நீண்ட இடைவெளிகள்
எனக்கும் அடுத்த
முகங்களுக்கும்
என்னை நானே
துறந்துவிட்டு
வாழ வேண்டுமந்த
அடுத்த
முகங்களுக்காகவென
ஏகபோக அறிவுரைகள்
என்னுள்
புகுத்தப்படுகிறது
எனக்கு மட்டுமா
முகங்களனைத்திலும்
அறிவுரைகளே
மிஞ்சியிருக்கின்றன
வெளிச்சத்திற்கு
வரும் முதல் கணிவும்
பணிவும் கலந்திருக்க
முதல் பணியதுவென
நிந்திக்கிறதென் காலம்
எப்படி முடியும்
என்னால்?
என்னை நான்
துறந்துவிட்டு
அடுத்தவருக்காக
வாழ்வதென்பதை
ஏற்க முதலில்
என் இருதயத்தில்
இடமிருக்க வேண்டுமே
அந்த அடுத்த
முகங்களின்
மனிதாபிமானத்தை
துலக்கி யெடுத்தால்
துரும்புகளே மிஞ்சுகிறதே
விட்டுத்தள்ளு
விவாதங்கள் வேண்டாம்
சரிபோகட்டும்
முதலில் சரிசெய்யென
கேட்கிறாய்
நியாயந்தான்
நானென்பதை
அதுவரையில்
தாராளமயமாக்கினால்
விளக்கெரிகிறதென்
விளக்கங்களில்
வந்து நுகர்ந்துவிடு
வலிகளப்போது
விளங்கும்
சில வேளைகளில்
தனிமையில்
யோசிக்கும்போதும்
தனியுலகில்
திரிகின்றபோதும்
என்னை சுற்றியே
என்
எண்ணங்கள் சுழலுகிறது
ஒருபடி மேலாய்போய்
நான் இறந்தாலும் கூட
என்னைப்பற்றியே
என்
நினைவுகள் இருக்கும்
ஆக முதலில்
என்னை நானே
சரி செய்துக்கொள்ள
வேண்டியது
தேவையாகவும்
முக்கியமாகவும்
இருக்கிறது
ஒருவேளை நானதை
செய்து முடிக்கையில்
அடுத்த முகங்கள்
என் முகத்தோடு
ஒட்டிக்கொள்ள
துடிக்கும்!
முகமூடிகள்
தேவையா எனக்கு?
என்னை நானே துறந்து
விடும் நாள் வருகையில்
என்
கல்லறை தோட்டத்தில்
பூப்பறிப்பார்கள் அந்த
அடுத்த முகங்கள்
இறந்த கிடப்பது
நானென அறியாமல்
எனக்கிது தேவையா?
எனில்
நான் நானாகவே இருக்க
விரும்புகிறேன்
என் தாகம் தணிக்க
தண்ணீர்க் குவளைகளை
நானே
எடுத்துக்கொள்கிறேன்
முதலில் என்னை
நானாக
இருக்க விடுங்கள்,,,
அருமையான கவிதை .
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete