Friday, June 10, 2016

பேசும் இதயம் 7

நாளையும் அதே
மரத்தடியில்
நம் சந்திப்பு
உதிர்ந்த மலர்கள்
மீண்டும்
கிளைக்கு திரும்பலாம்,,,

__________

பசியில்
கிளி
ஜோசியக்காரனின்
ஒரு நெல்லும்
விலை போனது,,,

__________

என்னில்
செங்கதிராய்
பாய்கிறாய்
சுடர்விட்டு
எரிகிறதென்
காதல்
அணைத்து விடாதே!
அவ்வளவு
சீக்கிரத்தில்
என் மரணம் நிகழ்ந்துவிடாது
என்னவளே!

__________

உன்
பார்வையில்தான்
எத்தனை
விளக்கங்கள்,,,
அகராதியை
மூடிவிட்டு
உன் முகத்தையே
பார்க்கிறேன்
அன்பிற்காக
ஏங்கி ஏங்கி,,,

__________

தூவானம்
தொலைவில்
அவள் முகம்
தேடுகிறேன்
என்னை,,,

__________

விழுந்தும்
வலி பொறுத்து
அடுத்த அடி
எடுத்து வைக்கிறாள்
தலையில்
அவ்வப்போது
செங்கல், சிமெண்ட்,
மணல், ஜல்லி,
என மாறி மாறி
அவள் பெயர்
சிற்றாள் ஆகிறது
அக்கணத்தில்,,,

__________

எல்லாம்
விதியென்றார்கள்
வாழத் தெரியாதவர்கள்
அவரவர் தகுதிக்கு
அர்ச்சனை தட்டு
மட்டும் நிரம்பி
வழிகிறது
வேடிக்கை
கடவுளுக்கென்று,,,

__________

மௌனங்களை
காற்றில்
கரைய விடுகிறது
காதல்
அவ்வப்போது
காகிதங்களில்
சொற்தூறல்,,,

__________***__________

2 comments:

  1. கவிதையில் உயிர்ப்பான வரிகள் அருமை நண்பரே

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...