Sunday, July 03, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு



*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை
உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.
*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,
பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பது
எப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றி
இப்போது காண்போம்…
மனுவை எப்படி எழுத வேண்டும்?
*`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக
இல்லாமல்,நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும்
கேட்க வேண்டும்.உதாரணமாக, நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு
விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக்
கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என்
விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர்
அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்ய வேண்டிய அலுவல் எதுவும்
இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி,தாசில்தார் அலுவலகத்தில் `ஆர்டிஐ’ மனுவை
அளிக்க வேண்டும்(இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு
விண்ணப்பித்துக் கிடைக்க வில்லை என்றாலும் பொருந்தும்).நினைவில் கொள்க:…
போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். மனுவை யாருக்கு
அனுப்ப வேண்டும்? எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த
அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.‘பெறுநர்’
முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு,எந்த அலுவலகமோ,
அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்ததபாலில் 10 ரூபாய்க்கான
நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டி அனுப்ப வேண்டும்.தமிழ்நாட்டில்
இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே
பதில் தரச்சொல்லிக் கோரலாம். மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்? பொதுத்
தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு
மேலே உள்ளமேல்முறையீட்டு அதிகாரிக்கு மனு அனுப்பலாம். அந்த மனுவில்
‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன்
காரணமாக,“ஆர்டிஐ” சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக
குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து
அனுப்பவும்.
அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தரவேண்டும்?
பொதுத் தகவல் அதிகாரி,30 முழு வேலைநாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அதேபோல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க
வேண்டும்.
இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் இல்லை என்றால்? அடுத்ததாக,
`ஆர்டிஐ’யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு,`மாநிலத் தகவல் ஆணையம்,
எண் 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி. நகர், சென்னை-18’என்ற முகவரிக்கு மனு
அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில்
கிடைத்துவிடும். மனுவுக்கு பதில் வரும்போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?
தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு
வாங்கும்பட்சத்தில், ‘உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல்
பெற்றுக்கொள்கிறேன்’ என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்.
போதிய தகவல்கள் இல்லை என்று மேல்முறையீடு செய்யும்போது, அது உதவும்.
பெண்களுக்கு எப்படி பயன்படும்? ஒருபெண் தன் குடும்ப சொத்தில் தனக்கு
உரிமை இருக்கிறதாஎன்பதை அறிந்துகொள்ள, தன் குடும்பத்தின் விவரிக்கக்கூடிய
அனைத்துத் தகவல்களையும் மனுவில் எழுதலாம்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் தந்தையின் சுயசம்பாத்தியமா, பரம்பரைச்
சொத்தா என்பதைக் குறிப்பிட்டு, ‘இதில் என்னுடன் பிறந்தவர்கள் போக, எனக்கு
எவ்வளவு சதவிகித பங்கு இருக்கிறது? நானும் சம்மதித்தால்தான் இதனை விற்க
முடியுமா?’ என கேட்கவிரும்பும் கேள்விகளை அடுக்கலாம். மனுவை மாவட்ட
நீதிமன்றத்துக்கு தபாலில் அனுப்பலாம் (முகத்துக்கு நேராகவோ, தொலைபேசி
மூலமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது).ஒருவேளை கோரிய மூன்று கேள்விகளில், ஒரு
கேள்விக்கு மட்டுமே தகவல்கள் பதிலாகக் கிடைத்தால், அந்த இரண்டு கேள்விகளை
மீண்டும் மேல்முறையீட்டு அதிகாரிக்கு மனுவாக அனுப்பலாம். தினமும் இரவு
யாரோ வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, காலையில் எடுத்துச்
செல்கிறார்கள். அது அச்சம் தருவதாக இருக்கிறது எனில், போக்குவரத்துத்
துறை அதிகாரிக்கு வண்டியின் பதிவெண்ணைக் குறிப்பிட்டு, விவரத்தைக் கூறி,
அது யாருடைய வண்டி என்ற தகவலைக் கோரிப் பெறலாம். அவர் மேல் நடவடிக்கை
எடுக்கச் சொல்லலாம். அல்லது 101 என்கிற அவசர எண்ணுக்கு அழைத்தும்
புகாரைப் பதிவு செய்யலாம். விதவைப் பெண் ஓய்கூதியம் பெறுவோர், கணவனால்
கைவிடப்பட்டவர்கள் (குழந்தையுடன் வசிக்கும் பெண்கள்) உள்ளிட்ட பெண்கள்,
‘எனக்கு வேலை கிடைக்குமா?’ என்பதையும், ‘கணவர் கைவிட்டுப்போய் 7 ஆண்டுகள்
ஆகிவிட்டபோதிலும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவருக்கு ‘இறப்பு
சான்றிதழ்’ வழங்கப்படுமா’ என்பது போன்ற விவரங்களையும் கேட்கலாம். வேலை
வாய்ப்பு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வேண்டும். கணவர் காணாமல் அல்லது
கைவிட்டுப் போனால், அவர் காணவில்லை என்கிற புகாரை உடனே அருகில் இருக்கும்
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில்(எஃப்.ஐ.ஆர்)பதிவு செய்ய
வேண்டும். அப்போதுதான், ஒருவேளை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் எந்தத்
தகவலும் இல்லை என்றால், `எஃப்.ஐ.ஆர்’ நகலைக்கொண்டு அணுக முடியும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிந்தவர்கள், ‘சீனியாரிட்டி அடிப்படையில்
முன்னுரிமை வழங்கப்பட்டு எனக்கு எப்போது வேலை கிடைக்கும்’ என்ற தகவலை,
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு மனு அனுப்பிப் பெறலாம்.மகளிர்
குழுக்களுக்கான சுயதொழிலுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்படும், எதன்
அடிப்படையில் கொடுக்கப்படும், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது போன்ற தகவல்களை, மாநில அரசாங்கத்துக்கு
மனு அளித்துப் பெறலாம்.அரசாங்கம் சார்ந்த தகவல் பெற தலைமைச்
செயலகத்துக்கே அனுப்பலாம். ஆனால், அந்தந்த துறை சார்ந்த தகவலுக்கு,
அதற்கேற்ற துறையைத்தான் அணுக வேண்டும்.முகவரி தெரியவில்லை என்றால் உடனே
அவர்களுக்கு அனுப்பிவிடக் கூடாது. அதுமட்டுமின்றி, மகளிர் சுயதொழில்
குழுக்களுக்கு தரப்படும் தொகை, ஆட்சிக்கு ஏற்றவாறு மாறுபடும்.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்குபி.எஃப்தகுதியுடைமை
இருந்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்தே பள்ளி நிர்வாகம் ஒரு தொகையைப்
பிடித்து வைத்திருக்கும்.வேறு வேலைக்குச் செல்லும்போது, அதனை பள்ளி,
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு அளித்துவிட வேண்டும். அது தொடர்பான தகவல்களை
அறிய, பி.எஃப் அலுவலகத்துக்கு `ஆர்டிஐ’ மனு அனுப்பலாம். அரசாங்கத்திடம்
இருந்து ஊக்கத்தொகையோ, மானியமோ பெறும் எந்த நிறுவனமும் இதற்குக் கீழே
வரும்.
- தீக்கதிர்

4 comments:

  1. அருமையான தகவல்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  2. எனது பங்கேற்பு இருக்கும் தோழர்!

    ReplyDelete
  3. தகவல் அறியும் சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்துவோர் மிக குறைவு. இதை வைத்து அலுவலகங்களில் பிடிக்காதவர்களிடம் கைவரிசையைக் காட்ட பயன்படுத்திகிறார்கள்.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...