Saturday, March 12, 2016

ரூ 9000 கோடி மல்லையாக்களும், அரசின் 9 ரூபாய் நோட்டும்,

இந்திய தேசிய ஒருமைபாட்டிற்கு
ஆதரவாக குரலெழுப்பினால் உடனே
குரல்வளையை நசுக்கும் விதமாக
"பாகிஸ்தானுக்கு போ" என
விரட்டியடிக்கும் சர்ச்சைக்குரிய
வார்த்தைகளை விதைக்கும்
ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசும்,
அரசப் பதவியில் வீற்றிருக்கும்
ஆதிக்கமும்தான் கார்ப்பரேட்டுகளின்
கைப்பிள்ளையாகி விஜய்
மல்லையா,லலித்மோடி, போன்ற
திருடர்களை பத்திரமாக வெளிநாட்டில்
பதுங்க வைக்கிறது. ஆக அதிகார
வர்க்கத்திற்கு கார்ப்பரேட்டுகளின்
உதவி மிக அவசியமாக
தேவைப்படுகிறது என்பதே உண்மை.
பல்வேறு இந்திய வங்கிகளின்
பணத்தை சுருட்டிக்கொண்டு மொத்தமாக
ரூ 9000 கோடியை (அறிந்தவரையில்)
முழுங்கிய மல்லையா எனும்
பணமுதலையை வெளிநாட்டிற்கு
தப்பிச்செல்ல எப்படியும் அரசும்,அரசப்
பதவிகள் அனுபவிக்கும் அரசியல்
வாதிகளும் துணைபோகாமல் இது
நடந்திருக்காது. இதைவிடக் கேவலம்
இந்திய நீதித்துறையும், இந்திய
வங்கிகளும் மல்லையாவை
சரணடையுமாறு கெஞ்சி கேட்கிறது
என்பதுதான் வேதனையாக
இருக்கிறது. இரண்டையும் ஏற்கனவே
விலைபேசி வைத்திருக்கும்
மல்லையாக்கள் இனி சுதந்திரமாக
திரிவார்கள் எங்கும் எவ்விடத்திலும்,,,
இந்திய வங்கிகளின் எதார்த்த
நடவடிக்கைகளில் மிகவும்
பிரசித்தமானது விவசாயக் கடனுக்கும்,
மாணவச் செல்வங்களின் கல்விக்
கடனுக்கும் அவர்களை மிகவும்
கீழ்த்தரமாக அலைக்கழிக்கும்
செயல்தான் என்றால் அது
மிகையாகது. ஒரு மாணவனின் கல்விக்
கடனுக்காகவும்,இந்தியத்தின்
உயிர்நாடியான விவசாயத்திற்கு
கோரப்படும் விவசாயக் கடனுக்கும்
வங்கிகளை நாடுவோர் பெரும்பாலும்
ஏழை அடித்தட்டு மக்களாக
இருப்பார்கள் என்பதை அனைவரும்
அறிவர், இந்திய வங்கிகள் இவ்விரண்டு
விதமான ஏழை எளியோர்களுக்கு
கடனளிக்க பல ஆண்டுகள்
இழுத்தடிக்கும் போக்கினை
கொண்டிருக்கிறது. ஒருவழியாக கடன்
பெற்ற மாணவர்களையும்,
விவசாயிகளையும் ஒரு தவணை கட்ட
தாமதமானாலும் கூட உடனே தன்
சொந்த அடியாட்களையோ அல்லது
காவல்துறையையோ ஏவி விலங்கினை
விட அவர்களை கேவலமாக அடித்து
இழுத்து கொடுமைபடுத்துவதை
கண்ணெதிரிலேயே நாம் சந்தித்து
வருகின்றோம். கடந்த 4ம் தேதியன்று
நெல் அறுவடையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்த பாலன் எனும்
விவசாயியை அங்கு வந்த பாப்பாநாடு
காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி
மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள்,
டிராக்டரில் இருந்து பாலனை கீழே
தள்ளி, சரமாரியாக அடித்து
துன்புறுத்தி. பின்னர் அவரைக் காவல்
நிலையத்துக்கு கையை பிடித்து
இழுத்துச் சென்றதுடன்,
டிராக்டரையும் பறிமுதல் செய்த
காணொளி காட்சியை இந்த இந்தியம்
கண்டிருக்கும். விவசாயி பாலன்
அவர்கள் தஞ்சை மாவட்டம்
பாப்பாநாடு அருகே உள்ள
சோழகன்குடிக்காடு கிராமத்தைச்
சேர்ந்தவர். கடந்த 2011ம் ஆண்டு
தஞ்சையில் உள்ள கோட்டக்
மகேந்திராவின் ரூ.3.80 லட்சம் கடன்
பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார்.
இந்தக் கடனுக்காக தலா ரூ.64
ஆயிரம் வீதம் 6 தவணைகளைச்
செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடைசி 1 தவணை
நிலுவை இருந்ததாகவும், நெல்
அறுவடை முடிந்த பின்னர் தவணைத்
தொகையைச் செலுத்துவதாகவும்
தெரிவித்துள்ளார் பாலன். ஆனால், நிதி
நிறுவன ஊழியர்கள், ரூ.32
ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள்
என்று கூறி, அந்த தொகையைப்
பெற்றுள்ளனர். அதன் பிறகும்
கார்ப்பரேட் வங்கி நிறுவனம் நிகழ்த்திய
கொடுமையான நடவடிக்கைதான் அந்த
காணொளியின் சாட்சியாக இருக்கிறது.
மேற்படி விவாசாயி பாலனுக்கு
ஆதரவாக தமிழக அனைத்து
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்
பி.ஆர்.பாண்டியன் அவர்ளும்,
கம்யூனிஸ்டுகளும் 100க்கும்
மேற்பட்ட விவசாயிகளும், போராட்ட
களத்தில் இறங்கியதை பாராட்டாமல்
இருக்க முடியாது. ஆக இங்கே
கோடிகளுக்காக கேடி வேலை செய்யும்
மல்லையாக்கள் போன்றவர்களுக்கு
இருக்கும் ராஜ மரியாதையும், ராஜ
உபசரிப்பும் நியாயமான நடந்து
கொள்ளும் ஏழை எளிய
விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும்
கருணை மற்றும் மனிதாபிமானம்
என்கிற அடிப்படையில்கூட இல்லை
என்பதே வெட்ட
வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. (விவசாயி
பாலனின் கடனை முழுவதுமாக
ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஷால்
தெரிவித்துள்ளார் அது அவரின்
தனிப்பட்ட நியாயப் போக்காகும்.
அதனை பாராட்ட வேண்டிய
தேவையும் இங்கே எழுகிறது .)
கோடிகளில் புரளும் மல்லையாக்கள்
நடிகைகளுடனும், மாடல்
அழகிகளுடனும் ஒய்யாரகமாக
புகைப்படமெடுத்து தனது கிங்பிஷர்
காலெண்டர் மூலமாக வெளியிடும்
வழக்கத்தை கொண்டுள்ளதை இங்கே
விமர்சனமாக வைப்பது
ஏற்புடையாகாது , ஏனெனில் தனது
தொழில் சார்ந்த தன் விருப்ப ஏகபோக
வாழ்வினை மல்லையாக்கள் போன்ற
ஆட்கள் பெற்றிருப்பது இயல்பு ,
அதனை வங்கிக்கடனில்
இழுத்துக்கொண்டு வருதல் சரியான
பார்வையாக இருக்காது. இங்கே
ஏமாற்றுபவர்கள் அரசும்,
நீதித்துறையும், வங்கிகளுமே
இருக்கின்றது, ஏமாறுபவர்கள்
அடித்தட்டு ஏழை எளிய
விவசாயிகளும், மாணவர்களுமாகவே
இருக்கிறார்கள்.ரூ 9000 கோடியை
சுருட்டிய மல்லையாக்கள் மற்றும்
இதர கார்ப்பரேட் பெரு முதலாளிகள்
இடைத்தரகர்களாகவே இங்கே
பார்க்கப்பட வேண்டும். இடைத்
தரகர்களே இவ்வளவு பெருமதிப்பு
பணத்தை சுருட்டிக்கொண்டு
வெளிநாடுகளில் ஏகபோகமாக
சுகவாழ்க்கையை
வாழமுடிகிறதென்றால் இந்திய அரசின்
நிர்வாகச் சீர்கேடு எந்தளவுக்கு
இருக்கிறது என்பதை ஒவ்வொரு
பாமரனும் ஊகிக்க வேண்டும்.
இன்றளவும் மல்லையாவின் சாராய
வியாபாரத் தன்மையில் உறுவான கிங்
பிஷர் பியர் சந்தையில் தாராளமாக
கிடைக்கிறதே,,, இது எப்படி
முடியுமென வங்கி நிறுவனங்கள்
சிந்தித்ததுண்டா? வங்கிகளும்
தாராளமய கார்ப்பரேட்டுகளின் சேவை
நிறுவனமாக மாறிவிட்டது என்பதை
இது தெளிவுபடுத்துகிறதா
இல்லையா,,,நாட்டின் ஏழை எளியோரின் உழைப்பைச்
சுரண்டு அவர்களை தெருவில்
பிச்சைக்காரர்களாக அலையவிட்டு
அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட
உழைப்பை கார்ப்பரேட்களிடம்
ஒப்படைத்துவிட்டுத் திரியும் இந்திய
வங்கிகளுக்கும் மல்லையாக்கள் போன்ற
ஆட்களுக்கும் எவ்வித வித்தியாசமும்
இல்லை, இதில் துணைபோன
நீதித்துறையும், நிதி நிர்ணய அரசு
அமைப்புகளும் தங்களின்
சுயலாபத்தை பெற்றுக்கொண்டு
சுயநல அரசை இந்தியத்தில்
உறுவாக்கி வைத்திருக்கிறது என்றால்
இதைவிட கேவலமான தலைகுணிவுச்
செயல் வெறெங்கும் இருக்காது. போதா
குறைக்கு விவசாயிகள் தங்களின்
கடன்சுமையாலும், விவசாய நிலங்கள்
பறிக்கப்பட்டதாலும் நொடிந்து போய்
தற்கொலை செய்துக் கொள்ளும் சமூக
அவலத்தை வெறும் "பேஷன் ஷோ"
என விளிக்கும் இந்திய அரசின்
ஏகாதிபத்திய முதலாளித்துவ
மனநிலையை "சர்வாதிகாரம்",
"ஆதிக்கம்" என குறிப்பிடுவதில் எந்த
தயக்கமும் இல்லை என்பதை
வெளிப்படையாகவே குறிப்பிட
வேண்டியது நமது உரிமையாக
இருக்கிறது. மல்லையாக்களின் ரூ
9000 கோடி சுரண்டலை இலாவகமாக
மறைக்கவோ, மறுத்தளிக்கவோ இல்லை
அதற்கான நிவர்த்திக்காவோ இந்திய
அரசும், நீதித்துறையும், வங்கிகளும்,
தலைமை ரிசர்வ் வங்கியும் 9 ரூபாய்
நோட்டு வெளியிட்டாலும்
ஆச்சர்யப்படுவதற்கு இல்லை
அந்தளவிற்கு அப்பட்டமான ஏமாளிகள்
நம் இந்திய மக்கள்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...