Thursday, June 09, 2016

அற்புத கனவொன்றில்

அற்புத கனவொன்றில்
ஆடித் திரிகின்றேன்
நான் மட்டும்
தனியே

அக்கனாவில்
என்னை
இழுத்துச் செல்லும்
நித்திரைக்கு
பூக்கள் தூவி
தினம் பூஜிக்கும்
வழக்கம் என்னில்
உண்டு

இரவை
வலிய இழுத்து
இமைகளுக்கு
ஓய்வு கொடுத்து
உள்நுழைகிறேன்

அதுவொரு ஏகாந்தவெளி
இடையூறுகள்
ஏதுமின்றி
வானத்துச்சியில்
வா!வா! என
அழைக்கிறாள்
இயற்கையன்னை

சென்றேன்
அங்கே நானும்
அந்த பசுமையின்
வனப்பில்
விளையாடி
மகிழ்கின்றேன்

அந்த நதியின்
முகடுகளில் என்
முகம் பதித்து
முத்தமிடுகின்றேன்

அந்த மலைச்சரிவில்
மரக்கன்றுக்கு
பாலூட்டும்
தாய்மரத்திடம்
நானுமொரு
குழந்தையாய்
பால் குடித்து
பசியாறுகின்றேன்

அனைத்திற்கும் மேலாய்
நிலவுக்கு சோறூட்டி
என்னில் பாதியை
அதனிடத்தில்
கொடுக்கின்றேன்

என் மடியில்
முடித்து வைத்திருந்த
மின்மினிப் பூச்சிகள்
விடுதலை அடைய

என்னையே
சுற்றி சுற்றி
வருகின்றன
நட்சத்திரங்கள்

ஏணிப் படிகளிட்டு
என் தேகமெங்கும்
சுகமாய்
வருடுகின்றன
இலையில் தங்கிய
பனித்துளிகள்

இவைகளனைத்தும்
அந்த அற்புத
கனவொன்றில்
நான் மட்டுமே
தினந்தினம்
அனுபவிப்பவை

ஆகவே விடுக்கிறேன்
வேண்டுகளோ
கட்டளையோ
நீங்களே
நிரப்பிக் கொள்ளுங்கள்

ஆனால்
என் கனாவில்
செயற்கைக்கோளை
மட்டும் அனுப்பி
ஆராயாதீர்கள்

அதன்
விசப்புகையில்
என்
அற்புத கனவோடு
நானும்
இறந்துவிடுவேன்

மரண வலி
தாங்கும் சக்தி
வளிமண்டலம்
கொண்டிருக்கவில்லை
என் அற்புத
கனவும் கூட

என்னை
தூங்க விடுங்கள்
என் கனவை
வாழ விடுங்கள்
என் தனிமையை
திருடாதீர்கள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...