Friday, March 20, 2015

வளர்ந்து விட்டேன்

வளர்ந்து விட்டேன்
வானுயரத்தில்
விமானம் பறந்தால்
இன்னமும் எட்டிபார்த்துவிட
ஏங்குகிறது மனது

வளர்ந்து விட்டேன் செடிகளின்
அடர்த்தியில்
மறைந்துள்ள ஓணானை இன்னமும்
தூரோகக்
கண்ணோடு
பார்க்கத் தூண்டுகிறது மனது
அணில்தான் கருணையின் பிறப்பிடமாம்

வளர்ந்து விட்டேன்
திரண்ட கூட்டத்தின்
நடுவே
திருவிழாவை
மறந்துவிட்டு
சின்னச் சின்ன திருட்டுகளை
இன்னமும்
செய்யச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் வாழ்க்கையே விளையாட்டாகிவிட விளையாடும்
தருவாயில்
இன்னமும் போங்காட்டம்
ஆடச் சொல்கிறது
மனது

வளர்ந்து விட்டேன் இன்னமும்
ஆணோடு பெண்ணும்
பெண்ணோடு ஆணும்
பழகுவதை சந்தேகத்துடனே பார்வையை திருப்பச் சொல்கிறது மனது

நான்
வளர்ந்துவிட்டேனா
எனும் கேள்வியை
மனதிடம் வைக்கையில்

இளம்பருவம் எதை வியப்பில் ஏற்றியதோ அதுவாகவே நீயிருக்கிறாய் அதுதவறில்லை

நில்!

இறுதியாக ஒன்றைச் சொன்னாயே உடன்படவில்லை
நான்

இன்னமும் வளராத
ஆறறிவு வெற்றுடம்புதான் நீ
வளரவேயில்லை
வளரவிடவும்
முயன்றதில்லை

முகத்தைப்பார்
ஆணுக்கு பெண்
பெண்ணுக்கு ஆண்
அப்படியே கண்ணாடித் திரையில் தெரியும்

விலகிப் போ
சந்தேகப் பார்வையை விட்டொழிந்தால்
நீயும்
வளர்ந்த மனதனே! சொல்லி முடித்தது
மனது,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...