Wednesday, January 13, 2016

மரத்திலோர் தூளி

ஆற்றோர
மரக்கிளையில்
ஆட மறந்து
அழுக்குப் புழுதியால்
அல்லோலப்பட்டு
பிணமாகிப்போன
மரத்து வேருக்கு
மூடும் வெள்ளை
போர்வையானது
என்னை தூக்கிச் சுமந்த
அந்த
வண்ணத் தூளி

பார்த்தவுடனே
மனம் பொங்கி எழ
அழுதுக்கொண்டே
அள்ளி அணைத்திடவே
அருகினில்
செல்கிறேன்

துயரத்திலும்
தூளிக்கு நான்
அடையாளமாய்

அந்நியன் அவனில்லை
ஆளாக்கி பார்த்த
முகம் அது
மறந்தும் போகவில்லை
எப்படி அழைப்பதவனை
என்றே சந்தேகத்துடன்
என் பக்கமே
பார்வை பதிக்கிறது
தூளி

நெருங்க
நெருங்க
தூளியில் வெளிபடுகிறது
தாலாட்டு வாசம்

காற்றோடு தூளியாடும்
அன்னை தாலாட்டில்
தாய்மை வீசும்

என் தாய்
உடுத்திய சேலையது
தந்துவிட்டேன்
மரத்திற்கே
திருப்பியதை

தூளி கட்ட
கிளை ஒதுக்கிய
தங்கத்திற்கு
தருவதற்கென்னிடம்
தூளிச் சேலை
மட்டுமே இருந்தது

ஐயோ!
என்தாய் வந்து
உன் இன்னொரு
தாய் எங்கேயென
கேட்டால்
எப்படிச் சொல்வேன்
இறந்துவிட்டாளென்று

தாங்குவாளா
அவளும் மரத்தோடு தூளி இறந்த
வலியை

அழுது வற்றிய
கண்ணில்
எனக்கு நானே
ஊற்றிக்கொள்கிறேன்
உப்புகள் தேங்கி
நிற்காத வெற்று
தேற்றல்களை

இறுதிச் சடங்கு
செய்யவேண்டும்
என்
மரத் தாய்க்கும்
மரத் தாய்மடி
தூளிக்கும்

எடுத்து வந்து
அடுக்குகிறேன் தகன மேடையில் அதன்
உடற்பாகங்களையே
எரியூட்டுவதற்கு

இப்போது மட்டும்
எனதருகில் கூச்சமின்றி
எப்படி வர முடிகிறது
உங்களால்
எண்ணெய் ஊற்றுவதற்கு
மட்டும்

ஏ!!!
கழுத்தறுத்து
கூறு போட்ட
மனிதனே கொஞ்சம்
செவிகொடுத்து
கேள்
இங்கே நான் மட்டும்
அழவில்லை
மொத்தமாய்
இயற்கையே அழுகிறது

சான்றுக்கு
காட்டுகிறேன் பாருங்கள்
வற்றிய ஆற்றினில்
வெள்ளமென
பெருக்கெடுத்து
ஓடுகிறது பார்!
அழுது
வெளியேற்றப்பட்ட
இயற்கைகளின்
கண்ணீர்த் துளிகள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...