Thursday, April 16, 2015

சராசரி மனிதன்

ஒரு சராசரி மனிதனின் வாழ்வியலை எதார்த்த நடையில் விவரிப்பதென்பது
சாத்தியமாகாது ஏனெனில் விடியலில் தொடங்கி இரவினில் முடியும் அவர்களது
வாழ்க்கை வெறும் இருட்டாகவே வைத்திருக்கிறது இயந்திரங்கள். இயந்திர
வாழ்க்கையில் இவர்களும் ஒன்றித்தான் போகிறார்கள் எங்கே செல்கிறது நம்
கால்களென அவர்களுக்கே தெரியாத அளவுக்கு பாதையினை தீர்மானிக்கும்
முதலாளித்துவத்தில் அவர்களும் ஊறித்தான் போகிறார்கள் . காலை எழுந்தவுடன்
எவ்வளவு பணத்தை சம்பாதிப்பது அதை எப்படி செலவழிப்பது அதற்கான
பணிச்சுமைகளை முதுகில் ஏற்றிக்கொண்டு பொதி சுமக்கும் கழுதைகளைப் போல
அவர்களும் குடும்பச்சுமை,பசி,வற­ுமை,பிள்ளைகளைகளின் எதிர்காலமென
அனைத்தையும் சுமந்து கொண்டே செல்கிறார்கள். இதில் சமூகத்தின் மீதான
பார்வையானது எப்படியும் விரிவடைய வாய்ப்பில்லை என்பதே நிதர்சனமாக
தெரிகிறது. ஒரு சமூகத்தின் சுமையானது விரிவடைந்து பகிர்ந்து செல்வதற்கான
சூழ்நிலையை உறுவாக்க வேண்டுமெனில் சராசரி மனிதனின் பணிச்சுமையை பகிர்ந்து
கொள்வதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். இங்கே நாமனைவரும் சராசரி
மனிதர்களே என்கிற எண்ணச்செயல்பாடு நமக்கு உறுவாகிட வழிவகைச் செய்யப்பட
வேண்டும் . உயர்ந்தவன், தாழ்ந்தவன். ஆதிக்கச்சாதி,அடிமைச்சாதி. ஏழை ,
பணக்காரனென்ற பாகுபாடு நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு
வித்திடுகிறது.
தோழர் சேகுவாராவின் "அநீதிகளைக் கண்டு யார் வெகுண்டெழுகிறார்களோ அவர்களே
என் தோழன்" என்பது வெறும் உணர்ச்சி வயத்தால் எழுந்துவிடவில்லை அல்லது
உண்ர்ச்சியினை தூண்டுவதாகவும் இருந்துவிடவில்லை மாறாக அநீதிகளை
எந்தளவிற்கு தோழர் சே உள்வாங்கிக் கொண்டாரோ அதே அளவிற்கு சராசரி மனிதனின்
பணிச்சுமையில் பங்கெடுத்ததன் காரணமாகவே இப்பொன்மொழி எழுந்திருக்கும்.
அதைப்போலவே தான் சமூகத்தில் தலைசிறந்த முற்போக்குச் சிந்தனையாளர்களின்
கூற்றும் ஒட்டியிருக்கிறது. வெறும் உணர்ச்சிகளை தூண்டுதல் மூலமாக மட்டுமே
புரட்சியானது இவ்வுலகில் சாதித்துவிடவில்லை அதற்கு மாறாக உணர்ச்சியின்
கூடவே சராசரி மனிதனின் வாழ்க்கைச் சுமையினை அவரவர் தங்களின் தோள்மீது
ஏற்றி பயணித்தார்கள் என்பதே வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடமாக அமைகிறது .
ஒரு சராசரி மனிதன் அவனின் அடிப்படை தேவைகளுக்கு உழைத்து உழைத்தை
கடைசியில் தேய்ந்து போகிறான் . முதலாளித்துவ வர்க்கமோ அவ்வுழைப்பினை
சுரண்டிக்கொண்டு உழைப்பினை தந்த சராசரி மனிதனை எட்டி மிதித்துக்கொண்டு
மேலே வருகிறான். இதற்கிடையான சுழலும் வாழ்க்கையில் சராசரி மனிதனின்
சிந்திக்கும் மூளையின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த
அம்முதலாளித்துவத்திற­்கு வெகுசிறப்பாக உதவி புரிகின்றது
மதங்களும்,மதங்களின் பேரால் ஏற்பட்ட மூட பழக்க நம்பிக்கைகளும், இதை
எப்படி சமாளிப்பது என முற்போக்காளர்கள் வெறும் சிந்தனையின்பால் எழும்
உணர்சிகளை கற்பிக்காமல் அவ்வுணர்சிகளின் மூலம் சராசரி மனிதனின் சுமைகளை
நாம் பகிர்ந்து கொண்டால் மட்டுமே புரட்சியானது வெடிக்குமென
கற்பித்தார்கள். ஆனால் ஒட்டுமொத்த நம் சமூகமோ வெறும் உணர்சிகளை மட்டுமே
உள்வாங்கி பணிச்சுமை பகிர்தலை கைவிடுகிறோம் இதனால்தான் ஒரு சமூகத்தில்
எழும் அவல நிலைகளுக்கு திடீரென்ற உணர்ச்சி வேகத்தில் பொங்கியெழுந்து சில
காலம் சென்றவுடன் அதனை மறந்துவிடும் மனோபாவத்தை நாம் கொண்டிருக்கிறோம் .
இந்த சமூகத்தின் மீதான தாக்குதலை எதிர்த்து நின்று வெற்றிபெற
வேண்டுமெனில் சக மனிதனை சமமாக மதித்து அச்சக மனிதனின் பணிச்சுமையில்
சாதிமத வேறுபாடில்லாமல் தாமும் பகிர்ந்து அனுபவத்தல் மூலமாக புதிய
புரட்சிக்கு வித்திட்டு சராசரி மனிதனின் கூடவே நாமும் சக மனிதனாக
இம்மண்ணில் வாழ்ந்து காட்டிடுவோம். நாமனைவரும் தோழர்கள் என்கிற
சமத்துவத்தால் நம்மிடையே எழும் அநீதிக்கெதிரான மறதிச் சிந்தனையினை
களைத்திடுவோம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...