Thursday, January 14, 2016

நான் தாத்தா செல்லம்

கெஜிர் காரம்
கமர்கட்டு
தேன்மிட்டாய்
கடலைமிட்டாய்
எல்லாம் வாங்கி
அழுக்கேறிய வேட்டியில்
இறுக்கமாய்
கட்டி எடுத்துவருவார்
எனக்காக தாத்தா

பெயர்சொல்லி
அழைக்கமாட்டார்
பட்டுக்குட்டி எனும்
செல்லப்பெயரெனக்கு

எங்கோ தொலைவில்
வருவார்
இங்கிருந்தே
ஓடத் தொடங்குவேன்
அவ்வளவு பிடிக்கும்
தாத்தாவையும்
வாங்கி வரும்
தீனிகளையும்

தோளில்
எனை சுமந்து கொண்டு
களைப்பேதுமின்றி
திண்ணையில்
தான் வந்தமருவார்

தன்மொழி மறந்து
என்மொழியோடு
கொஞ்சி
அகமகிழ்ந்திடுவார்

இடுப்பில் என்னது
முடுக்காய் தெரிகிறதே
எனக்கா தாத்தா
எனக் கேட்பேன்
அது என்னவென்று
தெரிந்தும்
தெரியாததுபோல்

முன்னை விட
சற்று அதிகமாய்
எழுந்துவிடும்
கொஞ்சல்கள்
அப்போதும்
பாசத்திற்கொன்றும்
பங்கமில்லை
என்னிடத்தில்

கழுத்தோடு
கட்டியணைப்பேன்
கண்ணத்தில்
முத்தம் பதிக்க

சட்டென
விலகிடுவேன்
குத்துகிறது தாத்தா
தாடியும்
மீசையுமென்று

மெல்லியதாய் சிரிப்பார்
சற்று வாய் பிளந்து
பல் விழந்தபடியால்
கண்ணக்குழி அழகு
தாத்தாவுக்கு

வயசாகுதுல்ல
பட்டுக்குட்டி
என்றுரைத்தபடியே
என் பிஞ்சு கைவிரல்
நகத்தை
கடிக்கத்தொடங்குவார்

அடிக்கடி கிள்ளிவிடும்
பழக்கம்
எனக்குண்டென்று
தெரியாமலா
இருக்கும் தாத்தாவுக்கு

கொஞ்சம் நடிக்க
வேண்டியிருந்தது
மடியை
அவிழ்க்கவில்லை
இன்னமும்
தாத்தா

தாடி மீச குத்தினாலும்
பரவாயில்லை
இந்தா தாத்தா முத்தம்
அப்பாடா
நடித்தாகிவிட்டது

முத்தம் வாங்கிய
பின்னர்தான்
எதையும் தருவார்
தாத்தா
அடியும் அவ்வப்போது
விழும்

பத்திரமாய்
பிரித்துக்காட்டுகிறார்
வாங்கி வந்ததை

அடைந்த
சந்தோஷத்தில்
அப்படியே
பிடுங்கினேன்
தின்பதற்கு அவைகளை

அதட்ட மாட்டாரென்று
எப்போதும் தெரியும்
ஆனால் விதைப்பார்
ஒரேயொரு
விதையை மட்டும்
கண்டிப்புடன்

பகிர்ந்துண்னடி
என் பட்டுக்குட்டி
கூப்பிடு கூட
பொறந்தவகள

சற்று எழும்
கோபம் அத்தருணத்தில்
பழகிப்போனதால்
பகிர்ந்து உண்ணுதல்
பிடித்துவிட்டது
தாத்தாவையும்தான்

இப்போதெல்லாம்
பந்தப்
பிரிவினையோ
போலியான பந்தமோ
எங்களை
நெருங்குவதே இல்லை
எல்லாம் தாத்தாவின்
பாசத்தால் தள்ளியே
நிற்கிறது

தவிப்புகள் மட்டும்
தொடர்ந்தபடியே
தாத்தா தற்போது
உயிரோடில்லை
உள்ளத்தில் எப்போதும்
அவருக்கோர்
இடமுண்டு

நான் வாழ்நாள்
முழுவதும்
என் தாத்தா
செல்லமாகவே
இருந்துவிடுகிறேன்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...