Sunday, September 23, 2018

ரபேல் ஊழல் முழு அறிக்கை





ரஃபேல்ஊழல் : அருண்ஷோரி,யஷ்வந்த்சின்கா,
பிரசாந்த்பூஷன்
வெளியிட்ட முழு அறிக்கை !

ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது பாசிச பாஜக மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை

"அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை"

மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்கின்றனர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன்.

கடந்த ஆகஸ்ட் 8, 2018 அன்று அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட முழு அறிக்கையின் சற்று சுருக்கப்பட்ட மொழியாக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான பேர ஊழல்
பத்திரிகையாளர் சந்திப்பில், பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா
மோடி அரசின் கீழ் ரபேல் போர் விமானங்கள் வாங்கும் நடைமுறை திடீரென மாற்றப்பட்டது; இந்திய அரசு கடைபிடிக்கும் வழக்கமான அடிப்படை நடைமுறைகள் அனைத்தும் தூக்கியெறியப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் குழப்பமான மற்றும் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்கள் தொடர்ந்தன. ஊடகங்கள் மொத்தமாக மழுங்கடிக்கப்பட்டன. விமானத் தளவாடங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் வாய்ந்த உள்நாட்டு அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-ஐ இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைத்து, ஒரு பெயர்ப் பலகை நிறுவனத்தை ஒத்த, விமானத் தளவாடங்கள் உற்பத்தி குறித்து குறைந்தபட்ச அனுபவம்கூட இல்லாத, தொடர்ந்து பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகின்ற, கடனில் மூழ்கிய ஒரு தனியார் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிலான முறைகேடுகளனைத்தும் ஒட்டுமொத்தமாக அரங்கேற்றப்பட்ட இந்த ரபேல் ஒப்பந்த ஊழல்தான் பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாகும். இந்த ஊழலானது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமன்றி இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

நாங்கள் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இங்கு முன்வைக்கிறோம்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய அரசு உடனே வெளியிட வேண்டும். குறிப்பாக எவ்வளவு பணம் இந்திய அரசால் செலுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மத்திய அரசை இவ்விவகாரத்தில் எதிர்க்க வேண்டும்; ஏனென்றால் மோடி தலைமையிலான இந்த அரசு, ஊழல் புரிந்ததோடு மட்டுமன்றி, அரசு நிறுவனத்தை ஒதுக்கிவைத்து தனியார் நிறுவனத்தை உள்நுழைத்து ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அரசு மூடி மறைக்கும் அத்தனை உண்மைகளையும் வெளிக்கொண்டு வர அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும்.
ரபேல் விமான பேர ஊழல்சில உண்மைகளும் கேள்விகளும்

1. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய விமானப் படை வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 மத்திய ரக பல்நோக்கு போர் விமானங்களை (Medium Multi-Role Combat Aircrafts (MMRCA)) வாங்குவதற்கென வரைவுத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி முதன்முதலில் போர் விமானங்களை வாங்குதல், தொழில்நுட்பங்கள் பகிரப்படுதல், பிறகு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் உரிமம் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். கூடுதல் சேர்க்கைகள் இருப்பதால்தான் ’தஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது என மத்திய அரசு கூறுவதைப் பொய் என நிருவுகிறது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம்.

2. தஸ்ஸால்ட் ஏவியேஷன், லாக்கீட் மார்ட்டீன், போயிங், சாப், யூரோ ஃபைட்டர், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் போர் விமானங்களுக்கான ஏலத்தில் பங்குபெற்றன. பரிசோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய விமானப்படை 2011-ம் ஆண்டு தஸ்ஸால்ட் நிறுவனம் மற்றும் யூரோ ஃபைட்டர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக உள்ளன என அறிவித்தது. 2012-ம் ஆண்டு ஏல மதிப்பீட்டின் அடிப்படையில் தஸ்ஸால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

3. தொடர்ந்து நடைபெற்ற பேரங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட இறுதிநிலையை அடைந்தனர். கடந்த 25.03.2015 அன்று பிரான்சில், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியர் ”எச்.ஏ.எல் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது விரைவில் நடந்தேறும்” என்று அறிவித்தார்.

4. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எரிக் ட்ரேப்பியர்
முதலாவதாக தஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு சில போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், ஏனென்றால் மிக்-21 மற்றும் மிக்-27 வகை போர் விமானங்களின் வாழ்நாள் சேவை நிறைவுற்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்டன. இந்திய வான்வெளி உற்பத்தித்துறை சீர்செய்யப்படுவது மிகவும் அவசியம்; இதற்காக நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை இந்தியா விரைவில் பெற்றாக வேண்டும்.

பல பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்திய அரசின் விமான உற்பத்தித் துறை நிறுவனமான எச்.ஏ.எல்-ஐ அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்தியாவால் வாங்கப்படும் ரபேல் விமானங்களை உள்நாட்டிலேயே மராமத்துப் பணிகளைச் செய்துகொள்ளலாம். ஏனென்றால் இவை 30 முதல் 40 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் நாமே போர் விமானங்களை உற்பத்தி செய்துகொண்டு தன்னிறைவு பெறலாம்.

5. இதனடிப்படையில் மொத்தம் 18 விமானங்களை முழுவதுமாக இறக்குமதி செய்துகொண்டு, மீதமுள்ள 106 விமானங்களையும் எச்.ஏ.எல் நிறுவனம் மூலமாகவே உற்பத்தி செய்துகொள்ளலாம். 2007-ம் ஆண்டு போடப்பட்ட வரைவுத் திட்டத்தில், மொத்தமுள்ள 126 ரபேல் போர் விமானங்களுக்கு ரூ.42,000/- கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இறுதி மதிப்பீடு பொதுவில் வெளியிடப்படவில்லை. 13.04.2015 அன்று மோடியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு, தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ’126 போர் விமானங்களுக்கான மொத்த விலை ரூ.90,000/- கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; ஏனென்றால் ரபேல் விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் தொழில்நுட்பத்தில் மற்றவற்றை விட மிகவும் முன்னேறியவை; எனவே 126 போர் விமானங்களுக்கு ரூ.90,000/- கோடி என்பது தவிர்க்கவியலாதது’ என்றார். இந்தக் கூற்றின்படி ஒரு போர் விமானத்திற்கு ரூ.714 கோடி செலவாகும் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பாரிக்கர் கூறிய முக்கியமான விடயம் 90,000 கோடி என்பது ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது என்பதாகும்

6. ஏற்கனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி 18 போர் விமானங்களை (முழுமையான பயன்பாட்டில் உள்ள) வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், புதிதாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மோடி அரசின் மாயாஜால வித்தை வெளியில் தெரிந்துவிடும்.

7. பழைய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போன்று 108 விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு ஆகப்போகின்ற செலவும், 18 விமானங்களை தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கும் பாரிய அளவிலான வித்தியாசமிருக்கும். ஏனென்றால் நேரடியாக வாங்குவது என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால் ஒரு போர் விமானத்திற்கான உற்பத்தி செலவு, ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல்-ல் உற்பத்தியைத் தொடங்கும் போதுதான் கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம், இன்னபிற செலவுகள் உட்பட ஒட்டுமொத்த செலவும் (ஒரு போர் விமானத்திற்கு) ரூ.714 கோடியை எட்டும் என்பது மோடி அரசு போட்ட கணக்கீட்டின்படியே செல்லும். எனவே 36 ரபேல் போர் விமானங்களை நேரடியாக தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்கும் போது ஒரு விமானத்திற்கான விலை என்பது ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டுமென்பது மிகத்தெளிவான செய்தி

8. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து கூறுகையில் ”ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையுடன் பிரதமர் மோடியின் பிரான்சு பயணத்தைத் தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் மேல்மட்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது பாதுகாப்பு குறித்த மற்ற அம்சங்கள் குறித்தோ பேசுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது”.

பிரதமர் மோடியின் ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக திரு.ஜெய்சங்கரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து 4 விடயங்கள் நமக்குத் தெளிவாகப் புரிகின்றன.

பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
எச்.ஏ.எல் நிறுவனம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் பங்குபெறுகிறது.
இந்தியப் பிரதமரும், பிரான்சு அதிபரும் வேறு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர்.
ரபேல் விமான பேர ஊழல்
எஸ். ஜெய்சங்கர்
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து (10.04.2015) மோடி தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரான்சு நாட்டு நிறுவனத்துடன் செய்துகொண்ட புத்தம் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரான்சு அரசுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் ’இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்படி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்திய விமானப்படை போர் விமானங்களின் தரம் குறித்து உறுதி அளிக்கும் பட்சத்தில் மற்ற போர்க்கருவிகளையும் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் மேலும் போர் விமானங்களைப் பராமரிக்கும் பணி பிரான்சு நிறுவனத்தின் பொறுப்பிலேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்தது.

இந்த அறிக்கை இரண்டு முக்கியமான விடயங்களை தெளிவாக்குகிறது.

36 ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த விலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட 18 விமானங்களின் விலையை விட மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும்
முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட மத்திய ரக பல்நோக்கு போர் விமானம் தொடர்பான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் 36 போர் விமானங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட பணமதிப்பு மிக மிக அதிகம் என ஒரு தகவல் உலா வந்தது.

மோடியின் ஊழல்
மனோகர் பாரிக்கர்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்கப்பட்டபோது அவர் தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஒரே போடாக போட்டுடைத்துவிட்டார். மேலும் இது தொடர்பாக என்.டி.டிவி செய்தி நிறுவனத்திற்கு 13.04.2015 அன்று அளித்த பேட்டியில் ”இது பிரதமர் மோடியின் முடிவு; எனவே எனக்கு இதில் வேறெந்த வேலையுமில்லை; மேலும் இது இரு நாட்டு தலைவர்கள் கலந்தாலோசித்து எடுத்த முடிவு. எனவே கருத்து எதுவும் சொல்ல முடியாது” என்று நழுவிக்கொண்டார்.

இந்தப் புதிய ஒப்பந்தத்தில் ஆச்சர்யமூட்டும் வேறு சில செய்திகளும் உள்ளன.

36 போர் விமானங்கள் வாங்க வேண்டுமென்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது விளக்கப்படவில்லை
இந்தியாவில் உற்பத்தித் திட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் எந்தத் தகவலுமில்லை
தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றங்கள் குறித்து எந்த விளக்கமுமில்லை.
இந்திய விமானப்படை 126 போர் விமானங்கள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்த பட்சத்தில், எந்த அடிப்படையில் அவை 36 ஆகக் குறைக்கப்பட்டன என்ற விவரமும் இல்லை.
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் இந்திய அரசு தெரிவித்த ஒரே பதில் இந்திய விமானப்படையின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் 36 விமானங்களும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் நம் கைக்கு வந்துவிடும் என்று மட்டும் கூறி நிறுத்திக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், ரபேல் போர் விமானம் இந்திய விமானப்படை வசம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. செப்டம்பர் 2019-க்குள் போர் விமானங்கள் வந்துவிடும் என்று நம்பப்படுகிறதாம். மேலும் குறிப்பிடப்பட்ட 36 போர் விமானங்களும் 2022-ம் ஆண்டு மத்தியில்தான் நம் கைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ரபேல் விமான பேர ஊழல்
ரஃபேல் விமானம் வாங்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் நிர்மலா சீதாராமன்
2007-ல் போடப்பட்ட ஒப்பந்த வரைவின்படி இந்நேரம் 18 போர் விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் நம் கைகளில் வந்திருப்பதோடன்றி, தஸ்ஸால்ட் நிறுவனமும் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2022-க்குள் 108 விமானங்களையும் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து முடிக்கும் திறனையும் எட்டியிருக்கும். இந்திய விமானப்படையின் அவசரத் தேவை என்பதைப் பயன்படுத்தி 36 விமானங்களை 2022 மத்தியில் வாங்கி முடிப்பதற்கும், 108 விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் வித்தியாசம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்பதைத் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும்?

மேலும் சில கேள்விகள் இப்போது எழுகின்றன

கடந்த 2007-ல் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை அவசர நிலை கருதி ரத்து செய்து 36 விமானங்களை உடனே வழங்குமாறு இந்திய விமானப்படை மத்திய அரசிடம் எப்போது கோரிக்கை வைத்தது?
அப்படி வைத்ததென்றால் 126 விமானங்கள் பாதுகாப்புக்கு வேண்டுமென்ற கோரிக்கை எந்த அடிப்படையில் இந்திய விமானப் படையால் கோரப்பட்டது?
இந்திய – பிரான்சு நாடுகளின் கூட்டறிவிப்புக்கு முன் (ஏப்ரல் 2015-க்கு முன்), மத்திய அரசு நாடாளுமன்ற அமைச்சரவையில் 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றதா?
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில், ஏன் புதிய டெண்டர்கள் (ஏலமுறை) கோரப்படவில்லை? குறிப்பாக யூரோஃபைட்டர் நிறுவனம் 04.07.2014 அன்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஏலத்தொகையிலிருந்து 20% சதவீதம் வரை கழிவுகள் தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
புத்தம் புதிய ஒப்பந்தமும், எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்படுதலும்

9. கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தஸ்ஸால்ட் மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 108 போர் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனமே உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதற்குத் தேவையான மற்றும் இன்னபிற வசதிகளை தஸ்ஸால்ட் நிறுவனம் செய்து தருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மோடியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இரண்டு புதிய தனியார் நிறுவனங்களின் பெயர் அடிபட்டது. அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் லிட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிட் ஆகிய இரு நிறுவனங்கள்தான் அவை.

மோடியின் ஊழல்
மோடியின் அன்பர்கள் அனில் அம்பானி, அதானி
10. அதானி, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்ட சில நாட்கள் கழித்து 10.04.2015 அன்று மோடி வெளியிட்ட அறிவிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு நான்கு அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று என்பதும், அந்த ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், தரவுகளும் என்னவாயின என்பதும் தெரியவில்லை
இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது; அதோடு கூடவே ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் குப்பையில் போடப்பட்டது.
’மேக் இன் இந்தியா’ குப்பையில் போடப்பட்டது மட்டுமன்றி, போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த பேச்சும் புறந்தள்ளப்பட்டது.
குறுகிய காலத்திற்குள்ளாகவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் உள்நுழைக்கப்பட்டு பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடிய ரபேல் நிறுவன ஒப்பந்தத்தின் முழு பலன்கள் அனைத்தும் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டது.
11. புதிய ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பிறகு தஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனங்களுக்கிடையிலான புரிதலின் அடிப்படையில் கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அனில் அம்பானி தலைமை செயல் அதிகாரியாகச் செயல்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 51% பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் 49% பங்குகள் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திற்கு 70% இலாபம் கிடைக்கும், அதாவது மொத்த பொறுப்பீட்டுத் தொகையான ரூ.30,000 கோடியில், ரூ.21,000 கோடி இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலாபத் தொகையாகக் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.

12. இதே மத்திய அரசால் 01.04.2016 அன்று அமல்படுத்தப்பட்ட புதிய இராணுவ ஒப்பந்த வழிகாட்டுதல் பிரிவு 8.6-ன் படி ”எந்த ஒரு புதிய அந்நிய முதலீட்டுத் திட்டமும் அது எத்தனை சிறிய பணமதிப்பைக் கொண்டதாக இருந்தாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ தங்கள் கையில் எதுவுமில்லை என்று கைகழுவுகிறது. அதோடன்றி தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கே தரப்பட்டுள்ளது. மேலும் எந்த அடிப்படையில் எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்பட்டது என்ற விளக்கமும் இதுவரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பிலோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ தரப்படவில்லை.

இராணுவப் போர் விமானங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் பெற்ற தஸ்ஸால்ட் நிறுவனம் எப்படி ஒரே ஒரு வருட அனுபவம் மட்டுமே பெற்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டுசேர முடிந்தது? அதுவும் மத்திய அரசின் ஒப்புதலே இல்லாமல்? இன்னொருபுறம் பார்க்கும்போது ரிலையன்ஸ் ட்ஃபென்ஸ் நிறுவனம் ரூ.8000 கோடி கடனில் மூழ்கியுள்ளது மேலும் ரூ.1300/- கோடி வியாபார நட்டம் ஏற்பட்டதோடன்றி, ஒட்டுமொத்த அனில் அம்பானி குழுமங்களுமே கடனைக் கட்டாமல் நட்டத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெருநிறுவனமாகும்.

13. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அது கூட்டு சேர்ந்திருக்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமோ இராணுவ போர் விமானங்கள் தயாரிக்கும் அனுபவம் கொஞ்சம்கூட இல்லை. குஜராத்தில் உள்ள பிப்பாவாவ் கடற்படை கட்டுமான தளத்தில் ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்களைச் சந்தித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் அந்த ஒப்பந்தத்தையே நிறைவேற்ற வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முரணாக இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம், விமானங்கள் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற முன்னோடியாக இருக்கிறது. தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியரே இதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

ரபேல் விமான பேர ஊழல்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா
புதிய விமானங்களுக்கான விலையை வெளியிடாமல் இரகசியம் காக்கும் இந்த அரசு

14. பிரான்சு நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளைக் கருதி போர் விமானங்கள் வாங்கப்படும் விலையை வெளியிட முடியாது என்று சாதிக்கிறது மத்திய அரசு. இது ஒரு அப்பட்டமான பொய்.

15. கடந்த 18.11.2016-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ” 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கென 23.09.2016-ம் தேதியன்று பிரான்சுடன் இணைந்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விமானம், உதிரிபாகங்கள், மராமத்து பணிகள், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு விமானத்திற்கு ரூ.670 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 2022-க்குள் அனைத்து போர் விமானங்களும் இந்தியாவிற்குள் வந்துவிடும்” என்று பதிலளித்தார்.

மேற்சொன்ன கூற்றிலிருந்து தெரியவரும் உண்மைகள்

அரசாங்கம் ஒரு போர் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்லியிருக்கிறது.
ஒரு விமானத்திற்கு ஆகும் செலவு ரூ.670 கோடி என்றும் தெரியவருகிறது.
விமானம் மட்டுமன்றி ஆயுதங்கள், பராமரிப்புச் செலவுகள் உட்பட அனைத்தும் இந்த விலைக்குள் உள்ளடங்கியிருக்கிறது என்றும் தெரியவருகிறது.
16. போர் விமானத்திற்கான விலையைச் சொல்லும் வெளிப்படைத்தன்மை ஏதோ 2016-ம் ஆண்டில் மட்டும் தற்செயலாகச் சொல்லப்பட்டதல்ல. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதியிலும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ரபேல் போர் விமானங்களின் விலைகுறித்து தகவல்கள் தரப்பட்டன.

17. இரகசியம் என்பது போர் விமானத்தின் பாகங்கள், செயல்திறன், வேகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் போன்றவற்றை வெளியிடக்கூடாது என்பதே தவிர விலை குறித்து இரகசியம் காக்கத் தேவையில்லை என்பதே. இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘ரபேல் போர் விமானங்களுக்கான விலையை வெளியிடும் முடிவு முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தினுடையது; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை’ என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

18. இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு இராணுவத் தளவாடங்களின் விலையையும் யார் வேண்டுமானாலும் இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நடைமுறை.

19. ரபேல் போர் விமானங்கள் 36-க்கான விலையை தஸ்ஸால்ட் அண்ட் ரிலையன்ஸ் நிறுவனமும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளன. அதன்படி 36 விமானங்களின் விலை தோராயமாக ரூ.60,000 கோடி என்கிறது அவற்றின் அறிக்கை. அப்படியென்றால் ஒரு விமானத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1660/- கோடியாகும். பழைய ஒப்பந்தத்தில் கணக்கிடப்பட்ட 126 விமானங்களுக்கான விலையிலிருந்து பார்க்கும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நாடாளுமன்றத்தில் 18.11.2016 அன்று தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு விமானத்திற்கு ரூ.1000/- கோடி அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.

20. கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானம், ஆயுதங்கள், பராமரிப்பு என அத்தனை செலவுகளும் உட்பட ரூ.670/- கோடி என்று சொல்லிவிட்டு இப்போதோ கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால்தான் ரூ.1660/- கோடியாக அதிகரித்து விட்டது என்று பசப்புகிறது இந்திய அரசு

21. இந்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதை நிரூபிக்க மேலும் ஒரு உதாரணமாக தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் 19.02.2015 அன்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ‘போர் விமானுங்களுக்கான விலை நிர்ணயம் குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். முதல் ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்பட்டதோ அதுவேதான் இப்போதும் தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.

22. இறுதியாக போபர்ஸ் ஊழல் வழக்கில் என்ன நடைமுறைகளை காங்கிரஸ் கையாண்டதோ அதே நிலையைத்தான் மோடியின் பாஜக அரசும் எடுத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை அநியாயமான முறையில் செலவிட்டு விட்டு, அதற்கான காரணங்கள் கேட்கப்படும்போது பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளியிடவிடாமல் தடுப்பது என்ற போக்கில்தான் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.

மோடியின் ஊழல்
இவ்விவகாரத்தில் ஊழலின் நாயகன் – வெட்டி வாய்ச்சவடால் மோடி கல்லுளிமங்கனாய் மவுனித்திருக்கிறார்
மூன்று கேள்விகள் நம்முன்னே இப்போது எழுகின்றன

எந்த ஒரு வெளிநாட்டுடனும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் வரம்புகளுக்கு உட்படாமல் செயல்படும் அதிகாரம் இருக்கின்றதா?
ஆர்.டி.ஐ மற்றும் சி.ஏ.ஜி போன்ற சட்டங்களுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு அன்னிய நாட்டு ஒப்பந்தமும் போடப்பட முடியுமா?
அப்படியே இது போன்ற ஒப்பந்தங்கள் இரகசியமானது என்றாலும் ஊடகங்களுக்கு இந்த இரகசியத் தகவல்கள் எப்படி கிடைக்கின்றன, அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த இரகசியத் தகவல்கள் கிடைப்பது சாத்தியமா என்ன?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அரசு எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை அநியாய விலையில் வாங்குவதன் மூலம்

தேசப்பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுவிட்டது
அரசின் கருவூலம் அநியாயமாகச் சூறையாடப்பட்டுவிட்டது
அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் அநியாயமாகத் தூக்கியெறியப்பட்டுவிட்டது
விமான மற்றும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் குறைந்தபட்ச அனுபவமே இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் பெருமளவிலான நிதி அதாயம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும். அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேச நலன் மற்றும் தேசப் பாதுகாப்பினை காவு கொடுத்து பலதரப்பினரை வளப்படுத்தும் செயலாகும்.

பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையும், அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலைத் தடுப்பதையும், உறுதி செய்து மேற்பார்வையிடக் கூடிய பிற அமைப்புகளும், ஊடகங்களும் முதலில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தம் எவ்வாறு கீழிறக்கப்பட்டது என்பதையும் அதனிடத்தில் தகுதியற்ற மற்றொரு ஒப்பந்தம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதன் பின்னணியை தோண்டி வெளியிட வேண்டும்.

தமிழாக்கம்: #வரதன்

ஆங்கில அறிக்கையின் இணைப்பு: ‘The Rafale Transaction Is a Case of Criminal Misconduct’

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...