பைத்தியமானதின் உன்னதம்
தளர்ந்து போன மனங்களின்
தூசி படிந்த இரவுகளை
தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு
இல்லாது தவிக்கும்
பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ...
தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ...
ஆசைகள் பேராசைகளாகி அதுவே
நிராசைகளாக
எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு வீதியுலா கொள்கிறது ...
உணர்தல் விளக்கங்களாக
உயிர்கள் அனைத்தும்
பைத்தியங்களே !!!
சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள் அமையாத எல்லாம் பைத்திங்களாகி போன
ஒரு பெருங்கூட்டம்
ஒற்றை மனிதனை சுற்றி சுற்றி
அவன் பைத்தியமென கூச்சலிடுவது நகைமுரண் கொண்ட வேடிக்கைதான் ...
அட பைத்தியக்காரா ...
என்றவன் உன்னை சொல்லும்
முன் ஒரு பேரன்பையாவது
விதைத்துவிட்டு போ ...
வாழ்வான் அவனெனும் உலகில்
சூழ்ந்திருக்கும் ஏதோவொரு
பைத்தியம் ...
0 comments:
Post a Comment