Showing posts with label கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும். Show all posts
Showing posts with label கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும். Show all posts

Tuesday, November 10, 2015

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்








1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின்[1] சிறப்பு முன்னுரை

தற்போதைய இச்சிறு நூல், தொடக்கத்தில் முழுமையான ஒரு பெரிய நூலின் பகுதியாக இடம்பெற்றதாகும். 1875-ஆம் ஆண்டுவாக்கில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் [சம்பளத்துக்குப் பதிலாக, மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் பெற்றுக் கொண்டு] விரிவுரையாளராகப் பணிபுரிந்த டாக்டர் இ.டூரிங், தாம் சோஷலிசத்தைத் தழுவிய செய்தியைத் திடீரெனச் சற்று ஆரவாரத்தோடு அறிவித்தார். ஜெர்மன் மக்களுக்கு ஒரு விரிவான சோஷலிசக் கோட்பாட்டை மட்டுமின்றி, சமுதாயத்தின் மறுசீரமைப்புக்கு ஒரு முழுமையான செயல்முறைத் திட்டத்தையும் முன்வைத்தார். எதிர்பார்த்தவாறே, அவரின் முன்னோடிகளோடு முரண்பட்டார். அனைவரையும்விட மார்க்சின்மீது தம் கடுங்கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்து, மார்க்சுக்குப் பெருமை சேர்த்தார்.

அப்போது ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சியின் இரு பிரிவுகளான எய்ஸெனாஹர்களும் லஸ்ஸாலியர்களும்[2] தமக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதன்மூலம் தம் பலத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, அதைவிட முக்கியமாக அந்தப் பலம் முழுவதையும் தங்களின் பொதுப் பகைவர்க்கு எதிராகப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றனர். [மேலே சொன்ன] டூரிங்கின் பிரவேசம் ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் நிகழ்ந்தது. ஜெர்மனியில் சோஷலிஸ்டுக் கட்சி வெகுவேகமாக ஒரு சக்தியாய்ப் பரிணமித்து வந்தது. ஆனால், புதிதாக வென்றெடுக்கப்பட்ட ஐக்கியத்தை ஆபத்துக்கு உள்ளாக்காமல் பாதுகாப்பது, சோஷலிஸ்டுக் கட்சியை ஒரு சக்தியாக ஆக்குவதற்கான முதலாவது நிபந்தனையாக இருந்தது. டாக்டர் டூரிங் தம்மைச் சுற்றி, வருங்காலத் தனிக்கட்சி ஒன்றின் கருவாக விளங்கக்கூடிய ஓர் உட்குழுவை அமைத்திடப் பகிரங்கமாகவே செயலாற்றினார். இதனால், நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எங்களுக்கு விடுக்கப்பட்ட இந்தச் சவாலை ஏற்றுப் போராட்டக் களம் புகுவது அவசியமாகி விட்டது.

இது மிகவும் கடினமானதாக இல்லாமல் இருக்கலாம். என்றாலும் நீண்ட நெடிய பணி என்பது தெளிவு. ஜெர்மானியர்களாகிய நாங்கள் [எதிலும் எப்போதும் முழுநிறைவுத் தன்மையை விரும்பும்] மிகமிகக் கனத்த முழுநிறைவுவாதிகள் (Grundlichkeit) என்பது அனைவரும் அறிந்ததே. இதை நீங்கள் தீவிரமான ஆழ்ந்த சிந்தனை என்றோ, ஆழமான தீவிர சிந்தனை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். எங்களில் எவரேனும் ஒருவர் புதிய கோட்பாடு எனத் தாம் கருதும் ஒன்றை எடுத்துரைக்க விரும்பினால், அவர் முதலில் அதை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தத்துவ அமைப்பாக விரித்துரைக்க வேண்டும். தர்க்கவியலின் மூலமுதல் கோட்பாடுகளும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகளும் ஊழிக்காலந்தொட்டு நிலவி வந்ததெல்லாம், இறுதியில், மணிமுடியாகத் திகழும், புதிதாய்க் கண்டறியப்பட்ட இந்தக் கொள்கையை நோக்கி இட்டுச் செல்வதற்கே அன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் இல்லை என்பதை அவர் நிரூபித்தாக வேண்டும். இந்த வகையில் டாக்டர் டூரிங் தேசியத் தரத்துக்குக் குறைந்தவரில்லை. சிந்தனை, அறநெறி, இயற்கை, வரலாறு இவற்றின் வழிப்பட்ட சற்றும் குறைவில்லாத ஒரு முழுநிறைவான ”தத்துவக் கருத்தமைப்பு”, ஒரு முழுநிறைவான ”அரசியல் பொருளாதார, சோஷலிசக் கருத்தமைப்பு”, முடிவாக, ”அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சன ரீதியான ஒரு வரலாறு”; எட்டாக மடிக்கப்பட்ட தாள் அளவில், உருவிலும் உள்ளடக்கத்திலும் கனமான மூன்று பெரிய தொகுதிகள்; பொதுவாகத் தமக்கு முற்பட்ட அனைத்துத் தத்துவ ஞானிகளுக்கும், பொருளாதார அறிஞர்களுக்கும், குறிப்பாக மார்க்சுக்கும் எதிராக முப்பெரும் படையணிகளாய்த் திரட்டப்பட்ட வாதங்கள்; உண்மையில், ”விஞ்ஞானத்தில் ஒரு முழுமையான புரட்சியை” உண்டாக்கும் ஒரு முயற்சி. இவற்றையெல்லாம் நான் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருந்தது. காலம், விண்வெளிபற்றிய கருத்துருக்கள் தொடங்கி, இரட்டை உலோக நாணயமுறை[3] வரையில், பருப்பொருள், இயக்கம் ஆகியவற்றின் அழியாத் தன்மை தொடங்கி, அறநெறிக் கருத்துகளின் அழியும் தன்மை வரையில், டார்வினுடைய இயற்கைத் தேர்வுமுறை தொடங்கி, வருங்காலச் சமுதாயத்தில் இளைஞர்களின் கல்வி வரையில், ஒன்று விடாமல் சாத்தியமான அனைத்து விவாதப் பொருள்கள் குறித்தும் நான் விளக்கியுரைக்க வேண்டியிருந்தது. என்றாலும், என்னுடைய எதிராளியின் முறைப்படுத்தப்பட்ட முழுதளாவிய அணுகுமுறை, மிகப் பல்வகைப்பட்ட இந்த விவாதப் பொருள்கள் குறித்து மார்க்சும் நானும் கொண்டிருந்த கருத்தோட்டங்களை, இதற்குமுன் செய்யப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிக ஒருங்கிணைந்த வடிவில், அவருக்கு எதிராக முன்வைக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தது. அதுவே இப்பணியை நான் மேற்கொள்வதற்கு முதன்மையான காரணம். மற்றபடி இது பலனேதும் இல்லாத பணியே ஆகும்.

என்னுடைய பதில் முதலில் சோஷலிஸ்டுக் கட்சியின் தலைமை ஏடான லைப்சிக் வோர்வார்ட்ஸ் (Leipzig Vorwarts) இதழில் தொடர் கட்டுரைகளாகவும், பிறகு திரு. ஒய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி (Herr Eugen Duhrings Umwalzung der Wissenchaft) என்னும் நூலாகவும் வெளிவந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1886-இல் ஜூரிச்சில் வெளிவந்தது.

தற்போது ஃபிரெஞ்சுப் பிரதிநிதிகள் சபையில் லீல் (Lille) நகரின் பிரதிநிதியாக இருக்கும் என் நண்பர் பால் லஃபார்க்கின் (Paul Lafargue) வேண்டுகோளுக்கு இணங்க இந்நூலின் மூன்று அத்தியாயங்களை ஒரு [தனிப்] பிரசுரமாக நான் ஒழுங்கமைத்தேன். அதனை அவர் கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (Socialisme utopique et Socialisme scientifique) என்ற பெயரில் 1880-இல் [ஃபிரெஞ்சு மொழியில்] மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த ஃபிரெஞ்சுப் பதிப்பிலிருந்து ஒரு போலிஷ் பதிப்பும், ஒரு ஸ்பானியப் பதிப்பும் தயாரிக்கப்பட்டன. 1883-இல் நம்முடைய ஜெர்மன் நண்பர்கள் இந்தப் பிரசுரத்தை அதன் மூல மொழியில் [ஜெர்மனியில்] வெளிக்கொணர்ந்தனர். அதன்பிறகு ஜெர்மன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய, ருஷ்ய, டேனிஷ், டச்சு, ருமேனிய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு, இச்சிறு நூல் தற்போதைய இந்த ஆங்கிலப் பதிப்பையும் சேர்த்து 10 மொழிகளில் வினியோகமாகி வருகிறது. வேறு எந்த சோஷலிச நூலும், 1848-ஆம் ஆண்டின் எங்களுடைய கம்யூனிஸ்டு அறிக்கை அல்லது மார்க்சின் மூலதனம் நூலேகூட இவ்வளவு அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்நூல் ஜெர்மனியில் ஏறத்தாழ மொத்தம் 20,000 பிரதிகள் கொண்ட நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது.

பின்னிணைப்பான மார்க்[4] (The Mark) என்பது ஜெர்மனியில் நிலவுடைமையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய சிறிதளவு அடிப்படை அறிவை ஜெர்மன் சோஷலிஸ்டுக் கட்சியினரிடையே பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும். நகரங்களின் உழைக்கும் மக்களை இக்கட்சி தனக்குள் ஈர்த்துக் கொள்வது ஏறத்தாழ முழுமைபெற்ற நிலையிலும், விவசாயத் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டும் பணி உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் இருந்த ஒரு காலகட்டத்தில் இது அனைத்தையும்விட அவசியமானதாகத் தோன்றியது. இந்தப் பின்னிணைப்பும் இம்மொழிபெயர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம், டியூட்டானிக் இனக்குழுக்கள் (Teutonic tribes) அனைத்துக்கும் பொதுவான நிலவுரிமையின் மூல வடிவங்கள் பற்றியும் அவை சிதைந்துபோன வரலாறு பற்றியும் ஜெர்மனியைவிட இங்கிலாந்தில் இன்னுங்கூட குறைவாகவே தெரிந்திருக்கிறது. மாக்சிம் கோவலேவ்ஸ்கி (Maxim Kovalevsky) அண்மையில் தொடங்கி வைத்திருக்கும் கருதுகோளைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டாமலே, மூலத்தில் உள்ளவாறு அப்படியே விட்டுவிட்டேன். கோவலேவ்ஸ்கியின் கருத்துப்படி, சாகுபடி நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் மார்க்கின் உறுப்பினர்களிடையே பிரிவினை செய்யப்படுவதற்கு முன்பாகப் பல தலைமுறைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தந்தைவழிக் குடும்பச் சமூகம் கூட்டுக் கணக்கில் அவற்றைச் சாகுபடி செய்துவந்தது. (இப்போதும் எடுத்துக்காட்டாக நிலவிவரும் தெற்கு ஸ்லாவிய ஸாட்ருகா இனத்தைப்போல). காலப்போக்கில் கூட்டுக் கணக்கு மூலம் நிர்வகிக்க முடியாத அளவுக்கு இச்சமூகம் வளர்ந்து பெருகியபோதுதான் மேற்சொன்ன பிரிவினை நடைபெற்றது. கோவலேவ்ஸ்கியின் கருதுகோள் முற்றிலும் சரியானதாகவே இருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் இருந்து வரும் வழக்காகும். [எனவே அதுபற்றிக் கருத்துக் கூறலாகாது].

இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரவியல் கலைச்சொற்கள், அவற்றுள் புதியனவற்றைப் பொறுத்தவரை, மார்க்சின் மூலதனம் நூலின் ஆங்கிலப் பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களோடு ஒத்துப் போகின்றன. பொருள்கள் அவற்றின் உற்பத்தியாளர்களுடைய பயன்பாட்டுக்கு மட்டுமின்றி பரிவர்த்தனை நோக்கத்துக்காகவும், அதாவது பயன்மதிப்புகளாக (use-values) இல்லாமல் [பரிவர்த்தனைப்] பண்டங்களாக (commodities) உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளாதாரக் கட்டத்தை நாங்கள் ”பண்டங்களின் உற்பத்தி” என அழைக்கிறோம். இந்தக் கட்டம் பரிவர்த்தனைக்கான உற்பத்தியின் ஆதித் தொடக்கம்தொட்டு நம்முடைய இன்றைய காலம்வரையில் தொடர்ந்து வருகின்றது. [எனினும்] முதலாளித்துவ உற்பத்தியின் கீழ்தான், அதாவது, உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரான முதலாளி, தம் சொந்த உழைப்புச் சக்தியைத் தவிர பிற உற்பத்திச் சாதனங்கள் எதுவும் சொந்தமில்லாத தொழிலாளர்களைக் கூலிக்காக வேலைக்கு அமர்த்தி, [உற்பத்தி செய்த] பொருள்களின் விற்பனை விலையில் தன் செலவுகள் போக எஞ்சும் தொகையைத் தனதாக்கிக் கொள்ளும் நிலைமைகளில்தான் இக்கட்டம் தன் முழு வளர்ச்சியை எட்டுகிறது. மத்திய காலத்துக்குப் பிந்தைய தொழில்துறை உற்பத்தியின் வரலாற்றை நாங்கள் மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கின்றோம்:

(1) கைவினைத் தொழில்: சிறு தலைமைக் கைவினைஞருடன் சில உதவியாளர்களையும் (journeymen) பயிற்சியாளர்களையும் (apprenticeses) கொண்டது. [இங்கே] ஒவ்வொரு தொழிலாளரும் முழுமையான ஒரு பண்டத்தை உற்பத்தி செய்கிறார்.

(2) பட்டறைத் தொழில்: அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் குழுவாகச் சேர்ந்து, உழைப்புப் பிரிவினைக் கோட்பாட்டு அடிப்படையில், ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளியும் பணியின் ஒருபகுதியை மட்டுமே செய்கிறார். அடுத்தடுத்து அனைவருடைய கைகளுக்கும் சென்ற பிறகுதான் அப்பண்டம் முழுமை பெறுகின்றது.

(3) நவீனத் தொழில்துறை: விசையாற்றலால் இயக்கப்படும் எந்திர சாதனங்கள் மூலம் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிலாளரின் வேலை என்பது எந்திரங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிடுதல், சரிசெய்தல் என்கிற வரம்புக்குள் அடங்கிவிடுகிறது.

இந்நூலின் உள்ளடக்கம் இங்கிலாந்து மக்களின் கணிசமான பகுதியினருடைய ஆட்சேபத்தை எதிர்கொள்ளும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆனால் [ஐரோப்பியக்] கண்டத்தவரான நாங்கள் இங்கிலாந்துக் ”கௌரவத்தின்” தப்பெண்ணங்களைச் சற்றே கவனத்தில் கொண்டிருந்தாலும், இப்போது இருப்பதைக் காட்டிலும் நாங்கள் இன்னும் மோசமான நிலையைத்தான் அடைந்திருப்போம். இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism) என நாங்கள் கூறுவதை நிலைநாட்டுகிறது. பொருள்முதல்வாதம் என்னும் சொல் இங்கிலாந்து வாசகர்களில் மிகப் பெரும்பான்மையோரின் செவிகளில் நாராசமாய் ஒலிக்கும். இவர்களுக்கு அறியொணாவாதம்[5] (Agnosticism) வேண்டுமானால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம், ஆனால் பொருள்முதல்வாதம் முற்றிலும் ஏற்புடையதன்று.

இருந்தபோதிலும், இங்கிலாந்துதான் 17-வது நூற்றாண்டு முதற்கொண்டே நவீன பொருள்முதல்வாதம் அனைத்தின் மூலத் தாயகமாகும்.

”பொருள்முதல்வாதம் என்பது இங்கிலாந்து வயிற்றில் பிறந்த பிள்ளையாகும். இங்கிலாந்தின் மதச் சித்தாந்தி டன்ஸ் ஸ்காட்டஸ் (Duns Scotus) ஏற்கெனவே ’பருப்பொருளால் சிந்தனை செய்ய முடியாதா, என்ன?’ என்று வினவினார்.

”இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் பொருட்டு அவர் கடவுளின் சர்வ வல்லமையில் புகலிடம் தேடிக் கொண்டார் – அதாவது, அவர் இறையியல், பொருள்முதல்வாதத்தைப் போதிக்கும்படி செய்தார். தவிரவும் அவர் ஒரு பெயர்ப்போலிமைவாதி[6]. பொருள்முதல்வாதத்தின் தொடக்க வடிவமான பெயர்ப்போலிமைவாதம் பெருமளவு ஆங்கில மதச் சித்தாந்திகளிடையே காணப்படுகிறது.

”பேக்கன்தான் (Francis Bacon) ஆங்கிலப் பொருள்முதல்வாதத்தின் உண்மையான முன்னோடி ஆவார். அவருக்கு இயற்கைத் தத்துவம் மட்டுமே மெய்யான தத்துவம் ஆகும். அவருக்குப் புலன்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்பியல்தான் இயற்கைத் தத்துவத்தின் அதிமுதன்மையான பகுதியாகும். அனக்சாகோரசையும் (Anaxagoras) அவருடைய ஹோமியோமெரியாக்களையும்[7] (homoiomeriae), டெமாக்கிரீடசையும் (Democritus) அவருடைய அணுக்களையும் பேக்கன் அடிக்கடி தன்னுடைய ஆதராமாகக் குறிப்பிடுகிறார். பேக்கன் கருத்துப்படி, புலன்கள் பிழைபடாதவை, அனைத்து அறிவுக்கும் மூலமாக விளங்குபவை. விஞ்ஞானம் அனைத்தும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. புலன்கள் அளிக்கும் விவரங்களைப் பகுத்தறிவு முறையிலான ஆய்வுக்கு உட்படுத்துவதில்தான் விஞ்ஞானம் அடங்கியுள்ளது. தொகுத்தாய்வு, பகுத்தாய்வு, ஒப்பீடு, கூர்ந்த கவனிப்பு, பரிசோதனை ஆகியவைதாம் இந்தப் பகுத்தறிவு முறையின் பிரதான வடிவங்கள் ஆகும். பருப்பொருளின் உள்ளார்ந்த பண்புகளுள் இயக்கம்தான் முதலாவதும் முதன்மையானதும் ஆகும். இந்த இயக்கம் எந்திரவியல், கணிதவியல் இயக்க வடிவத்தில் மட்டுமன்றி, பிரதானமாகப் பருப்பொருளின் உந்துசக்தி, உயிர்நாடியான ஆன்மா, இழுவிசை அல்லது ஜேக்கப் போமேயின் (Jakob Bohme) சொற்களில் கூறுவதெனில் ‘வதை’[8] ('qual') வடிவிலும் அப்பண்பினைக் காணலாம்.

”பொருள்முதல்வாதமானது, அதன் முதலாவது படைப்பாளியான பேக்கனின் கருத்துகளில், பன்முக வளர்ச்சிக்கான வித்துகளை இப்போதும் தனக்குள்ளே நிரப்பி வைத்துள்ளது. ஒருபுறம், பருப்பொருளானது ஓர் உணர்வுபூர்வமான கவித்துவ வசீகரத்தால் சூழப்பெற்று, வெற்றி கொள்ளும் புன்னகையால் மனிதனை முழுமையாக ஆட்கொண்டு கவர்ந்திழுப்பதாகத் தோன்றுகிறது. மறுபுறம், இரத்தினச் சுருக்கமாக வகுக்கப்பட்டுள்ள இந்தப் போதனையில் இறையியலிருந்து தருவிக்கப்பட்ட ஒவ்வாத கூறுகள் அரும்பிக் கிடக்கின்றன.

”அதன் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியில் பொருள்முதல்வாதம் ஒருபக்கச் சார்புடையதாக ஆனது. பேக்கனியப் பொருள்முதல்வாதத்தை முறைப்படுத்திய மனிதர் ஹாப்ஸ் (Hobbes) ஆவார் . புலன்களை அடிப்படையாகக் கொண்ட அறிவு அதன் கவித்துவ மலர்ச்சியை இழந்து, கணிதவியலாளரின் கருத்தியல் அனுபவமாக மாறுகிறது. வடிவ கணிதம் விஞ்ஞானங்களின் அரசியாகப் பிரகடனம் செய்யப்படுகிறது. பொருள்முதல்வாதம் மனிதகுல விரோதப் பாதையிலே பயணிக்கிறது. பொருள்முதல்வாதம் அதன் எதிராளியான மனிதகுல–விரோத, சதையில்லா ஆன்மீகவாதத்தை வெற்றி கொள்ள, அதுவும் ஆன்மீகவாதத்தின் கோட்டையிலேயே அதை வெற்றி கொள்ள, தன் உடலைத் தானே தண்டித்துக் கொண்டு, துறவியாக மாற வேண்டியதாகிறது. இவ்வாறாக, புலனுணர்வு சார்ந்த கருத்துருவாக இருந்த பொருள்முதல்வாதம் அறிவாற்றல் சார்ந்த கருத்துருவாக மாற்றம் காண்கிறது. ஆனால் அதிலும் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அறிவாற்றலின் தன்மையாகிய முழு அளவிலான ஒத்திசைவினை வளர்த்தெடுக்கிறது.

”பேக்கனின் வழிவந்தவராக நின்று ஹாப்ஸ் இவ்வாறு வாதாடுகிறார்: மனித அறிவு அனைத்தும் புலன்களால் தருவிக்கப்படுகிறது எனில், பிறகு நமது கருத்துருக்களும் கருத்துகளும் (concepts and ideas), அவற்றின் புலனுணர்வு வடிவங்கள் நீங்கப் பெற்ற, எதார்த்த உலகின் பொய்த் தோற்றங்களே அன்றி வேறல்ல. தத்துவத்தால் இந்தப் பொய்த் தோற்றங்களுக்குப் பெயர்கள் சூட்ட மட்டுமே முடியும். [வேறு ஒன்றும் செய்ய முடியாது]. ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட பொய்த் தோற்றங்களுக்குச் சூட்டலாம். பெயர்களுக்குங்கூட பெயர்கள் இருக்கலாம். ஒருபுறம் அனைத்துக் கருத்துகளும் புலனுணர்வின் உலகிலிருந்து பிறப்பவை என்று கூறிக்கொண்டு. மறுபுறம் ஒரு சொல் சொல்லைவிடக் கூடுதலானது என்றும், நம் புலன்கள் நமக்குத் தெரியப்படுத்துகின்ற, ஒன்றாகவும் தனித்தனியாகவும் நிலவும் உயிர்ஜீவிகளையன்றி, தனிப்பட்ட தன்மை கொண்டிராத, பொதுத் தன்மை கொண்ட உயிர்ஜீவிகளும் இருக்கின்றன என்றும் கூறுவோம் எனில் அது ஒரு முரண்பாட்டையே குறிக்கும். உருவமில்லா உருவம் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு உருவமில்லாப் பொருள் என்பதும் அபத்தமானதே. உருவம், இருத்தல், பொருள் இவையனைத்தும் ஒரே எதார்த்தத்தைச் சுட்டும் வெவ்வேறு சொற்களே அன்றி வேறல்ல. சிந்திக்கும் பருப்பொருளிலிருந்து சிந்தனையைத் தனியே பிரிக்க முடியாது. இந்தப் பருப்பொருள்தான் உலகில் நடைபெற்றுவரும் அனைத்து மாற்றங்களுக்கும் அடிநிலைக் கூறு. வரம்பிலி (infinite) என்னும் சொல், நம் மனம் [கணிதத்தில்] முடிவின்றித் தொடர்ந்து கூட்டிச் செல்லும் திறன்கொண்டது என்பதைக் குறிக்க வேண்டும். இல்லையேல் அச்சொல் பொருளற்றது ஆகும். பருப்பொருளான தன்மை கொண்டவற்றை மட்டுமே நம்மால் கண்டுணர முடிவதால், கடவுள் இருக்கிறாரா என்பதுபற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது. நான் இருக்கிறேன் என்பது மட்டுமே நிச்சயம். மனித உணர்ச்சி ஒவ்வொன்றும் ஓர் எந்திரவியல் இயக்கம் ஆகும். அது தொடக்கமும் முடிவும் கொண்டது. உந்துசக்திக்கான புறப்பொருள்களை நாம் நல்லவை என்கிறோம். இயற்கையைப் போன்று மனிதனும் அதே விதிகளுக்குத்தான் உட்பட்டுள்ளான். ஆற்றலும் சுதந்திரமும் வேறுபாடில்லாத ஒத்த கூறுகளே.

”பேக்கனின் கோட்பாடுகளை ஹாப்ஸ் முறைப்படுத்தினார். என்றாலும், அனைத்து மனித அறிவுக்கும் புலனுணர்வின் உலகே மூலம் என்கிற பேக்கனின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு ஹாப்ஸ் நிரூபணம் அளிக்கவில்லை. லோக் (Loke) என்பார் தாம் எழுதிய மனிதப் புரிதல் பற்றிய கட்டுரை (Essay on the Human Understanding) என்ற நூலில் இந்த நிரூபணத்தை அளித்தார்.

”பேக்கனியப் பொருள்முதல்வாதத்தின் ஆத்திகத் தப்பெண்ணங்களை ஹாப்ஸ் தகர்த்தெறிந்தார். அதுபோல, காலின்ஸ் (Collins), டாட்வெல் (Dodwell), கோவார்டு (Coward), ஹார்ட்லி (Hartley), பிரிஸ்ட்லி (Priestley) ஆகியோர் லோக் முன்வைத்த புலனுணர்வுவாதத்தின் விளிம்பில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் கடைசி இறையியல் தடைவரம்புகளைத் தகர்த்தெறிந்தனர். எப்படியும் நடைமுறைப் பொருள்முதல்வாதிகளுக்கு, [இயற்கைமத] இறையுண்மைக் கோட்பாடு[9] மதத்திலிருந்து விடுபட ஓர் எளிய வழிமுறை ஆகும்.”

(கார்ல் மார்க்ஸ், “புனிதக் குடும்பம்”, பக்கம் 201-204)

இங்கிலாந்தில் நவீனப் பொருள்முதல்வாதத்தின் தோற்றம்பற்றி கார்ல் மார்க்ஸ் மேற்கண்டவாறு எழுதினார். ஆங்கிலேயர்கள், அவர்தம் முன்னோர்களுக்குக் கார்ல் மார்க்ஸ் வழங்கிய பாராட்டுரைகளை இப்போதெல்லாம் அப்படியொன்றும் விரும்பவில்லை எனில், அது பரிதாபத்துக்கு உரியதே. ஆனாலும் பேக்கன், ஹாப்ஸ், லோக் ஆகியோரே உயர்சிறப்புக்குரிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுக்கு முன்னோடிகள் என்பது சற்றும் மறுக்க முடியாத உண்மையாகும். தரையிலும் கடலிலும் நடைபெற்ற அனைத்துப் போர்களிலும் ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் ஃபிரெஞ்சுக்காரர்களை வெற்றிகொண்ட போதிலும், ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுதான், 18-ஆம் நூற்றாண்டை ஒப்புயர்வற்ற ஃபிரெஞ்சு நூற்றாண்டாக ஆக்கியது. அதுவும் அந்நூற்றாண்டின் மணிமகுடமாகத் திகழும் ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பே அவ்வாறு செய்தது. இந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ள இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் வாழும் வெளியாட்களான நாம் இன்னும்கூட முயன்று வருகிறோம்.

இதை மறுப்பதற்கு இயலாது. இந்த [19-ஆம்] நூற்றாண்டின் நடுப்பகுதிவாக்கில், இங்கிலாந்தில் வசிப்பிடம் அமைத்துக் கொண்ட ஒவ்வொரு பண்பட்ட வெளிநாட்டவரையும் துணுக்குறச் செய்தது எதுவெனில், அன்றைய நிலையில், ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்ததே ஆகும். அக்காலத்தில் நாங்கள் அனைவருமே பொருள்முதல்வாதிகளாக இருந்தோம். அல்லது குறைந்தது மத நம்பிக்கைகளுக்கு ஆட்படாத முன்னேறிய சிந்தனையாளராக இருந்தோம். இங்கிலாந்திலுள்ள படித்த மக்களில் அனேகமாக அனைவருமே அனைத்து வகைப்பட்ட சாத்தியமில்லா அதிசயங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். பக்லாண்டு (Buckland), மான்டெல் (Mantell) போன்ற புவியியல் அறிஞர்களுங்கூட, விவிலிய நூலில் காணப்படும் கட்டுக்கதைகளுக்கு அளவுக்கு அதிகமாக முரண்பட்டுவிடாமல் இருக்கும்பொருட்டு தங்களின் விஞ்ஞான உண்மைகளைத் திரித்துக் கூற வேண்டியிருந்தது. இவையெல்லாம் எங்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாதனவாகத் தோன்றின. மத விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தம் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தத் துணிந்த மக்களைக் காண வேண்டுமெனில், படிப்பறிவில்லாத மக்களிடையே, ”பாமரர் கூட்டம்” என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே, குறிப்பாக ஓவனிய சோஷலிஸ்டுகளிடையே செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் அதன்பிறகு இங்கிலாந்து “நாகரிகம்” அடைந்திருக்கிறது. 1851-ஆம் ஆண்டுக் கண்காட்சி [1851 மே முதல் அக்டோபர் வரை இலண்டனில் நடைபெற்ற உலக தொழில், வணிகத் துறை கண்காட்சி] , தனித்து ஒதுங்கி நின்ற ஆங்கிலக் குறுகிய மனப்பான்மைக்குச் சாவுமணி அடித்தது. உணவுமுறையிலும், நடையுடை பாவனைகளிலும், கருத்துகளிலும், இங்கிலாந்து படிப்படியாகச் சர்வதேச மயமானது. [ஐரோப்பியக்] கண்டத்தின் பழக்க வழக்கங்கள் இங்கே எந்த அளவுக்குப் பரவியுள்ளனவோ அந்த அளவுக்குச் சில ஆங்கில நடையுடை பாவனைகளும், மரபுகளும் [ஐரோப்பியக்] கண்டத்தில் பரவியிருந்தால் நன்றாயிருக்குமே என்று இப்போதெல்லாம் நான் ஆசைப்படுவதுண்டு. என்றபோதிலும், சாலடு எண்ணெய் (salad-oil) இங்கு அறிமுகம் ஆகி (1851-க்கு முன்பு இது பிரபுக் குலத்தோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது), [அதன் பயன்பாடு] பரவியதைத் தொடர்ந்து, கூடவே மத விவகாரங்களில் [ஐரோப்பியக்] கண்டத்தவருக்கு உரித்தான ஐயுறவுவாதமும் (scepticism) தவிர்க்க முடியாதபடி பரவியது. தற்போது எந்த அளவுக்கு வந்துள்ளது என்றால், கண்ணியவான் மனப்பாங்கைப் பொறுத்தவரை, அறியொணாவாதம் (agnosticism) இங்கிலாந்து திருச்சபையைப்போல (Church of England) அந்த அளவுக்குச் ”சமூக அளவில் ஏற்புடையதாக” இன்னமும் கருதப்படவில்லை. என்றாலும், இப்போதும் கவுரவத்தில் பாப்டிசத்துக்கு (Baptism) ஏறத்தாழ நிகரானதாகவும், நிச்சயமாக இரட்சண்ய சேனைக்கு[10] (Salvation Army) மேம்பட்டதாகவும் கருதப்படுகிறது. மதத்தின் மீதான அவநம்பிக்கை இவ்வாறு வளர்ந்து வருவது கண்டு பலரும் உண்மையிலேயே மனம்வருந்தி இந்தப் போக்கினைக் கண்டிக்கின்றனர். ஆனால் இவர்கள், இந்தப் ”புதுப்பாணி எண்ணப் போக்குகள்”, வெளிநாட்டுச் சரக்குகள் அல்ல, “ஜெர்மனித் தயாரிப்புகளும்” அல்ல. அன்றாடப் பயன்பாட்டில் இருந்துவரும் எத்தனையோ பிற பண்டங்களைப் போல அவை ஐயத்துக்கு இடமின்றிப் பண்டைய ஆங்கில (Old English) மூலம் கொண்டவை; அவற்றின் இங்கிலாந்து மூலவர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று அவர்களின் சந்ததியர் செல்லத் துணிவதைக் காட்டிலும் இன்னும் நெடுஞ்தொலைவு சென்றனர் என்கிற உண்மைகளை அறிந்து கொள்வார்கள் எனில், அது மேற்கூறிய நிலைமைகளில் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்குமென நான் நம்புகிறேன்.

அறியொணாவாதம் என்பது, பொருள்பொதிந்த லங்காஷயர் (Lancashire) வழக்கில் சொல்வதெனில், உண்மையிலேயே ”இலைமறை காயான” பொருள்முதல்வாதமே அன்றி வேறென்ன? இயற்கை பற்றிய அறியொணாவாதியின் கருத்தோட்டம் முழுக்கவும் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டதாகவே உள்ளது. இயற்கை உலகம் ஒட்டுமொத்தமும் [அகநிலை] விதிகளால் ஆளப்படுகிறது. வெளியிலிருந்து வரும் செயலின் தலையீட்டுக்குச் சிறிதும் இடமில்லை. ஆனால் அறியொணாவாதியோ இதோடு நில்லாமல், நமக்குத் தெரிந்த இப்பிரபஞ்சத்துக்கு அப்பால் கடவுள் ஒருவர் இருக்கிறார் என உறுதிப்படுத்தவோ, இல்லை என நிரூபிக்கவோ நம்மிடம் வழிமுறை ஏதுமில்லை எனச் சேர்த்துக் கொள்கிறார். இப்படிப்பட்ட ஒரு கருத்து, முன்பு மாபெரும் வானியல் வல்லுநர் லாப்லாஸ் (Laplace) அவர்களிடம், அவர் எழுதிய வான்மண்டல எந்திரவியல் பற்றிய ஆய்வறிக்கை (Treatise on Celestial Mechanics) என்னும் நூலில், உலகைப் படைத்தவரைக் குறிப்பிடக்கூட இல்லையே, ஏன் என நெப்போலியன் எழுப்பிய கேள்விக்கு, “இப்படியொரு கருதுகோள் எனக்குத் தேவைப்படவில்லை” என்று லாப்லாஸ் பெருமிதத்தோடு பதிலளித்தாரே, அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில், பிரபஞ்சம் பற்றிய நம்முடைய பரிணாம வளர்ச்சிக் கருத்தோட்டத்தில் பிரபஞ்சத்தைப் படைத்தவருக்கோ, ஆள்பவர்க்கோ அறவே இடமில்லை. இப்போது நிலவிவரும் மொத்த உலகிலிருந்து விலகி ஒதுங்கியிருக்கும் கடவுள் பற்றிப் பேசுவது ஒரு முரண்பாட்டையே குறிக்கிறது. இது, மத நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை வலியச் சென்று அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தோன்றுகிறது.

மேலும், நம் அறியொணாவாதி நம்முடைய அறிவு அனைத்தும் நம் புலன்கள் நமக்குத் தெரிவிக்கும் தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால், நம் புலன்கள் அவற்றின் மூலம் நாம் கண்டுணரும் புறப்பொருள்கள் (Objects) பற்றிய சரியான உருவகங்களைத் தருகின்றன என்று நாம் தெரிந்து கொள்வது எப்படி என்கிற கேள்வியையும் சேர்த்துக் கொள்கிறார். மேலும் அவர் நமக்குத் தெரிவிக்க முற்படுவது என்னவெனில், புறப்பொருள்களைப் பற்றி அல்லது அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம், அப்பொருள்கள் பற்றி உறுதியாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாத அவர், அப்பொருள்கள் அவருடைய புலன்களில் ஏற்படுத்திய எண்ணப் பதிவுகளையே பேசுகிறார். இந்த முறையிலான தர்க்க நியாயத்தை வெறும் வாக்குவாதத்தால் மட்டும் வீழ்த்துவது ஐயமின்றிக் கடினம் என்றே தோன்றுகிறது. ஆனால் வாக்குவாதத்துக்கு முன்னதாகச் செயல் இருந்தது. Im Anfang war die That [”ஆதியில் இருந்தது செயல்” - கதேயின் ஃபாஸ்ட் (Goethe's Faust) நாடகத்திலிருந்து]. மனிதக் கூர்மதி, சிக்கலைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் முன்பாகவே, மனிதச் செயல் அதற்குத் தீர்வு கண்டுவிட்டது. உணவைப் பற்றிய நிரூபணம் அதை உண்பதில் இருக்கிறது. புறப்பொருள்களில் நாம் கண்டுணரும் தன்மைகளுக்கு ஏற்ப அவற்றை நாம் நம் சொந்தப் பயன்பாட்டில் கையாளும் தருணம் முதற்கொண்டே, நம்முடைய புலனுணர்வு சரிதானா இல்லையா என்பதை ஐயந்திரிபற்ற சோதனைக்கு உட்படுத்துகிறோம். இந்தப் புலனுணர்வுகள் தவறாக இருந்திருக்கும் எனில், அப்பொருளை எதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றிய நம் மதிப்பீடும் தவறாகவே இருந்தாக வேண்டும். எனவே, நம் முயற்சி தோல்வியுறவே செய்யும். நம் நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாம் வெற்றி பெறுவோம் எனில், அதாவது, அப்பொருளைப் பற்றிய நம் கருத்தோடு அப்பொருள் ஒத்துப் போகிறது, மேலும் எந்த நோக்கத்துக்காக அப்பொருளைப் பயன்படுத்த எண்ணினோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பது நமக்குத் தெரிய வருமாயின், அதுவே அப்பொருளைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியுமான நம் புலனுணர்வு எந்த அளவுக்கு நமக்குப் புறத்தே நிலவும் எதார்த்தத்துடன் ஒத்துப் போகின்றன என்பதற்கு முடிவான நிரூபணம் ஆகும். மேலும், நாம் ஒரு தோல்வியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போதெல்லாம் நம்மைத் தோல்வியுறச் செய்த காரணத்தை அறிந்து கொள்ளப் பொதுவாக அதிக காலம் ஆவதில்லை. நாம் எந்தப் புலனுணர்வை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டோமோ, அது முழுமையற்றதாகவும் மேலோட்டமானதாகவும் இருந்தது என்றோ, தேவையற்ற முறையில் பிற புலனுணர்வுகளின் விளைவுகளுடன் இணைத்துப் புரிந்து கொள்ளப்பட்டது என்றோ தெரிந்து கொள்கிறோம். இதனைப் பிழையான தர்க்க நியாயம் என்கிறோம். நம் புலன்களை முறையாகப் பயிற்றுவிக்கவும், முறையாக உணரப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்பட்ட புலனுணர்வுகளால் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் நம் செயல்பாட்டினை வைத்துக் கொள்ளவும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்வரை, நம் புலன்களால் உணரப்பட்ட பொருள்களின் புறநிலை இயல்புடன் நம் புலனுணர்வுகள் ஒத்துப் போதலை, நம் செயல்பாட்டின் விளைவு நிரூபிப்பதை நாம் நிச்சயம் காண்போம். விஞ்ஞான ரீதியில் நெறிப்படுத்தப்பட்ட நம் புலனுணர்வுகள் அவைதம் இயல்பான தன்மையாலேயே புற உலகு குறித்து எதார்த்தத்துக்குப் புறம்பான கருத்துகளை நம் மனதில் தோற்றுவிக்கின்றன, அல்லது, புற உலகுக்கும் அதைப் பற்றிய நம் புலனுணர்வுகளுக்கும் இடையே உள்ளார்ந்த ஒத்திசைவின்மை இருக்கிறது என்று இதுவரையில் ஒரே ஒருமுறைகூட நாம் முடிவுக்கு வர நேர்ந்ததில்லை.

ஆனால், நவீன-கான்டிய (Neo-Kantian) அறியொணாவாதிகள் நம்முன் வந்து கூறுகின்றனர்: ஒரு பொருளின் தன்மைகளை நாம் சரியாகக் கண்டுணரலாம். ஆனால், எந்தவொரு புலன்வழி அல்லது சிந்தனைவழிச் செயல்முறை மூலம் ”தன்னிலைப் பொருளை” (thing-in-itself) புரிந்து கொள்ள முடியாது. இந்தத் ”தன்னிலைப் பொருள்” நம் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது. நெடுங்காலம் முன்பே ஹெகல் இதற்குப் பதிலுரைத்துள்ளார்: ஒரு பொருளின் அனைத்து தன்மைகளையும் நீங்கள் அறிந்திருப்பின், அப்பொருளையே நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அப்பொருள் நாம் இல்லாமலே [புறத்தே] நிலவுகிறது என்கிற உண்மையைத் தவிர எதுவும் இருக்கவில்லை. உங்கள் புலன்கள் அவ்வுண்மையை உங்களுக்கு உணர்த்தும்போது, கான்டின் பிரசித்தி பெற்ற அறிந்துகொள்ள முடியாத Ding an sich என்னும் ”தன்னிலைப் பொருளின்” கடைசி மிச்சத்தையும் புரிந்துகொண்டு விடுகிறீர்கள். இதோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கான்டின் காலத்தில் இயற்கைப் பொருள்களைப் பற்றிய நம் அறிவு உண்மையில் முழுமையற்றதாகவே இருந்தது. எனவே, அப்பொருள்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் நமக்கிருந்த சொற்ப அறிவின் பின்னால், புதிரான ”தன்னிலைப் பொருள்” ஒன்று இருக்கலாமென நியாயமாகவே அவர் சந்தேகப்பட்டிருக்கக் கூடும். புரிந்து கொள்ள முடியாத இப்பொருள்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புரிந்து கொள்ளப்பட்டன, பகுத்தாயப்பட்டன. அதற்கும் மேலாக மாபெரும் விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக அப்பொருள்கள் மறுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாமே உற்பத்தி செய்ய முடிகிற ஒரு பொருளை அறிய முடியாததாக நிச்சயம் கருத முடியாது. இந்த [18-ஆம்] நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த இரசாயனவியலுக்கு அங்ககப் பொருள்கள் (organic substances) இத்தகைய புதிரான பொருள்களாகவே இருந்தன. இப்போது நாம் இப்பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் இரசாயனத் தனிமங்களிலிருந்து அங்ககச் செயல்முறைகளின் உதவியின்றியே உருவாக்கக் கற்றுள்ளோம். எந்தப் பொருளாயினும் அதன் இரசாயனக் கட்டமைப்பைத் தெரிந்து கொண்டதுமே அதன் தனிமங்களிலிருந்து அப்பொருளை உருவாக்கிட முடியும் என நவீன இரசாயனவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றனர். உயர்நிலை அங்ககப் பொருள்களின் அதாவது அல்புமின் சேர்மங்களுடைய கட்டமைப்பை அறிந்து கொள்வதில் இன்னும் நாம் மிகவும் பின்தங்கியே உள்ளோம். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னருங்கூட நாம் இந்த அறிவைப் பெற்று, அந்த அறிவையே ஆயுதமாகக் கொண்டு, செயற்கை அல்புமினை உற்பத்தி செய்ய மாட்டோம் என்று கூற இது காரணமாக முடியாது. ஆனால், அல்புமினை நாம் உற்பத்தி செய்யும் நிலையை அடையும்போது, அதே வேளையில், அங்கக உயிரை உற்பத்தி செய்தவராகி விடுவோம். ஏனெனில், உயிரானது அதன் மிகவும் அதிகீழ்மட்ட வடிவங்களிலிருந்து அதியுச்சிமட்ட வடிவங்கள் வரையில் அல்புமின் சேர்மங்கள் நிலவுவதற்கான இயல்பான முறையே அன்றி வேறல்ல.

என்றாலும், நம் அறியொணாவாதி முறையான மன அளவிலான வரம்புகளை இட்டுக் கொண்டவுடனே அவர் அப்பட்டமான உயர்தரப் பொருள்முதல்வாதியைப் போன்றே பேசுகிறார், செயல்படுகிறார். பருப்பொருளும் இயக்கமும் (matter and motion), அல்லது இப்போது அழைக்கப்படுவது போல ஆற்றலும், நாம் அறிந்தவரை படைக்கவோ, அழிக்கவோ முடியாதவை என்றாலும், எப்போதோ ஒரு காலத்தில் அவை படைக்கப்படவில்லை என்பதற்கான நிரூபணம் நம்மிடம் இல்லை என அவர் கூறலாம். ஆனால், குறிப்பிட்ட எந்தவொரு சூழ்நிலையிலாவது, அவருடைய இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்த நீங்கள் முயல்வீர்கள் எனில், உடனே அவர் உங்கள் வாதத்தைப் புறந்தள்ளுவார். ஆன்மீகவாதத்தின் சாத்தியப்பாட்டைக் கருத்தளவில் (in abstracto) ஏற்றுக்கொள்ளும் அவர் நடைமுறையில் (in concreto) புறக்கணித்து விடுகிறார். நாம் அறிந்த வரையிலும் அறிய முடிகிற வரையிலும் பிரபஞ்சத்தைப் படைத்தவனும் இல்லை, ஆள்பவனும் இல்லை என்று கூறுவார்; நம்மைப் பொறுத்தமட்டில் பருப்பொருளும் ஆற்றலும் படைக்கவோ அழிக்கவோ முடியாதவை; நமக்குச் சிந்தனை என்பது ஆற்றலின் ஒரு வடிவமாகும், மூளையின் செயல்பாடாகும்; நாம் அறிந்ததெல்லாம், பருப்பொருள் உலகம் மாற்ற முடியாத விதிகளால் ஆளப்படுகிறது; இன்னும் இதுபோல என்னவெல்லாமோ கூறுவார். இவ்வாறு, அவர் விஞ்ஞானம் வழிப்பட்ட மனிதராக இருக்கும்வரையில், அவர் ஏதோ ஒன்றை அறிந்தவராக இருக்கும்வரையில், அவர் ஒரு பொருள்முதல்வாதி ஆவார். அவருடைய விஞ்ஞானத்துக்கு வெளியே, அவர் எதுவும் அறிந்திடாத துறைகளில், அவர் தம் அறியாமையைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து அறியொணாவாதம் (agnosticism) என்று கூறிக் கொள்கிறார்.

எது எப்படி இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவானது: நான் ஓர் அறியொணாவாதியாக இருந்திருந்தாலும்கூட, இச்சிறு நூலில் சுருக்கமாக வரைந்து காட்டப்பட்டுள்ள, வரலாறு பற்றிய கருத்தோட்டத்தை, ”வரலாற்று அறியொணாவாதம்” (Historical Agnosticism) என்று நான் குறிப்பிட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை. மத நம்பிக்கை கொண்டோர் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள். அறியொணவாதிகள், எங்களை வைத்து நையாண்டி செய்கிறீர்களா என்று சீற்றத்துடன் கேட்டிருப்பார்கள். வரலாற்றின் வளர்ச்சிப் போக்கு குறித்த கருத்தோட்டத்தை, ஆங்கிலத்திலும் அதோடு ஏனைய பிற மொழிகள் பலவற்றிலும், ”வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” (Historical Materialism) என்னும் சொல்தொடரை நான் பயன்படுத்தினால், இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையர்கூட அளவுமீறி அதிர்ச்சி அடையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். வரலாற்றுப் பொருள்முதல்வாதம், முக்கியமான அனைத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் முடிவான காரணத்தையும், அந்நிகழ்வுகளின் மாபெரும் உந்து சக்தியையும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் ஏற்படும் மாறுதல்கள், அவற்றின் விளைவாக, வேறுபட்ட வர்க்கங்களை உருவாக்கும் சமுதாயப் பிரிவினை, அவ்வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் ஆகியவற்றில் கண்டறிய முனைகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மைக்கும்கூட அனுகூலமாக இருக்கலாம் என்பதை நான் எடுத்துக் காட்டினால், ஒருவேளை எனக்கு இந்தச் சிறப்புரிமை வெகுவிரைவிலேயே அளிக்கப்படலாம். சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் குடியமர்ந்த பண்பட்ட வெளிநாட்டினர் எவரையும், அவர் அன்றைய நிலையில் ஆங்கிலக் கவுரவ நடுத்தர வர்க்கத்தின் மதவெறியையும் மூடத்தனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், துணுக்குறச் செய்தது என்கிற உண்மையை நான் மேலே குறிப்பிட்டேன். அக்காலத்திய கவுரவமான ஆங்கில நடுத்தர வர்க்கம் அறிவார்ந்த வெளிநாட்டவர் கண்ணுக்குத் தெரிந்ததுபோல் அப்படியொன்றும் முட்டாள்தனமாக இருக்கவில்லை என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டப் போகிறேன். அவ்வர்க்கத்தின் மதப்பற்று புரிந்துகொள்ளக் கூடியதே.

மத்திய காலத்திலிருந்து ஐரோப்பா வெளித்தோன்றியபோது, நகரங்களில் உதித்தெழுந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கம்தான் ஐரோப்பாவின் புரட்சிகரக் கூறாக உருவானது. மத்திய காலப் பிரபுத்துவ அமைப்பினுள்ளே அது அங்கீகாரத்துக்குரிய ஒரு நிலையை வென்றெடுத்தது. ஆனால், இந்த நிலையும்கூட அதன் விரிந்து பரவிய ஆற்றலுக்கு [ஏற்றவாறின்றி] மிகவும் குறுகியதாகவே ஆகிப் போனது. முதலாளித்துவ வர்க்கமான இந்த நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி, [அன்று நிலவிய] நிலப்பிரபுத்துவ அமைப்பு தொடர்வதற்கு முட்டுக்கட்டை ஆகியது. எனவே, நிலப்புரத்துவ அமைப்பு வீழ்ந்துபோக நேரிட்டது.

ஆனால், நிலப்பிரபுத்துவத்தின் மாபெரும் சர்வதேச மையமாய் இருந்தது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையாகும். அது, நிலப்பிரபுத்துவ மேற்கு ஐரோப்பா முழுவதையும், உள்ளே நிகழ்ந்துவந்த அனைத்துப் போர்களையும் மீறி, இஸ்லாமிய நாடுகளுக்கும், அதே அளவுக்கு பிரிந்து போன கிரேக்கர்களுக்கும் எதிரான மாபெரும் அரசியல் அமைப்பாக ஒன்றுபடுத்தியது. அது, நிலப்பிரபுத்துவ நிறுவனங்களை புனித தீட்சையின் ஒளிவட்டத்தால் சூழ்ந்து கொண்டது. நிலப்பிரபுத்துவ அமைப்பை மாதிரியாகக் கொண்டு, தன் சொந்தப் படிநிலை அமைப்பை ஒழுங்கமைத்துக் கொண்டது. முடிவில், அது கத்தோலிக்க உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, தானே மிகமிகச் சக்திவாய்ந்த ஒரு நிலப்பிரபுவாகச் செயல்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், விரிவான அளவில், மதச்சார்பற்ற நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பாக, அதன் புனித மைய நிறுவனமாகிய இந்தத் திருச்சபையை ஒழித்தாக வேண்டியிருந்தது.

அதோடு, நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து விஞ்ஞானம் மாபெரும் புத்தெழுச்சி பெற்று வளர்ந்தது. வானியல், எந்திரவியல், பௌதிகவியல், உடல் கூற்றியல், உடலியல் ஆகியவை மீண்டும் பேணி வளர்க்கப்பட்டன. மேலும், முதலாளித்துவ வர்க்கத்துக்கு, அதன் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சிக்காக, இயற்கைப் பொருள்களின் பௌதிகப் பண்புகளையும், இயற்கைச் சக்திகளின் செயல்பாட்டு முறைகளையும் ஆய்ந்தறியும் விஞ்ஞானம் தேவைப்பட்டது. இதுநாள்வரையில் விஞ்ஞானம் திருச்சபையின் பணிவுமிக்க பணிப்பெண்ணாகவே இருந்து வந்தது. மதநெறியால் விதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டி வளர விஞ்ஞானம் அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காரணத்தால் அது விஞ்ஞானமாகவே இருக்க முடியவில்லை. விஞ்ஞானம் திருச்சபையை எதிர்த்துக் கலகம் புரிந்தது. முதலாளித்துவ வர்க்கத்தால் விஞ்ஞானம் இன்றிச் செயலாற்ற முடியவில்லை. எனவே, அதுவும் திருச்சபைக்கு எதிரான கலகத்தில் சேர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.

வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கம் நிலைபெற்று நின்ற மதத்துடன் மோத வேண்டியிருந்த களங்களில் மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமே பின்வரும் உண்மைகளை எடுத்துக் காட்டப் போதுமானவை. முதலாவதாக, ரோமன் திருச்சபையின் ஏமாற்று வேடங்களுக்கு எதிரான போராட்டத்தில் மிக நேரடியாக அக்கறை கொண்டிருந்த வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம்தான். இரண்டாவதாக, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான ஒவ்வொரு போராட்டமும் அக்காலத்தில் மத வேடம் பூண வேண்டியிருந்தது. அனைத்துக்கும் முதலாக திருச்சபைக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. நகரங்களிலுள்ள பல்கலைக் கழகங்களும் வணிகர்களும் குரல் எழுப்பத் தொடங்கினால், நாட்டுப்புற மக்கள் திரள்களிலும், தாங்கள் வெறுமனே பிழைப்பு நடத்த, மதம்சார்ந்த, மதம்சாராத தங்களின் நிலவுடைமைப் பிரபுக்களோடு எங்கெங்கும் போராட வேண்டியிருந்த விவசாயிகளிடத்திலும் நிச்சயம் வலுவான எதிரொலியை எழுப்ப வேண்டியிருந்தது. அவ்வாறே எழுப்பவும் செய்தது.

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நெடிய போராட்டம் தீர்மானகரமான மூன்று பெரும் போர்களில் உச்சத்தைத் தொட்டது.

அவற்றுள் முதலாவது போர், ஜெர்மனியில் நடைபெற்ற, புராட்டெஸ்டன்ட் சீர்திருத்தம் (Protestant Reformation) என்றழைக்கப்பட்ட ஒன்றாகும். திருச்சபைக்கு எதிராக லூதர் (Luther) எழுப்பிய போர்க்குரலுக்குச் செவிசாய்த்து, அரசியல் தன்மை வாய்ந்த இரு எழுச்சிகள் தோன்றின. முதலாவது, ஃபிரான்ஸ் வான் ஸிக்கின்கென் (Franz von Sickingen) தலைமையின் கீழ் கீழ்நிலைப் பிரபுக்கள் நடத்தியது (1523). அடுத்தது, 1525-இல் நடைபெற்ற மாபெரும் விவசாயிகள் போர் (Peasants' War). இரண்டும் தோற்கடிக்கப்பட்டன. இத்தோல்வி பிரதானமாக, போரில் மிகவும் அக்கறை கொண்ட தரப்பினர்களான நகரங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களின் (burghers) உறுதியின்மையால் நேர்ந்ததாகும் – இங்கே நாம் இந்த உறுதியின்மைக்கான காரணங்களுக்குள் நுழைய இயலாது. அன்றுதொட்டு, இந்தப் போராட்டம் வட்டாரச் சிற்றரசர்களுக்கும் மைய அதிகாரத்துக்கும் இடையேயான சண்டையாகச் சீரழிந்து போனது. ஐரோப்பாவின் அரசியல் முனைப்புள்ள தேசங்களின் அணியிலிருந்து ஜெர்மனியை 200 ஆண்டுகளுக்கு விலக்கி வைப்பதில் முடிந்தது. லூதரனியச் சீர்திருத்தமோ உண்மையில் ஒரு புதிய மதநெறியை, எதேச்சாதிகார முடியாட்சிக்கு ஏற்புடைய ஒரு மதத்தைத் தோற்றுவித்தது. வடகிழக்கு ஜெர்மனியின் விவசாயிகள் லூதரனியத்துக்கு மதம் மாறிய கணமே, அவர்கள் சுதந்திர மனிதர்கள் நிலையிலிருந்து பண்ணையடிமைகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

ஆனால், எங்கு லூதர் தோற்றாரோ அங்குக் கால்வின் (Calvin) வெற்றி சூடினார். கால்வினுடைய மதநெறி, அவர் காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் துணிவு மிக்க பகுதியினருக்கு ஏற்ற ஒன்றாக இருந்தது. போட்டி மிகுந்த வணிக உலகில் வெற்றி அல்லது தோல்வி, ஒரு மனிதனின் செயல்பாடு அல்லது சாமர்த்தியத்தைச் சார்ந்தது இல்லை. அவனால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமைகளைப் பொறுத்தே அமைகின்றன. கால்வினுடைய ஊழ்வினைக் கோட்பாடு இந்த உண்மையின் மதநெறிப்பட்ட வெளிப்பாடே ஆகும். இங்கு நடப்பதெல்லாம் ஒரு மனிதனின் எண்ணத்தையோ, அவனுடைய செயலையோ சார்ந்ததல்ல, யாருக்கும் தெரியாத அனைத்துக்கும் மேலான பொருளாதாரச் சக்திகளின் கருணையையே சார்ந்ததாகும். குறிப்பாகப் பொருளாதாரப் புரட்சி நிகழும் ஒரு காலகட்டத்தில் இது நிச்சயமான உண்மையாகும். அப்படியொரு காலகட்டத்தில், பழைய வணிகத் திசைவழிகளும் வணிக மையங்களும் மறைந்து அவற்றுக்குப் பதிலாகப் புதியவை தோன்றின. இந்தியாவும் அமெரிக்காவும் உலகுக்குத் திறந்து விடப்பட்டன. மிகவும் புனிதமான பொருளாதார நம்பிக்கையாதாரப் பொருள்களான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்புங்கூட நிலைகுலைந்து சரியத் தொடங்கியது. கால்வினுடைய திருச்சபை சாசனம் முற்ற முழுக்க ஜனநாயகத் தன்மையும், குடியரசுத் தன்மையும் கொண்டதாக இருந்தது. கடவுளின் பேரரசு குடியரசுமயமாக்கப்பட்ட பிறகு இவ்வுலகின் பேரரசுகள் முடிமன்னர்களுக்கும் பிஷப்புகளுக்கும் பிரபுக்களுக்கும் கீழ்ப்பட்டதாக இருக்க முடியுமா? ஜெர்மன் லூதரனியம் சிற்றரசர்களின் கைகளில் உவப்பான கருவியாக ஆகியபோது, கால்வினியம் ஹாலந்தில் ஒரு குடியரசையும், இங்கிலாந்திலும், அனைத்துக்கும் மேலாக ஸ்காட்லாந்திலும், முனைப்பான குடியரசுக் கட்சிகளையும் நிறுவியது.

இரண்டாவது மாபெரும் முதலாளித்துவ எழுச்சி தனக்கு வேண்டிய கோட்பாட்டு விளக்கம் கால்வினியத்தில் முற்றிலும் தயாரான நிலையில் இருக்கக் கண்டது. இந்த எழுச்சி இங்கிலாந்தில் நடைபெற்றது. நகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கம் இதை நடத்தியது. நாட்டுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த குறுநிலக் கிழார் இனம் (yeomanry) போராடி அதை வெற்றிபெறச் செய்தது. இதில் விந்தையூட்டுவது என்னவெனில், மூன்று மாபெரும் முதலாளித்துவ எழுச்சிகள் அனைத்திலும் [முன்னணியில் நின்று] போரிட வேண்டிய சேனையாக அமைவது விவசாயி இனமே. வெற்றி கிட்டியபின் அந்த வெற்றியின் பொருளாதார விளைவுகளால், சர்வ நிச்சயமாக நாசமாகும் வர்க்கமும் இதே விவசாயி இனம்தான். குரோம்வெல்லுக்கு (Cromwell) பிறகு நூறு ஆண்டுகளில், இங்கிலாந்தின் குறுநிலக் கிழார் இனம் அனேகமாக மறைந்தொழிந்து போனது. என்றாலும், இந்த குறுநிலக் கிழார் இனமும், நகரங்களில் வாழ்ந்த பிளெபியன் (plebian) பகுதியினரும் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கத்தினர் மட்டும் ஒருபோதும் இந்தப் போராட்டத்தை அதன் இறுதி முடிவுவரை நடத்தி வென்றிருக்க மாட்டார்கள். முதலாம் சார்லஸ் மன்னரை ஒருபோதும் சிரச்சேதத்துக்கு உள்ளாக்கியிருக்க மாட்டார்கள். அக்காலகட்டத்தில் கனிந்துவந்து கைகூடிய முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகளையாவது தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, புரட்சியைக் கணிசமான அளவுக்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருந்தது – 1793-இல் ஃபிரான்சிலும், 1848-இல் இங்கிலந்திலும் நடந்ததைப் போன்று முற்றிலும் அதே மாதிரி. உண்மையில் இது முதலாளித்துவ சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி விதிகளில் ஒன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது.

நல்லது, இத்தகைய மிகைப்படியான புரட்சிகரச் செயல்பாட்டுக்குத் தவிர்க்கவியலாத எதிர்வினை கட்டாயமாகப் பின்தொடர்ந்தது. இந்த எதிர்வினையும் அதன் பங்குக்குத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எல்லையையும் தாண்டிச் சென்றது. இப்படித் தொடர்ந்து நிகழ்ந்த பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின், முடிவாகப் புதிய ஈர்ப்பு மையம் உருவானது. அதுவே ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக ஆனது. [இங்கிலாந்து] கவுர மனப்பான்மையினரால் ”மாபெரும் கலவரம்” என்ற பெயரில் அறியப்பட்ட, ஆங்கிலேய வரலாற்றின் இந்த மகத்தான காலகட்டமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த போராட்டங்களும், ஒப்பீட்டளவில் அற்பமானதொரு நிகழ்ச்சியால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. மிதவாத வரலாற்று அறிஞர்கள் அந்நிகழ்ச்சிக்குப் ”'புகழ் படைத்த புரட்சி”[11] (the Glorious Revolution) எனப் பெயர் சூட்டினர்,

இந்தப் புதிய தொடக்கப் புள்ளி, வளர்ந்து வந்த நடுத்தர வர்க்கத்துக்கும் முன்னாள் நிலப்பிரபுத்துவ நில உடைமையருக்கும் இடையேயான ஒரு சமரசமாக இருந்தது. இந்த நில உடைமையர், இப்போதுபோலப் பிரபுக்குலம் (aristocracy) என்று அழைக்கப்பட்ட போதிலும், இதற்கு மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் ஃபிரான்சில் லூயீ ஃபிலிப்பைப் போல ”பேரரசின் முதலாவது முதலாளி” ஆவதற்கு அவர்களை இட்டுச் செல்லும் பாதையில் நீண்ட நாட்களுக்கு முன்பே அடியெடுத்து வைத்து விட்டார்கள். நல்ல வேளையாக, இங்கிலாந்தில் அதன் பழைய நிலப்பிரபுத்துவச் சீமான்கள் ரோஜாப் போரின்போது[12] ஒருவரையொருவர் கொன்று அழிந்தனர். அவர்களின் சந்ததியர், பெரும்பாலும் பழைய குடும்பங்களின் வழித்தோன்றல்களாக இருந்த போதிலும், நேரடி வாரிசு வழியிலிருந்து பெருமளவு விலகியவர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவத் தன்மையைவிட மிகுதியும் முதலாளித்துவத் தன்மையிலான பழக்க வழக்கங்களையும் போக்குகளையும் கொண்ட, முற்றிலும் ஒரு புதிய குழுவினராக அமைந்தனர். அவர்கள் பணத்தின் மதிப்பை நன்கு புரிந்து கொண்டிருந்தனர். உடனடியாக, நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, [தங்கள் நிலங்களில்] அவர்களுக்குப் பதிலாக ஆடுகளை [கிடைகளில்] நிரப்பி, அவர்களின் [நிலத்துக்கான] வாடகையை உயர்த்த முற்பட்டனர். எட்டாம் ஹென்ரி திருச்சபையின் நிலங்களை ஊதாரித் தனமாக வாரி வழங்கியபோது, புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்களை கூட்டம் கூட்டமாக உருவாக்கினார். எண்ணற்ற பண்ணைகளைக் கைப்பற்றி, முற்றிலுமாக அல்லது ஓப்பீட்டளவில் புதிய முதலாளிகளுக்கு மறுவழங்கீடு செய்யப்பட்டன. 17-ஆம் நூற்றாண்டு முழுவதும் இது தொடர்ந்தது. இதன் காரணமாகவும் புதிய முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் ஏராளமாக உருவாயினர். இதன் விளைவாக, ஏழாம் ஹென்ரியின் காலத்திலிருந்தே ஆங்கில ”'பிரபுக்குலத்தினர்” தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சியை எதிர்த்துச் செயல்படுவதற்கு மாறாக, மறைமுகமாக அதன்மூலம் இலாபம் ஈட்டவே முயன்றனர். பொருளாதார அல்லது அரசியல் காரணங்களை முன்னிட்டு, நிதித்துறை, தொழில்துறை சார்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினரின் முன்னணி நபர்களுடன் ஒத்துழைக்க விருப்பம் கொண்ட, பெரும் நிலவுடைமையரின் ஒரு பிரிவு எப்போதுமே இருந்து வந்தது. எனவே, 1689-ஆம் ஆண்டின் சமரசம் எளிதாகவே நிறைவேறியது. நிதி, பட்டறைத் தொழில், வணிகம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நலன்கள் தக்கவாறு கவனிக்கப்பட்ட வரையில், அரசியல் கொள்ளைப் பொருள்களான ”முறைகேடான செல்வமும் நிலமும்” பெரிய நிலவுடைமைக் குடும்பங்களிடமே விட்டு வைக்கப்பட்டன. [நடுத்தர வர்க்கத்தின்] இந்தப் பொருளாதார நலன்கள் அக்காலகட்டத்தில் தேசத்தின் பொதுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. சிறு விவகாரங்களைப் பற்றிய சச்சரவுகள் இருந்திருக்கலாம். ஆனால், மொத்தத்தில் பிரபுக்குல ஆட்சிக் கும்பல், தன்னுடைய பொருளாதாரச் செழிப்பு, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரச் செழிப்புடன் பிரிக்க முடியாதபடி கட்டுண்டுள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தது.

அந்தக் காலகட்டம் முதலே முதலாளித்துவ வர்க்கம், இங்கிலாந்தின் ஆளும் வர்க்கங்களின் பணிவான ஒரு பகுதியாக, இருப்பினும் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாக விளங்கியது. தேசத்தின் மிகப் பெருந்திரளான உழைக்கும் மக்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதில் [ஆளும் வர்க்கங்களின்] ஏனைய பகுதிகளுடன் முதலாளித்துவ வர்க்கமும் பொது அக்கறை கொண்டிருந்தது. வணிகர் அல்லது ஆலை அதிபர் தம் எழுத்தர்கள், தம் பணியாளர்கள், தம் வீட்டு வேலையாட்கள் ஆகியோரைப் பொறுத்தவரை எஜமானர் அல்லது அண்மைக் காலம்வரை அழைக்கப்பட்டதுபோல, ”இயற்கையாகவே மேலானவர்” (natural superior) என்னும் நிலையை வகித்தார். இவரால் முடிந்த அளவுக்கு அவர்களிடம் அதிகமாகவும், தரமானதாகவும் வேலை வாங்குவது அவருடைய அக்கறையாக இருந்தது. இதன்பொருட்டு, அவர்கள் முறையாகக் கீழ்ப்படிந்து நடக்க, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. அவர் [வணிகர் அல்லது பட்டறை உடைமையாளர்] தன்னளவில் மத நம்பிக்கை கொண்டவர். அவர் அரசரையும் பிரபுக்களையும் எதிர்த்துப் போரிட்டபோது அவருடைய மதமே அவருக்குப் போர்ப் பதாகையை வழங்கியது. இயற்கையாகவே அவருக்குக் கீழானவர்களின் மனங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப வயப்படுத்தவும், கடவுளே விரும்பி, அவர்களுக்கு மேலான நிலையில் வைத்துள்ள எஜமானர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் நடக்கும்படி செய்யவும், இதே மதம் அளித்துள்ள வாய்ப்புகளைக் கண்டுகொள்ள அவருக்கு அதிக நாள் ஆகவில்லை. சுருங்கக் கூறின், உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளான “கீழ்த்தட்டினரை”, தாழ்ந்த நிலையிலேயே இருந்தி வைத்திருக்கும் பணியில், இப்போது ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மதத்தின் செல்வாக்கு, இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் மதச் சார்புகளை வலுப்படுத்த இன்னொரு காரணியும் இருந்தது. அது இங்கிலாந்தில் உதித்தெழுந்த பொருள்முதல்வாதமாகும். இந்தப் புதிய கோட்பாடு நடுத்தர வர்க்கத்தின் பக்தி உணர்வுகளை அதிர்ச்சியுறச் செய்தது; அதுமட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தினர் உட்பட படிப்பறிவில்லாத சாதாரண மக்களுக்குப் போதுமானதாக இருந்த மதத்தின் நிலைக்கு மாறாக, பொருள்முதல்வாதம், கற்றறிந்தவர்க்கும் பண்பட்ட மனிதருக்கும் மட்டுமே ஏற்றதொரு தத்துவமாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. ஹாப்ஸின் வருகையுடன் பொருள்முதல்வாதம் அரச குடும்பத்தின் தனிச்சிறப்புரிமை, வரம்பற்ற அதிகாரம் ஆகியவற்றின் பாதுகாவலனாக அரங்கில் நுழைந்தது. puer robustus sed malitiosus [பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன் – ஹாப்ஸ் எழுதிய குடிமகன் என்னும் நூலின் முன்னுரையில் வரும் தொடர்] என்பார்களே, அத்தகைய மக்களை அடக்கி வைக்குமாறு அது எதேச்சாதிகார முடியரசுக்கு அழைப்பு விடுத்தது. இதுபோல, ஹாப்சுக்குப் பின்வந்த போலிங்பிராக் (Bolingbroke), ஷாஃப்ட்ஸ்பரி (Shaftesbury) முதலானோர் வழங்கிய புதிய இறையுண்மைவாத வடிவிலான பொருள்முதல்வாதம், பிரபுக்குலத் தன்மை வாய்ந்த, மேதாவிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய கோட்பாடாகவே இருந்தது. எனவே, அதனுடைய மத நம்பிக்கைக்கு எதிரான தன்மை, முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான அரசியல் தொடர்புகள், இந்த இரண்டின் காரணமாகவும் அது நடுத்தர வர்க்கத்தின் வெறுப்புக்கு ஆளானது. எனவே, பிரபுக்குலத்தின் பொருள்முதல்வாதத்துக்கும் இறையுண்மைவாதத்துக்கும் எதிராக, முன்பு ஸ்டூவர்ட்டுகளுக்கு (Stuarts) எதிராகப் போர்க்கொடியையும், போரிடும் படையணிகளையும் வழங்கிய அதே புராட்டெஸ்டன்ட் மதக் குழுக்கள்தாம், முற்போக்கான நடுத்தர வர்க்கத்துக்கு முக்கியமான வலிமையைத் தொடர்ந்து வழங்கி வந்தன. இன்றுங்கூட அக்குழுக்கள்தாம் ”மாபெரும் மிதவாதக் கட்சியின்” (the Great Liberal Party) முதுகெலும்பாக அமைந்துள்ளன.

இதற்கிடையில், பொருள்முதல்வாதம் இங்கிலாந்திலிருந்து ஃபிரான்சுக்குச் சென்றது. அங்கே அது மற்றொரு பொருள்முதல்வாதத் தத்துவவியல் மரபான கார்ட்டீசியனியத்தின்[13] (Cartesianism) ஒரு பிரிவோடு கலந்து சங்கமித்தது. ஃபிரான்சிலுங்கூட, தொடக்கத்தில் அது முற்றிலும் பிரபுக்குலத் தன்மை கொண்ட கோட்பாடாகவே விளங்கியது. ஆனால், விரைவிலேயே அதன் புரட்சிகரப் பண்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகள் தம் விமர்சனத்தை, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் எதிர்கொண்ட விஞ்ஞான மரபு, அரசியல் நிறுவனம் எதுவாயினும், அவற்றுக்கும் அவர்களின் விமர்சனத்தை விரிவுபடுத்தினர். தங்களின் கோட்பாடு உலகளாவிய பயன்பாடு கொண்டது என்று கூறிக் கொள்வதை நிறுவும் பொருட்டு அவர்கள் குறுக்குவழியைக் கடைப்பிடித்தனர். அறிவுத்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் தங்களின் கோட்பாட்டினைத் துணிச்சலுடன் பிரயோகித்து, . கலைக்களஞ்சியம் என்ற ஒரு பிரும்மாண்ட நூலில் தொகுத்து வைத்தனர். அதன் காரணமாக, அவர்கள் கலைக்களஞ்சியத்தார்[14] என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறாக, பகிரங்கப் பொருள்முதல்வாதம், இறையுண்மைவாதம் ஆகிய அதன் இரு வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவில் அது ஃபிரான்சின் ஒட்டுமொத்த படித்த, பண்பாடுடைய இளைஞர்களின் வழிகாட்டும் நெறியாக ஆனது. அதுமட்டுமின்றி, ஆங்கில முடியரசுவாதிகள் வரைந்து கொடுத்த இந்தக் கோட்பாடு இவ்வாறு, மாபெரும் புரட்சி (Great Revolution) வெடித்தபோது, ஃபிரெஞ்சுக் குடியரசுவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தத்துவார்த்தப் பதாகையைத் தந்தது. மனித உரிமைப் பிரகடனத்தின்[15] (Declaration of the Rights of Man) வாசகத்தை வழங்கியது. மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சி (The Great French Revolution) முதலாளித்துவ வர்க்கத்தின் மூன்றாவது எழுச்சியாகும். ஆனால், அதுதான் முற்றிலும் மத முகமூடியை கழற்றி எறிந்துவிட்டுப் போராடிய முதல் எழுச்சியாகும். அவ்வெழுச்சிப் போராட்டம் ஒளிவு மறைவற்ற அரசியல் வழிகளில் நடைபெற்றது. [போராட்டத்தில் மோதிக்கொண்ட] ஒருதரப்பு [முழுமையாக] அழிக்கப்பட்டு, மறுதரப்பு முழுமையான வெற்றியை ஈட்டும் வரையில் உண்மையாகவே இறுதிவரை நடத்திச் செல்லப்பட்ட முதல் எழுச்சியாகவும் அது விளங்கியது. அதில், ஒருதரப்பான பிரபுக்குலம் அழிக்கப்பட்டு, மறுதரப்பான முதலாளித்துவ வர்க்கம் வெற்றியை ஈட்டியது. இங்கிலாந்தில் புரட்சிக்கு முந்திய நிறுவனங்கள், புரட்சிக்குப் பிந்தைய நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியும், நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான சமரசமும், நீதிமன்ற முன்மாதிரித் தீர்ப்புகளின் தொடர்ச்சியிலும், நிலப்பிரபுத்துவ கால வடிவிலான சட்டங்கள் பயபக்தியுடன் பாதுகாக்கப்பட்டதிலும் வெளிப்பட்டன. ஃபிரான்சில் புரட்சியானது பழங்கால மரபுகளிலிருந்து முற்றிலும் முறித்துக் கொண்டதாக இருந்தது. அது நிலப்பிரபுத்துவத்தின் இறுதிச் சுவடுகளையும் துடைத்தழித்தது. முதலாளித்துவ நிலைமைகளுக்கு உகந்தவாறு, பழைய ரோமானியச் சட்டத்தின் தேர்ந்த தழுவலாக விளங்கிய, உரிமையியல் சட்டத் தொகுப்பினை[16] (Code Civil) அது உருவாக்கியது. பண்டங்களின் உற்பத்தி [கட்டம்] என்று மார்க்ஸ் அழைத்த அந்தப் பொருளாதாரக் கட்டத்துக்குரிய, நீதிமுறை உறவுகளின், ஏறத்தாழ முழுநிறைவான வெளிப்பாடாக அது விளங்கியது. ஃபிரெஞ்சு நாட்டின் இந்தப் புரட்சிகரச் சட்டத் தொகுப்பு, விதிவிலக்கின்றி இங்கிலாந்து உட்பட, ஏனைய எல்லா நாடுகளிலும் சொத்துடைமைச் சட்டச் சீர்திருத்தங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இன்றும்கூடப் பயன்பட்டு வருகின்ற அளவுக்குத் திறம்பட உருவாக்கப்பட்டிருந்தது. இலண்டன் என்று எழுது, கான்ஸ்டாண்டிநோபிள் என்று வாசி (vous ecrivez Londres et vous prononcez Constantinople) என்று ஒரு ஃபிரெஞ்சுக்காரர் கூறியதுபோல, ஆங்கிலச் சொல்லின் எழுத்துகளுக்கும் ஆங்கில உச்சரிப்புக்கும் இசைவு கிடையாது. அதுபோல, விளக்கும் மொழிக்கும் விளக்கவரும் பொருளுக்கும் இசைவு இல்லாத அந்த அநாகரிக நிலப்பிரபுத்துவ மொழியில்தான் ஆங்கிலச் சட்டம் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார உறவுகளைக் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. என்றாலும், இதே ஆங்கிலச் சட்டம்தான், இந்த ஆங்கிலச் சட்டம் ஒன்று மட்டும்தான், பழைய ஜெர்மானியத் தனிநபர் சுதந்திரம், வட்டார சுய-ஆட்சி, அனைத்துத் தலையீடுகளிலிருந்தும் (நீதிமன்றங்களின் தலையீடுகள் தவிர்த்து) விடுபட்ட சுயேச்சைநிலை ஆகியவற்றின் சிறந்த கூறுகளைக் காலங்காலமாகப் பேணிக்காத்து அவற்றை அமெரிக்காவுக்கும் காலனிகளுக்கும் வழங்கி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகைய சிறந்த கூறுகள்தாம், [ஐரோப்பா] கண்டத்தில் எதேச்சாதிகார முடியாட்சிக் காலத்தில் இழக்கப்பட்டன. இன்னமும் அவை எங்குமே முழு அளவுக்கு மீட்கப்படவில்லை [என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்].

[இனி] நம் இங்கிலாந்து முதலாளியின் பக்கம் திரும்புவோம். [ஐரோப்பா] கண்டத்து முடியரசுகளின் உதவியுடன் ஃபிரெஞ்சுக் கடல்வழி வணிகத்தை அழிக்கவும், ஃபிரெஞ்சுக் காலனிகளைக் கைப்பற்றவும், கடல் ஆதிக்கப் போட்டிக்கு ஃபிரான்சிடம் எஞ்சியிருந்த கடைசி உரிமைத் தகுதிகளை நசுக்கவும், இங்கிலாந்து முதலாளிக்கு ஃபிரெஞ்சுப் புரட்சி அற்புதமான ஒரு வாய்ப்பை அளித்தது. இங்கிலாந்து முதலாளி ஃபிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்துப் போராடியதற்கு இது ஒரு காரணமாகும். இந்தப் புரட்சியின் வழிமுறைகள் அவருடைய மனப்பாங்குக்கு முற்றிலும் எதிராகச் சென்றன என்பது இன்னொரு காரணமாக அமைந்தது. ”அருவருக்கத்தக்க” அதன் தீவிரவாதம் மட்டுமின்றி, முதலாளித்துவ ஆட்சியை வரம்பு கடந்து, கடைக்கோடி எல்லைகளுக்கு எடுத்துச்செல்லும் அந்த முயற்சியேகூட [அவருக்கு ஏற்புடையதாயில்லை]. இங்கிலாந்து முதலாளி தம்முடைய பிரபுக்குலம் இல்லாமல் என்னதான் செய்ய முடியும்? அந்தப் பிரபுக்குலம்தானே, அவருக்கே உரித்தான நடையுடை பாவனைகளை அவருக்குக் கற்றுத் தந்தது; அவருக்கெனப் புதிய பாணிகளை உருவாக்கிக் கொடுத்தது; உள்நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டிய தரைப்படைக்கும், வெளிநாடுகளில் காலனிய நிலப்பரப்புகள், புதிய சந்தைகள் இவற்றை வென்று தந்த கடற்படைக்கும் அதிகாரிகளை அளித்தது. உண்மையிலேயே, முதலாளித்துவ வர்க்கத்தினரில் முற்போக்கான ஒரு சிறுபான்மையும் இருந்தது. சமரச ஏற்பாட்டின் கீழ் இந்தச் சிறுபான்மையின் நலன்கள் அவ்வளவு நன்றாகக் கவனிக்கப்படவில்லை. இந்தச் சிறுபான்மைக் குழு, பெரும்பாலும் குறைந்த செல்வச் செழிப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், இக்குழு நாடாளுமன்றத்தில் அதிகாரம் இன்றி இருந்தது.

இவ்வாறு, பொருள்முதல்வாதம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் வழிகாட்டும் நெறியாக ஆனதெனில், கடவுள் பக்தி மிகுந்த ஆங்கில முதலாளியோ தம் மதத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டார். சாதாரண மக்களின் மத உள்ளுணர்வுகள் இழக்கப்படுமெனில், எத்தகு மோசமான விளைவு நேரும் என்பதைப் பாரிசில் நடைபெற்ற பயங்கர ஆட்சி நிரூபித்துக் காட்டவில்லையா? பொருள்முதல்வாதம் ஃபிரான்சிலிருந்து அண்டை நாடுகளுக்குப் பரவி, இதையொத்த கொள்கைநெறிப் போக்குகளால், குறிப்பாக ஜெர்மன் தத்துவவியலால், மேலும் வலுவூட்டப் பெற்றது; உண்மையில் பொருள்முதல்வாதமும் சுதந்திரச் சிந்தனையும் பொதுவாக [ஐரோப்பா] கண்டத்தில் பண்பட்ட மனிதர்களுக்கான அவசியத் தகுதிகளாக ஆகின. எந்த அளவுக்கு அதிகமாக இந்தப் போக்குகளைக் காண முடிந்ததோ, அந்த அளவுக்கு அதிகப் பிடிவாதத்துடன் ஆங்கில நடுத்தர வர்க்கம் பன்முகப்பட்ட தன் மத நெறிகளோடு இறுக்கப் பிணைத்துக் கொண்டது. இந்தக் கொள்கைநெறிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கலாம். என்றாலும், அவை அனைத்தும் தெளிவான மத அடிப்படை கொண்ட கிறிஸ்துவக் கொள்கை நெறிகளாகவே இருந்தன.

புரட்சியானது ஃபிரான்சில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் வெற்றியை உறுதிசெய்த அதேவேளை, இங்கிலாந்தில் வாட் (Watt), ஆர்க்ரைட் (Arkwright), கார்ட்ரைட் (Cartwright), ஆகியோரும் இன்ன பிறரும், ஒரு தொழில்புரட்சியைத் தொடங்கி வைத்தனர். அப்புரட்சி, பொருளாதாரச் சக்தியின் ஈர்ப்பு மையத்தை அடியோடு இடம்பெயரச் செய்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வவளம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் செல்வவளத்தைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி, வேகமாகப் பெருகியது. முதலாளித்துவ வர்க்கத்துக்கு உள்ளேயே நிதித்துறை சார்ந்த பிரபுக்குலத்தினரான வங்கி அதிபர்கள் போன்றோர், மென்மேலும் அதிகமாக ஆலை அதிபர்களால் பின்னிலைக்குத் தள்ளப்பட்டனர். 1689-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமரசம், முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சாதகமாக, படிப்படியான மாறுதல்களுக்கு உள்ளான பிறகுங்கூட, அச்சமரசத் தரப்புகளின் ஒப்பீட்டுப் பலத்துக்கு இசைவானதாக இப்போது இல்லை. இந்தத் தரப்புகளின் பண்பியல்புங்கூட மாறிவிட்டது. 1830-ஆம் ஆண்டின் முதலாளித்துவ வர்க்கம் முந்தைய நூற்றாண்டின் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக விளங்கியது. அரசியல் அதிகாரம் இன்னமும் பிரபுக்குலத்திடமே விட்டுவைக்கப்பட்டு இருந்தது. பிரபுக்குலம் அவ்வதிகாரத்தைப் புதிய தொழில்துறை முதலாளித்துவத்தின் உரிமைத் தகுதிகளை எதிர்த்து நிற்கப் பயன்படுத்தியது. [நாளடைவில்] அவ்வரசியல் அதிகாரம் புதிய பொருளாதார நலன்களுடன் முரண்பட்டுப் போனது. பிரபுக்குலத்துடன் ஒரு புதிய போராட்டம் தேவையாக இருந்தது. அத்தகு போராட்டம் புதிய பொருளாதார சக்தியின் வெற்றியில்தான் முடிவதாக இருக்கும். முதலாவதாக, 1830-ஆம் ஆண்டில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின் உத்வேகத்தில் சீர்திருத்தச் சட்டம்[17] (Reform Act) அனைத்து எதிர்ப்பையும் மீறி உடனே நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முதலாளித்துவ வர்க்கத்துக்குக் குறிப்பிடத்தக்க, சக்திவாய்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது. அதன்பின் தானியச் சட்டங்கள்[18] (Corn Laws) இரத்து செய்யப்பட்டதானது [கட்டுப்பாடற்ற வணிகத்துக்கான ஒரு நடவடிக்கை], நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை, அதிலும் முக்கியமாக அதன் முனைப்பு மிக்க பகுதியான ஆலை அதிபர்களின் ஆதிக்கத்தை இறுதியாகவும் உறுதியாகவும் நிலைநிறுத்தியது. இது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆகப்பெரும் வெற்றியாகும். என்றபோதிலும், அதுவே அவ்வர்க்கம் தன் சொந்தத் தனிப்பட்ட நலனுக்காகப் பெற்ற கடைசி வெற்றியாகவும் அமைந்தது. அதன்பிறகு இவ்வர்க்கம் பெற்ற வெற்றி எதுவாயினும், அதன் கூட்டாளியாக முதலில் இருந்து, ஆனால் விரைவிலேயே அதன் எதிராளியாக மாறிப்போன, ஒரு புதிய சமூக சக்தியுடன் அவ்வெற்றியைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது.

தொழில்புரட்சி பெரிய ஆலை முதலாளிகளின் வர்க்கம் ஒன்றைத் தோற்றுவித்தது. அதைவிட எண்ணிக்கையில் அதிகமான ஆலைத் தொழிலாளிகளின் வர்க்கத்தையும் கூடவே தோற்றுவித்தது. தொழில்புரட்சியானது தொழில் உற்பத்தியில் ஒரு துறைக்குப்பின் இன்னொன்று என ஒவ்வொன்றாகப் பற்றிப் படர்ந்த அதே விகிதத்தில், இந்த ஆலைத் தொழிலாளி வர்க்கமும் படிப்படியாக எண்ணிக்கையில் அதிகரித்தது. அதே விகிதத்தில் இவ்வர்க்கம் அதன் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டது. தொழிலாளர்களின் கூட்டமைப்புகளுக்குத் தடை விதித்த சட்டங்களை நீக்கத் தயக்கம் காட்டிய நாடாளுமன்றத்தைக் கட்டாயப்படுத்தியதன் மூலம், 1824-ஆம் ஆண்டு வாக்கிலேயே இவ்வர்க்கம் இந்த ஆற்றலை நிரூபித்துக் காட்டியது. சீர்திருத்தக் கிளர்ச்சியின்போது தொழிலாளர்கள், சீர்திருத்தக் கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்து செயல்பட்டனர். 1832-ஆம் ஆண்டுச் சட்டம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்காமல் ஒதுக்கியதும், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் உரிமைச் சாசனத்தில் (People's Charter) வகுத்தமைத்தனர். மாபெரும் முதலாளித்துவத் தானியச் சட்ட எதிர்ப்புக் கட்சிக்கு[19] (Anti-Corn Law Party) எதிராகத் தங்களை ஒரு சுயேச்சையான கட்சியாக அமைத்துக் கொண்டனர். அதுதான் நவீன காலத்தின் முதலாவது தொழிலாளர் கட்சியான சாசனவாத (Chartists) இயக்கமாகும்.

அதன்பிறகு, [ஐரோப்பா] கண்டத்தின் 1848 பிப்ரவரி, மார்ச் புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் உழைக்கும் மக்கள் மிகவும் முக்கியமானதொரு பங்கு வகித்தனர். குறைந்தது பாரிஸ் எழுச்சியிலேனும், முதலாளித்துவச் சமுதாயத்தின் கண்ணோட்டப்படி நிச்சம் அனுமதிக்க முடியாத கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்குப்பின் பொதுவான பிற்போக்கு வந்து சேர்ந்தது. முதலாவதாக, 1848 ஏப்ரல் 10-இல் சாசனவாதிகளின் தோல்வி30; அடுத்து, அதே ஆண்டு ஜூனில், பாரிஸ் தொழிலாளர்களின் எழுச்சி நசுக்கப்படுதல்;. பிறகு, இத்தாலி, ஹங்கேரி, தெற்கு ஜெர்மனியில் 1849-இன் பேரழிவு; முடிவாக, 1851 டிசம்பர் 2-இல் பாரிஸ்மீது லூயீ போனப்பார்ட்டின் வெற்றி31. தற்காலிகமாவது, தொழிலாளி வர்க்க உரிமைத் தகுதிகளின் [நிலைநாட்டப்படும்] அபாயம் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் என்ன விலைகொடுத்து [இது சாதிக்கப்பட்டது]! இங்கிலாந்து முதலாளி, சாதாரண மக்களை மத மனநிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை முன்பே உணர்ந்திருந்தார் என்றாலும், இந்த அனுபவங்கள் அனைத்துக்கும் பின்பு, அந்த அவசியத்தை இன்னும் எவ்வளவு அதிகமாக உணர்ந்திருப்பார்? [ஐரோப்பா] கண்டத்தைச் சேர்ந்த தன் கூட்டாளிகளின் ஏளனப் பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், அடித்தட்டு மக்களைக் கிறித்துவ மதநெறிப்படுத்த, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும் பத்தாயிரக்கணக்கிலும் தொடர்ந்து செலவிட்டு வந்தார். இப்பணிக்குத் தன் சொந்த நாட்டு மதப் பணிக்குழுக்களுடன் திருப்தியடையாமல், மத நிகழ்ச்சிகளை வணிக முறையில் ஏற்பாடு செய்யும் உலகின் மிகப்பெரும் அமைப்பாளர், சகோதரர் ஜொனாதனுக்கு[20] (Brother Jonathan) வேண்டுகோள் விடுத்தார். மதப் புத்துயர்ப்புவாதத்தையும்[21] (Revivalism), [மதப் பிரச்சாரர்களான] மூடி, சாங்கி, இன்ன பிறரையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். முடிவாக, இந்த இங்கிலாந்து முதலாளி, இரட்சண்யச் சேனை (Salvation Army) அமைப்பின் ஆபத்தான உதவியையும் ஏற்றுக் கொண்டார். இந்த அமைப்பு, பண்டைய கிறித்துவ மதத்தின் பிரசாரத்துக்குப் புத்துயிர்ப்பு அளிக்கிறது. ஏழைகளே [தேவனால்] தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. மத வழியில் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுகிறது. இவ்வாறாக அது பண்டைய கிறித்துவ வர்க்கப் பகைமையின் ஒரு கூறைப் பேணி வளர்க்கிறது. இன்று தங்கள் கைப்பணத்தை வாரி வழங்கும் செல்வந்தர்களுக்கு இதே கூறு ஒருநாள் தொல்லையாக முடியலாம்.

மத்திய காலத்தின்போது நிலப்பிரபுத்துவப் பிரபுக்குலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது போல, முற்றிலும் அதே பிரத்தியேகத் தன்மையுடன், முதலாளித்துவ வர்க்கம், எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும் அரசியல் அதிகாரத்தைச் சிறிது காலத்துக்கேனும் வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது, வரலாற்று வளர்ச்சிப்போக்கின் ஒரு விதியாகவே தோன்றுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றிலும் துடைத்தழிக்கப்பட்ட ஃபிரான்சில்கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் மிகக் குறுகிய காலங்களுக்கு மட்டுமே அரசாங்கத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. லூயீ ஃபிலிப்பின் ஆட்சிக் காலத்தில், 1830 – 1848 ஆண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகச்சிறிய ஒரு பகுதிதான் அரசை ஆட்சி புரிந்தது. மிகப்பெரிய பகுதி, உயர்ந்த தகுதி வரம்பு காரணமாக வாக்குரிமையின்றி விலக்கப்பட்டிருந்தது. இரண்டாவது குடியரசின்கீழ், 1848 – 1851 ஆண்டுகளில் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தினர் ஆட்சி நடத்தினர். ஆனால், அவ்வாட்சி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவர்களின் திறமையின்மை இரண்டாவது பேரரசைக் கொண்டு வந்தது. இந்த முறைதான், அதாவது மூன்றாவது குடியரசில்தான், ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியதிகாரத்தைத் தன்பிடியில் வைத்துள்ளது. அதற்குள்ளாக, ஏற்கெனவே வீழ்ச்சிக்குரிய உயிர்த்துடிப்பான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நிலப்பிரபுத்துவத்தை அறிந்திடாத, சமுதாயம் தொடக்கநிலையிலேயே முதலாளித்துவ அடித்தளத்திலிருந்து தொடங்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தின் நீடித்து நிலைபெற்ற ஆட்சி சாத்தியமாக இருந்துள்ளது. மேலும் ஃபிரான்சிலும் அமெரிக்காவிலும்கூட முதலாளித்துவ வர்க்கத்தாரின் வாரிசுகளாகிய உழைக்கும் மக்கள் ஏற்கெனவே கதவைத் தட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

இங்கிலாந்தில் முதலாளித்துவ வர்க்கம் யாருடனும் பகிர்ந்துகொள்ளாத தனி ஆட்சியதிகாரத்தை என்றுமே வகித்ததில்லை. 1832-ஆம் ஆண்டு வெற்றிகூட அனேகமாக முதன்மையான அனைத்து அரசாங்க அலுவலகங்களையும் நிலவுடைமைப் பிரபுக்குலத்தின் கட்டுப்பாட்டிலேயே விட்டு வைத்தது. நடுத்தர வர்க்கம் பணிவுடன் இவ்வாட்சிக்குக் கீழ்ப்படிந்தது. மிகப்பெரிய மிதவாத ஆலை முதலாளி திரு.டபிள்யூ.ஏ.ஃபோர்ஸ்டர் (W.A.Forster) நிகழ்த்திய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவுக்கு முன்புவரை இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஃபிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்ளும்படி பிராட்ஃபோர்டு (Bradford) நகரின் இளைஞர்களை அச்சொற்பொழிவில் ஃபோர்ஸ்டர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். உலகில் அவர்கள் முன்னேறிச் செல்ல அதுவொரு வழியாகும் என்றார். அவர்தம் சொந்த அனுபவத்தை எடுத்துக்காட்டிப் பேசினார். ஆங்கிலம் போன்று, குறைந்தது அதே அளவுக்கு ஃபிரெஞ்சு மொழியும் அவசியமாயிருந்த உயர்குடி வட்டாரத்தில், ஓர் அமைச்சராகப் பழக நேர்ந்தபோது எவ்வளவு அசடாகத் தம்மைப் பார்த்தனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். உண்மை என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் கல்வியறிவில்லாத புதுப் பணக்காரர்களாகவே இருந்தனர். தொழில் சாமர்த்தியத்தால்[22] தாளிக்கப்பட்ட, [பிறரோடு கலக்காமல்] ஒதுங்கியிருக்கும் குறுகிய மனப்பான்மையையும், ஒதுங்கியிருக்கும் இறுமாப்பையும்விடப் பிற தகுதிகள் தேவைப்படுகின்ற அதிகாரம் மிக்க அரசாங்கப் பதவிகளைப் பிரபுக்குலத்தினரிடமே விட்டுவிடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இப்போதுங்கூட, நடுத்தர வர்க்கத்தின் கல்வி குறித்துப் பத்திரிக்கைகளில் நடைபெறும் முடிவில்லாத வாக்குவாதங்கள், ஆங்கில நடுத்தர வர்க்கம், சிறந்த கல்விபெறும் அளவுக்கான தகுதி தனக்கு உண்டென இன்னமும் கருதவில்லை என்பதுடன், மிகவும் மிதமான கல்வியையே நாடுகிறது என்பதையே காட்டுகின்றன. தானியச் சட்டங்கள் இரத்து செய்யப்பட்ட பிறகுங்கூட, அன்றைய முன்னணி மனிதர்களான காப்டென்களும், பிரைட்டுகளும், ஃபோர்ஸ்டர்களும், இன்ன பிறரும், நாட்டின் அதிகாரபூர்வமான அரசாங்கத்தில் ஒரு பங்கினைப் பெறமுடியாதவாறு இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருந்தது, முற்றிலும் இயல்பானதாகவே தோன்றுகிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய சீர்திருத்தச் சட்டம் (Reform Act) நிறைவேறிய பிறகே, அமைச்சரவையின் கதவு இவர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் இன்றைய நாள்வரைக்கும் அவர்களுடைய சமூக ரீதியான தாழ்வு மனப்பான்மையால் மிக ஆழமாகப் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த அளவுக்கு எனில், அரசு விழாக்கள் அனைத்திலும் தேசத்தை மதிப்பான முறையில் பிரதிநிதித்துவப்படுத்த, இவர்கள் தங்களின் சொந்தச் செலவிலும், தேசத்தின் செலவிலும், சோம்பேறிகளின் அலங்காரக் கும்பல் ஒன்றைத் தீனிபோட்டுக் காப்பாற்றி வருகின்றனர். தனிமதிப்பும் தனிச்சலுகையும் பெற்ற இந்தக் குழு இவர்களால் உற்பத்தி செய்யப்பட்டதுதான். என்றாலுங்கூட, தங்களில் ஒருவர் இந்தக் குழுவில் இடப்பெறும் தகுதியுடையவராகக் காணப்படும் போதெல்லாம், தாங்களே பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக ஆங்கில முதலாளித்துவ வர்க்கத்தினர் கருதுகின்றனர்.

ஆக, தொழில்துறை, வணிகத்துறை சார்ந்த நடுத்தர வர்க்கம், நிலவுடைமைப் பிரபுக்குலத்தை அரசியல் அதிகாரத்திலிருந்து முழுமையாக விரட்டியடிப்பதில் இன்னமும் வெற்றி காணவில்லை. இந்த நிலையில் மற்றொரு போட்டியாளராகிய தொழிலாளர் வர்க்கம் களத்திலே தோன்றிவிட்டது. சாசனவாத இயக்கத்துக்கும் [ஐரோப்பா] கண்டத்தின் புரட்சிகளுக்கும் பிறகு எழுந்த பிற்போக்கும், 1848-66 ஆண்டுகளில் ஆங்கில வணிகத்தின் தன்னிகரில்லா விரிவாக்கமும் (கொச்சையாக, கட்டுப்பாடற்ற வணிகம் மட்டுமே இதற்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால் இரயில் பாதைகள், மாகடல் நீராவிக் கப்பல்கள், பொதுவாகப் போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றின் பிரம்மாண்ட வளர்ச்சியே இதற்குப் பெருமளவு காரணமாகும்), மிதவாதக் கட்சியைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தொழிலாளி வர்க்கத்தை மீண்டும் விரட்டியடித்தன. சாசனவாதிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததுபோல தொழிலாளி வர்க்கம் இக்கட்சியின் தீவிரக்கொள்கைப் பிரிவாக அமைந்தது. என்றாலும், தொழிலாளி வர்க்கத்தின் வாக்குரிமைக்கான கோரிக்கைகள், படிப்படியாக, தடுக்க முடியாதவையாக ஆகின. மிதவாதிகளின் விக் (Whig) பிரிவின் தலைவர்கள் ”அஞ்சிப் பின்வாங்கிய” போது, டிஸ்ரேலி (Disraeli), சாதகமான வாய்ப்பை டோரிகள்[23] (Tories) கைப்பற்றச் செய்ததன்மூலம் தம்முடைய மேன்மை நிலையை வெளிக்காட்டினார். நகர்ப்புறங்களில் தொகுதிகளை மாற்றியமைத்ததுடன், குடியிருப்போர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பு முறை வந்தது [1772-இல்]. பிறகு 1884-இல், குடியிருப்போர் வாக்குரிமை, மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுத் தொகுதிகள் மீண்டும் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டன. இதன்மூலம் தேர்தல் தொகுதிகள் ஓரளவுக்கு சம்மாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தின் தேர்தல் வலிமையைக் கணிசமாக அதிகரித்தன. இதன் காரணமாக, இப்போது குறைந்தது 150 முதல் 200 வரையிலான தொகுதிகளில், வாக்காளர்களில் தொழிலாளி வர்க்கம் பெரும்பான்மை வகிக்கிறது. ஆனால், நாடாளுமன்ற அரசாங்கம், மரபுக்கு மதிப்பளிக்கப் போதிப்பதற்கான தலைசிறந்த பள்ளியாகும். ஜான் மானர்ஸ் பிரபு (Lord John Manners) வேடிக்கையாக, ”நமது பழம்பெரும் பிரபுக்கள்” என்று குறிப்பிட்டோரை, நடுத்தர வர்க்கம் அச்சத்துடனும் பயபக்தியுடனும் நோக்குகிறது எனில், பெருந்திரளான உழைக்கும் மக்களோ, ”அவர்களின் மேலோர்” என்று வழக்கமாகக் குறிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினரை மதிப்புடனும் மரியாதையுடனும் நோக்கினர். ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துத் தொழிலாளி உண்மையாகவே முன்மாதிரியான தொழிலாளியாக இருந்தார். தன் எஜமானரின் அந்தஸ்துக்கு அவர் காட்டிய மரியாதைமிக்க அபிமானமும், தனக்கென உரிமைகளைக் கோருவதில் அவருக்கிருந்த தன்னடக்கமான பணிவும், தம் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் தீராத, கம்யூனிசம் சார்ந்த புரட்சிகரப் போக்குகளைக் கண்டு நொந்துபோன, கத்தேடெர்-சோஷலிஸ்ட்[24] (Katheder-Socialist) கருத்துமரபைச் சேர்ந்த எங்கள் ஜெர்மன் பொருளாதார அறிஞர்களுக்கு ஆறுதல் அளித்தன.

ஆனால், தம்மளவில் தொழிலில் தேர்ந்தவர்களான ஆங்கில நடுத்தர வர்க்கத்தினர், ஜெர்மன் பேராசிரியர்களைக் காட்டிலும் வெகுதொலைவுக்குப் பார்வையைச் செலுத்தினர். அவர்கள் தொழிலாளி வர்க்கத்துடன் தயக்கத்தோடுதான் தம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டனர். சாசனவாத இயக்கம் நடைபெற்ற காலங்களில், puer robustus sed malitiosus [பையன் துடிப்பானவன்தான், ஆனாலும் விசமத்தனமானவன்] என்பார்களே, அத்தகைய மக்கள் என்னவெல்லாம் செய்ய வல்லவர்கள் என்பதை இவர்கள் அறிந்து கொண்டனர். அக்காலம் முதற்கொண்டே இங்கிலாந்து நாட்டின் சட்டங்களில் மக்கள் உரிமைச் சாசனத்தின் (People's Charter) பெரும்பகுதியைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர். இனி எந்த நாளும் மக்களைத் தார்மீக வழிமுறைகளால் மட்டுமே ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். சாதாரண மக்கள்மீது செயல்படக்கூடிய அனைத்துத் தார்மீக வழிமுறைகளில் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் இருப்பது, என்றும் இருந்து வருவது - மதம்தான். எனவேதான், பள்ளி நிர்வாகக் குழுக்களில் பாதிரிமார்களுக்குப் பெரும்பான்மை அந்தஸ்து. எனவேதான், மதச்சடங்குவாதம்[25] (ritualism) முதல் இரட்சண்ய சேனை வரையிலான அனைத்து வகைப்பட்ட மதப் புத்தெழுச்சிகளுக்கும் ஆதரவளிக்க, முதலாளித்துவ வர்க்கத்தின் அதிகரித்துவரும் சுய-வரிவிதிப்புகள்.

இப்போது [ஐரோப்பா] கண்டத்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் சுதந்திரச் சிந்தனை மீதும், மத அலட்சியத்தின் மீதும் இங்கிலாந்துக் கவுரவ மனப்பான்மையினரின் வெற்றி வந்து சேர்ந்தது. ஃபிரான்ஸ், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளர்கள் [ஆட்சியை எதிர்த்து] கலகம் செய்யத் தொடங்கினர். அவர்கள் சோஷலிசத்தால் முழுக்கவும் பீடிக்கப்பட்டனர். தங்களின் சொந்த மேம்பாட்டுக்காகக் கையாளும் வழிமுறைகளின் சட்டத் தன்மை குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அதற்கான மிகச்சிறந்த காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இங்கே, puer robustus [துடிப்பான பையன்] நாளுக்கு நாள் மென்மேலும் malitiosus [விசமத்தனமானவன்] -ஆக மாறிவிட்டான். கப்பலில் ஏறும்போது வீறாப்புடன் புகைத்துக்கொண்டு வந்த சுருட்டைக் கடல்பயண நோய்க்கு ஆளாகி [வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்ததும்] யாருக்கும் தெரியாமல் நழுவவிடும் ஓர் இளைஞனைப் போல, ஃபிரெஞ்சு, ஜெர்மன் நாட்டு முதலாளி வர்க்கத்தினர் வேறுவழி ஏதுமின்றி கடைசித் தந்திரமாகத் தங்களின் சுதந்திரச் சிந்தனையைச் சந்தடியின்றி விட்டொழிக்க வேண்டியதாயிற்று. இதுவரை ஏளனம் செய்து வந்தோர் ஒவ்வொருவராக வெளிப்படையான நடத்தையில் மதப் பற்றாளராக மாறினர். திருச்சபை, அதன் ஐதீகங்கள், சடங்குகள் குறித்து மரியாதையுடன் பேசினர். வேறு வழியில்லாதபோது ஐதீகங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கவும் செய்தனர். ஃபிரெஞ்சு முதலாளிகள் வெள்ளிக்கிழமைகளில் maigre [ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினால் மாமிசம் அனுமதிக்கப்படாத விரத நாளில் உண்ணப்படும் ஒருவகை உணவு] உண்டனர். ஜெர்மன் முதலாளிகளோ ஞாயிற்றுக்கிழமைகளில் [திருச்சபைகளில் நிகழ்த்தப்படும்] நீண்ட புராட்டெஸ்டன்ட் பிரார்த்தனை உரைகளைத் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இறுதிவரை கேட்டனர். பொருள்முதல்வாதத்தை நம்பி இவர்கள் துயரத்துக்கு ஆளாக நேர்ந்தது. "Die Religion muss dem Volk erhalten werden" – மக்களுக்காக மதத்தை உயிருடன் வைத்திருக்க வேண்டும் – அறவே அழிந்துபோய்விடாமல் சமுதாயத்தைப் பாதுகாக்க அதுதான் ஒரே வழியும், இறுதி வழியும் ஆகும். இவர்களின் துரதிர்ஷ்டம், மதத்தை நிரந்தரமாகத் தகர்த்தெறியத் தங்களால் இயன்றது அனைத்தையும் செய்து முடிக்கும்வரை இவர்கள் இதைக் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்தினரின் முறை, [தங்களை ஏளனம் செய்தோரை] ஏளனம் செய்திடவும், [அவர்களைப் பார்த்து], ”அட முட்டாள்களே! இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இதை நான் உங்களுக்குக் கூறியிருப்பேனே!” என்று கூறிடவும்.

எனினும், இங்கிலாந்து முதலாளியின் மத ரீதியான மந்தத்தனமோ, [ஐரோப்பா] கண்டத்து முதலாளியின் காலங்கடந்த இந்த மாற்றமோ, பொங்கியெழும் பாட்டாளி வர்க்க அலைக்கு அணைபோடும் என்று நான் கருதவில்லை. மரபு என்பது மிகப்பெரும் தடைச்சக்தி ஆகும். வரலாற்றின் [முன்னகரவிடாமல் தடுக்கும்] எதிர்மறை நிலைம சக்தியாகும் (vis inertiae). ஆனால், முனைப்பின்றி வாளா இருப்பது என்பதாலேயே அது நிச்சயம் தகர்த்தெறியப்பட்டுவிடும். எனவே, மதமானது முதலாளித்துவ சமுதாயத்துக்கு நீடித்து நிற்கக்கூடிய பாதுகாப்பாக ஆக முடியாது. சட்டம், தத்துவம், மதம் சார்ந்த நம்முடைய கருத்துகள் அனைத்தும், அந்தந்த சமுதாயத்தில் அப்போது நிலவும் பொருளாதார உறவுகளின் ஏறக்குறைய சேய்மையான உடன்விளைவுகளே ஆகும். எனவே, நீண்ட கால அளவில் பார்க்குமிடத்து, [சட்டம், தத்துவம், மதம் சார்ந்த] இத்தகைய கருத்துகள், பொருளாதார உறவுகளில் நிகழும் ஒரு முழுமையான மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துநிற்க முடியாது. மேலும், இயற்கையை மீறிய தெய்வீக வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தாலொழிய, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை மதச் சித்தாந்தங்கள் எவையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

உண்மையில், இங்கிலாந்திலுங்கூட உழைக்கும் மக்கள் மீண்டும் எழுந்து இயங்கத் தொடங்கிவிட்டனர். ஐயமின்றி, பல்வேறு வகைப்பட்ட மரபுகளாலும் அவர்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். பழமைவாதிகள், மிதவாதிகள் என்னும் இரு கட்சிகளே இருக்க முடியும்; தொழிலாளி வர்க்கம் மிகப்பெரும் மிதவாதக் கட்சி மூலமாகவும் அதன் வழியாகவும்தான் தன்னுடைய விமோசனத்தைத் திட்டமிட்டாக வேண்டும் என்கிற பரவலான நம்பிக்கையை ஒத்த முதலாளித்துவ மரபுகள் பல இருந்து வருகின்றன. பழம் தொழிற்சங்கங்கள் மிகப்பலவும் தம்மிடம் உறுப்பினராகச் சேர விண்ணப்பம் அளிப்போரில், முறையான பயிற்சிக் கட்டத்தைக் கடந்து வராதவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைக்கின்றன. இத்தகைய தொழிற்சங்கம் ஒவ்வொன்றும் தானே தன் சொந்தக் கருங்காலிகளை உற்பத்தி செய்வதையே இது குறிக்கிறது. தொழிற்சங்கங்களின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் முதன்முறையாக எடுத்த உத்தேச முயற்சிகளிலிருந்து மரபுரிமையாகப் பெற்ற தொழிலாளர்களின் மரபுகளும் இருந்து வருகின்றன. ஆனால், இவையெல்லாம் இருந்தபோதிலும், பேராசிரியர் பிரென்டானோ (Brentano) அவர்களேகூடத் தம் சகோதரக் கத்தேடெர்-சோஷலிஸ்டுகளுக்கு வருத்தத்துடன் அறிவிக்க வேண்டியிருந்ததுபோல, ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் போல, மெதுவாகவும் தீர்க்கமாகவும் அடி வைத்து, சில இடங்களில் தயக்கத்தோடும், சில இடங்களில் ஏறத்தாழ பலனற்ற, உத்தேச முயற்சிகளுடன் தொழிலாளி வர்க்கம் முன்னகர்ந்து செல்கிறது. அவ்வப்போது, அளவுக்கதிகமான முன்னெச்சரிக்கை காரணமாக ”சோஷலிசம்” என்னும் பெயரில் அவநம்பிக்கை கொண்டு, அதேவேளை சோஷலிசத்தின் சாரப்பொருளைப் படிப்படியாக கிரகித்துக் கொண்டு, அது முன்னகர்ந்து செல்கிறது. இந்த இயக்கம் பரவுகிறது; தொழிலாளர்களின் அடுக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பற்றிக் கொள்கிறது. இந்த இயக்கம் இப்போது இலண்டனின் கிழக்கு முனை (East End) பகுதியைச் சேர்ந்த தேர்ச்சியற்ற பிரிவுத் தொழிலாளர்களைச் சோம்பலிலிருந்து தட்டியெழுப்பியுள்ளது. இந்தப் புதிய தொழிலாளர் படையணிகள் பதிலுக்கு எத்தகைய மகத்தான உந்துசக்தியை இவ்வியக்கத்துக்கு அளித்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இயக்கத்தின் வேகம், சிலபேருடைய பொறுமையின்மையின் அளவுக்கு ஏற்ப இருக்கவில்லைதான். ஆங்கில ஆளுமையின் மிகச் சிறந்த இயல்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தொழிலாளி வர்க்கமே என்பதையும், இங்கிலாந்தில் ஒருதரம் ஓரடி முன்னோக்கி வைக்கப்படுமாயின் அதன்பிறகு பெரும்பாலும் அது ஒருபோதும் இழக்கப்படுவதே இல்லை என்பதையும் அந்தச் சிலபேர் மறக்கலாகாது. பழைய சாசனவாதிகளின் பிள்ளைகள் மேற்கூறிய காரணங்களால் போதுமான அளவுக்கு முன்னேற்றம் காணவில்லை என்றாலும், பேரப்பிள்ளைகள் அவர்தம் மூதாதையருக்கு ஏற்ற தகுதியுடையோர் என்றே தோன்றுகிறது.

ஆனால், ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி இங்கிலாந்தை மட்டுமே சார்ந்தது அன்று. குறைந்தது இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த வெற்றியைப் பெற முடியும்.40 ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் இங்கிலாந்தைவிட மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறது. ஜெர்மனியில் அவ்வியக்கத்தின் வெற்றி கைக்கெட்டும் தொலைவில்தான் இருக்கிறது. அங்கே கடந்த 25 ஆண்டுகளில் அவ்வியக்கம் கண்டுள்ள முன்னேற்றம் நிகரற்றதாகும். மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் அது முன்னேறிச் செல்கிறது. ஜெர்மன் நாட்டு நடுத்தர வர்க்கமானது, அரசியல் செயல்திறன், கட்டுப்பாடு, தைரியம், ஆற்றல், விடாமுயற்சி ஆகியவற்றில் வருந்தத்தக்கத் தன் குறைபாட்டைத் தானே வெளிக்காட்டியதெனில், ஜெர்மன் நாட்டுத் தொழிலாளி வர்க்கமோ மேற்கண்ட அனைத்துப் பண்புகளும் தன்னகத்தே உண்டு என்பதற்குப் போதுமான நிரூபணத்தை வழங்கியுள்ளது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தினுடைய முதலாவது எழுச்சியின் தொடக்கப் புள்ளியாக ஜெர்மனி விளங்கியது. தற்போதுள்ள நிலைமைகளில், ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் முதலாவது வெற்றிக்குக் களமாகவும் ஜெர்மனி விளங்கும் என்பது சாத்தியக்கூறின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டதா, என்ன?

ஃபிரெடெரிக். ஏங்கெல்ஸ்
இலண்டன், ஏப்ரல் 20, 1892.

(முன்னுரை முற்றும்)

அத்தியாயம்-1

[கற்பனாவாத சோஷலிசம்]
http://arumbithazh.blogspot.com/2015/11/1.html



அத்தியாயம்-2
[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]
http://arumbithazh.blogspot.com/2015/11/2.html



அத்தியாயம்-3
[விஞ்ஞான சோஷலிசம்]
http://arumbithazh.blogspot.com/2015/11/3_10.html

அத்தியாயம்-1 [கற்பனாவாத சோஷலிசம்]

அத்தியாயம்-1
[கற்பனாவாத சோஷலிசம்]

நவீன சோஷலிசமானது அதன் சாரப்பொருளில், ஒருபுறம், உடைமையாளர்களுக்கும் உடைமையற்றவர்களுக்கும் இடையே, முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவிவரும் வர்க்கப் பகைமைகளையும், மறுபுறம், உற்பத்தியில் நிலவிவரும் அராஜகத்தையும் அறிந்து கொள்வதன் நேரடியான விளைவாகும். ஆனால், நவீன சோஷலிசமானது, அதன் கொள்கை வடிவில், 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் வகுத்தளித்த கோட்பாடுகளின், மிகுந்த தர்க்கரீதியான ஒரு நீட்சி என்பதுபோல, பார்த்தவுடன் வெளித்தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதன் வேர்கள் பொருளாயத ரீதியிலான பொருளாதார உண்மைகளில் எவ்வளவுதான் ஆழமாகப் பதிந்திருந்த போதிலும், எந்தவொரு புதிய கொள்கையையும் போலவே, நவீன சோஷலிசமும், தொடக்கத்தில், தயாராகத் தன் கைக்குக் கிடைத்த அறிவுத்துறை சார்ந்த கருத்துகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நாட்டில், மனிதர்களின் மனத்தை, வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த அந்த மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று. ஹெகல் (Hegel) கூறுவதுபோல, உலகம் தலையால் நின்ற காலம்[26] அது. [என்ன பொருளில் எனில்] முதலாவதாக, மனிதனது தலையும், அதன் சிந்தனையால் வந்து சேர்ந்த கோட்பாடுகளுமே அனைத்து மனிதச் செயலுக்கும், மனிதக் கூட்டமைப்புக்கும் அடிப்படையெனக் கருதப்பட்டது என்னும் பொருளிலும், நாளடைவில் இதோடன்றி இந்தக் கோட்பாடுகளுக்கு முரணாயிருந்த எதார்த்தம் உண்மையிலேயே தலைகீழாக மாற்றப்பட வேண்டியிருந்தது என்னும் விரிவான பொருளிலும். அன்று நிலவிய சமுதாயம், அரசாங்கம் ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவமும், பழைய மரபுவழிக் கருத்தமைவு ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது. இதுநாள்வரை உலகம், தப்பெண்ணங்களால் மட்டுமே, தான் வழிநடத்தப்பட இடம்கொடுத்து விட்டது. கடந்த காலத்தவை அனைத்துமே அனுதாபத்துக்கும் அவமதிப்புக்குமே உகந்தவை. இப்போதுதான் முதன்முறையாக, [இருளகன்று] பகலின் ஒளி, பகுத்தறிவின் ஆட்சி தோன்றியது. இது முதற்கொண்டு, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சமத்துவம், விட்டுக்கொடுக்க முடியாத மனித உரிமைகள் ஆகியவற்றின் மூலம், மூட நம்பிக்கை, அநீதி, தனிச்சலுகை, ஒடுக்குமுறை ஆகியவை அகற்றப்பட வேண்டும்.

இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) சமூக ஒப்பந்தம்[27] (Contrat Social) ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களால், அவர்களின் சகாப்தம் அவர்களுக்கு விதித்த வரம்புகளுக்கு அப்பால், அவர்களின் முன்னோர்கள் சென்ற அளவுக்கும் அதிகமாகச் செல்ல முடியவில்லை.

ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது. அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது. மத்திய கால கைவினைக் குழும நகரத்தார் நவீன முதலாளியாக வளர்ச்சியுற்ற அதே விகிதத்தில் கைவினைக் குழுமப் பயிற்சியாளரும், கைவினைக் குழுமங்களுக்கு வெளியே இருந்த நாள்கூலி வேலையாளும் பாட்டாளியாக வளர்ச்சியுற்றனர். மொத்தத்தில், முதலாளித்துவ வர்க்கத்தினர் நிலவுடைமைப் பிரபுக்களுடனான தங்களின் போராட்டத்தில், அக்காலத்திருந்த பல்வேறு தொழிலாளி வர்க்கங்களின் நலன்களையும் சேர்த்துத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ள முடிந்தது. என்றாலும், நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஓரளவு வளர்ச்சி பெற்ற வர்க்கத்தின் சுயேச்சையான கொந்தளிப்புகள், ஒவ்வொரு மாபெரும் முதலாளித்துவ இயக்கத்தின்போதும் இருக்கவே செய்தன. எடுத்துக் காட்டாக, ஜெர்மன் மதச் சீர்திருத்தத்தின் போதும், விவசாயிகளுடைய போரின் போதும் போராடிய அனாபாப்டிஸ்டுகள்[28] (Anabaptists), அவர்களின் தலைவராகிய தாமஸ் முன்ஸேர் (Thomas Munzer), மாபெரும் ஆங்கிலப் புரட்சியில் சமன்வாதிகள்[29] (Levellers), மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியில் பாபெஃப் (Babeuf) ஆகியோரைச் சொல்லலாம்.

இன்னமும் வளர்ச்சி பெறாத ஒரு வர்க்கத்தின் இந்தப் புரட்சிகர எழுச்சிகளுக்குப் பொருத்தமான கொள்கைவழி விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன. 16-வது, 17-வது நூற்றாண்டுகளில் [முன்வைக்கப்பட்ட] இலட்சிய சமுதாய நிலைமைகள் பற்றிய கற்பனாவாதச் சித்திரங்கள்[30], 18-வது நூற்றாண்டில் (மொரெல்லி (Morelly), மாப்லீ (Mably) ஆகியோர் முன்வைத்த) உண்மையான கம்யூனிசத் தன்மை வாய்ந்த கொள்கைகள் [அவ்வாறானவை]. சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாக இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல, வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்களை அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாக இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians): பாட்டாளி வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon); முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம் பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).

மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்கால கட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை. ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களைப் போலவே இவர்களும், தொடக்கச் செயல்பாடாக, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை விடுவிக்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆனால், மனிதகுலம் முழுவதையுமே உடனடியாக விடுவிக்கப் போவதாய்க் கூறிக் கொள்கின்றனர். அவர்களைப் போலவே இவர்களும், பகுத்தறிவின் ஆட்சியை, நித்தியமான நீதியின் ஆட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் காண விரும்பும் ஆட்சிக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் கூறிய ஆட்சிக்கும் இடையே, விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது.

நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராக உள்ளது. தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம். இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அப்படிப்பட்டவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார்; உண்மையை அவர் புரிந்து கொள்கிறார். அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார், உண்மை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் தொடர் சங்கிலி நிகழ்வுகளில், அவசியத்தின் காரணமாக நிகழ்ந்த, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு அன்று. வெறுமனே இதுவொரு மகிழ்ச்சியான விபத்தே ஆகும். 500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.

புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், எவ்வாறு இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசு, பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயம் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து]. உண்மையில் இந்த நித்திய பகுத்தறிவு என்பது, எதார்த்தத்தில், அப்போதுதான் முதலாளியாகப் பரிணமித்துக் கொண்டிருந்த 18-ஆம் நூற்றாண்டுக் குடிமகனின் இலட்சிய பூர்வமான புரிந்துணர்வே அன்றி வேறல்ல என்பதையும் நாம் கண்டோம். இந்தப் பகுத்தறிவு பூர்வமான சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் ஃபிரெஞ்சுப் புரட்சி நடைமுறைப்படுத்திக் காட்டியது.

ஆனால், புதிய சூழலின் நிலைமைகள் முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை என்பது தெரிய வந்தது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த அரசு முழுமையாகத் தகர்ந்துவிட்டது. ரூஸோவின் சமூக ஒப்பந்தம் பயங்கர ஆட்சியில்[31] தன் நிறைவேற்றத்தைக் கண்டது. தங்களின் அரசியல் ஆற்றலில் நம்பிக்கை இழந்துபோன முதலாளித்துவ வர்க்கத்தினர், [பயங்கர ஆட்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள], முதலில் நெறியாளர் குழுவின்[32] ஊழலிலும், முடிவில் நெப்போலியனியக் கொடுங்கோன்மையின் அரவணைப்பிலும் அடைக்கலம் புகுந்தனர். உறுதியளிக்கப்பட்ட நித்திய சமாதானம், நாடு பிடிப்பதற்கான ஒரு முடிவில்லா யுத்தமாக மாறியது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த சமுதாயமும் இதே கதிக்கு ஆளானது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான பகைமை, பொதுவான செல்வச் செழிப்பில் கரைந்துபோவதற்கு மாறாக, இப்பகைமையை ஓரளவுக்குத் தணித்துவந்த கைவினைக் குழுமச் சலுகைகளும் பிற சலுகைகளும் நீக்கப்பட்டதாலும், திருசபையின் அறக்கட்டளை நிறுவனங்கள் நீக்கப்பட்டதாலும், மேலும் கடுமையாகிவிட்டது. நிலப்பிரபுத்துவத் தளைகளிலிருந்து விடுபட்ட ”சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property), இப்போது உண்மையாகவே கைவரப் பெற்றது[!]. இந்தச் சுதந்திரம், சிறு முதலாளிகளுக்கும், சிறு [நில] உடைமையாளர்களுக்கும், பெரும் முதலாளிகள், பெரும் நிலப்பிரபுகளின் மேலாதிக்கத்துக்கான போட்டியின் பிடியில் நசுக்கப்பட்டு, தங்களின் சொற்பச் சொத்துகளை இந்த மாபெரும் பிரபுக்களுக்கு விற்பதற்கான சுதந்திரமாக மாறிப்போனது. இவ்வாறாக, சிறு முதலாளிகளையும், சிறு விவசாய உடைமையாளர்களையும் பொறுத்தவரை, ”சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property) என்பது “சொத்துடைமையிலிருந்து சுதந்திரம்” (freedom from property) என ஆகிப்போனது. முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாக ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை இரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாக ஆனது. புரட்சிகர முழக்கமான ”சகோதரத்துவம்”[33] (fraternity) என்பது, [மேலாதிக்க] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாக ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது. முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம் என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.

சுருங்கக் கூறின், ”பகுத்தறிவின் வெற்றி” (triumph of reason) – யிலிருந்து உதித்தெழுந்த சமூக, அரசியல் நிறுவனங்கள், தத்துவ அறிஞர்களின் ஆரவாரமான வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில், கொடுமையான ஏமாற்றம் தரும் கேலிக் கூத்துகளாகிவிட்டன. இந்த ஏமாற்றத்தை வரைமுறைப்படுத்திட வல்லுநர்கள் இல்லாதது குறைபாடாக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அவர்களும் வந்து சேர்ந்தனர். 1802-இல் சான்-சிமோனின் ஜெனீவாக் கடிதங்கள் வெளியாயின. ஃபூரியேயின் கொள்கைக்கான அடிப்படைக் கருதுகோள்கள் 1799 முதலே உருவாகி வந்த போதிலும் அவருடைய முதலாவது நூல் 1808-இல் வெளிவந்தது. 1800 ஜனவரி 1-ல் இராபர்ட் ஓவன் நியூ லானார்க்கின்[34] (New Lanark) மேலாண்மைப் பொறுப்பை ஏற்றார்.

ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்தி சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே பிரம்மாண்ட உற்பத்தி சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது. எனவே, 1800-ஆம் ஆண்டு வாக்கில், புதிய சமுதாய அமைப்பிலிருந்து உதித்தெழுந்த இந்த மோதல்கள் அப்போதுதான் உருவெடுக்கத் தொடங்கியிருந்தன என்றால், இம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களோ இப்போதும்கூடக் குறைவாகவே வளர்ச்சி கண்டிருந்தன. பாரிஸ் நகரத்தின் ”ஏதும் இல்லாத” சாதாரண மக்கள், பயங்கர ஆட்சியின்போது, குறுகிய காலத்துக்கு மேலாதிக்கம் பெறுவதும், இவ்வாறாக முதலாளித்துவ வர்க்கத்தினரே இருந்த போதிலும், [அவர்களையும் மிஞ்சி] முதலாளித்துவப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதும் சாத்தியப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்ததன் மூலம், அப்போதைய நடப்பு நிலைமைகளில், அவர்களின் ஆதிக்கம் நீடித்து நிலைபெறுவது எவ்வளவு அசாத்தியமானது என்பதையே அவர்கள் நிரூபித்துக் காட்டினர். பாட்டாளி வர்க்கமானது, ”ஏதும் இல்லாத” இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத் தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.

இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்த கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பிரச்சாரத்தின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்]. இந்தப் புதிய சமூக அமைப்புகள் கற்பனாவாத அமைப்புகளாகவே நின்றுபோக முன்கூட்டியே விதிக்கப்பட்டவை. அவை எந்த அளவுக்கு முழுமையாகவும் நுணுக்கமாகவும் வகுக்கப்பட்டனவோ, அந்த அளவுக்கு, தூய கற்பனைப் புனைவுகளாக அவை தடம்புரண்டு செல்வதை, தவிர்க்க முடியாது.

இந்த உண்மை விவரங்கள் நிலைநாட்டப்பட்டதுமே, பிரச்சினையின் இப்பக்கத் தரப்பின்மீது இன்னும் ஒருநொடி அதிகமாகவும் நாம் கருத்தூன்றி விவரிக்கத் தேவையில்லை. தற்போது இது முற்றிலும் கடந்த காலத்துக்கு உரியதாகிவிட்டது. இன்று நம்மை நகைக்க மட்டுமே வைக்கும் இந்தக் கற்பனைப் புனைவுகள் குறித்து ஆரவாரத்துடன் சொற்சிலம்பம் ஆட அவற்றை இலக்கியச் சிறு குஞ்சுகளிடம் விட்டுவிடலாம். இவர்தம் சொந்த மொட்டை வாதங்கள், இத்தகு ”பைத்தியக்கார” கற்பனைகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மேன்மை கொண்டதெனப் பெருமையடித்துக் கொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, கற்பனைப் புனைவான மேலோட்டை உடைத்துக் கொண்டு திசையெங்கும் வெளிக்கிளம்பும் அற்புதமான விழுமிய சிந்தனைகளையும், சிந்தனைத் துளிர்களையும் கண்டு நாம் பரவசமடைகிறோம். இந்த அற்பவாதிகளின் (Philistines) குருட்டுக் கண்களுக்கோ இவை புலப்படுவதில்லை.

சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இந்தப் புரட்சியின்போது முதலாளித்துவ வர்க்கம் அதிவேகத்தில் வளர்ச்சி பெற்றது உண்மைதான். ஒருபாதி, பிரபுக்குலம், திருச்சபை ஆகியவற்றின் நிலங்களைப் பறிமுதல் செய்து, அதன்பின் அவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்து, ஊக வணிகம் செய்ததன் மூலமும், மறுபாதி, இராணுவ ஒப்பந்தங்களைப் பயன்படுத்தித் தேசத்தின் பெயரில் மோசடிகள் புரிந்ததன் மூலமும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த ஏமாற்றுக்காரர்களின் ஆதிக்கம்தான், நெறியாண்மைக் குழுவின் ஆட்சியில், ஃபிரெஞ்சு நாட்டை அழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்றது. இவ்வாறாக, அவ்வாதிக்கம் நெப்போலியனுக்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

எனவே, சான்-சிமோனைப் பொறுத்தவரை, மூன்றாம் வகைப்பிரிவினருக்கும் சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை ”தொழிலாளர்களுக்கும்” ”சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். ”தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம். சோம்பேறிகள் அறிவுசார் தலைமைப் பொறுப்புக்கும், அரசியல் மேலாதிக்கத்துக்குமான செயலாற்றலை இழந்து விட்டனர் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. புரட்சியால் முடிவாக நிலைநாட்டப்பட்டும் விட்டது. உடைமையற்ற வர்க்கங்களுக்கும் இத்தகைய செயலாற்றல் இல்லை என்பது பயங்கர ஆட்சியின் அனுபவங்கள் நிரூபித்துவிட்டதாக சான்-சிமோனுக்குத் தோன்றியது. அப்படியெனில், தலைமை தாங்கப் போவதும், அதிகாரம் செலுத்தப் போவதும் யார்? சான்-சிமோனின் கருத்துப்படி விஞ்ஞானம், தொழில்துறை இவையிரண்டும் ஒரு புதிய மதப்பிணைப்பில் இணைந்து, [இதைச் சாதிக்க வேண்டும்.] மதச்சீர்திருத்தக் காலம்தொட்டு இழந்துவிட்ட மதக் கருத்துக்களின் ஒற்றுமையை மீட்டளிக்க இவையிரண்டும் முன்னமே விதிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், அத்தகைய மதக் கருத்துகளின் ஒற்றுமை, கட்டாயமாக, ஆன்மீக வழிப்பட்ட, கட்டுறுதியான படிநிலை அமைப்புக் கொண்ட ஒரு ”புதிய கிறித்துவமாகவே” இருக்க வேண்டும். ஆனால், விஞ்ஞானம் கல்விமான்களால் ஆனது; தொழில்துறையோ அதன் முதலிடத்தில் உழைக்கும் முதலாளிகள், ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரைக் கொண்டது. இந்த முதலாளிகள், ஒருவகைப் பொது அதிகாரிகளாக, ஒருவகை சமூக அறங்காவலர்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது உண்மையிலேயே சான்-சிமோனின் எண்ணமாக இருந்தது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்த முதலாளிகளே இன்னமும், அதிகாரம் செலுத்தவல்ல, பொருளாதார ரீதியாகச் சலுகை பெற்ற நிலையை வகிப்பார்கள். முக்கியமாக வங்கி உடைமையாளர்கள், கடன் செலாவணியை ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒட்டுமொத்தச் சமூக உற்பத்தியையும் நெறிப்படுத்தக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஃபிரான்சில் நவீனத் தொழில்துறையும், அதனுடன்கூட முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பெரும்பிளவும் அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்துக்கு, இந்தக் கருத்தமைவு மிகச்சரியாய்ப் பொருந்துவதாகவே இருந்தது. ஆனால், சான்-சிமோன் அதிலும் குறிப்பாக வலியுறுத்திக் கூறுவது இதுதான்: முதலாவதாக, ஏனைய அனைத்துக்கும் மேலானதாக, அவரின் கவனத்தை ஈர்ப்பது, மிகுந்த எண்ணிக்கை கொண்ட, மிகவும் ஏழ்மையான வர்க்கத்தின்” ("la classe la plus nombreuse et la plus pauvre") துன்பமும் துயரமும்தாம்.

சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், ”அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கின்றார். அதே கடிதங்களில், அவர் பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் கண்டு கொள்கிறார். ”ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்; அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்றதாகும் எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருள்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. எனினும், மிகவும் தெள்ளத் தெளிவாக இங்கே வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், மனிதர்கள் மீதான [இன்றைய] அரசியல் அதிகாரம், வருங்காலத்தில் பொருள்களின் நிர்வாகமாகவும், உற்பத்திச் செயல்முறைகளின் மேலாண்மையாகவும் மாறிவிடும் என்னும் கருத்தாகும். அதாவது, அண்மைக் காலத்தில் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ”அரசின் ஒழிப்பு” என்கிற கருத்தே இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

சான்-சிமோன், அவர் காலத்து அறிஞர்களை மிஞ்சித் தனக்கிருந்த இதே மேதமையை, நேச நாடுகளின் படைகள் பாரிஸ் நகருக்குள் நுழைந்த பிறகு உடனடியாக 1814-லும், மீண்டும் 1815-இல் நூறு நாள் போரின்[35] போதும் வெளிப்படுத்தினார். ஃபிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் கூட்டணியும், பிறகு ஜெர்மனியுடன் இவ்விரு நாடுகளின் கூட்டணியும்தான் ஐரோப்பாவின் செழிப்பான வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் ஒரே உத்திரவாதம் எனப் பிரகடனம் செய்கிறார். வாட்டர்லூ[36] வெற்றியாளர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு 1815-இல் ஃபிரெஞ்சு நாட்டவர்க்கு உபதேசிக்க எந்த அளவுக்கு வரலாற்று முன்னோக்கு வேண்டுமோ, அந்த அளவுக்குத் தைரியமும் வேண்டும்.

சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம். இத்தன்மையின் காரணமாக, பிற்காலத்து சோஷலிஸ்டுகளின் அனைத்துக் கருத்துகளையும், கண்டிப்பாகப் பொருளாதாரம் சார்ந்தவையாக இல்லாதவை உட்பட, சான்-சிமோனின் கருத்துகளில் கருவடிவில் இருக்கக் காண்கிறோம். அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காணுகிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாக, எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. முதலாளித்துவ வர்க்கத்தினர், புரட்சிக்கு முன்பு அவர்களுக்கு உத்வேகத்துடன் தீர்க்க தரிசனம் வழங்கியோர், புரட்சிக்குப் பிறகு அவர்களைத் துதிபாடுவோர் ஆகியோர்மீது அவர்களின் சொற்களைக் கொண்டே தாக்குதல் தொடுக்கிறார். முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். பகுத்தறிவு மட்டுமே ஆட்சி செலுத்தும் சமுதாயம், அனைவருக்கும் இன்ப வாழ்வை வழங்கும் நாகரிகம், வரம்பில்லா மனித மேம்பாடு ஆகியவற்றை முதலாளித்துவ உலகம் படைத்தளிக்கும் என முன்பு அதன் தத்துவ அறிஞர்கள் அளித்த பிரகாசமான வாக்குறுதிகளையும், அவர்காலத்து முதலாளித்துவச் சித்தாந்திகளின் நடைமுறைக்கு ஒவ்வாத சொல்லடுக்குளையும், தற்போதைய முதலாளித்துவ அவலங்களுக்கு நேரெதிரே நிறுத்திக் காட்டுகிறார். மிகவும் ஆரவாரமான சொல்லடுக்குகளுக்கு இணையாக, எவ்வாறு எங்கு நோக்கினும் மிகவும் பரிதாபகரமான எதார்த்தம் நிலவுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சொல்லடுக்குகளின் இந்த மிக மோசமான படுதோல்வியைக் காரசாரமான தன்னுடைய கிண்டலால் திணறடிக்கிறார்.

ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஒரு அங்கத எழுத்தாளராகவும் [புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்], நிச்சயமாக எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும் கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.

ஆனால், ஃபூரியே, சமுதாயத்தின் வரலாறு பற்றிய அவரது கருத்தோட்டத்தில்தான் தலைசிறந்து விளங்குகிறார். இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. ”நாகரிகமற்ற காலகட்டத்தில் எளிய வடிவில் நடைமுறையிலிருந்த தீயொழுக்கம் ஒவ்வொன்றையும் நாகரிகக் கட்டம், சிக்கலான, குழப்பம்மிக்க, தெளிவற்ற, வஞ்சகத் தன்மை கொண்ட வாழ்க்கை வடிவமாக உயர்த்தியுள்ளது” என்பதை நிரூபிக்கிறார். நாகரிகம், ”ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”. தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது. எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, ”நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். அதே இயக்கவியலைப் பயன்படுத்தி, வரம்பில்லா மனித மேம்பாடு குறித்துப் பேசுவதை எதிர்த்து ஃபூரியே வாதிடுகிறார். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் அதன் ஏறுமுகக் காலகட்டத்தையும், இறங்குமுகக் காலகட்டத்தையும் பெற்றுள்ளது என்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பை, ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்காலத்துக்கும் பயன்படுத்துகிறார். கடைசி முடிவாகப் பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.

ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், புதிய கருவித் தயாரிப்பு எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத் தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.

புதிய உற்பத்தி முறை அதன் ஏறுமுகத்தின் தொடக்க நிலையிலேதான் இன்னமும் இருந்தது. இப்போது அதுதான் இயல்பான, முறையான உற்பத்தி முறையாக இருந்தது. தற்போதைய நிலைமைகளில் சாத்தியமான ஒரேவொரு உற்பத்தி முறையாகவும் இருந்தது. எனினும், இந்த நிலையிலுங்கூட அது மிக மோசமான சமூகக் கேடுகளை உண்டாக்கி வந்தது. வசிக்க வீடில்லாத மக்கள் கூட்டம், பெரிய நகரங்களின் படுமோசமான குடியிருப்புகளில் மந்தைகளாக அடைபட்டுக் கிடந்தனர். மரபு வழியிலான அனைத்து ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளும், குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிதலும், குடும்பப் பிணைப்புகளும் தளர்ந்து போயின. மிகுதியான வேலைப்பளு, முக்கியமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினர், நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கும், விவசாயத்திலிருந்து நவீனத் தொழில்துறைக்கும், நிலையான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாள்தோறும் மாறுகின்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்குமாக, முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் திடீரெனத் தூக்கியெறியப்பட்டு, முழுதும் நம்பிக்கை இழந்தோராயினர்.

இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். இராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். அதாவது, மனிதனின் பண்பியல்பு, ஒருபுறம் மரபுவழியிலும், மறுபுறம் அத்தனிநபரின் ஆயுள்காலத்தில் அதிலும் முக்கியமாக அவனுடைய வளர்ச்சிக் கட்டத்தில் நிலவுகின்ற சூழ்நிலையாலும் உருவாக்கப்படுகின்றது. அவர்சார்ந்த வர்க்கத்தினரில் மிகப்பலர் தொழில்புரட்சியில் குளறுபடியையும், குழப்பத்தையும், குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, குறுகிய காலத்தில் பெருஞ்செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பையுமே கண்ணுற்றனர். ஓவனோ தன்னுடைய மிகவிருப்பமான கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் குளறுபடியிலிருந்து ஒழுங்கை நிலைநாட்ட, இந்தத் தொழில்புரட்சியில் நல்வாய்ப்பு இருப்பதைக் கண்டார். ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராக இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும் மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. முதன்முதலாக நியூ லானார்க்கில் அவற்றை அறிமுகப்படுத்தினார். இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வராதபடி, அந்த அளவுக்கு அங்கே அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த இலாபத்தை அளித்து வந்தது.

இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. ”இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்.” தன்னுடைய தொழிலாளர்களுக்கு ஓவன் வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே அவை இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாகச் செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன. ”இருந்த போதிலும், இந்த 2,500 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி, சமுதாயத்துக்கு நாள்தோறும் உற்பத்தி செய்து வருகின்ற உண்மையான செல்வத்தின் அளவுக்கு, அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு உற்பத்தி செய்திட, 6,00,000 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி தேவைப்பட்டிருக்கும். [இன்று] 2,500 பேர் நுகர்ந்த செல்வத்துக்கும், [அன்று] 6,00,000 பேர் நுகர்ந்திருக்கக்கூடிய செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, [அவ்வகையில் மீந்திருக்க வேண்டிய செல்வம்] என்ன ஆயிற்று என என்னை நானே கேட்டுக் கொண்டேன்” [என்று ஓவன் எழுதினார்].

விடை தெளிவானது. ஆலையின் உடைமையாளர்களுக்கு, அவர்கள் போட்ட மூலதனத்துக்கான 5 சதவீதத் தொகையையும், அதோடு சேர்த்து 3,00,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட நிகர இலாபத்தையும் வழங்குவதற்காக இச்செல்வம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. நியூ லானார்க் ஆலைக்குக் கூறப்பட்ட இந்த உண்மை, இங்கிலாந்திலுள்ள அனைத்து ஆலைகளுக்கும் இன்னும் அதிக அளவுக்குப் பொருந்துவதாக இருந்தது.

”எந்திரச் சாதனங்கள், சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், இந்தப் புதிய செல்வத்தைப் படைக்காமல் இருந்திருப்பின், நெப்போலியனுக்கு எதிராகவும், சமுதாயத்தின் பிரபுக்குலக் கோட்பாடுகளை ஆதரித்தும், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட யுத்ததங்களைத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்காது. என்றாலும், இந்தப் புதிய சக்தி உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாகும்.” [குறிப்பு 1.சி., பக்கம் 22]. எனவே, இந்தப் புதிய சக்தியின் பலன்கள் அவர்களுக்கே உரியனவாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மாண்ட உற்பத்தி சக்திகள், இதுநாள்வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தப்பட்டன. ஓவனுக்கோ அவை சமுதாயத்தின் மறுகட்டமைப்புக்கான அடித்தளங்களை நல்கின. அனைவரின் பொதுச் சொத்தாகவும், அனைவரின் பொது நன்மைக்காகச் செயல்படுத்தப்படப் போகிற சக்திகளாகவும் அமைந்தன.

ஓவனுடைய கம்யூனிசம் முற்றிலும் இந்தத் தொழில்முறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். வணிகக் கணக்கீட்டின் விளைவு எனக் கூறலாம். இறுதிவரை, இந்த நடைமுறை சார்ந்த தன்மையை அது தொடர்ந்து மெய்ப்பித்து வந்தது. இவ்வாறு, 1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். வருங்காலத்துக்கான அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டத்தில், விவரங்களின் நுட்பமான வரையறுப்புகள், அப்படியொரு நடைமுறை அனுபவ அறிவுடன் கையாளப்பட்டுள்ளன. அடித்தளத் திட்டம், முன்புறக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, மேலிருந்து நோக்கும் பொதுவான காட்சி என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகச் சீர்திருத்தத்துக்கான ஓவனின் வழிமுறையை ஏற்றுக் கொண்டால், அவர் உள்ளபடியே முன்வைத்துள்ள விவரங்களின் ஒழுங்கமைப்புக்கு எதிராக, நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து சொல்வதற்கு ஏதுமில்லை.

கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அவர்களிடையே பணியாற்றினார். [அக்காலகட்டத்தில்] இங்கிலாந்தில் தொழிலாளர்கள் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் இராபர்ட் ஓவனின் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தொழில்கூடங்களில் பெண்கள், குழந்தைகளின் வேலைநேரத்துக்கு வரம்பு விதித்த முதலாவது சட்டத்தை[37], ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், 1819-இல் நிர்ப்பந்தம் கொடுத்து. நிறைவேறச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்க கூட்டமைப்பாக இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராக இருந்தார்[38]. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாக, குறைந்தது அவை வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. மறுபுறம், தொழிலாளர்களின் உற்பத்திப் பொருள்களை உழைப்பு-நோட்டுகளுக்குப் பரிவர்த்தனை செய்துகொள்ள உழைப்புக் கடைவீதிகளை[39] அவர் அறிமுகப்படுத்தினார். இந்த உழைப்பு-நோட்டுகளின் அலகு ஒரு மணிநேர வேலை ஆகும். இந்த நிறுவனங்களின் தோல்வி நிச்சயமாகத் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் புரூதோனின் (Proudhon) பரிவர்த்தனை வங்கி[40] அமைக்கப்படுவதற்கு இவை முழு அளவில் முன்னோடியாக விளங்கின. [புரூதோனின் வங்கியைப்போல] இவை சமூகக் கேடுகள் அனைத்துக்கும் சஞ்சீவி மருந்தெனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்தை மேலும் தீவிரமாக மாற்றியமைப்பதற்கான முதலாவது முயற்சி மட்டுமே. அந்த வகையில், ஓவனின் நிறுவனங்கள் புரூதோனின் வங்கியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கின.

கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோஷலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது. மிக அண்மைக் காலம்வரை ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிஸ்டுகள் அனைவரும் இவ்வகைச் சிந்தனை முறைக்கு வழிபாடு செய்துவந்தனர். வைட்லிங்கின் (Weitling) சிந்தனை உட்பட, முற்பட்ட ஜெர்மன் கம்யூனிசம் இதே சிந்தனை மரபைச் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவருக்கும் சோஷலிசம் என்பது முற்றான உண்மை (absolute truth), பகுத்தறிவு, நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சோஷலிசம் தன் சொந்த சக்தியின் சிறப்புத் தன்மையாலேயே அனைத்துலகையும் வெற்றிகொள்ள அதனைக் கண்டுபிடித்துச் சொன்னாலே போதும். முற்றான உண்மை என்ற வகையில் அது காலம், இடம், மனிதனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்திருக்கவில்லை. எப்போது, எங்கே அது கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வெறும் தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். இவ்வளவு இருந்தும்கூட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை வெவ்வேறு சிந்தனை மரபுகள் ஒவ்வொன்றின் நிறுவனருக்கும் வெவ்வேறு வகையினதாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருடைய விசேஷ வகைப்பட்ட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை மீண்டும், அவருடைய அகவயப் புரிதல், அவருடைய வாழ்க்கை நிலைமைகள், அவருடைய அறிவின் ஆழம், அவருடைய மதிநுட்பப் பயிற்சி ஆகியவற்றால் தாக்கம் பெறுகின்றன. இந்தக் காரணத்தால், இந்த முற்றான உண்மைகள் [தமக்குள் பொதுக் கூறுகள் எதுவுமின்றி] ஒன்றையொன்று பரஸ்பரம் விலக்கி வைப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் வந்தடைவது சாத்தியமன்று. எனவே, இதிலிருந்து ஒருவகையான கதம்பவாத, சராசரி சோஷலிசத்தைத் தவிர வேறெதுவும் தோன்ற வழியில்லை. உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோஷலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோஷலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களை இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; வேறுபட்ட குழுக்களின் நிறுவனர்களால் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச எதிர்ப்பைத் தூண்டும்படியான அத்தகு விமர்சன அறிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்காலச் சமுதாயம் குறித்த சித்திரங்கள் ஆகியவற்றின் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; [பல்வேறு சிந்தனைகளில் அடங்கியிருந்த] தனிப்பட்ட உள்ளடக்கக் கூறுகளின் மிகத் தெளிவான கூர்முனைகள், நீரோடையில் உருண்டு மழுங்கிய கூழாங்கற்களைப் போல, விவாத நீரோட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு, மிக எளிதில் கலந்து உருவாக்கப்பட்ட குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு.

சோஷலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதை [கற்பனை அல்லாத] ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.

(அத்தியாயம்-1 முற்றும்)

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...