்லாமல்
அனாதைகளாக கிடக்கிறோம் என்று அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள்
கூறுகிறபோது, நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தோன்றுகிறது.

பரிந்துரைகள்

• பிணத்தை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த
அப்பகுதி சாதி இந்துக்கள் மீதும், நீதிமன்ற
உத்தரவினை கடைபிடிக்க மறுத்து சாதி
இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்
கண்காணிப்பாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர்,
சம்பந்தப்பட்ட போலீசார் மீதும் பட்டியல்
சாதியினர் பட்டியல் பழங்குடியினர்
வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம்
2014ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட
வேண்டும்.

• தலித் பெண்களை ஆபாசமாக பேசி
இழிவுபடுத்திய சம்பந்தப்பட்ட போலீசார் மீது
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,
பட்டியல் சாதியினர் பட்டியல்
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு
திருத்த அவசரச் சட்டம் 2014ன் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட வேண்டும்.

• வேண்டுமென்றே கடமையை புறக்கணித்த
போலீசார் மீதும், மாவட்ட நிர்வாக துறையினர்
மீதும் பட்டியல் சாதியினர் பட்டியல்
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு
திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவு 4ன்
கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட
வேண்டும்.

• ஒவ்வொரு தலித் குடும்பத்தினருக்கும் தலா
ரூ.5 இலட்சம் நிவாரணம் என்று 40
குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிவாரணம்
வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

• இப்பகுதியில் கடுமையான தீண்டாமை
நிலவுவதற்கு தலித்துகள் பொருளாதார
ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஆகவே ஒவ்வொரு தலித்
குடும்பத்தினருக்கும் தலா 5 ஏக்கர் வேளான்
நிலம் வழங்கப்பட வேண்டும்.

• தலித்துகளுக்கு குடியிருப்பு,
சுடுகாடு, குடிநீர், சாலை வசதி போன்ற
பல்வேறு வசதிகள் ஏற்படுத்த தனியான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்

தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் பரிந்துரைகளை இந்த தமிழர் பண்பாடு?
கலாச்சாரம் எளிதாக புறக்கணித்துவிடும் என்பதை தெரிந்த ஒன்றேயாகும்.
தமிழ்ச்சமூக பண்பாடு மீட்பர்கள் கேட்கலாம் சல்லிக்கட்டுக்கும்
சாதியத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா? அப்படி தொடர்பிருந்தாலும் அது
தமிழர் இத்தருணத்தில் ஒப்பிட்டுப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கின்றது .
என கேட்கலாம், கேட்படுதலில் கூட ஆதிக்கமிருப்பதாகவே தோன்றுகையில் வேறென்ன
செய்துவிட முடியும் கட்டமைத்திருக்கும் ஆதிக்கம் அப்படியான செயல்களில்
தம்மை ஈடுபடுத்தி வைத்திருக்கிறதே,

முதலில் விவசாயப் பெருமக்களின்
இயற்கைக்கும், இயற்கையோடு இணைந்த வீட்டுத்தோழனான விலங்குகளுக்கும் நன்றி
தெரிவிக்கின்ற வகையில் அனுசரிக்கப்பட்ட தைப் பொங்கல் திருவிழா எப்படி
இந்துத்துவ விழாவாகிப்போனது? தமிழ்சமூகத்தில் ஆதி இந்துமதமென்று எந்த
வரலாற்று பதிவுகளுமில்லை, இடையில் வந்த இந்துமதம் எப்படி பொங்கல்
திருவிழாவை பறித்துக்கொண்டது.

அதனை தொடர்ந்து தைப் பொங்கலன்று அரங்கேற்றப்படும் ஜல்லிக்கட்டு
(சல்லிக்கட்டு ஜல்லிகட்டாக மாறிய வடமொழி நுழைவை எதிர்க்க தமிழ்த்தேசியம்
முனைப்பு காட்டுவதாக இதுவரை அறியப்படவில்லை, ஆனாலும் அதே தமிழ்த்தேசயம்
ஜாதியை சாதியென்று மாற்றினால் சாதி உடனே அழிக்கப்பட்டுவிடுமென­்று
வேடிக்கை காட்டுகிறார்கள்) நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட சாதியினங்கள்
மட்டும் பங்கேற்கின்றன அதுவும் தமிழ்நாடென்பதை பிரித்து தென்மாவட்ட
தமிழகம் என்கிற பெருமையோடு,,,

அப்படியிருக்க சல்லிக்கட்டு தமிழர்
பண்பாடென்று விளிப்பதால் சல்லிக்கட்டில் சாதியப்பதிவு தேவையாயிருக்கிறது.
ஒருவேளை தமிழர் பண்பாடென்று சல்லிக்கட்டை விளிக்கும் முற்போக்காளர்களும்
இதனை ஏற்றுதான் ஆகவேண்டும். ஆதித்தமிழர் மக்களிடத்தில் சாதிய வேற்றுமைகள்
இருந்ததாக இல்லை என்கிறபோது வரலாற்றை கடந்து வருகையில் எவ்வாறு
சல்லிக்கட்டு ஒரு இனக்குழு மக்களுக்கு மட்டும் உரிமையாகிப்போனது. அப்படி
உரிமையாகிப் போனாலும் தமிழர் பண்பாடென்று வருகையில் பகிர்ந்து
அளிக்கப்பட்டு அனைத்து சாதியினருக்கும், அனைத்து மதத்தாருக்கும் ,
அனைத்து தமிழகத்துக்கும்(வட,த­ென் என்கிற பிரிவினை தவிர்த்து)
பொதுவானதாக்கி பெருவிழா எடுப்பின் முனைப்புக்கு மட்டும் தடையாக
இருக்குமானால் சல்லிக்கட்டில் சாதியாதிக்கமும் , மத ஆதிக்கமும் ஏகபோகமாய்
சர்வ சுதந்திரமாய் சுற்றித் திரியும் போது, ஏதுமற்ற வெகுளித்தனமான
சல்லிக்கட்டு காளைகளை விடவும் மனதயினம் கொடூரமானதாகவே கண்ணுக்குப்
புலனாகிறது. முரட்டுக்காளைகள் சாதியம் பார்த்து பழகுவதில்லை என்பதே
தற்போதைக்கு ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. மழைவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட
எழுவரின் விடுதலை போன்றே சாதியாதிக்கம் பொதுத்தெருவில் பிணம் போக அனுமதி
மறுக்கப்படுவதை எதிர்த்து போராடும் போராட்டக்களமும் சல்லிக்கட்டால்
மூழ்கடிக்கப்படுகிறது முடிவில்லா தனது ஆதிக்க பயணத்தை அதுவும் தொடர்ந்து
செயல்படுத்திக்கொண்டே தமிழர் பண்பாடென்று வேடமிட்டு வெற்று கோசங்களாகி
மனுவை வளர்த்து மனிதத்தை புதைத்து விடுகிறது என்பதே ஆதங்கமாக இருக்கிறது.

2 comments:

  1. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. தங்களுக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
    தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...